என் மலர்
உள்ளூர் செய்திகள்
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் பினுலால் சிங், வட்டார நகர தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது.
- இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஆயிரத்து 431 சதுர அடி காலிமனையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நடத்தி வரும் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு 1984-ம் ஆண்டில் இருந்து வாடகைக்கு வழங்கப்பட்டது.
இந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை 34 ஆண்டு காலத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது. இந்த வாடகை பாக்கி வசூலிக்க குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த வாடகை பாக்கியை வட்டியுடன் வசூலிக்கு உத்தரவிட வேண்டும் என்று திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியில் ஒரு தவணையாக முதல் கட்டமாக ரூ.84 லட்சத்து 70 ஆயிரத்து 46-க்கு காசோலையை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- பிப்ரவரி 11-ந்தேதி "என் மண் என் மக்கள்" யாத்திரை 200-வது தொகுதியாக சென்னை வர இருக்கிறது.
- தற்போது வரை 183 தொகுதிகளை கடந்திருக்கிறோம். பல்லடத்தில் யாத்திரை நிறைவு பெறுகிறது.
தமிழக பா.ஜனதாவின் தலைமை தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் அமைக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள், மற்றும் பல்வேறு துறைகளுக்கான அறைகள் இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகியோர் முன்னிலையில் இந்த அலுவலகத்தை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-
கடந்த 2019 தேர்தலை வைத்து பார்க்கும்போது வருகிற ஏப்ரல் 2 அல்லது 3-வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
பா.ஜனதாவுக்காக காலம் காலமாக உழைத்தவர்களின் ஏக்கமும், கனவும் நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது. இன்னும் 75 நாட்கள் இருக்கிறது. இதுவரை கட்சிக்காக உழைத்து கொண்டிருப்பவர்கள் தங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்.
என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக இதுவரை 183 சட்டமன்ற தொகுதிகளை சந்தித்துள்ளோம். 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந்தேதி யாத்திரை செல்கிறோம். இதில் ஜே.பி. நட்டா கலந்து கொள்வார். 234-வது தொகுதியாக திருப்பூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது.
எல்லா தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த 100 பேரை தேடி கண்டுபிடித்து அவர்களில் 10 பேரை மேடையில் ஏற்றி பேச வைத்தோம்.
ரோட்டில் நடந்து சென்ற யாத்திரையை தாண்டி பல தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறோம். அரசியல் களம் எப்படி மாறி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். இந்த ஆண்டு மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்படும்.
பிரதமர் மோடி ராமர் சிலை பிரதிஷ்டைக்காக சங்கல்பம் மேற்கொண்டு 11 நாள் விரதம் இருந்தார். அதேபோல் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வருகிற 75 நாட்களும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மண் என் மக்கள் யாத்திரை வருகிற 25-ந்தேதி பல்லடத்தில் நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி கோவை பகுதிக்கு செல்லவில்லை. எனவே இந்த கூட்டத்தை பல்லடத்தில் நடத்துகிறோம்.
இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களும் மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பு கிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்.

கூட்டணியை பொறுத்த வரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்று. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது.
தி.மு.க. 31 மாதங்களில் செய்துள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவோம். பா.ஜனதா அரசு செய்துள்ள சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்து சொல் வோம். அவர்கள் முடிவு செய்வார்கள்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போவதில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தமிழக பா.ஜனதா தேர்தல் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக சக்கரவர்த்தியும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக நாராயணன் திருப்பதி, நரேந்திரன், நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
- புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்மனாபன்புதூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கை ஏற்று புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.
- மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருகிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3-ந் தேதி ராமேஸ்வரம், தங்கச்சி மடத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, பயன்படுத்திய இரண்டு நவீன மீன்பிடி படகுகள் நெடுந்தீவுக்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்கள்.
பாக் நீர் இணைப்பு பகுதியில் அடிக்கடி மீன்பிடிக்க செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், விலை உயர்ந்த மீன்பிடிப்பு படகு கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
தங்களது வாழ்வாதாரத்தை பணயம் வைத்து இரவு-பகல் பாராமல் கடலில் பயணித்து மீன்பிடி தொழில் செய்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை தங்களது தொழில் மூலம் பெற்றுத் தருகிற மீனவ சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இலங்கை கடற்படையினரின் தொடர் நடவடிக்கையின் மூலம் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருவதை கண்டிக்கிற வகையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் ராமேஸ்வரம், பாம்பன் பஸ் நிலையம் அருகில் உள்ள அன்னை இந்திரா தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் முன்பு மீனவ அமைப்புகளை இணைத்துக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த சில நாட்களாக ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
- உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.
திருப்பூர்:
தமிழகத்தை சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று விரைவில் திரும்புவர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்து தொடங்கி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.
அதன்படி, திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.
விடுமுறை முடிந்து தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும் கடந்த சில நாட்களாக, ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது. புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர் என்றனர்.
- நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் அரங்கேறத்தான் செய்கிறது.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல் லாணியை அடுத்த பெரிய பட்டினம் புதுமடம் புதுக்குடியிருப்பு கடற்கரை தென் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடலோர காவல் படையினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் அந்தோணி சகாய சேகர் மற்றும் போலீசார் பெரிய பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிவு செய்யப்படாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெரியபட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த முஹம்மது மீராசா (வயது 42) என்று தெரியவந்தது. மேலும் அந்த படகை சோதனை செய்த போது அதில், சுமார் 12 பண்டல்களில் 6,84,600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து முஹம்மது மீராசாவை கைது செய்த போலீசார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது.
- விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி-பாலக்காடு சாலை தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. இதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மேலும் விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. பொள்ளாச்சி நகரத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.
ஒரு போலீஸ் அதிகாரி மோட்டார் சைக்கிள் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அந்தளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும்.
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பொறுத்த வரை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்று கொள்பவர்களுடனே நாங்கள் கூட்டணி அமைப்போம். அப்படி வருபவர்களை சேர்த்து கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது.
- கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம், காமன் தொட்டி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை ஜெயலட்சுமி, ஆகியோர் தொல்லியல்துறை சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கம்மாள்புரத்தில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள ஜி.ஆர்.டி. பண்ணை உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம், பேச்சியம்மன் சிலை, அய்யனார் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை போன்ற பழமையான சிற்பங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

தலையில் ஜூவால கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றைக் கீறிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும் பயமுறுத்தும் கண்கள், அகன்ற மூக்கு, நீளமான வாய், பெரிய காதுகள், பெரிய பரந்த பாதங்கள், மார்புக்கூடு எலும்புகள் தெரியும் வகையில், பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் பேச்சியம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று மருவி விட்டது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுத்தோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சி அம்மனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளிலும் பேச்சியம்மன் வழிபாடு காணப்படுகிறது.
பொதுவாக அய்யனார் நிலை மண்டலமர்வு எனும் உத்குடி ஆசனத்தில் சிற்பம் வடிவமைப்பதுண்டு. ஆனால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம், தனித்தனி இழைகளாக சுருண்டு அழகுற அமைந்துள்ளது. முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், சரபள்ளி, சவடி, பூணூல், உத்தரபந்தம், கடகம், கைவளை, காப்பு, இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அழகுற அய்யனார் அமர்ந்திருக்கிறார்.
இவர் சிவபெருமானின் மகன் என்றும் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களை காக்க வந்தவர் என்றும் நம்பப்படுகிறது. சங்க காலம் முதலே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வடிவமானது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். பூணூல் அணியப்பட்டுள்ளது. கரந்தை மகுடம், கைகளில் வளையல், கால்களில் வீரக் கழல், கால்விரல் அணிகள், அபய வரத முத்திரையுடன் பின் வலது கையில் மழு உள்ளது. இடது மேற்கையில் மான் உருவம் சிதைந்துள்ளது. சாந்த சொரூப நிலையில் சிற்பம் உள்ளது.

"தெக்கினான்" என்றும் தென்முகக் கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். மேற்கண்ட சிற்பங்கள் பாண்டியர் காலத்துக்கே உரிய சிற்ப நுட்பத்தோடும் உச்சபட்ச நயத்தோடும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
மற்றொரு சிலையான சிவலிங்கம், பத்ம பீடம் (பிரம்மா பகுதி) அதாவது தாமரைப் பூ கவிழ்ந்த நிலை, அதற்கு மேல் ஆவுடை உள்ளது. பெருவுடையார் (லிங்கபாணம்) இல்லாமல் உள்ளது.
கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், மதுரை சொக்கநாதருக்கும் பார்வதி அம்மனுக்கும் நெய்விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை தொடர் வழிபாட்டில் இக்கோவில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்று கூறினர்.
- நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை.
- விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் எனறு விரும்புகிறார்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி எந்தெந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது பற்றி பாராளுமன்ற பொறுப்பாளர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் குறிப்புகள் அளிக்கப்பட்டது.
தமிழகத்தை பொறுத்த வரை முதல் அல்லது இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும். ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தமிழகத்தில் தேர்தல் முடிவடைய வாய்ப்புகள் உள்ளது.

அரசியலுக்கு திசை கொடுத்த ஒரு அரசியல்வாதி என்று சொன்னால் அவர் அத்வானி தான். அவர் பா.ஜ.க.வை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதில் மகத்தான பங்கு வகித்தவர்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. சட்டமன்ற தேர்தலில் அதுகுறித்து விவாதிக்கலாம். விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் எனறு விரும்புகிறார். அதனை வரவேற்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்குவதாக தெரிவித்தார். அப்போது அவர் பேசியதெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகள். மேலும் கமல்ஹாசனுக்கு ஊழலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கமல்ஹாசன் ஊழலுக்கு எதிரானவர் இல்லை. ஊழலுக்கு துணை போகக் கூடியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன.
- கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
இதையொட்டி தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசின் இந்தியா கூட்டணிக்கும் இடையே பல தொகுதிகளில் போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேர்தல் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். அந்த வகையில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பேச பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ., கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி., அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி., மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமையும் மத்திய அரசிடம் என்னென்ன எதிர்பார்ப்புகள், தேவைகள் இருக்கிறதோ அதனை தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்களிடம் கேட்க உள்ளனர். இதற்காக அந்த குழுவின் சுற்றுப்பயண விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த குழுவினர் இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்கள். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரி எதிரி உள்ள மாணிக்கம் மகாலில் இதற்கான கூட்டம் நடை பெற்றது.
இதில் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர். கூட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செஞ்சி மஸ்தான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது.
இதில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய திட்டங்கள் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்படும்.
பின்னர் இதுகுறித்து அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். பொதுமக்களின் அனைத்து கருத்துக்களும் கேட்கப்பட்டு தயாரிக்கப்படும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக வெளி வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோரிடம் தி.மு.க. குழுவினர் கருத்துக்களை கேட்டனர். பலரிடம் அவர்களது கோரிக்கைகள் மனுக்களாக எழுதி வாங்கப்பட்டன.
கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும், தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், தூத்துக்குடி துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும், கப்பல் போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தி.மு.க. குழுவினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இன்று காலை 10 மணி முதல் நீண்ட நேரம் விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட பகுதி மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
அவர்களது அடிப்படை தேவைகள், எந்தெந்த பகுதிகளில் அரசு திட்டங்கள் தேவைப்படுகிறது மற்றும் முக்கிய எதிர்பார்ப்புகள் குறித்து கேட்கப்பட்டது. இன்று பிற்பகலில் ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.
இந்த குழு நாளை கன்னியாகுமரிக்கும், நாளை மறுநாள் (7-ந்தேதி) மதுரைக்கும் செல்கிறது. தொடர்ந்து 8-ந்தேதி தஞ்சை, 9-ந்தேதி சேலம், 10-ந்தேதி கோவை, 11-ந் தேதி திருப்பூர். 16-ந்தேதி ஓசூர், 17-ந்தேதி வேலூர், 18-ந்தேதி ஆரணி, 20-ந் தேதி விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறார்கள். இறுதியில் 21, 22, 23-ந்தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துக்களை கேட்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை ஹீரோவாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வை போலவே அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துக்கள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு குழு அமைத்துள்ளார்.

இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விசுவநாதன், பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் குழுவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெற உள்ளது.
இதற்காக சென்னையில் இருந்து தங்களது பயணத்தை இன்று (திங்கட்கிழமை) தொடங்கினார்கள். வேலப்பன்சாவடியில் இன்று காலை அ.தி.மு.க. குழுவினர் கட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தனர்.
பொதுமக்களிடம் எழுத்து பூர்வமாகவும் கருத்துக்களை கோரிக்கைகளை அ.தி.மு.க. தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.
சென்னையை தொடர்ந்து வேலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை என மண்டலம் வாரியாக பிரித்து கருத்துக்களை பெற உள்ளனர். வருகிற 10-ந்தேதி கோவை மண்டலத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நிறைவடைய உள்ளது. அதன் பிறகு மக்களிடம் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் சமயத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
- 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
- ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள் குறித்தும் ஆவலுடன் கேட்டறிந்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.
சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவன நிர்வாக இயக்குனர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31-ந் தேதி சந்தித்து பேசினார்.
இதன் காரணமாக 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
இதேபோல் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இது தவிர மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.
ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள் குறித்தும் ஆவலுடன் கேட்டறிந்தார். தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தொகுதி நிலவரம் பற்றி கேட்டறிந்து வருவதால் காணொலியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை திரும்புகிறார்.
7-ந்தேதி காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்க முடிவு செய்து உள்ளனர்.






