search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northern workers"

    • கடந்த சில நாட்களாக ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
    • உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று விரைவில் திரும்புவர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்து தொடங்கி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.

    அதன்படி, திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    விடுமுறை முடிந்து தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும் கடந்த சில நாட்களாக, ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது. புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர் என்றனர்.

    • காயமடைந்த 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • நிர்மல் தாஸ் (வயது 28), பிரஞ்சநாதன் தாஸ் (26), சூர்யா (24), ரஞ்சன் தாஸ் (25) ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் உள்ள நூல் மில்லில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த நிர்மல் தாஸ் (வயது 28), பிரஞ்சநாதன் தாஸ் (26), சூர்யா (24), ரஞ்சன் தாஸ் (25) ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓலப்பாளையம் அருகே உள்ள ஒரு நூல் மில்லில் இவர்கள் நான்கு பேரும் வேலை செய்து வந்ததாகவும், அப்போது மில்லின் உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடிக்கடி மில்லில் இருந்து பணம் மற்றும் மின் மோட்டார்கள் காணாமல் போவதாக கூறி, இந்த 4 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
    • பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    வட மாநில தொழிலா ளர்கள், தமிழர்களால் தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோவை, சிலர் சமூக வலைதளங்களில் பரப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

    இச்சூழலில், பல்வேறு மாநில தொழிலாளர்கள், மக்கள் வந்து செல்லும் திருப்பூர் ரெயில், பஸ் நிலை யங்களில், பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர். அதில் 'வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்; அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையை தூண்டும் வகையில், சித்திரிக்கப்பட்ட வீடியோவை, யாரும் பகிரக்கூடாது. அவ்வாறு பகிர்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டு வருகிறது.

    • விஜயகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • விபிஎன்.குமார், எஸ்.எம்.பழனிசாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன்எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

    அவைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ பேசியதாவது:-

    வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும். அதற்கு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி அதிமுக நிர்வாகிகள் துணைநிற்போம். வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தஒரு இடைஞ்சல் ஏற்பட்டாலும் அதை போக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும். யார் வதந்தியை பரப்பினாலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகாலத்தில் அம்மா அவர்களின் ஆட்சியிலும், எடப்பாடியாரின் ஆட்சியிலும் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட வதந்தி கிளப்பினால் தொழிலாளர்கள் முதல் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். யார் இதை செய்தாலும் கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு இந்தியாவுக்கே வேலை தரும் அளவுக்கு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி தான். ஈரோடு தேர்தல் அதிமுகவிற்கு பின்னடைவு அல்ல. அதிமுக எடப்பாடியாரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடியார் தான் நிரந்தர பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் கைவிடப்பட்டதை போல, விரைவில் இந்த திமுக அரசு 100 யூனிட் இலவச மின்சாரத்தை கைவிட தான் இந்த பணிகளை செய்து வருகிறது. மின்சார கட்டணத்தை ஏற்கனவே உயர்த்தி விட்டார்கள். தண்ணீர் வரி, வீட்டு வரி உயர்த்தி விட்டார்கள். இதனால் வீட்டு வாடகை உயர்ந்திருக்கிறது. திமுகவின் செயலாளர் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார். கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கழக நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, தம்பி மனோகரன், , எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, கருணாகரன் ,ரத்தினகுமார், திலகர் நகர் சுப்பு, பாசறை சந்திரசேகர், ஹரிஹரசுதன் சுதன், விபிஎன்.குமார், எஸ்.எம்.பழனிசாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கடந்த இரண்டு நாட்களில் 285 அழைப்புகள் பெறப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • அனைவருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கட்டுபாட்டு அறைக்கு இதுவரை 285 அழைப்புகள் பெறப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

    வடமாநில தொழிலாள ர்கள் தொடர்பான போலி விடியோ பீகார் மாநிலத்தில் பரப்ப பட்டதை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் அச்ச உணர்வை போக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கட்டுப்பாடு அறை செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த இரண்டு நாட்களில் 285 அழைப்புகள் பெறப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உறவினர்கள் தொடர்பான அழைப்புகளும் வந்த நிலையில் அனைவருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    • வடமாநிலத்தவரை தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • போலீசார் ஆய்வு செய்ததில் அந்த வீடியோ உண்மைக்கு புறம்பானது என்று கண்டறியப்பட்டது.

    சென்னை :

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் வடமாநிலங்களான டெல்லி, பீகார், மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    கொரோனா பரவலுக்கு பின்னர் கடந்த ஆண்டுதான் ஹோலி பண்டிகையை வடமாநில மக்கள் கொண்டாடினர். இந்தநிலையில், வருகிற 8-ந்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக பல முன்னேற்பாடுகளை தயார்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, வருகிற 7-ந்தேதி சோட்டி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். அன்றைய தினம் பூஜை பொருட்கள், மரக்கட்டைகளை கொண்டு தீ மூட்டும் நிகழ்வு நடத்தப்படும். இதில் மக்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகளை செய்வார்கள். இதேபோல, மேளதாளம் முழங்க மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவார்கள்.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்ற வீடியோ வெளியானது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கடந்த 3-ந்தேதி திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வடமாநில மக்கள் ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் ஆய்வு செய்ததில் அந்த வீடியோ உண்மைக்கு புறம்பானது என்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து வதந்தி பரப்பிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அமைதியை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து நேற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வடமாநில மக்கள் ரெயில்கள் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று காலை முதல் சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வடமாநில மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தங்களின் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மூட்டைமுடிச்சுகளுடன் ரெயில் நிலையங்களில் காத்திருந்து ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

    இதுகுறித்து, பீகார் மாநிலம் பக்சாராவை சேர்ந்த அக்கீம் குமார் என்ற பயணி கூறுகையில், 'நான் சென்னை பூந்தமல்லி காய்கறி மார்க்கெட்டில் 9 வருடமாக வேலை செய்து வருகிறேன். பீகாரை சேர்ந்த ஒருவரை அடிப்பது போன்ற வீடியோ எனக்கும் வந்தது. அந்த வீடியோ பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்த என்னுடைய அப்பா, அம்மா பயந்துபோய் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்கள். நான் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் அவர்கள் பயப்படுகிறார்கள். ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னைக்கு தான் வருவேன்' என்றார்.

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த அர்சத் அலி, 'ஹோலி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊருக்கு செல்கிறேன். நான் தூத்துக்குடியில் கடந்த 3 வருடமாக வேலை செய்து வருகிறேன். எனக்கு இதுவரையில் எந்த பிரச்சினையும் வந்ததில்லை. எல்லோரும் என்னுடைய அண்ணன், தம்பி போலவே பழகுகிறார்கள். ஒரு மாதம் ஊரில் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வருவேன். ஹோலி பண்டிகைக்கு முன்பாக இது எப்போதும் இருக்கும் கூட்டம் தான்' என்றார்.

    சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று ஒரே நேரத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், உதவி கமிஷனர் சீனிவாசன், தாம்பரம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு திரண்டிருந்த வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், " வருகிற 8-ந் ஹோலி பண்டிக்கையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம். பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் பணிக்கு வருவோம்" என்றனர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் ஜார்கண்ட் நோக்கி சென்ற ரெயிலில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

    • வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகின்றனர்.
    • குடிபோதையில்,வடமாநில வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு குடிபோதையில்,வடமாநில வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்துஅங்கு சென்ற பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் தங்கி சமைத்து சாப்பிட்டு வேலைக்கு செல்கின்றனர்.
    • விலையை பொறுத்து 250 கிராம் -200 கிராம் பாக்கெட்களாக கட்டி விற்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தொழில் நிமித்தமாக 2லட்சத்திற்கும் அதிகமான வடமாநில இளைஞர்கள் வசிக்கின்றனர். திருப்பூர் மாநகரில் மட்டும் 1.50 லட்சம் பேர் உள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் தங்கி சமைத்து சாப்பிட்டு வேலைக்கு செல்கின்றனர்.

    கடந்த 6 மாதங்களாக கொல்லிமலை, எடப்பாடி உள்ளிட்ட சேலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், திருப்பூரில் ரோட்டோர மளிகை கடைகளை விரித்து, வடமாநில வாடிக்கையாளருக்கு விற்பனை செய்கின்றனர். அங்குள்ள உற்பத்தியாளரிடம் மொத்தமாக பொருட்களை வாங்கி 250 கிராம் பாக்கெட்களாக தயாரித்து, திருப்பூர், காங்கயம், கொடுவாய் பகுதிகளில் கடை நடத்த துவங்கிவிட்டனர்.

    கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சை பயறு உட்பட, அனைத்து வகை மளிகை பொருட்களையும் தலா 20 ரூபாய் பாக்கெட்டுகளாக மாற்றி விற்கின்றனர். விலையை பொறுத்து 250 கிராம் -200 கிராம் பாக்கெட்களாக கட்டி விற்கின்றனர்.

    இது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலத்தினர் பலர், ரேஷன் அரிசியை மக்களிடம் கேட்டு வாங்குகின்றனர். அத்துடன் தலா20 ரூபாய்க்கு விற்கும் மளிகை பொருள் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமையும், காங்கயத்தில் திங்கட்கிழமையும், கொடுவாயில் செவ்வாய் கிழமையும் கடை நடத்துகிறோம். மற்ற நாட்களில், பொருட்களை வாங்கி வந்து எடைபார்த்து பாக்கெட் தயாரிக்கிறோம் என்றனர்.

    • நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
    • ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.

    திருப்பூர்:

    வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரத்துக்கான (அக்டோபர் 21 - 23)ெரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

    திருப்பூரில் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க, வடமாநிலத்தினர் அதிக அளவு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க வடமாநிலத்தினர் அதிக ஆர்வம் காட்டினர்.ராஜ்கோட், பாட்னா, ஜெய்ப்பூர், அகமாதபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். வட மாநிலங்களுக்குப் பயணிக்கும் நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. அதே நேரம் நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம் செல்வதற்கான 30 சதவீத இடங்கள் கூட இன்னமும் நிரம்பவில்லை.தமிழகத்திற்குள்ளான ெரயில் டிக்கெட் முன்பதிவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடந்த, 23ந்தேதி, 1,011 பேர் டிக்கெட் முன்பதிவுக்கு வந்தனர். ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது என்றனர்.

    எருமப்பட்டி அருகே வேலை செய்த ரிக் வண்டி அலுவலகத்தில் ரூ.3¾ லட்சத்தை திருடி கைவரிசை காட்டிய வட மாநில கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    எருமப்பட்டி:

    எருமப்பட்டி அருகே உள்ள சிங்களங்கோம்பையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவர் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி பொன்னேரி கைகாட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பங்குதாரராக உள்ளார். இவர் ஆழ்துளை கிணறு (போர்வெல்) அமைக்கும் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ரிக் வண்டியில் கடந்த 4 மாதங்களாக சத்தீஷ்கார் மாநிலத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர்.

    இந்த நிலையில் பொன்னேரி கைகாட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் ரிக் வண்டியை நிறுத்தி விட்டு வடமாநில தொழிலாளர்கள் 9 பேரும் தங்கி இருந்துள்ளனர். கடந்த 7-ந் தேதி காலையில் ராஜேஷ், பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் உள்ள தனது ரிக் வண்டி அலுவலகத்துக்குவந்தார்.

    அங்கு ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருப்பதை கண்டு அலுவலகத்திற்குள் சென்று பார்த்தார். அங்கு டேபிளின் பூட்டை உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது அவர் அந்த அலுவலகம் அருகே ரிக் வண்டியில் இருந்த சத்தீஷ்கார் மாநில தொழிலாளர்கள் 9 பேர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தான் பணத்தை திருடிச்சென்று இருக்கலாம் என்று கருதி எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தப்பிஓடிய வடமாநில தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கும்பல் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் 9 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த விமல் யாதவ் (22), சேசன்தர்வோ (27), பிரதீப் (22), சஞ்சய் குமார் (19), ஜீதகமார் சூரி (20), தோவானாந்த் (23), துளசிநாத் (22), நாதாலாந்தீம் (28), லட்சுமண சின்னா (20) ஆகியோர் என்பதும், அவர்கள் தான் ராஜேஷின் அலுவலகத்தில் பணத்தை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கத்தையும் போலீசார் மீட்டனர்.
    ×