என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3 டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
- சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக அதிவேகமாக வந்த 3 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் தலா ஒரு டன் என மொத்தம் 3டன் எடை மதிப்பில் ஹான்ஸ், குட்கா, போன்ற புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் கார்களுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத்குமார் (வயது22), கல்யாணராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 3 கார்களின் மதிப்பு ரூ.15 லட்சம் எனவும், 3 டன் குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னைக்கு யாருக்கு கடத்தி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.
- தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. பயணிகளின் வசதிக்காக 15-ந் தேதி (நேற்று) முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
- தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
சென்னை:
பா.ஜனதாவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். கடந்த 2018-ம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுதிவைக்கிறேன். மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
- ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
- கார்கே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை'யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை மராட்டியத்தில் நேற்று 4-வது நாளாக நடந்தது. பால்கர் மாவட்டத்தில் அவர் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களை சந்தித்தார். மேலும் ஆங்காங்கே அவர் மக்கள் மத்தியில் பேசினார்.
ராகுல்காந்தியின் யாத்திரை இன்று (சனிக்கிழமை) தானே மாவட்டத்தில் நடைபெறுகிறது. அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை நிறைவு செய்கிறார்.
பின்னர் அன்று மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாக மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தெரிவித்தார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். மும்பை செல்லும் அவர் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்த கொள்வதும், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால், இந்த பொதுக்கூட்ட செலவு காங்கிரஸ் கட்சியின் செலவில் சேர்த்துக் கொள்ளப்படும் என விஜய் வடேடிவார் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
- விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திங்கட்கிழமை முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் போட்டியிடும் இடங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்று (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 3 அல்லது 4 நாட்கள் வினியோகிக்கப்படும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திங்கட்கிழமை முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
அதைத்தொடர்ந்து வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது.
- சுமார் ரூ.85 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் ஆண் ஊழியர், தனது இரவு பணியை முடித்துவிட்டு நேற்று விமான நிலைய ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக வந்து கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர் அணிந்திருந்த ஷூவை கழற்றும்படி பாதுகாப்புப் படை வீரர்கள் கூறினர். அவர் ஷூவை கழற்ற மறுத்ததால் சந்தேகம் அடைந்த வீரர்கள் அவரை தனி அறைக்குச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர் காலில் அணிந்திருந்த சாக்சுக்குள் 3 சிறிய பார்சல்கள் இருந்தன. அவைகளைப் பிரித்துப் பார்த்தபோது தங்கம்இருந்தது தெரியவந்தது. சுமார் 1.281 கிலோ எடையுடைய தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம் என கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒப்பந்த ஊழியரையும், தங்கத்தையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Always alert & vigil to protect & secure!#CISF nabbed a housekeeping staff along with 1.281 kg gold (worth approximately Rs 85 lakh) concealed inside his socks @ Chennai Airport. The staff was handed over to Customs.#CISFTHEHONESTFORCE@HMOIndia @MoCA_GoI @JM_Scindia pic.twitter.com/pUPE5yHrdp
— CISF (@CISFHQrs) March 15, 2024
- 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை.
- அடிக்கடி கைது செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியா- இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

- பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.
- கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதிக்க மறுத்தது.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18-ந்தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி பாராளுமன்றத்தில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர்.
மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
ஆலோசனையின்போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதிக்க மறுத்தது.
இதையடுத்து, அனுமதி மறுப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், எந்த கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்ட பாஜக தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று மாலை தீர்ப்பளித்தார்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இரட்டை சிலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
- இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும்.
ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருப்பதால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு மட்டும் தெரிவிக்க ஓ.பி.எஸ். அணி அதிரடியாக முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் முதற்கண் கேட்டுக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் "இரட்டை இலை" சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதனை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்.

இதனைத் தொடர்ந்து "இரட்டை சிலை" சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பா.ஜ.க.வுக்கு நமது ஆதரவினை தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு திண்டுக்கல், மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை, கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.
இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியைக் கொடுத்துள்ளது.
திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கைதானவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
- வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே கடந்த மாதம் சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரெயிலில் பயணம் செய்த பயணிகள் 3 பேரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய 5 பேர் கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
டி.ஐ.ஜி. ராமர் உத்தரவின்படி துணை போலீஸ்சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மின்சார ரெயிலில் பயணிகளை வெட்டி கொள்ளையடித்த வழக்கில் கும்மிடிப்பூண்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லெவின் என்கிற பூச்சி (26), பொன்னேரி செஞ்சம்மாள் நகரை சேர்ந்த விஜி என்கிற கெல்லீஸ் (24) ஆகிய 2 பேரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்தார்.
கைதானவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
- பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 4 வாரங்கள் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரெயில்கள் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






