search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SVe shekher"

    • சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
    • தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.

    சென்னை:

    பா.ஜனதாவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். கடந்த 2018-ம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுதிவைக்கிறேன். மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

    தமிழகத்தில் மோடியின் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததால் தோல்வி ஏற்பட்டு உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவை மற்ற மாநிலங்களில் மக்கள் ஏற்று இருக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் ஏற்கவில்லை. அவருடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்ற மாநிலங்களில் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மோடியின் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததால் இந்த தோல்வி ஏற்பட்டு இருக்கிறது.


    மோடியின் திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. நீட், 8 வழிச்சாலை போன்ற திட்டங்களால் தமிழக கட்சிகள் இரட்டை நிலையில் இருக்கிறார்கள். இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SVeShekher
    கரூர்:

    பா.ஜ.க.பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நடிகர் எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டிருந்தார்.

    இது தொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் தலித்பாண்டியன், கரூர் குற்றவியல் கோர்ட்டு எண்-2ல் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் பலமுறை ஆஜராகாமல் இருந்து வந்தார். மேலும் வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து, அவருக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா கிறிஸ்டி, வருகிற 23-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2018, ஜூலை 19-ந்தேதி முதல் 6 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடை உத்தரவை நீக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலித் பாண்டியன் தொடர்ந்த வழக்கு விசாரணை வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மற்றும் வைகோ ஆகியோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். #NakkeeranGopal #MKStalin
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி போலீஸ் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதேபோல் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வைகோவையும் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அபபோது, நக்கீரன் கோபால் மீது பாய்ந்துள்ள சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் மீது ஏன் பாயவில்லை? அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? என கேள்வி எழுப்பினார். நேரம் கிடைத்தால் ஆளுநரிடம் நக்கீரன் கோபால் குறித்து பேசப்படும் என்றும் கூறினார். #NakkeeranGopal #MKStalin
    பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டதை கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் அடுத்த மாதம் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. #SVeShekher
    கரூர்:

    பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு கரூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். அதை அவரது வக்கீல் கரூர் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

    இந்நிலையில் இன்று கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுப்பையா, அடுத்த மாதம் 15-ந்தேதி நடிகர் எஸ்.வி. சேகர் கரூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். #SVeShekher
    பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அம்பத்தூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் இன்று ஆஜரானார். #SVeShekher
    அம்பத்தூர்:

    நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான எஸ். வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    எஸ்.வி.சேகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்ககத்தின் சார்பில் சேகரன் என்பவர் அம்பத்தூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று காலை நீதிபதி அனிதாஆனந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக நடிகர் எஸ்.வி.சேகர் காலை 11 மணியளவில் அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது வக்கீல்களுடன் ஆஜர் ஆனார்.

    அப்போது எஸ்.வி.சேகர் தரப்பு வக்கீல்கள் கூறும் போது, இது தொடர்பாக பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அனைத்தையும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரே வழக்காக விசாரிக்க மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவின் நகலை தாக்கல் செய்யும்படியும் எஸ்.வி.சேகரை அன்றும் ஆஜராகும்படியும் தெரிவித்தார். #SVeShekher
    பா.ஜ.க. தலைவர் பதவி குறித்த எஸ்.வி.சேகரின் கருத்துக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், நாடகத்தில் பேசுவதாக நினைத்து அவர் பேசி இருப்பார் என்று தெரிவித்தார். #BJP #Tamilisai #SVeShekher
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கோட்டையில் விநாயகர் சிலையை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு பா.ஜ.க.வினர் கைது செய்யப்படுவதை கண்டித்து வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தாமிரபரணி புஷ்கரணி விழா சுமுகமாக நடைபெற அரசு அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நெல்லையில் உண்ணாவிரதம் நடக்கிறது.

    அரசியல் தலைவர்களை கைது செய்வதில் அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறதா? என்பதை காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சில் இடம்பெற்றுள்ள குரல் தன்னுடையது அல்ல என்று எச்.ராஜா கூறியுள்ளார். கோர்ட்டில் வழக்காடி உண்மை இருக்கும் பட்சத்தில் அவர் வெளியே வருவார்.

    பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக குறைக்கப்படும். பஸ் கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்வதை விட பெட்ரோலுக்கான வாட் வரியை குறைக்க தமிழக அரசு முயற்சி செய்யலாம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர ஆதரவு தரலாம். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறது.

    ரபேல் விமான விவகாரம் பற்றி மத்திய மந்திரிகள் தெளிவாக விளக்கம் அளித்து விட்டனர். பிரதமர் மோடி அரசில் ஒரு சதவீதம் கூட ஊழலுக்கு இடம் இல்லை. போபர்ஸ் ஊழல் பற்றி மக்கள் மறக்காததால் ராகுல்காந்தி எதையாவது சொல்லி கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், தமிழக பா.ஜனதா தலைவர் பதவியை தந்தால் சிறப்பாக செயல்படுவேன் என்றும், தற்போது உள்ள நிலையைவிட கட்சியை வலுப்படுத்துவேன் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘இதற்கு பதில் சொல்வதை விட சிரித்துவிட்டு விட்டுவிடலாம். பல நகைச்சுவை நாடகங்களில் நடித்துள்ள அவர், நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசியிருப்பார். பா.ஜ.க. தலைவர் பதவி என்ன அவ்வளவு இலகுவான விஷயமா?’ என்று தெரிவித்தார். #BJP #Tamilisai #SVeShekher

    தமிழக பாரதிய ஜனதாவுக்கு தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால் அதை தான் ஏற்க தயார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். #BJP #SVeShekher
    சென்னை:

    நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜபாளையத்தில் நடந்த மாநில பா.ஜனதா செயற்குழு கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை. அதற்காக நான் ஒதுக்கப்படுவதாக கருதவில்லை.

    இந்த தலைமை என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்னை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. இல்லாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. இதற்காக நான் தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? எல்லோரும் அவரை அக்கா என்று அழைப்பார்கள். என்னை விட அவர் வயது குறைந்தவர். எனவே எனக்கு அவர் தங்கைதான்.

    தமிழக பா.ஜனதாவுக்கு தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால் அதை நான் ஏற்க தயார். அப்படி ஏற்றால் இப்போது இருப்பதை விட கட்சியை பலமாக்குவேன்.

    தற்போது கட்சி பெற்றுள்ள ஓட்டுக்களை விட அதிக ஓட்டுக்களை வாங்கி காட்ட முடியும். பா.ஜனதா சரியான பாதையில் போகிறது. 2019-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார்.


    எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தன் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அவரது கடமை. கருணாசை கைது செய்ததை எச்.ராஜா வழக்குடன் இணைத்து ஒரே மாதிரி பார்க்க கூடாது.

    நான் சட்டத்தை மதித்து முன்ஜாமீன் வாங்கினேன். நான் தலைமறைவாக இல்லை. கைது செய்யும் அளவுக்கு எந்த தவறும் பா.ஜனதாவினர் செய்யவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் நல்லது. கூட்டணியை தலைமைதான் தீர்மானிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #SVeShekher
    பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் இன்றும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. #SVeShekher
    கரூர்:

    பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே)மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2ல் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 5-ந்தேதி நடைபெற்ற வழக்கில் எஸ்.வி. சேகர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று 20-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை கரூர் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

    இதனிடையே இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். இதனால் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜராகவில்லை.

    இந்தநிலையில் அவர், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்ததற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி இந்திய குடியரசு கட்சியின்(அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வருகிற 23-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். #SVeShekher
    தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்யாமல் மன்சூர் அலிகானை கைது செய்வதா? என்று இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
    தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜனநாயக ஆட்சியில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கிடையாது எல்லோரும் ‘இந்நாட்டு மன்னர்கள்’ என்று சொன்னார்கள். வெளிநாட்டில் பேச்சு சுதந்திரத்திற்கோ, கருத்துச் சுதந்திரத்திற்கோ ஆளும் அரசுகளோ, மற்ற யாருமோ தடைபோடுவதில்லை. ஒன்றின் மீது நம்முடைய நம்பிக்கை இழக்கும் போது தான் விமர்சனம் அங்கே எழுகிறது.

    தற்போது தமிழகத்தில் தினமும் பிரச்சனைகள், போராட்டங்கள் என்று ஒரு போர்க்களமாகவே மாறியிருக்கிறது. நம் தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்வதால் தான் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.

    சேலம் பசுமை வழிச்சாலை பற்றி மன்சூர் அலிகான் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய பேச்சு தவறு தான். உணர்ச்சி மேலிடம் போது கோபம் வெளிப்படுவது இயல்பு. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அவசர அவசரமாக, அவரை வீட்டிலேயே கைது செய்ய முனைந்த காவல் துறை, பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, இழிவுப்படுத்தி தமிழகத்தில் குழப்பத்தையும், பிரச்சனையையும் ஏற்படுத்திய எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?


    உடனடியாக கைது செய்ய வேண்டிய அவரை விட்டுவிட்டு மாறாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாக்கிறீர்கள். ஒரு கண்ணில் வெண்ணெயும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும் உங்கள் ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது.

    மன்சூர் அலிகான் கைது செய்வதில் காட்டிய அக்கறையை, தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்தால் உண்மையான ஜனநாயக நாடாக இருக்கும். இல்லையென்றால் இவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படும் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

    தன் வீட்டிற்கோ, தன் சொந்தத்திற்கோ மன்சூர் அலிகான் குரல் கொடுக்கவில்லை, மக்களின் நலனிற்காகவே பேசினார். ஆகையால் அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் இல்லையென்றால் எஸ்.வி. சேகரை கைது செய்து, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SVeShekher #MansoorAlikhan #bharathiraja
    அடுத்த மாதம் 12-ந்தேதி நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நெல்லை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #SVeShekher

    நெல்லை:

    பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது நெல்லை ஜெ.எம்-1 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இன்று எஸ்.வி.சேகர் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து அடுத்த மாதம் ஜூலை 12-ந்தேதி எஸ்.வி.சேகர் நெல்லை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டார். அவ்வாறு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார். #SVeShekher #TirunelveliCourt

    அவதூறு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகர் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #SVeShekher #TNMinister #KadamburRaju
    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்டது கண்டனத்துக்குள்ளானது.

    இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை.

    கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எஸ்.வி.சேகர் தலைமறைவாகாமல் சென்னையிலேயே ஹாயாக சுற்றி வருகிறார். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

    அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர்களிடமும் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    அமைச்சர் கடம்பூர் ராஜூவிடமும் எஸ்.வி.சேகர் பற்றி பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் இந்த வி‌ஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் அருண்குமார்-திவ்யா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகரும் பங்கேற்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அமைச்சர் கடம்பூர் ராஜூவின் குடும்பத்தினருடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

    அவதூறு வழக்கில் போலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அமைச்சரின் இல்ல திருமண நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டிருப்பது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


    இது தொடர்பாக சமூக வலை தளங்களில் பொது மக்கள் கடுமையான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை இழிவாக பேசிய பெண்ணை உடனடியாக கைது செய்த போலீசாரால் எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்த போலீசார் எஸ்.வி.சேகரை மட்டும் விட்டு வைத்திருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

    சாமானியர்கள் மீது மட்டும் தான் சட்டம் கடுமையாக பாயுமா? அதிகாரம் மிக்கவர்கள் மீது பாயாதா? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் காரசாரமாக முன்வைக்கப்படுகிறது. எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சென்னை மாநகர போலீசாரின் செயல்பாடுகள் பற்றியும் பொது மக்கள் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் எஸ்.வி. சேகரை கைது செய்யாத போலீசார் அவர் மீது எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதன் படி நாளை மறுநாள் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் வளாகத்தில் செயல்பட்டு வரும் எழும்பூர் கோர்ட்டில் எஸ்.வி.சேகர் ஆஜராவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. #SVeShekher #TNMinister #KadamburRaju
    ×