என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது
    • குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். இந்த பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தில் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை ஆகியவையும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதே நாளில் சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளும் சென்னை மாநகரை குறி வைத்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள் சிலரை குறி வைத்து அவர்களது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக விரைவில் பெரிய அளவிலான மெகா சோதனையை நடத்த அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழக அரசியல் களத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் சிலரது வீடுகளில் இந்த சோதனை விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனையை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் இந்த சோதனையை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தேர்தல் நேரத்தில் இது போன்ற சோதனைகளை நடத்துவதன் மூலமாக பாராளுமன்ற தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பு உருவாகும் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, தமிழகத்தில் முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் அவ்வப்போது நடைபெறும் அமலாக்கத்துறை, வருமானவரி துறை சோதனைகளே பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் பெரிய அளவில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையை நடத்தினால் அது தேர்தல் களத்திலும் நிச்சயம் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது எப்போதுமே சோதனைகள் என்பது ஏதாவது ஒரு கண்ணோட்டத்தில் நடத்தப்படுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    அதே நேரத்தில் குறிப்பிட்ட நபர்களை குறி வைத்தோ கட்சியினரை குறி வைத்தோ சோதனைகளை நடத்துவதுமில்லை. இதற்கு முன்பும் பலமுறை ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா சோதனை என்பது நடத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் எந்தவித திட்டமிடலும் இல்லாமலேயே ஒவ்வொரு முறையும் திடீரென சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    • தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
    • 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மத்திய மந்திரியும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக இந்த செயல்வீரர்கள் கூட்டம் உள்ளது.

    சேலத்தில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களை அறிமுகப்படுத்தி, கூட்டணியை உறுதி செய்து சென்றார். தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். இந்த தேர்தல் பிரதமர் நரேந்திரமோடிக்கான தேர்தல். இந்த தேர்தல் மூலம் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆக போகிறார்களா?.

    ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத அதி.மு.க எப்படி பிரதமராக போகிறார்கள். 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    தேர்தலின் போது தி.மு.க டாஸ்மாக் கடைகளை குறைப்போம். கல்வி கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக்குழு கடன், விவசாய கடன்களை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர்.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் எதையுமே செய்யவில்லை. வழக்கம் போல சொல்வது எதையும் செய்யாத ஆட்சியாக இந்த தி.மு.க ஆட்சியானது செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க.வை தூக்கி எறிய மக்கள் தயராகிவிட்டனர். பொய் பேசுவதும், கொள்ளையடிப்பதும், லஞ்சம் வாங்குவது, கட்டபஞ்சாயத்து பண்ணுவது, குடும்ப ஆட்சி இவை எல்லாம் தான் தி.மு.க.வின் சிறந்த கொள்கையாக உள்ளது.

    கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் சாலை கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது.அந்த வகையில் மேட்டுப்பாளையத்திற்கான ரெயில் வசதியையும் மேம்ப டுத்தி கொடுத்துள்ளோம்.

    இனி அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் இந்த சேவைகள் தொடர்ந்து செய்யப்படும். நேர்மையாக மக்களுக்கான ஆட்சியை நடத்தி கொண்டிருப்பது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க தான். பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்பது உள்பட பல்வேறு வகைகளில் தமிழர்களுக்கு பா.ஜனதா பெருமை சேர்த்து வருகிறது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் இதுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த தொகுதிக்கு என்ன திட்டத்தை வாங்கி தந்துள்ளார். ஒன்றுமில்லை. அவர் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத 2 ஜி ஊழலை செய்துள்ளார். மேலும் அவர் இந்துக்கள், பெண்கள் மற்றும் தலை வர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மத்திய அரசு செய்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரசாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

    இதில், தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகம் என 3 மாநி லங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து, சாமியை வழிபட்டு சென்றனர். விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு ஓசூர் தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெற்றது.

    இந்த விழாவின் போது, விநாயகர், சந்திர சூடேஸ்வரர், மரக தாம்பிகை அம்மன், முருகர், ஆஞ்சநேயர் என 20-க்கும் மேற்பட்ட சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து வானவேடிக்கை மற்றும் மேள வாத்தியம் முழங்க தேர்பேட்டையில் வீதி உலா நடைபெற்றது.

    தேர்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு, தேர்பேட்டையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ மரக தாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வர சாமியை தெப்பத்தில் வைத்து, நாதஸ்வர இசையுடன், குளத்தை சுற்றி 3 முறை வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏராளமான பக்தர்கள் பூஜைப் பொருட்களை வழங்கி சாமியை வழிபட்டனர்.

    மேலும் இதில், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தெப்ப உற்சவத்தை காண, ஓசூர் மற்றும் சுற்று பகுதிகளிலிருந்து மக்கள் குவிந்ததால் ஓசூர் தேர்பேட்டையில் கூட்டம் அலைமோதியது.

    • கடந்த 24-ந்தேதி விடுதலை சிறுத்தை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் மகேந்திரன், பார்வேந்தன் ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த மாதம் 20-ந்தேதி கடிதம் கொடுத்தது.

    கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு இருந்தனர்.

    தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்படும் விடுதலை சிறுத்தை கடந்த கால தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதத்தை அதில் குறிப்பிட்டு இந்த தேர்தலில் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். அதனை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 21-ந்தேதி ரத்து செய்து தகவல் தெரிவித்தது.

    தொடர்ந்து கடந்த 24-ந்தேதி விடுதலை சிறுத்தை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பான கோரிக்கை மனு ரத்து உத்தரவை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இதனால் இந்த வழக்கு நேற்று முடித்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னம் வழங்க முடியாது என்று அந்த மனுவை ரத்து செய்தது.

    இதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் மகேந்திரன், பார்வேந்தன் ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அதனை ஏற்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி இதனை அவசர வழக்காக விசாரிக்க முன் வந்துள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் கேட்ட சின்னம் ஒதுக்காத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து வந்தனர். ஏற்கனவே 16 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தனர்.

    வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் ஜெகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு புறப்பட்டனர்.

    அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் வெளியே வந்த ராமசுப்பு, 'காங்கிரஸ் கட்சி சார்பில் நான் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றார். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்தது அங்கு பரபரப்பை உருவாக்கியது.

    இந்நிலையில், நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு இன்று வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்பு மனு தாக்கல் செய்தேன்.

    காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக நான் செயல்பட மாட்டேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வடசென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.

    இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ததால் திருவிழா கோலமாக காணப்பட்டது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வடசென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

    40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

    இதில் முறையாக பூர்த்தி செய்யாமல் இருந்த மனுக்களும் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் கையெழுத்திடாமல் இருந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று மாலை 3 மணி வரை மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது வழக்கறிஞருடன் வந்து வேட்புமனு பரிசீலனையில் கலந்து கொண்டனர்.

    யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.

    வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதில் அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படும் நிலையில் மாற்று வேட்பாளர்கள் இன்று அல்லது நாளை வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்த பிறகு சனிக்கிழமை மாலை 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு ஒவ்வொரு வேட்பாளருக்கும் உரிய சின்னங்கள் என்ன என்பது அறிவிக்கப்படும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. தேர்தல் பணியில் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை அகரவரிசைப்படி அச்சடிக்கும் பணி 30-ந் தேதியில் இருந்து தொடங்கும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஏற்கனவே முதற்கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பயிற்சிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் இளம் தலைமுறை வாக்காளர்களிடையே வாக்களிப்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    10 லட்சத்து 90 ஆயிரத்து 547 வாக்காளர்கள் முதல் முறையாக வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இதனால் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் வேட்பாளர்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு மாநில செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.

    சனிக்கிழமை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியான பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    • மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தருமபுரி:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து அவர் கடந்த 22-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் நாளை (29-ந் தேதி) மாலை பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தருமபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி மற்றும் இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கூட்டத்தை முடித்து கொண்டு மீண்டும் அவர் கார் மூலம் சேலம் செல்கிறார்.

    முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தடங்கம் கிராமம் அருகே பிஎம்பி சல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் நின்று பேசுவதற்கு மேடை அமைக்கும் பணியும், பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    மேலும், கூட்டத்தை சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் வசதியும், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தி.மு.க. வினர் செய்து வருகின்றனர்.

    மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டப் பணிகளை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினர்.

    அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • பெண்கள் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே 3-2 என்ற கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
    • 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.

    சென்னை:

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    பெண்கள் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே 3-2 என்ற கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.

    பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் டபிள்யூ. ஐ.தேவாரம் ஆகியோர் பங்கேற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 2 குரோ எச்.ஆர். கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரோமா கோப்பையுடன் ரூ.40 ஆயிரமும், 3-வது இடம் பெற்ற அணிக்கு டாக்டர் போஸ் நினைவு கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

    டாக்டர் ஜி.டி.போஸ் நினைவு ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜித் போஸ், ஷீபா அஜித் போஸ், வேளாங்கண்ணி கல்வி குழும செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த், போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் பி.ஜெகதீசன், ஏ.தினகர், சி.ஸ்ரீகேசவன், ஏ.பாக்யராஜ் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஜி.எஸ்.டி.-ஐ.ஓ.பி. அணிகள் மோதுகின்றன. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வருமான வரி-டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதுகின்றன.

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை கோ.புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கொரோனா காலத்தின்போது அவர் பணியில் ஈடுபட்டார். அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இழப்பால், போதிய வருமானமின்றி அவரது மனைவி ரம்யா (38) மற்றும் மகள் ராகவி (14) ஆகியோர் செய்வதறியாது திகைத்தனர்.

    அந்த சமயத்தில், கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி ரம்யா போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்தார். தன்னுடைய நிலையை விளக்கி கூறி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணை அடிப்படையில் பணி வழங்ககோரி விண்ணப்பம் செய்தார். இதனை தொடர்ந்து அவரது மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில், அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரும் பரிந்துரைத்தார். இதனை அடுத்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, அவரது கல்வி தகுதிக்கு ஏற்ப கண்டக்டர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    கடந்த 14-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடந்த விழாவில், ரம்யாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பணிநியமன ஆணையை வழங்கினார். அதன்பின்னர், மதுரை வந்த ரம்யா, மதுரை உலகனேரில் உள்ள தன் கணவர் பணிபுரிந்த அதேகிளையில் கண்டக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு மதுரை-ராமநாதபுரம் செல்லும் பஸ்சில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணியை அவர் திறம்பட செய்து, மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அரசு பஸ்சில் பெண் கண்டக்டரா என ஆச்சரியப்படுத்தும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ரம்யா கூறியதாவது:-

    கணவர் இறந்த பிறகு குடும்பம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டேன். இதற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் பணி செய்தேன். இருப்பினும் அந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. அதனால், வாரிசு வேலை கிடைக்குமா? என முயற்சித்தேன். 11-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். மேலும் டிரைவர் வேலையை தவிர எந்த வேலை கொடுத்தாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தற்போது வேலை கிடைத்துள்ளது. 10 நாட்கள் பயிற்சியை முடித்து தற்போது பணியை தொடங்கி இருக்கிறேன். பெண் கண்டக்டர் என்பதால் எல்லோரும் என்னை வித்தியாசமாகவும், பெருமையாகவும் பார்க்கிறார்கள்.

    பெண்களால் எல்லா துறையிலும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். எந்த சிரமங்கள் இருந்தாலும், என் பணியை சிறப்பாக செய்வேன் என்ற மன தைரியம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களும் ஆதரவு தருகிறார்கள் என்றார். 

    • வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.
    • 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஓட்டுனர் உரிமம் இன்றி பள்ளி மாணவர்கள், மோட்டார் சைக்கிள்கள், 4 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.

    போலீசார் கண்காணித்து ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் சிறு வயதிலேயே லாரிகளை ஓட்டிச் செல்லும் குழந்தைகளை பெற்றோர்களே ஊக்கப்படுத்தி வருகின்றனர். 18 வயது பூர்த்தியடைந்தால்தான் ஓட்டுனர் உரிமமே வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்களும் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

    சில நேரங்களில் சாகச பயணம் மேற்கொண்டு அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர். இதே போல ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் தண்ணீர் டேங்கருடன் இணைந்த டிராக்டரை 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.

    இதனை அவரது குடும்பத்தினரே ஊக்கப்படுத்தி வருகின்றனர். சிறுவன் டிராக்டர் ஓட்டி வரும் போது தெருவில் நடந்து செல்லும் மக்கள் அச்சத்தில் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அன்னஞ்சி விலக்கில் இருந்து 70 கார்கள், 3 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் டி.டி.வி. தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேனியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியான வெளியூர் நபர்கள் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தங்கி இருந்தார். அ.ம.மு.க. நிர்வாகியான அவர் தேர்தல் செலவுக்காக ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணத்தை வைத்திருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
    • ராகுல் பிரசாரம் 10-ந் தேதிக்கு பிறகுதான் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வரவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறினார்.

    முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் அந்த அந்த மாநிலங்களில் ராகுல் காந்தி எந்தெந்த தொகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றி பயண திட்டங்களை வகுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தமிழ்நாட்டிலும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் தொடர்பாக செல்வ பெருந்தகை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த தேர்தலில் ஒரே நாளில் 4 இடங்களில் பிரசாரம் செய்தார். இந்த முறையும் 3 அல்லது 4 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய ஏதாவது ஒரு இடம்.

    கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி தொகுதிகள் சார்ந்த ஒரு இடம்.

    கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிகளை சார்ந்த ஒரு இடம்.

    திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் ஒரு இடம், இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

    ராகுல் பிரசாரம் 10-ந் தேதிக்கு பிறகுதான் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×