என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது.
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி என்றாலே பயங்கரவாதம், வன்முறை, அராஜகம் ஆகியவை தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. தற்போது, புதிய வரவாக போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அமைதிப் பாதையில், ஆக்கப்பூர்வமான பாதையில், முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் நாட்டை அழிவுப் பாதையில் தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை.

    தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், பாலக்கரை பகுதியில் ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஓட்டுநரை சரமாரியாக அடித்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

    சென்னை, கண்ணகி நகரில் உமாபதி என்கிற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற காவல் துறையினரையே கஞ்சா வியாபாரியும், அவரது நண்பர்களும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபோன்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. இதனைச் செய்யாமல் இருப்பது, எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்குச் சமம். இது சட்டம்-ஒழுங்கையும், நாட்டின் வளர்ச்சியையும் நாசமாக்கும் செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குழுக்களை அமைத்து, போதைப் பொருள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் (வயது 31).

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காலனி தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் ஒரு வயது குழந்தை உடன் மத்தூர் அருகே தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.

    இந்த நிலையில் பாலச்சந்தர், தனது மனைவி, குழந்தையுடன் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக சொந்த ஊரான உத்திரமேரூருக்கு சென்றுள்ளார். மேலும் சொந்த ஊரிலிருந்து நேற்று மத்தூருக்கு பாலச்சந்தர் மட்டும் வந்துள்ளார்.

    அப்போது வந்து பார்த்தபோது வீட்டின் இரும்பு கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டும், உள்ளே பீரோவில் இருந்து 8 பட்டு புடவைகள், ரூ.30ஆயிரம் மதிப்புள்ள டி.வி., 2ஜோடி வைர தோடுகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலச்சந்தர் மத்தூர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், பாலச்சந்தர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், வைர தோடு, புடவை, டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவ குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.
    • தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வாக்களிக்கச் சென்ற பலர் ஏமாற்றத்துக்கு ஆளானதாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்திருந்தார்.

    ஆனால் கலெக்டரிடம் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் கூறியிருப்பதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதி கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி எண் 214 அங்கப்பா பள்ளியில் 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.

    அவர்கள் அனைவரும் 30 ஆண்டுகளாக ஓட்டளித்து வருபவர்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்கள். நல்லாட்சியை விரும்பி ஓட்டளிக்க கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோல் தெப்பக்குளம் பகுதி வாக்குச்சாவடி எண் 158-ல் 40 ஓட்டுகளும், 157-ல் 45 ஓட்டுகளும், 156-ல் 20 ஓட்டுகளும், 155-ல் 40 ஓட்டுகளும், 154-ல் 30 ஓட்டுகளும், 153-ல் 25 ஓட்டுகளும் என 200 ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன.

    இவர்கள் அனைவரும் வடமாநிலத்தவர்கள். பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஓட்டளிப்பவர்கள். இப்படி கோவையில் மட்டும் 5 சதவீத ஓட்டுகள். அதாவது 21 லட்சம் ஓட்டுகளில் ஏறக்குறைய 1 லட்சம் ஓட்டுகள் எந்த முன்னறிவிப்போ, கள விசாரணையோ இன்றி கலெக்டரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்தல் பிரிவு பணியாளர்கள் பெயர்களை நீக்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக கலெக்டரை நேரடியாக சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. போனில் தொடர்பு கொண்டோம். சேலஞ்ச் ஓட்டு போட சட்டத்தில் இடமில்லை என்று கூறினார்.

    அங்கப்பா மேல்நிலைப்பள்ளியில் 1,353 ஓட்டுகள் இருந்த நிலையில் 823 ஓட்டுகள் குறைந்தபோது விழித்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மவுனம் காத்து தி.மு.க.வின் விஞ்ஞான முறைகேட்டுக்கு துணை போய் இருக்கிறது.

    கலெக்டர் உரிய நடை முறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்கிறார். ஆனால் வாக்குச்சாவடி எண் 214-ல் ஓட்டுகள் மறுக்கப்பட்டது வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கலெக்டர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

    இதுசம்பந்தமாக மனு கொடுத்தோம். அப்போதும் வக்கீல்களை நீண்ட நேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்தபின்பே மனுவை பெற்றுக் கொண்டார். இது தி.மு.க.வின் முறைகேட்டிற்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதை காட்டு கிறது.

    தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. இதை இத்துடன் பா.ஜ.க. விடாது. ஜனநாயக ரீதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
    • www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    மாதவரம்:

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை (23-ந்தேதி) 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னை மாதவரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் கூடுதலாக தலா 30 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஏட்டு ராம்குமார் சேதுபதி மற்றும் போலீசார் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக இதனை பதுக்கி வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் சமயத்தில் சென்னையில் 53 டீம் 3 ஷிப்டுகளாக ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வந்தனர். இது இப்போது கலைக்கப்பட்டு விட்டது.
    • ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு பறக்கும் படை மட்டுமே உள்ளது. அவர்களும் முன்பு போல் பணத்தை பறிமுதல் செய்வதில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இன்னும் மற்ற மாநிலங்களில் ஜூன் 1-ந்தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளன. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளது.

    தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படை சோதனைகளும் குறைந்து விட்டது. சென்னையில் மொத்தம் 53 குழுக்கள் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில் இப்போது ஒரு சட்டசபை தொகுதிக்கு 1 வாகனம் வீதம் 18 வாகனங்கள் சோதனைக்காக உள்ளது. அவர்களும் முன்பு போல் பணம் பறிமுதல் செய்வதில்லை.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் வாகன சோதனையில் பணத்தை பறிகொடுத்தவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னையில் மாநகராட்சி உதவி ஆணையர் உமா மகேஸ்வரி இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அணுகி பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    தேர்தல் சமயத்தில் சென்னையில் 53 டீம் 3 ஷிப்டுகளாக ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வந்தனர். இது இப்போது கலைக்கப்பட்டு விட்டது. ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு பறக்கும் படை மட்டுமே உள்ளது. அவர்களும் முன்பு போல் பணத்தை பறிமுதல் செய்வதில்லை. இதேபோல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பறக்கும் படைகளை கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    மற்ற மாநிலங்களில் இன்னும் 6 கட்டமாக ஜூன் 1-ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளன. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் இங்கு அமலில் இருக்காது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளதால் அந்த மாநிலங்களையொட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு செயல்பாட்டில் உள்ளது.

    கேரளாவில் வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையார், கோபாலபுரம் ஆகிய 2 சோதனை சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் பல்வேறு தளர்வுகளை செய்துள்ளது. அதன்படி இப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கம் காரணமாக வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை தேர்தல் ஆணையரிடம் நேரில் விளக்கி கூறி, வாக்களிப்பு நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஜூன் 4-ந்தேதி வரை தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததை, மறுபரிசீலனை செய்யக்கோரியும், தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நடந்து முடிந்தவுடன், நடத்தை விதிமுறைகளை தேர்தல் நடைபெறும் இதர மாநில எல்லைகளில் மட்டுமே பின்பற்றிட அறிவுறுத்திட வேண்டும் எனும் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, பறக்கும் படைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்து, மாநில எல்லைகளில் மட்டுமே, நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.

    இதனால், வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ளவும், அரசுக்கான வரி வருவாயையை உறுதி செய்திடவும் வழிவகுக்கும் என்பதனை மனதார வரவேற்று தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் பணிகளில் துணையிருந்து பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.
    • இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை-பாளை ஆகியவை இரட்டை நகரங்களாக விளங்கி வருகிறது. இதில் பாளை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளன.

    இதில் பாளையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒவ்வொரு புதிய கல்வியாண்டின்போதும் இங்கு மாணவர் சேர்க்கையின்போது கடும் போட்டி நிலவும். இந்த ஆண்டு இன்று எல்.கே.ஜி. குழந்தைகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை அறிந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று மாலை முதலே பள்ளி முன்பு வரத்தொடங்கினர். தங்களின் குழந்தைகளுக்கு எப்படியாவது ஒரு இடம் இந்த பள்ளியில் கிடைத்து விட வேண்டும் என்ற பரிதவிப்பில் அவர்கள் இரவு முழுவதும் பள்ளியின் நுழைவு வாயில் முன்பே காத்திருந்ததை காண முடிந்தது.

    நேரம் செல்ல செல்ல ஏராளமான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அவர்கள் தாங்களாகவே ஒரு நோட்டினை தயார் செய்து முதலில் வந்தவர் தனது பெயரை பதிவு செய்து, அதனை தொடர்ந்து வரக்கூடிய ஒவ்வொரு பெற்றோரின் பெயர்களையும் வரிசை எண்கள் இட்டு எழுதி வைத்தனர். இந்த முன்னுரிமைக்காக நோட்டு இருந்தாலும், பெண் குழந்தைகளின் பெற்றோர்களோ, உறவினர்களோ யாராவது ஒருவர் வரிசையில் நிற்க வேண்டும் என அவர்களுக்குள் விதிமுறைகள் வைத்துக்கொண்டு குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.

    ஒரு கட்டத்திற்கு பிறகு இரவில் சில பெற்றோர்கள் போர்வை, தலையணையுடன் பள்ளியின் வாசலில் விரித்து தூங்கினர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர். சுமார் 125-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இரவில் பள்ளி முன்பு காத்திருந்தனர். அந்த பள்ளியை காண்பதற்கு ஒரு சில பெற்றோர்களுடன் பெண் குழந்தைகளும் வந்ததை காண முடிந்தது. எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் விடிய, விடிய பள்ளி வாசலில் காத்திருந்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து இன்று காலை அந்த சாலை முழுவதும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பெற்றோர்கள் வரிசையாக நின்றனர். பள்ளி திறந்தவுடன் அவர்கள் விண்ணப்பத்தை வரிசையாக நின்று வாங்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர்.
    • எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த 19ந் தேதி நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவ ட்டத்திற்கு 5 கம்பெனியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வந்திருந்தனர்.இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருப்பூரில் தங்கியிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் இணைந்து பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர். மேலும் பதட்டமான 200க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    திருப்பூரில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    இதையடுத்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேற்று இரவு முதல் ரெயில்களில் தெலுங்கானா புறப்பட்டு சென்றனர். அங்கு நடை பெறும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் நாளை மறுநாள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் செல்கிறார்கள்.

    • தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    சூறைக்காற்றால் வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்ட காஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.

    சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி தீபு (வயது 35) என்பவரின் 700 நேந்திரம் வாழைகள், சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழைகள், ராசு என்பவரின் 1000 வாழைகள், தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின் 1000 வாழைகள் என மொத்தம் 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது.

    அதேபோல தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல் ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலை பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒருபுறம் மழை வந்து சந்தோசம் இருந்த போதும் சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைகாற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது.
    • வீதி உலாவும் 3-ம் நாளில் கருட சேவையும் நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நின்ற திருக் கோலத்தில் வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். மேலும் தனது தேவியார் ருக்மணி பிராட்டி, மகன் பிருத் யும்னன், பேரன் அனிருத்தன், தம்பி சாத்யகி என குடும்ப சகிதமாக இக்கோவிலில் அருள் பாலிக்கிறார். குருஷேத்திரப் போரில் தன் முகத்தில் ஏற்பட்ட காயங்களும் உற்சவர் பார்த்த சாரதிபெருமாளுக்கு காணப்படுகிறது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனிமாதமும் விமரிசையாக நடைபெறுகிறது.

    அதன்படி பார்த்த சாரதி பெருமாளுக்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நாளை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாளில் புன்னைமர வாகன வீதி உலாவும், 2-ம் நாள் விழாவில் பரமபதநாதன் திருக் கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் 3-ம் நாளில் கருட சேவையும் நடைபெறுகிறது.

    4-ம் நாளில் சூரிய பிரபை, சந்திர பிரபை, 5-ம் நாள் நாச்சியார் திருக் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறு கிறது. 6-ம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணா பிஷேகம் நடைபெற இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 7-ம் நாளான ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்த ருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. 8-ம் நாள்திருவிழாவான 30-ந் தேதி செவ்வாய்கிழமை வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை. 9-ம் நாள் திருவிழாவில் காலை 6.15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது.

    10-ம் நாளான மே-2ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற் சவ விழா நிறைவடைகிறது.

    • காசிக்கு நிகரான சிறப்பும் பெற்றது அவினாசிலிங்கேசுவரர் கோவில்.
    • காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். 19-ந்தேதி இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் தேரில் இருந்து அருள்பாலித்த உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவ... சிவா... என்ற பக்திகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் நிலையிலிருந்து சிறிது தூரம் இழுத்து வடக்கு வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்பு தேர் மாலையில் நிலை வந்து சேர உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) சிறிய அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.

    • பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது21). இவர் பெயிண்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரெட்டிசந்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவருக்கும் இன்ஸ்டா கிராமம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நாளடைவில் இது காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர். இதனால் அவர்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்தனர். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அருண்பாண்டியின் குடும்பத்தினர் சம்மதித்ததால் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கோவிலில் அருண்பாண்டி மற்றும் பிரியதர்ஷினிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பபடி செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    ×