என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர்.
    • போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பீடி இலை பண்டல்கள், மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் காயல்பட்டினம் மற்றும் வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான கடற்கரை வழியாக போதைப்பொருட்களை படகு மூலம் இலங்கைக்கு கடத்தும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், காவலர்கள் இருதய ராஜகுமார், ராமர் உள்ளிட்ட குழுவினர் குறிப்பிட்ட கடற்கரை பகுதிக்கு சென்று கண்காணித்து வந்தனர்.

    இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில் மர்ம பொருள் பண்டல்களுடன் கும்பலாக சிலர் நின்றுள்ளனர். படகு ஒன்றும் தனியாக நின்று கொண்டிருந்தது. உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர்.

    ஆனால் உஷாரான அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    விசாரணையில் அவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி சாமி மகன் அந்தோணிதுரை (52) என்பது தெரியவந்தது. அவர், தன்னை தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் ரூ.5 ஆயிரம் தந்து இங்கு அழைத்து வந்ததாகவும் வேறு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த மர்ம பண்டல்களை ஆய்வு செய்தபோது, 50 மூட்டைகளில் சுமார் 2 டன் எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரிந்தது.

    இவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீசார், தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 3 பேர், படகின் உரிமையாளர் குறித்த விவரங்களை கேட்டு பிடிபட்ட அந்தோணி துரையிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
    • வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் கண்டித்தும், பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பார்வதிபுரம் மக்கள் 7-ம் நாள் போராட்டம் நடத்தினர். போராடிய மக்களை காவல் துறையினரைக் கொண்டு கைது செய்த தமிழக அரசு, கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப் படுவதாகவும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்து விட்ட நிலையில், மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும். இதற்காக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கத்துடிப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு வினா எழுப்பியுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 845 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.89 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 80-க்கு விற்றது.

    இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்து சவரன் ரூ.55 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 845 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.89 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கு விற்கிறது.

    • 2-ம் வகுப்பு மாணவி அ.சாரா, 4-ம் வகுப்பு மாணவி கு.ஹரிதா இருவரும் அவரவர் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தனர்.
    • மாணவிகள் சாரா, ஹரிதா இருவரும் முறையே 2 மற்றும் 4-ம் வகுப்பில் இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

    திருவள்ளூர்:

    ஆங்கிலத்தில் படித்தல், உச்சரித்தல், பொருள் கூறுதல் தொடர்பாக 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2023–24ம் ஆண்டிற்கான மாநில மற்றும் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சி அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவி அ.சாரா, 4-ம் வகுப்பு மாணவி கு.ஹரிதா ஆகிய இருவரும் அவரவர் வகுப்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தனர்.

    தேசிய அளவிலான போட்டியில் தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 2 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64 மாணவ-மாணவியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்றனர்.

    இதில் மாணவிகள் சாரா, ஹரிதா இருவரும் முறையே 2 மற்றும் 4-ம் வகுப்பில் இரண்டாம் பரிசு வெள்ளிப்பதக்கம் வென்றனர். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் ஆங்கிலத்தில் தேசிய அளவில் அசத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது.
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி என்றாலே பயங்கரவாதம், வன்முறை, அராஜகம் ஆகியவை தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. தற்போது, புதிய வரவாக போதைப் பொருட்கள் நடமாட்டம் கொடிகட்டி பறக்கிறது. கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அமைதிப் பாதையில், ஆக்கப்பூர்வமான பாதையில், முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் நாட்டை அழிவுப் பாதையில் தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை.

    தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், பாலக்கரை பகுதியில் ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஓட்டுநரை சரமாரியாக அடித்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

    சென்னை, கண்ணகி நகரில் உமாபதி என்கிற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற காவல் துறையினரையே கஞ்சா வியாபாரியும், அவரது நண்பர்களும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபோன்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க. அரசுக்கு உள்ளது. இதனைச் செய்யாமல் இருப்பது, எதிர்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்குச் சமம். இது சட்டம்-ஒழுங்கையும், நாட்டின் வளர்ச்சியையும் நாசமாக்கும் செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குழுக்களை அமைத்து, போதைப் பொருள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் (வயது 31).

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காலனி தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் ஒரு வயது குழந்தை உடன் மத்தூர் அருகே தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.

    இந்த நிலையில் பாலச்சந்தர், தனது மனைவி, குழந்தையுடன் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக சொந்த ஊரான உத்திரமேரூருக்கு சென்றுள்ளார். மேலும் சொந்த ஊரிலிருந்து நேற்று மத்தூருக்கு பாலச்சந்தர் மட்டும் வந்துள்ளார்.

    அப்போது வந்து பார்த்தபோது வீட்டின் இரும்பு கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டும், உள்ளே பீரோவில் இருந்து 8 பட்டு புடவைகள், ரூ.30ஆயிரம் மதிப்புள்ள டி.வி., 2ஜோடி வைர தோடுகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலச்சந்தர் மத்தூர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், பாலச்சந்தர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், வைர தோடு, புடவை, டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவ குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.
    • தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வாக்களிக்கச் சென்ற பலர் ஏமாற்றத்துக்கு ஆளானதாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்திருந்தார்.

    ஆனால் கலெக்டரிடம் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் கூறியிருப்பதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதி கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி எண் 214 அங்கப்பா பள்ளியில் 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.

    அவர்கள் அனைவரும் 30 ஆண்டுகளாக ஓட்டளித்து வருபவர்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்கள். நல்லாட்சியை விரும்பி ஓட்டளிக்க கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோல் தெப்பக்குளம் பகுதி வாக்குச்சாவடி எண் 158-ல் 40 ஓட்டுகளும், 157-ல் 45 ஓட்டுகளும், 156-ல் 20 ஓட்டுகளும், 155-ல் 40 ஓட்டுகளும், 154-ல் 30 ஓட்டுகளும், 153-ல் 25 ஓட்டுகளும் என 200 ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன.

    இவர்கள் அனைவரும் வடமாநிலத்தவர்கள். பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஓட்டளிப்பவர்கள். இப்படி கோவையில் மட்டும் 5 சதவீத ஓட்டுகள். அதாவது 21 லட்சம் ஓட்டுகளில் ஏறக்குறைய 1 லட்சம் ஓட்டுகள் எந்த முன்னறிவிப்போ, கள விசாரணையோ இன்றி கலெக்டரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்தல் பிரிவு பணியாளர்கள் பெயர்களை நீக்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக கலெக்டரை நேரடியாக சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. போனில் தொடர்பு கொண்டோம். சேலஞ்ச் ஓட்டு போட சட்டத்தில் இடமில்லை என்று கூறினார்.

    அங்கப்பா மேல்நிலைப்பள்ளியில் 1,353 ஓட்டுகள் இருந்த நிலையில் 823 ஓட்டுகள் குறைந்தபோது விழித்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மவுனம் காத்து தி.மு.க.வின் விஞ்ஞான முறைகேட்டுக்கு துணை போய் இருக்கிறது.

    கலெக்டர் உரிய நடை முறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்கிறார். ஆனால் வாக்குச்சாவடி எண் 214-ல் ஓட்டுகள் மறுக்கப்பட்டது வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கலெக்டர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

    இதுசம்பந்தமாக மனு கொடுத்தோம். அப்போதும் வக்கீல்களை நீண்ட நேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்தபின்பே மனுவை பெற்றுக் கொண்டார். இது தி.மு.க.வின் முறைகேட்டிற்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதை காட்டு கிறது.

    தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. இதை இத்துடன் பா.ஜ.க. விடாது. ஜனநாயக ரீதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
    • www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    மாதவரம்:

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை (23-ந்தேதி) 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னை மாதவரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் கூடுதலாக தலா 30 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஏட்டு ராம்குமார் சேதுபதி மற்றும் போலீசார் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக இதனை பதுக்கி வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் சமயத்தில் சென்னையில் 53 டீம் 3 ஷிப்டுகளாக ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வந்தனர். இது இப்போது கலைக்கப்பட்டு விட்டது.
    • ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு பறக்கும் படை மட்டுமே உள்ளது. அவர்களும் முன்பு போல் பணத்தை பறிமுதல் செய்வதில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இன்னும் மற்ற மாநிலங்களில் ஜூன் 1-ந்தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளன. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளது.

    தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படை சோதனைகளும் குறைந்து விட்டது. சென்னையில் மொத்தம் 53 குழுக்கள் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில் இப்போது ஒரு சட்டசபை தொகுதிக்கு 1 வாகனம் வீதம் 18 வாகனங்கள் சோதனைக்காக உள்ளது. அவர்களும் முன்பு போல் பணம் பறிமுதல் செய்வதில்லை.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் வாகன சோதனையில் பணத்தை பறிகொடுத்தவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னையில் மாநகராட்சி உதவி ஆணையர் உமா மகேஸ்வரி இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அணுகி பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    தேர்தல் சமயத்தில் சென்னையில் 53 டீம் 3 ஷிப்டுகளாக ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வந்தனர். இது இப்போது கலைக்கப்பட்டு விட்டது. ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு பறக்கும் படை மட்டுமே உள்ளது. அவர்களும் முன்பு போல் பணத்தை பறிமுதல் செய்வதில்லை. இதேபோல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பறக்கும் படைகளை கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    மற்ற மாநிலங்களில் இன்னும் 6 கட்டமாக ஜூன் 1-ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளன. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் இங்கு அமலில் இருக்காது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளதால் அந்த மாநிலங்களையொட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு செயல்பாட்டில் உள்ளது.

    கேரளாவில் வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையார், கோபாலபுரம் ஆகிய 2 சோதனை சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் பல்வேறு தளர்வுகளை செய்துள்ளது. அதன்படி இப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கம் காரணமாக வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை தேர்தல் ஆணையரிடம் நேரில் விளக்கி கூறி, வாக்களிப்பு நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஜூன் 4-ந்தேதி வரை தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததை, மறுபரிசீலனை செய்யக்கோரியும், தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நடந்து முடிந்தவுடன், நடத்தை விதிமுறைகளை தேர்தல் நடைபெறும் இதர மாநில எல்லைகளில் மட்டுமே பின்பற்றிட அறிவுறுத்திட வேண்டும் எனும் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, பறக்கும் படைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்து, மாநில எல்லைகளில் மட்டுமே, நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.

    இதனால், வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ளவும், அரசுக்கான வரி வருவாயையை உறுதி செய்திடவும் வழிவகுக்கும் என்பதனை மனதார வரவேற்று தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் பணிகளில் துணையிருந்து பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.
    • இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை-பாளை ஆகியவை இரட்டை நகரங்களாக விளங்கி வருகிறது. இதில் பாளை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளன.

    இதில் பாளையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒவ்வொரு புதிய கல்வியாண்டின்போதும் இங்கு மாணவர் சேர்க்கையின்போது கடும் போட்டி நிலவும். இந்த ஆண்டு இன்று எல்.கே.ஜி. குழந்தைகளுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை அறிந்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று மாலை முதலே பள்ளி முன்பு வரத்தொடங்கினர். தங்களின் குழந்தைகளுக்கு எப்படியாவது ஒரு இடம் இந்த பள்ளியில் கிடைத்து விட வேண்டும் என்ற பரிதவிப்பில் அவர்கள் இரவு முழுவதும் பள்ளியின் நுழைவு வாயில் முன்பே காத்திருந்ததை காண முடிந்தது.

    நேரம் செல்ல செல்ல ஏராளமான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அவர்கள் தாங்களாகவே ஒரு நோட்டினை தயார் செய்து முதலில் வந்தவர் தனது பெயரை பதிவு செய்து, அதனை தொடர்ந்து வரக்கூடிய ஒவ்வொரு பெற்றோரின் பெயர்களையும் வரிசை எண்கள் இட்டு எழுதி வைத்தனர். இந்த முன்னுரிமைக்காக நோட்டு இருந்தாலும், பெண் குழந்தைகளின் பெற்றோர்களோ, உறவினர்களோ யாராவது ஒருவர் வரிசையில் நிற்க வேண்டும் என அவர்களுக்குள் விதிமுறைகள் வைத்துக்கொண்டு குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்றனர்.

    ஒரு கட்டத்திற்கு பிறகு இரவில் சில பெற்றோர்கள் போர்வை, தலையணையுடன் பள்ளியின் வாசலில் விரித்து தூங்கினர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும், இன்று காலை சாப்பிட வேண்டிய உணவையும் எடுத்து வந்து அங்கு வைத்து சாப்பிட்டனர். சுமார் 125-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இரவில் பள்ளி முன்பு காத்திருந்தனர். அந்த பள்ளியை காண்பதற்கு ஒரு சில பெற்றோர்களுடன் பெண் குழந்தைகளும் வந்ததை காண முடிந்தது. எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் விடிய, விடிய பள்ளி வாசலில் காத்திருந்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து இன்று காலை அந்த சாலை முழுவதும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பெற்றோர்கள் வரிசையாக நின்றனர். பள்ளி திறந்தவுடன் அவர்கள் விண்ணப்பத்தை வரிசையாக நின்று வாங்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர்.
    • எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த 19ந் தேதி நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவ ட்டத்திற்கு 5 கம்பெனியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வந்திருந்தனர்.இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருப்பூரில் தங்கியிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் இணைந்து பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர். மேலும் பதட்டமான 200க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    திருப்பூரில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    இதையடுத்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேற்று இரவு முதல் ரெயில்களில் தெலுங்கானா புறப்பட்டு சென்றனர். அங்கு நடை பெறும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் நாளை மறுநாள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் செல்கிறார்கள்.

    ×