என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசியதாக அறிவழகன் என்பவர் தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • தேவதானப்பட்டி போலீசார் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் 9-வது வார்டு உறுப்பினராக தி.மு.க.வைச் சேர்ந்த நிபந்தன் என்பவர் வெற்றி பெற்று பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாகவும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் முறையிடச் சென்றனர்.

    அப்போது துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசியதாக அறிவழகன் என்பவர் தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று தேவதானப்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றும் 40-க்கும் மேற்பட்டோர் துப்புரவு பணியாளர் அல்லாத தனி நபர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நிபந்தன் மீது பொய் புகார் கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் புகார் கொடுத்த நபர் துப்புரவு பணியாளர் அல்லாத நபர் என்றும் நடைபெறாத செயலை சித்தரித்து தனது சுயலாபத்திற்காக பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
    • கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் பல்வேறு சிறப்புகளையும் பெருமையும் கொண்ட பழமையான மதுரை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.

    இந்த மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் மதுரை, சோழவந்தான், உசிலம்பட்டி, மதுரை வன உயிரினச் சரகம், மதுரை சமூக நலக் காடுகள் சரகம், திருமங்கலம் சமூக நலக்காடுகள் சரகம் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.

    இந்த வனச்சரகப் பகுதிகளில் அழகர்மலை, நாகமலை, யானைமலை, கொட்டாம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, அழகர்கோவில் மலை ஆகிய சிறுசிறு மலைகள் உள்ளது.

    இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் இல்லாததால் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை, புலி, யானை போன்ற பெரிய வனவிலங்குகள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்றாலும் மான், காட்டுப் பன்றிகள், குரங்குகள், முயல்கள் உள்ளிட்ட சிறுசிறு வன விலங்குகளும், பறவைகளும் அதிக அளவில் வசிக்கின்றன.

    கடந்த 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்களும், பறவைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மர்மமான முறையில் மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இது தொடர்பான தகவலை அறியும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் கடந்த 2015 முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை எத்தனை வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது? எத்தனை வன விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது? எத்தனை வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டது? என்ற விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மதுரை வனக்கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பம் வந்தது.

    இது தொடர்பாக அளித்துள்ள பதில் பல்வேறு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.

    மதுரை வன கோட்டத்தை பொறுத்தவரை மயில், காட்டு மாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், குரங்கு உட்பட 28 அரிய வகை உயிரினங்கள், பறவைகள் ஊர்வன வகைகள் உயிரிழந்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக மயில் 435 உயிரிழந்ததுள்ளது. அதேபோல் புள்ளிமான் 258, காட்டு மாடு 71, காட்டுப்பன்றி 43, குரங்கு 40 என மொத்தமாக சுமார் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 93 வன உயிரினங்கள் சாலை விபத்தின் மூலம் மட்டும் உயிரிழந்துள்ளது.

    மதுரை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் வன விலங்குகளுக்கு விஷம் வைத்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வன உயிரினங்கள் உயிரிழக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வனக்கோட்ட அலுவலகம், வயல்வெளிகளில் மயில்களுக்கு விஷம் வைத்தல், சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வெளிகளில் வனவிலங்குகள் சிக்கி பலியாகிறது.

    அரிய வகை உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வன விலங்குகள் வேட்டையாடிய அதன் இறைச்சி மற்றும் விலங்குகள் கறி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயல்வெளிகளில் நெற்பயிரை உண்ண உணவு தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொலை செய்யும் சம்பவம் மதுரை அதை சுற்றியுள்ள பகுதியில் அதிகரித்துள்ளது.

    தமிழ்நாடு வனத்துறை சார்பாக உயிரினங்கள் வேட்டையாடுதல் மற்றும் வன உயிரினங்கள் குற்றம் தொடர்பாக கண்காணிக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு கீழ் நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு மண்டல வாரியாக வன காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடும் முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மேலும் வனவிலங்குகள் வேட்டையாடுவது தொடர்பாக வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு வேட்டையாடும் சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் வன அதிகாரிகளுடன் தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மதுரையில் சிவப்பு பகுதி என்று அறியக்கூடிய பகுதிகளில் அதிக வனவிலங்குகள் உயிரிழந்த பகுதிகளாக மதுரை ரெயில் நிலையம், சூர்யா நகர் ஆண்டார்கொட்டாரம் உள்ளிட்டவற்றில் அதிக அளவு மயில்கள் இறந்துள்ளது. சிவரக்கோட்டை, திருமங்கலம், கள்ளிக்குடி, உசிலம்பட்டி பகுதியில் புள்ளி மான்கள் உயிரிழப்பு அதிகம் உள்ளது. உசிலம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, உள்ளிட்ட பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழப்பு அதிகம் உள்ளது.

    மேலும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டதன் மூலம் பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், படிப்படியாக வனவிலங்குகள் மீது தாக்குதல் மற்றும் வனவிலங்குகள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் வாழ்வியல் முறைகள்,வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்துள்ளது.

    இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் எந்திர மயமாகி விட்டதால் வனவிலங்குகள், காடுகளின் மதிப்பு தெரியவில்லை. காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாதுகாக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும்.

    அதனால் இந்த வன விலங்குகளை பாதுகாக்க வனவிலங்கு காப்பகங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களும் ஒத்துழைப்புகள் நல்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் தருண்குமார் கூறுகையில், வறட்சி காலங்களில் சாலை விபத்து மூலம் வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் வனவிலங்குகள் அருந்தும் வகையில் உணவுகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாலையை கடக்கும் குறிப்பிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் வன விலங்குகளை உயிரிழக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தப்பட்டுள்ளது. வேட்டையாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது வன விலங்குகள் வேட்டையாடும் சம்பவங்கள் படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
    • விவசாயிகளை வாழ வைக்கும் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்துவேன்.

    ரெட்டியார்சத்திரம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, மதுரையில் இருந்து கோவை செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள அப்பியம்பட்டி நால்ரோடு கிராமத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு உணவிற்காக காய்கறிகளை அனுப்பி வரும் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளை நசுக்கின்ற திட்டமாக தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை கொத்தையம் கிராமத்தில் தி.மு.க. அரசு கொண்டு வந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அத்திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    பின்னர் அங்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் கொத்தையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் தலைமையில் அ.தி.மு.க. கிளை செயலாளர் வஞ்சிமுத்து மற்றும் கிராம மக்கள் கொத்தையம் கிராமத்தில் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்க உள்ளதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

    மனுவை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி விவசாய நிலங்களை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டி வருகின்ற 20ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்.

    விவசாயிகளை வாழ வைக்கும் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்துவேன் என்று கிராம மக்களிடம் உறுதி அளித்தார். பின்னர் அங்கிருந்து கோவை புறப்பட்டுச்சென்றார்.

    • பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
    • மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    திருப்பூர்:

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் 2 பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.

    அதன்படி இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

    திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் சார்பாக திருப்பூர் பெரிய கடை வீதி நொய்யல் வீதி அரசுப்பள்ளி வளாகத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தலைவர் நூர்தீன் தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில், மாவட்ட ச்செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட பொருளாளர் சிராஜித், மாவட்ட துணை தலைவர் ஜாகீர் அப்பாஸ் , மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய் ஆகியோர் உரை யாற்றினர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 28 கிளைகளில் தொழுகை நடைபெற்றது. இதே போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை உள்பட பல்வேறு இடங்க ளில் உள்ள மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    காலை 7 மணியில் இருந்து சிறப்பு தொழுகை தொடங்கியது. தொழுகை முடிந்த பிறகு பிரார்த்தனை செய்தனர். உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொழுகைக்கு பிறகு குர்பானி கொடுக்கப்பட்டது. ஆடுகள் தனி நபராகவும், மாடுகள் கூட்டு குர்பானியாகவும் கொடுக்கப்பட்டது.

    குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டு இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்து கொண்டனர். மற்ற 2 பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர்.

    சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றோம்.

    பின்னர் ஆட்டு கிடாய்களை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை-எளிய மக்களுக்கும், ஒரு பங்கை உற்றார், உறவினர்களுக்கும், ஒரு பங்கு எங்களுக்கும் என்று பிரித்து கொடுத்து உற்சாகமாக கொண்டாடினோம்.

    உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று சிறப்பு தொழுகையில் வேண்டிக்கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வட மாநிலத்தவர்கள் புகுந்ததால் ரிசர்வேஷன் பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை.
    • முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.

    சென்னை:

    வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளை முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமித்து கொள்வதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    கடந்த வாரம் சென்னையில் இருந்து ஹவுரா சென்ற ரெயிலில் முன்பதிவு செய்யாத வட மாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் புகுந்ததால் ரிசர்வேஷன் செய்த பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    வட மாநிலத்திற்கு செல்லும் இளைஞர்கள் அத்துமீறி ரெயில் பெட்டிகளை ஆக்கிரமித்து கொள்ளும் சம்பவத்தை சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

    அதன் அடிப்படையில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், தமிழகத்திற்கு உள்ளே ஓடக்கூடிய ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ஆர்.பி.எப். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.

    அதன்படி வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் குறிப்பாக அதிக பயணிகள் பயணிக்கும் ரெயில்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் சுற்றித்திரியும் நபர்களிடம் டிக்கெட்டை கேட்டு விசாரித்து முன்பதிவு டிக்கெட் இல்லாதவர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் கீழே இறக்கி பொதுப் பெட்டிக்கு மாறி செல்ல அறிவுறுத்துகின்றனர்.

    பரிசோதகர்களும் விரைவாக டிக்கெட்டை ஆய்வு செய்து சாதாரண டிக்கெட்டுடன் யாரும் பயணிக்கிறார்களா? என்பதை கண்காணித்து வெளியேற்றுகிறார்கள்.

    சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் எல்லா ரெயில்களிலும் போலீசார் பயணம் செய்து முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.

    ரிசர்வேஷன் செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் ரெயில்வே போலீசாரும் டிக்கெட் பரிசோதகரும் பாதுகாப்பு அளித்திட தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    • மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
    • சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார்.

    கோவை:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது27). தொழில் அதிபரான இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    கடந்த 12-ந் தேதி அஸ்லாம் சித்திக் தனது நிறுவனத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் வாங்க பெங்களூருவுக்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மறுநாள் மாலை கேரளாவிற்கு புறப்பட்டார்.

    இந்த நிலையில் அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து செல்வதற்காக பெங்களூரு வந்ததாக நினைத்த கேரளாவை சேர்ந்த கும்பல் பெங்களூருவில் இருந்து 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

    அஸ்லாம் சித்திக் கோவை வழியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலையில் மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள், தங்கள் காரை வேகமாக இயக்கி சென்று, அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து திபு, திபுவென இறங்கிய 7 பேர் கும்பல், அவரது காரை நோக்கி வேகமாக சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை காரை நோக்கி வீசி கண்ணாடியை உடைத்தனர். மேலும் காரில் கொள்ளையடிக்க முயன்றனர்.

    அப்போது சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார். அங்கு ரோந்து பணியில் போலீசார் இருந்தனர். இதனை பார்த்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது.

    இதுகுறித்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்து தாக்கியது கேரள மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) என்பதும் தெரியவந்தது.

    சிவ்தாஸ் மற்றும் அஜய்குமார் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றுவதும், விஷ்ணு ராணுவத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    கேரளாவில் செயல்பட்டு வரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சென்று ஹவாலா பணம் எடுத்து வரும் கார்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அப்படி ஒரு குழு மூலம் அஸ்லாம் சித்திக் பெங்களூருக்கு ஹவாலா பணத்தை எடுத்து வந்திருக்கிறார் என்ற ரகசிய தகவல் பெங்களூரில் இருக்கும் கேரளாவை சேர்ந்த குழுவுக்கு கிடைத்துள்ளது.

    அந்த குழுவினர் அஸ்லாம் சித்திக்கின் காரை பின்தொடர்ந்து தாக்கி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க கூறியுள்ளனர்.

    அதன்படியே இந்த 7 பேர் கும்பல் 3 கார்களில் அஸ்லாம் சித்திக்கை பெங்களூருவில் இருந்து பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    கோவை அருகே வந்ததும், காரை வழிமறித்து சேதப்படுத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், போலீசார் ரோந்து பணியில் நிற்பதை பார்த்ததும் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிவ்தாஸ், அஜய்குமார், விஷ்ணு, ரமேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி உள்ள ராணுவ வீரரான விஷ்ணு, கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்துள்ளார்.

    அதன்பின்னர் அவர் பணிக்கு செல்லவில்லை. அவர் எதற்காக ராணுவத்தில் இருந்து விடுப்பு எடுத்து வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விடுப்பில் வந்த அவர் எங்கெங்கு சென்றார். யாருடன் எல்லாம் தொடர்பு வைத்துள்ளார். இவருக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? வேறு எங்காவது நடந்த வழிப்பறியில் இவருக்கு தொடர்பு உள்ளதா?

    அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து வர போகிறார் என்ற தகவலை இவர்களுக்கு சொன்னவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை பார்ப்பது மகிழ்ச்சி.
    • உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சகோதரி திருமண விழா நடைபெற்றது.

    இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மண மக்களை வாழ்த்தி பேசுகையில், என்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் என்னுடைய தங்கையின் திருமணம் ஆகும்.

    நாங்கள் பாராளு மன்றத்திற்கு சென்று பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறோம். தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு. மக்களின் மனதை வெல்வதும் ,சிந்தனை வெல்வதும் தான் எங்கள் கனவு.

    பிரபாகரன் காட்டிய வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலாக இன்று முடிக்க வேண்டும் என பேராவலில் அவருடைய பிள்ளைகள் நாங்கள் களத்தில் பாய்கின்றோம்.

    என் தோளுக்கு துணையாக என் படைக்கு வலிமைமிக்க தளபதியாக என்னுடைய சகோதரி காளியம்மாள் இயங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை கூட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைக்கு பெரும் கடமையும் பொறுப்பும் உங்களது பிள்ளைகளால் எங்களது தோல்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

    உயர்ந்த லட்சிய நோக்கம் உள்ளது. உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அ.தி.மு.க. போட்டியிடாமல் பின் வாங்கியிருப்பது என்ன ராஜதந்திரம் என்று தெரியவில்லை.
    • எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அமரப்போகிறது.

    மாமல்லபுரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை வழங்கி உள்ளனர். நீட் தேர்வின் எதிர்ப்பு நாடு முழுவதும் வலுப் பெற்று வருகிறது. எங்களது எதிர்ப்பு குரலும் இனி தேசிய அளவில் இருக்கும்.

    பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளை போன்று, தற்போது முடிவு எடுக்க முடியாது. நீட் தேர்வில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை கண்டித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி வலியுறுத்தும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் பின் வாங்கியிருப்பது என்ன ராஜதந்திரம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    தமிழக மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். நீட் தேர்வை எதிர்த்து தமிழக மக்களின் குரலாக இதை முன்னெடுப்போம். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

    வலுவான ஒரு எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அமரப்போகிறது. மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். மத்தியில் கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ள பா.ஜ.க.வின் ஆட்சி 5 ஆண்டுகள் வரையில் நீடிக்குமா? என்பது சந்தேகம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.அவற்றை பார்வையிடவும் அணைப் பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.

    இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தனர்.

    பின்னர் அருவிக்கு சென்று குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.அதைத் தொடர்ந்து அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிச் சென்றனர். மழை பொழிவுக்கு பின்பு அருவியில் சீரான முறையில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. 

    • தற்போது அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது.
    • குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது. அணையில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. அதன்படி இங்கிருந்து வேலூர், சென்னை வரை குடிநீர் வழங்கப்படுகிறது.

    தற்போது அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 114 கன அடியிலிருந்து 103 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 42.39 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 13.35 டி.எம்.சி.யாக உள்ளது.

    • வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ. 95.60-க்கும் பார் வெள்ளி ரூ.95,600-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    வார தொடக்க நாளான இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.53,520-க்கும் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,690-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 95.60-க்கும் பார் வெள்ளி ரூ.95,600-க்கும் விற்பனையாகிறது.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
    • பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம்(ஜூலை) 10-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அத்தொகுதியில் அமல்படுத்தப்பட்டன.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரகுராமன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கப்பியாம்புலியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .

    அப்போது சென்னையிலிருந்து நெய்வேலிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 160 சில்வர் டிபன் பாக்ஸ், 48 பிளாஸ்க் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் காரில் வந்தவர் நெய்வேலியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் , பணி ஓய்வு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு பரிசு பொருட்களை கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

    எனினும் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பரிசு பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜிடம் ஒப்படைத்தனர். பின்னர் அலுவலக அதிகாரிகள் அந்த பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

    ×