மக்களின் மனதை வெல்வது தான் எங்கள் கனவு: சீமான்

தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை பார்ப்பது மகிழ்ச்சி.உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.
மக்களின் மனதை வெல்வது தான் எங்கள் கனவு: சீமான்
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சகோதரி திருமண விழா நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மண மக்களை வாழ்த்தி பேசுகையில், என்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் என்னுடைய தங்கையின் திருமணம் ஆகும்.

நாங்கள் பாராளு மன்றத்திற்கு சென்று பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறோம். தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு. மக்களின் மனதை வெல்வதும் ,சிந்தனை வெல்வதும் தான் எங்கள் கனவு.

பிரபாகரன் காட்டிய வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலாக இன்று முடிக்க வேண்டும் என பேராவலில் அவருடைய பிள்ளைகள் நாங்கள் களத்தில் பாய்கின்றோம்.

என் தோளுக்கு துணையாக என் படைக்கு வலிமைமிக்க தளபதியாக என்னுடைய சகோதரி காளியம்மாள் இயங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை கூட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைக்கு பெரும் கடமையும் பொறுப்பும் உங்களது பிள்ளைகளால் எங்களது தோல்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

உயர்ந்த லட்சிய நோக்கம் உள்ளது. உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com