விக்கிரவாண்டி அருகே காரில் கொண்டு வந்த பரிசு பொருட்கள் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.
விக்கிரவாண்டி அருகே காரில் கொண்டு வந்த பரிசு பொருட்கள் பறிமுதல்
Published on

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம்(ஜூலை) 10-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அத்தொகுதியில் அமல்படுத்தப்பட்டன.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரகுராமன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கப்பியாம்புலியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .

அப்போது சென்னையிலிருந்து நெய்வேலிக்கு சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 160 சில்வர் டிபன் பாக்ஸ், 48 பிளாஸ்க் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் காரில் வந்தவர் நெய்வேலியை சேர்ந்த செந்தில்குமார் என்பதும் , பணி ஓய்வு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு பரிசு பொருட்களை கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

எனினும் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பரிசு பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜிடம் ஒப்படைத்தனர். பின்னர் அலுவலக அதிகாரிகள் அந்த பொருட்களை சீலிட்டு விழுப்புரம் துணை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com