search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "by-elections"

    • பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
    • பாஜகவின் இடைத்தேர்தல் சறுக்கல் குறித்து சுப்ரமணிய சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார். தற்போது தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 13 இடங்களில் காங்கிரஸ் தலையாமையிலான இந்தியா கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தைப் பிடித்த நிலையில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலிலும் பாஜக சறுக்களை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் இடைத்தேர்தல் சறுக்கல் குறித்து சுப்ரமணிய சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

     

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும். இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக நிரந்தரமாக மூழ்குவதற்கான விரிசல்கள் விழுந்து வருவதையே குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார். உள்ளடியாக சுப்ரமணிய சுவாமியின் இந்த கருத்து பாஜக மேலிடத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    • 13 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

    நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதேபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் 13 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே பிரதான போட்டி நிலவுகிறது. இதில், ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

    மற்ற 12 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இமாச்சலின் தேஹ்ரா, ஹிமிர்பூர், நாலாகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

    இதேபோல், உத்தரகாண்டின் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இமாச்சலின் தேஹ்ரா தொகுதி, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது.

    மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

    • திரளான கூட்டத்தை சேர்க்க அமைச்சர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
    • எந்தெந்த பகுதிகளுக்கு சென்று பேசுவார் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் வேனில் சென்று தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அவர் எந்தெந்த பகுதிகளுக்கு சென்று பேசுவார் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி 7-ந்தேதி (திங்கட்கிழமை) திருவாமத்தூர், காணை பனமலைப் பேட்டை, அன்னியூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    8-ந்தேதி நேமூர், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    விக்கிரவாண்டியில் அவர் பேசும் 8 இடங்களிலும் திரளான கூட்டத்தை சேர்க்க அமைச்சர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

    • 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
    • மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பு , மதுவிலக்கு அமல்படுத்த மறுப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனை அறிந்த தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது.

    பா.ம.க. கூட்டத்திற்கு வரும் பெண்களை அடைத்து வைப்பது, உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என தி.மு.க. அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அத்துமீறல்களை முறியடித்து பா.ம..க வேட்பாளர் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

    அ.தி.மு.க.வின் நோக்கமும் பா.ம.க.வின் நோக்கமும் இத்தேர்தலில் ஒன்றாகவே உள்ளது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.க.வை தீய சக்தி என்று கற்றுகொடுத்தனர். அந்த தீய சக்தியை வீழ்த்தும் வலிமை பாமகவிற்கு உண்டு. எனவே பா.ம.க.வின் மாம்பழ சின்னத்தில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பை இல்லாத காரணங்களை காட்டி அரசு தட்டிகழிக்கும் அரசு பதவி விலகவேண்டும். விழுப்புரம் அருகே டி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து ஜெயராமன் இறந்துள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரியிலிருந்து முருகன் வாங்கி வந்த கள்ளச்சாராயம் என தெரியவந்துள்ளது. இதிலிருந்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறியதால் முதல்-அமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். சாதிவாரி இடஒதுக்கீட்டால்தான் பலர் கல்வி கற்றுள்ளார் என்று தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி கூறியிருப்பது கண்டிக்கதக்கது.

    தி.மு.க. சமூகநீதிக்கு செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம். சட்டநாதன் அறிக்கையை செயல்படுத்த மறுத்தவர் கருணாநிதி. இடைத்தேர்தலுக்கு பின் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க தோல்வி அடைந்தால் மின் கட்டண உயர்வை அரசு கைவிடும்.

    மாநில கல்வி கொள்கை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதால் இதை கைவிட வேண்டும் என பா.ம.க . தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீட் தேர்வை திணித்த தி.மு.க.வும், காங்கிரசும்தான்.

    அப்போது நீட் தேர்வை அறிமுகம் செய்த தி.மு.க. இன்று அதற்கு எதிராக காட்டிக்கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக முதல்-அமைச்சர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

    கல்விகண் திறந்த காமராஜர் பெயரில் உள்ள பல்கலைக்கழகம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இல்லாமல் உள்ளது. இப்பல்கலை கட்டுப்பாட்டில் 121 கல்லூரிகள் உள்ளது. பிற கல்லூரிகளிடமிருந்து தலா ரூ.50 லட்சம் கேட்டுள்ளது.

    தமிழக அரசு இப்பல்கலைக்கு ரூ.500 கோடி கடன் வழங்க வேண்டும். தி.மு.க தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்ததால் தான் முதலமைச்சர் பிரச்சாரத்திற்கு வரவில்லை என தெரிகிறது. அப்படியே பிரச்சாரம் செய்தாலும் தி.மு.க தோல்வி அடையும். மேயர்கள் பதவி விலகில் என்னவோ நடக்குது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெரியார் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, தொகுதிக்குப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று மாம்பழம் சின்னத்தில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, இவர்களது மகள் சங்கமித்ரா ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி பெரியார் திடலில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்குகிறார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. அனைவரையும் வரவேற்று பேசுகிறார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ரவிபச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன்யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.

    தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பா.ம.க.வினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும்.
    • திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து காணை காலனி பகுதியில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும். தமிழக மக்கள் தொகையில் 40 சதவீதம் இந்த இரு சமுதாயத்தினர்தான் உள்ளனர். இந்த இரு சமுதாயங்களும் ஒன்று சேர்ந்து விட்டால், வேறு எந்த கட்சிகளும் நமக்கு தேவையில்லை.

    வன்னியருக்கு எதிரி தாழ்த்தப்பட்டோர் என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி வன்னியர் என்றும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் நம்மை முன்னேறவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்கள் தான் நம் முதல் எதிரி. திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.

    நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. நியாயம் கேட்க வந்திரு க்கிறேன்.1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க.வில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது 1999-ல் தான்.

    ஆனால், பா.ம.க.வில் 1998-ம் ஆண்டிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த தலித் ஏழுமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    அதுபோல, அம்பேத்கர் சிலையை தமிழகத்தில் அதிகளவில் திறந்தவர்பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தான். உங்களை வாக்கு வங்கியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். நீங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் எண்ணம்.

    நமக்குள் சண்டை, பிரச்சினை எதற்கு?. நாம் ஒன்று சேர்ந்தால் இவர்களுக்கு வேலை இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்களே சிந்தித்துப்பாருங்கள். நாம் முன்னேற வேண்டும். நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
    • பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாசிச அரசியல், மதவாத அரசியல், ஜாதி அரசியலை, முன்னெடுத்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.

    நாட்டு மக்கள் விரும்புவது நாட்டின் முன்னேற்றம், வளம், சமூக வளர்ச்சி, ஆகியவற்றை முன்னெடுத்த திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக கட்டமைப்பு வளர்ச்சியைத்தான். இதனால் தான் இந்திய அளவில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியினை பெற்று மகுடம் சூட்டி உள்ளனர்

    சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சியுடன் பா.ம.க. கட்சி கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் மட்டுமே வன்னிய மக்களுக்கு பல நல்லதிட்டங்களையும், சிறந்த இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி நகர பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    வாக்கு சேகரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், இடைதேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. அமைச்சர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் வெற்றி பெற்று பெறுவோம். பா.ம.க. வினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அது தான் தெரியும்.

    பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர்கள் தடுப்பனை கட்டுவோம், கட்டுவோம் என்பார்கள். நாங்கள் அதனை தடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது.
    • பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை.

    விழுப்புரம்:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் விழுப்புரத்திற்கு இன்று வந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருமங்கலம், ஈரோடு, இடைதேர்தல் பார்முலா போல நடக்கின்றது. இதற்கு உதாரணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் தமிழக அமைச்சர்கள் 33 பேர் ஒவ்வொரு தெருவிலும் சூழ்ந்து கொண்டு மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து அவர்களை மாலையில் விடுவிக்கின்றனர்.

    இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதுதான் தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் அவலமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு காவல்துறை முழு ஆதரவு அளிக்கின்றது. இதையெல்லாம் முன்பே உணர்ந்துதான் அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை.
    • அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    விக்கிரவாண்டி:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து திருவாமத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை. இது சட்டசபை இல்லை சாராய சபை. வேறு ஒன்றையும் பேசவில்லை. சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் இறந்துவிட்டான். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. தண்ணீர் விஷம் ஆகிவிட்டது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.

    சாராயம், குடிநீர் அனைத்தும் இப்பொழுது விஷமாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு மாற்றம் வர வேண்டும் என சொல்கின்றனர்.

    அந்த மாற்றத்தை யார் கொண்டு வருவது, தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராக இல்லை, 7அடி தாண்டுவதற்கு 70 அடி பின்னோக்கி செல்ல வேண்டியது உள்ளது. மாற்றம் மாற்றம் என சொல்லிக் கொண்டிருந்தால் மாறாது மாற்றம் என்பது ஒரு செயல், நாம் தான் அதை மாற்ற வேண்டும். மாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்,

    கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம், பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம், சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்க ரூ,25 ஆயிரம். அப்படியென்றால் சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்வானதா?. இது அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    தமிழக மக்கள் நீங்கள் நன்றாக சிக்கிக் கொண்டீர்கள் இதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மைக் சின்னத்திற்கு வாக்களிப்பது தான், உழைத்து கலைத்த மக்களுக்கு ஒரு பானம் தேவைப்படுகிறது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் நல்ல ஒரு அதிகாரத்தை, ஆட்சியை நம்மால் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

    • இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில், அக்கட்சியினரின் ஓட்டுக்களை பெறவும், தே.மு.க.தி.வினரின் ஓட்டுக்களை பெறவும், பா.ம.க.வும், நாம் தமிழர் கட்சியும் முயற்சித்து வருகின்றன.

    மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகிறார்.

    தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

    அதேபோல பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகள் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    • வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதனை தொடர்ந்து தி.மு.க.வும், பா.ம.க.வும் விக்கிரவாண்டி தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அபிநயாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை மேற்கொள்ளகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி என சீமான் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×