என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் நடைபெற்ற சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன.

    சாராய விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே ஜாமினில் வெளிவந்து மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை இளைஞர்கள் தட்டிக் கேட்டதாலே இந்த படுகொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.

    கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் என அனைத்து வகையிலான குற்றச் சம்பவங்களில் கைதாகும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தராததும், ஜாமினில் வெளியே வருவோரை கண்காணிக்கத் தவறியதுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, இளைஞர்களை படுகொலை செய்த சாராய வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதோடு, இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை இனியாவது தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன். 

    • நமது ஆட்சி அமைந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தேசப்பற்று மிக்க தலைவர்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சித்தலைவர் ஆணையை ஏற்று இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.

    எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது, 3 நாட்கள் யாரும் தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க என்று எழுதினால்தான் நடமாட முடியும் என்ற நிலை நிலவியது.

    எம்.ஜி.ஆரின் கட்டளையை ஏற்று நாங்கள் 14 பேர் இணைந்து கோவையில் பொதுக்குழுவை, அவர் நினைத்தபடி வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். அதற்கான செலவுத்தொகையை அவர் கொடுத்தபோது, நீங்கள் எங்கள் தெய்வம், உயிர்மூச்சு என்று சொல்லி அதனை வாங்க மறுத்து விட்டோம்.

    ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? என்ப தற்கு எம்.ஜி.ஆர். எடுத்துக் காட்டாக விளங்கினார். மக்களைப் பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தினார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு நீர் வழங்க திட்டம் தீட்ட வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    நமது ஆட்சி அமைந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 1980-ல் ஆட்சி கலைப்பின்போது, நடந்த மக்களவைத் தேர்தலில் கோபி மற்றும் சிவகாசியில் மட்டும் அ.தி.மு.க. வென்றது. அதன் பின் வந்த சட்டசபை தேர்தலில், நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டு மக்களை எம்.ஜி.ஆர். சந்தித்தார்.

    அதிக தொகுதிகளில் மக்கள் வெற்றியைக் கொடுத்தனர். மக்களவைத் தேர்தல் முடிவு வேறு, சட்டசபைத் தேர்தல் முடிவு என்று அவர் வேறுபடுத்திக் காட்டினார். 1984-ல் அமெரிக்காவில் இருந்தவாறு தேர்தலில் வென்று முதல்வராக தமிழகம் திரும்பினார். அதன்பின் இந்த இயக்கத்தை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தேசப்பற்று மிக்க தலைவர்கள். சீனா போரின்போது நிதியை வாரி வழங்கினர். அந்த இரு தெய்வங்களின் தேசப்பற்று குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அவர்களுக்காகத்தான், அடையாளம் தெரியாத எங்களுக்கும் நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள்.

    இன்றும் அந்த வெற்றி நிலைத்து நிற்கிறது. எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னாலே வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர். நான் எனது 25-வது வயதில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடும் பொழுது நான் யார் என்று கூட உங்களுக்கு தெரியாது.

    ஆனால் எம்.ஜி.ஆர். என்ற ஒரு பெயரைச் சொல்லி வெற்றி பெற செய்தீர்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கப்பலாக இருந்து கட்சியை வழிநடத்திச் சென்றவர் ஜெயலலிதா. அவர் மதுரையில் நடத்த பொதுக்கூட்டத்தில் செங்கோலை ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டு எனக்கு பின் கட்சியை நீ தான் வழி நடத்த வேண்டும் என கூறினார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரண்டு பேருமே இரு பெரும் தெய்வங்கள். அந்த தெய்வங்கள் இல்லை என்றால் நாங்கள் இந்த மேடையில் இருக்க முடியாது. நீங்களும் எங்களுக்கு வாக்களித்திருக்க மாட்டீர்கள். தெய்வங்கள் ஆன பின்னும் கட்டளை இடுகின்றனர்.

    நீங்கள் எங்களுக்கு வாக்கு அளிக்கின்றீர்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தொண்டனாக இருந்து பாடுபட்டு அ.தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க அயராது உழைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.

    தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920

    13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-02-2025- ஒரு கிராம் ரூ.108

    13-02-2025- ஒரு கிராம் ரூ.107

    12-02-2025- ஒரு கிராம் ரூ.107

    11-02-2025- ஒரு கிராம் ரூ.107

    10-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே?
    • தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

    துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.

    தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    • ஓடும் ரெயிலில் தொங்கிக் கொண்டு செல்ஃபி எடுப்பது குறித்த ஆபத்து பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
    • தண்டவாளத்தில் கற்கள், மரக்கட்டைகளை வைத்தல் போன்ற விஷம செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

    சென்னை:

    சென்னை திருவொற்றியூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்தில் கற்களை வைத்தது 15 வயது சிறுவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போ, சிறுவனுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்த மாஜிஸ்ட்ரேட், பெற்றோர் குழந்தைகளை கவனிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

    இந்த நிலையில், சென்னை கிண்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரெயில்வே பாதுகாப்புப் படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது, ஓடும் ரெயிலில் தொங்கிக் கொண்டு செல்ஃபி எடுப்பது குறித்த ஆபத்து பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    மேலும், தண்டவாளத்தில் கற்கள், மரக்கட்டைகளை வைத்தல் போன்ற விஷம செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. அதேபோல கவனமாகத் தண்டவாளத்தைக் கடக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

    • ஒன்றிய அரசில் இருக்கிறவர்களுக்கு மனசாட்சி இருக்கா என்று கேட்க தோன்றுகிறது.
    • கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை.

    சென்னை:

    'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு 'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி... ஆரம்பிக்கலாமா....

    கே: தலைவர்- முதல்வர்... இப்போது 'அப்பா' என்று அழைக்கிறார்களே!

    ப: கட்சிக்காரர்கள் இயக்கத்திற்கு தலைவர் ஆனதும் தலைவர் என்று கூப்பிடுகிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் முதல்வர் என்று அழைக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறைகள் என்னை அப்பா என்று அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது. காலப்போக்கில் மற்ற பொறுப்புகளுக்கு வேறு யாராவது வருவார்கள். ஆனா இந்த அப்பா என்று உறவு மாறாது. அந்த சொல் என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்குன்னு எனக்கு உணர்த்துகிறது.

    கே: பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

    ப: தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் இல்லை. பெயரை கூட சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெளியிடுகிற எல்லா புள்ளிவிவரங்களிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என அறிக்கை மட்டும் தருகிறார்கள். ஆனா பணம் மட்டும் தரமாட்டோம்ன்னு புரண்டு பிடிக்கிறார்கள். மாநில அரசின் நிதி வைத்து திட்டங்களை செயல்படுத்தணும்னு சொல்றாங்க. மாநில அரசின் நிதி வைத்து நாம் பல திட்டங்களை சிந்தித்து இருந்தாலும் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு கிடைத்தால் தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். நாம பசங்க படிக்கறதுக்க வேண்டியதற்கான நிதியை கூட கொடுக்கமாட்டேங்கறாங்கண்ணா என்ன அர்த்தம்? ஏற்கனவே கொடுத்துட்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன பண்றது? இப்படி ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக்கொண்டே இருக்கு. நாமும் தொடர்ந்து போராடிக்கிட்டே இருக்கோம். இதுல நம்ம உரிமை கேட்குறதே அற்ப சிந்தனை என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். ஒன்றிய அரசில் இருக்கிறவர்களுக்கு மனசாட்சி இருக்கா என்று கேட்க தோன்றுகிறது.

    கே: கல்வி... குறிப்பாக பெண்களுக்கான கல்வி குறித்து தொடர்ச்சியாகப் பேசுகிறீர்கள். திட்டங்களையும் அறிவிக்கிறீர்கள். இந்த 4 ஆண்டுகளில் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?

    ப: நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து கல்விக்காக நிறைய செய்து கொண்டு இருக்கோம். கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து. ஒருவருடைய கல்வித்தான் அவருடைய தலைமுறையை முன்னேற்றி விடும் என்று சொல்லிக்கொண்டு இருக்கேன். அதனால் தான் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என்று நிறைய திட்டங்களை செய்கிறோம். குறிப்பாக பெண்களுக்கு கல்வி அறிவு கிடைக்கணும்னு ஏராளமான திட்டங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதனால ஏராளமானவர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள். பயன் அடைந்த பலர் பேசுகிற வீடியோக்களை நீங்களும் பார்த்து இருப்பீர்கள். இந்த திட்டங்களால் முன்னேறியவர்கள் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். அதைப்போல நான் கொடுக்கிற அப்பாயிண்மெண்ட் ஆர்டர் பெரும்பாலும் பெண்களுக்காக இருக்கிறதை பார்த்து நான் பெருமை அடைகிறேன். கல்விக்காக இன்னும் நிறைய செய்யணும் நினைக்கிறேன்.

    கே: கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கின்றனவா?

    ப: கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை நான் ஆலோசனையாக தான் பார்க்கிறேன். முரண்பாடா நினைக்கிறது இல்லை. எல்லா இடத்திலும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம் தான். 2019-ல் இருந்து ஒன்றாக சேர்ந்து தேர்தல் களத்தை சந்தித்து வருகிறோம். பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டா இருப்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை.

    கே: டெல்லி முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

    ப: நான் ஏற்கனவே சொன்னது தான். பழனிசாமியின் அறிக்கையை பார்த்தால் பா.ஜ.க.வின் அறிக்கை மாதிரி தான் இருக்கும். அவருடைய குரலே பா.ஜ.க.வின் டப்பிங் குரல்தான். நாம கள்ளக்கூட்டணின்னு சொல்றத நிரூபிக்கிற பழனிசாமி அவ்வளவுதான். இதெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி அவர் தனது தோல்விகள் குறித்து யோசித்து பார்க்க வேண்டும்.

    கே: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் இப்போது அதிகம் வருகின்றதே!

    ப : பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து இருக்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு சட்டமன்றத்தில் நானே சட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். உடனடியாக தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறோம். பாலியல் குற்றங்களை செய்கிறவர்கள் அவங்க வீட்டில் இப்படி ஒரு குற்றம் நடந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்து பார்க்கணும்.

    கே: சோஷியல் மீடியாக்களில் வரும் கருத்துக்களை பார்ப்பீர்களா?

    ப: ஓய்வுநேரங்களில் பார்ப்பதுண்டு. செய்திகளை விட மக்களின் கருத்துக்கள் என்ன என்று பார்ப்பேன். தீயவற்றை விலக்கிட்டு நல்லதை எடுத்துப்பேன். யாராவது கோரிக்கை வைத்திருந்தால் அதை நியாயமான கோரிக்கையாக இருந்தால் அதை தீர்த்து வைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பேன். பொதுவா சோஷியல் மீடியாக்களில் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருது. நிறைய பேர் ஓட்டல்களுக்கு போய் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கற மாதிரி Fitness-க்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



    • பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
    • பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    தெற்கு ரெயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, அதன் விபரம் பின்வருமாறு:-

    சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக வரும் 16, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி உட்பட 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் போது, அதனை தமிழக அரசே அளித்திருக்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக இருந்த போதே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தவெக தலைவர் விஜய்-க்கு சிஆர்பிஎஃப் Y பிரிவு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் போது, அதனை தமிழக அரசே அளித்திருக்க வேண்டும். இது அரசியல் கிடையாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
    • பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்.

    ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    அதிமுக கட்சியை ஒரு நல்ல நோக்கத்தோடு கொண்டுப் போக வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் செல்வாக்கு உள்ள அனைவருமே கட்சியில் இருக்கக்கூடாது என்று ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டார்.

    அதேபோல், கட்சியில் யார் சுயமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ, யார் சரி, தவறு என்பவதில் சரி என்கிறார்களோ அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதேபோன்ற செயல்பாட்டினால் நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். ஒரு சிலர் மாற்று கட்சிக்கு மாரிவிட்டனர். ஒரு சிலர் மாற்றுக் கட்சிக்கு செல்ல விருப்பமில்லாமல் கட்சியில் ஒதுங்கி எந்த வேலையையும் செய்யாமல் இருக்கின்றனர்.

    எடப்பாடியின் இதுபோன்ற செயல்களால் அதிமுக பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 1998-களில் அம்மாவின் நம்பிக்கைக்கூறிய நாயகனாக செயல்பட்டு, தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேல் அம்மா அவர்கள் ஒரு கடுஞ்சொல் கூட அப்பாவை பேசினது கிடையாது.

    எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் அப்பாவிடம் கலந்தாலோசித்த பிறகே முடிவுகளை எடுப்பார்கள். அவ்வாறு நம்பிக்கைக்குறியவர் அப்பா.

    ஆனால், பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார். நிர்வாகிகளிடம் தவறான கருத்துகளை புகுத்திக் கொண்டிருக்கிறார். முழுநேரமும் சொந்த கட்சிக்காரர்களையும், கட்சி தலைவர்களையும் எப்படி காலி செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

    இதனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகள் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது இந்தியாவிலேயே முதன்மையான கட்சியாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

    நம் சகோதரர்களுக்குள் பிரிவினைவாதத்தை கொண்டு வந்து தற்போது வரை அவர்கள் எந்த மாற்றமும் இன்றி செயல்புரியாத காரணத்தினால், அதிமுக மிகப்பெரிய பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உலகை உருவாக்கும் பேராயுதம் காதல் மட்டும்தான்.
    • அன்பால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்.

    காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடுகிறோம். காதலுக்கு வயது ஒரு தடையில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் யாருக்கும் காதல் வரலாம். ஒருவர் மீது ஒருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதே காதல். அன்பினை வெளிப்படுத்தும் நாளே இந்த காதலர் தினம்.

    காதலர் தினத்துக்கு திரையுலகினரில் இருந்து அரசியல்வாதிகள் வரை தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் காதலர் தினம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட காதலர் தின வாழ்த்து மடல்:-

    உலகை அழிக்கும் ஆயுதம் ஆயிரம் உண்டு; ஆனால்

    உலகை உருவாக்கும் பேராயுதம் காதல் மட்டும்தான்!

    தன்னைப்போல் பிறரையும் நேசி

    என்றார் இறைமகன் ஏசு!

    அண்டை அயலானுக்கும் அன்புசெய் என்றார்

    இறை தூதர் நபிகள் நாயகம்!

    அன்பே சிவம் என்றார் திருமூலர்!

    எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றது!

    எல்லா மனிதர்களையும் அன்புதான் பாதிக்கின்றது!

    கடவுளை மறுக்கும் மனிதர்கள் கூட காதலை மறுப்பதில்லை!

    என்னால் எல்லாவற்றையும் கொடுக்க முடியாது;

    அன்பால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்!

    காதலில் ஒன்றுமில்லை;

    ஆனால் காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை;

    காதலுக்காக யாரும் சாகக் கூடாது;

    ஆனால் காதலிக்காமலும் யாரும்

    சாகக் கூடாது!

    ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!

    அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்.

    காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்

    அதனாலே மரணம் பொய்யாம்.

    - பெரும்பாவலர் பாரதி

    நிலமிழந்து போனால்

    பலமிழந்து போகும்

    பலமிழந்து போனால்

    இனமழிந்து போகும்

    ஆதலால், மானுடனே

    தாய்நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்

    என சீமான் வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.

    • பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.
    • தமிழ்நாடு அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா?

    தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையை அவமதிக்காதீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆளுநரின் கருத்துகள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றன. அவரது சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தால் எழுப்பப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கேள்விகள் அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.

    மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை குறித்து இந்து ஆங்கில நாளிதழின் இன்றைய கட்டுரையை முன்னிலைப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது.? முதலமைச்சர் தனது X தள ட்வீட் பதிவில் நீதிமன்ற நடவடிக்கைகள் எதையும் குறிப்பிடவில்லை.

    இருப்பினும் பதிலடி என்ற போர்வையில், பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் கவர்னர், டில்லியில் உள்ள உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரது ட்வீட் ஆளுநராக அவரது கண்ணியம் இல்லாததை வெளிப்படுத்துகிறது மேலும் அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கிய பதவியை அரசியல்மயமாக்கிக் கொண்டுள்ளார் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

    தி இந்து பத்திரிக்கையானது நன்மதிப்பை பெற்ற செய்தித்தாள். அதன் வரலாறு முழுக்க சுதந்திரமான மற்றும் அதீத நேர்மையை கடைபிடித்து ஒருமைப்பாட்டினை காக்கும் வகையில் இருந்துவருகிறது. சாவர்க்கரையும் கோட்சேவையும் பின்பற்றுபவர்களுக்கு நேர்மை என்பது அந்நியமானதாக இருந்தாலும், மாநில ஆளுநர் பத்திரிகைகளை அவமதிக்க கூடாது என்பதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்ப்பர்.

    கவர்னர் தனது ட்வீட்டில் எந்த ட்விட்டர் கணக்குகளை குறிப்பிட்டு இணைந்துள்ளார் என்பதை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஒருவேளை அவர் அந்த தனிநபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா.? அவர் தமிழ்நாடு அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா?

    அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் தமிழ்நாட்டு மக்களைப் புரிந்துகொள்வதை பற்றி ஆளுநர் பேசுகிறார். அரசியல் பற்றி வகுப்பெடுக்க இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளாரா ஆளுநர்.? அவர் பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.

    தமிழ்நாட்டு மக்களையும் திமுகவினையும் உண்மையிலேயே ஆளுநர் புரிந்து கொள்ள விரும்பினால் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து அவரே தேர்ந்தெடுக்கும் ஏதாவதொரு சட்டமன்ற தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கிறோம். நோட்டாவிற்கு கீழ் வாக்குகள் வாங்குவதையாவது தவிர்ப்பாரா என்று பார்ப்போம்.

    கவர்னர் அவர்களே, ஆட்சியைப் பற்றி உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த விரிவுரைகளும் தேவையில்லை. இந்த மாநிலம் கல்வியில் #1 இடத்தில் உள்ளது.

    தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பிற நல்லாட்சி குறியீடுகளில் முன்னணியில் உள்ளது. நீங்கள் வருவதற்கு முன்பே நாங்கள் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளோம்.

    தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள்.

    மாறாக தமிழ்நாட்டு மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    இதுகுறித்து சிஎம்ஆர்எல் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம் சமர்ப்பிப்பு

    சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர்.

    கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.

    இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    மெட்ரோ இரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விரிவானதிட்ட அறிக்கை திருத்தப்பட்டுள்ளது.

    திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி, மெட்ரோ வழித்தடம் நிலை 2-இல் மற்றும் மேம்பாலச் சாலை நிலை-1-இல் முன்மொழியப்பட்டுள்ளது. இது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும்.

    வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப்பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.

    முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும்வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும்.

    விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:

    • வழித்தடத்தின் மொத்த நீளம்: 15.46 கி.மீ

    • உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 13

    • மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,335 கோடி. (மேம்பாலச் சாலை உட்பட).

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×