என் மலர்tooltip icon

    இந்தியா

    • கிருஷ்ண மூர்த்தியின் மனைவி நூருன்னிஷா தலைமறைவானார்.
    • கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏட்டு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இவர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜாகீர்உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக் என்பவருக்கும் இடையிலான நிலம் தொடர்பான பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலையில் தச்சநல்லூரை சேர்ந்த கார்த்திக், டவுனை சேர்ந்த அக்பர்ஷா ஆகிய 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இந்நிலையில் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த கிருஷ்ணமூர்த்தியை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான தனிப்படையினர் பிடிக்க முயன்றனர்.

    அப்போது அவர் காவலர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதில் ஏட்டு ஆனந்துக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தி அவரை பிடித்து கைது செய்தனர்.

    தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏட்டு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு கிருஷ்ண மூர்த்தியின் காலில் இருந்து குண்டுகள் அகற்றப்பட்டது. இதையறிந்த கிருஷ்ண மூர்த்தியின் மனைவி நூருன்னிஷா தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு தனிப்படையினர் அவரை பிடிக்க திருவனந்தபுரம் விரைந்துள்ளனர்.

    இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ஏற்கனவே இடப்பிரச்சனை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது அது குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முறையாக விசாரணை நடத்தி இருந்தால் கொலையை தடுத்து இருக்கலாம். எனவே முறையாக விசாரணை நடத்தாத டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், அப்போதைய உதவி கமிஷனராக இருந்த செந்தில்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் உதவி கமிஷனர் செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து டி.ஜி.பி. இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் மது விற்பனை நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கவும் அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸமாக் தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.

    அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபானங்கள் ரூ. 10 முதல் ரூ. 30 வரை கூடுதலாக வசூல் செய்தது.

    டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதல் விலையை குறைத்து காட்டியது. பணியிட மாற்றம், பார் உரிமம் உள்ளிட்டவைகளை பெற லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

    அப்போது டாஸ்மாக் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம், "எதற்காக சோதனை நடத்தப்பட்டகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா? இரவு நேரத்திலும் சோதனையா?" என்று கேட்டனர். அதற்கு, "இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை" என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறும் போது, "எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என்று தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்? அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்கள் உள்ளிட்டவைகளை பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்" என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வரும் 25ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு தடைவிதித்த நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    முன்னதாக "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கியுள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்" என்று டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேலும், "சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக ஆதாரம் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா? 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்" என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது.
    • ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள நடராசன் நினைவிடத்தில் இன்று அவரது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று நடராசன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் தான். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது. இந்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும். இந்தப் பிரச்சனையில் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி கட்சிகளும் கலந்து பேசி போராடவுள்ளோம். இந்த விவகாரத்தில் மாபெரும் ஊழல் வெளிப்பட போகிறது. இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர்.

    தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவது உறுதியென கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி வருகிறார். இதனை சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறி மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை.

    மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர்கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கவுரவம் பார்ப்பது சரியாக இருக்காது. தி.மு.க.வை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனையை தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எழுப்பி வருகின்றனர்.
    • பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    மத்திய அரசு பாராளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்யும்போது தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார். இதையொட்டி, தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் சென்னையில் வரும் 22-ம் தேதி நடக்கிறது.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனையை தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் எழுப்ப முயன்றனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

    தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் நியாயம் தேவை என்ற பேனரை வைத்து இருந்தனர்.

    மாநிலங்களின் உரி மையை பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்து தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    தொகுதிகளை குறைக்காதே, மத்திய அரசே தமிழகத்துக்கு துரோகம் இழைக்காதே என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

    • கோவை மதுக்கரையில் ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
    • கடந்த 24 மணி நேரத்தில் 11 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நேற்றைய தினம் (19.03.2025)

    ஒரே நாளில் …

    ● மதுரை பெருங்குடி அருகே சிவகங்கையைச் சேர்ந்த காவலர் மலையரசன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

    ● கோவை மதுக்கரையில் ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

    ● ஈரோடு நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த தம்பதியினர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டதில், கணவர் உயிரிழப்பு; மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ● சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோடாங்கி சந்தானம் என்ற குறி சொல்லும் நபர் அரிவாளால் வெட்டிக்கொலை.

    அதுபோக, கடந்த 24 மணி நேரத்தில் 11 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன.

    "சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் சொல்லிக்கொண்டு இருந்தபோது வந்த செய்திகள் இவை.

    Daily Status Report கொடுப்பது போல, Daily Murder Report,

    Daily POCSO Report எல்லாம் கொடுக்க வைத்துள்ளது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஆகப்பெரும் சாதனை.

    இதை விட கொடுமையாக சட்டம் ஒழுங்கின் நிலை தமிழ்நாட்டில் முன் எப்போதும் இருந்ததில்லை.

    சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை இருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.

    "குற்றம் நடந்தால் கைது செய்கிறோம்" என்றெல்லாம் சொல்லி பொறுப்பை தட்டிக்கழிப்பது அதிகார மமதையின் உச்சம் என்றே எண்ணவும் தோன்றுகிறது.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை என ஒன்று இருப்பதாகவோ, அத்துறையின் நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகள் அச்சப்படுவதாகவோ தெரியவில்லை; அதற்கு நாள்தோறும் பட்டப்பகலில் நடக்கும் கொலை சம்பவங்களே சாட்சி!

    மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வீட்டிற்கு வந்தால் தான் உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலையில் தான் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

    • திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
    • தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன. மத்திய அரசின் சட்டமும் தெளிவாக உள்ளது. சமூக நீதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை திமுக அரசால் இனியும் ஏமாற்ற முடியாது. எனவே, பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களைப் பின்பற்றி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மின்வாரியத்தில் உள்ள முக்கியமான காலிப்பணியிடங்களை நிரப்ப நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    சட்டசபையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில்,

    * மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மின்மாற்றி பழுதை சரிசெய்ய விவசாயிகளிடமோ, நுகர்வோரிடமோ கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மின்வாரியத்தில் உள்ள முக்கியமான காலிப்பணியிடங்களை நிரப்ப நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    * 234 தொகுதிகளிலும் மின்வாரியம் சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

    அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயசங்கரன் குற்றம்சாட்டிய நிலையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார்.
    • செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை‌ கொலை செய்துள்ளார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 30). இவர் இவரது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தார். ஜான் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜான், தினமும் காலை சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

    அதேபோல நேற்று தனது மனைவி சரண்யாவுடன் காரில் சேலத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் 10 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே நெடுஞ்சாலையில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த ரவுடி ஜான் கார் மீது பின்னால் வந்த கார் மோதியுள்ளது.

    அப்போது விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து வெளியேறிய 4 பேர் கும்பல் ஜானை காரில் வைத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதனை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்தோடு போலீசார் அங்கு ரத்த காயத்துடன் ஊர்மக்கள் பிடித்து வைத்திருந்த கார்த்திகேயனை கைது செய்தனர்.

    இதையடுத்து கார்த்திகேயன் அளித்த தகவலின் பேரில் காரை பின்தொடர்ந்து சென்றபோது, கொலையாளிகள் சென்ற கார் நின்றது. பின்னர் காரில் இருந்த சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோர் காட்டு பகுதியில் தப்பியோடியுள்ளனர். அப்போது சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி தனது கைத்துப்பாக்கி மூலம் வாகனத்தில் மூன்று முறை சுட்டு எச்சரித்துள்ளார்.

    பின்னர் மூவரும் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் காவலர் யோகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி தற்காப்பிற்காக மூவரின் காலில் சுட்டு பிடித்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    கொலை குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார். கொலையான ஜானுவும், செல்ல துரையும் இணைந்து கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்நிலையில் செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை கொலை செய்துள்ளார்.

    இதற்கு பழி தீர்க்க ரவுடி செல்லதுரையின் தம்பி ஜீவகன் முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த 2020ம் ஆண்டு முதல் காத்திருந்த ஜீவகன் நேற்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 2 கார்களில் ரவுடி ஜானின் காரை பின்தொடர்ந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார்.

    இதில் கொலை கும்பலை சேர்ந்த கார்த்திகேயன், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த பார்த்திபன், அழகரசன், பெரியசாமி, சிவகுமார், சேதுவாசன் ஆகிய 5 பேரை பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான ஜீவகன் இன்று தனது கூட்டாளி சலீம் என்பவருடன் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர். சித்தோடு போலீசார் அவர்களை காவலில் எடுத்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    • சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
    • தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.

    இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

    நெல்லை சம்பவத்தை தொடர்ந்து சென்னை அயனாவரத்தை சேர்ந்த தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியும் முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளருமான குமார் என்பவரும் நில பிரச்சனை தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்டார். சேலத்தில் ஈரோட்டை சேர்ந்த ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் காரில் வைத்தே மனைவி கண் எதிரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நிலப்பிரச்சனை உள்ளிட்டவற்றுக்காக போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர்களிடம் வலியுறுத்தி கூறப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் யார்-யார்? என்பதை பட்டியல் எடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போன்று குற்றப் பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மீதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழிக்குப்பழி வாங்கும் வகையில் நடைபெறும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக கொலை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் சிறையில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு குண்டர் சட்டம் போன்றவற்றையும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் உயர் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

    ரவுடிகள் இடையேயான மோதலில் நடக்கும் கொலை சம்பவங்கள் பற்றி விரிவாக விசாரணை நடத்தி அதன் முழு பின்னணியையும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன், சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பின்னர் முழுமையாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கணக்கெடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைவாகவே நடந்து உள்ளன. 2024-ல் 1,540 பேர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் கொலை சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.

    குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.
    • காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னாஜிராவ் பகுதியை சேர்ந்தவர் ராஜீக் அகமது. இவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார்.

    இதுதவிர ராஜீக் அகமது அந்த பகுதியில் சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்து கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை, இவரது வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.

    அவர்கள் நேராக வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாதபடி மூடினர். பின்னர், வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் இந்த சோதனையானது நடந்தது.

    இந்த சோதனையின்போது, வீட்டில் ராஜீக் அகமதுவும் வீட்டில் இருந்தார்.

    அவரிடம் அமலாக்கத்துறையினர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவரும் அவர்கள் கேட்டவற்றுக்கு பதில் அளித்தார்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.

    இவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் எதற்காக சோதனை மேற்கொள்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. சோதனை முடிவில் தான் எதற்காக இந்த சோதனை நடந்தது. வீட்டில் இருந்து ஏதாவது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பதும் தெரியவரும்.

    அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு ராஜீக் அகமதுவின் வீட்டின் முன்பு 18 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இவரது வீட்டில் சோதனை நடப்பது அறிந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முற்றுகையிட்டு, எதற்காக சோதனை என கேட்டனர்.

    அவர்கள் உரிய பதில் அளிக்காததால் வீட்டின் முன்பு நின்று கண்டன கோஷங்களை கட்சியினர் எழுப்பினர்.

    இதேபோல் மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    • மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும்.
    • திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும்.

    மதுரை:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது:-

    எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நாங்கள் தனித்தனியாக வசிக்கிறோம். எங்களை சேர்த்து வைக்கக்கோரி என் மனைவி கரூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் நான் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கு தொடர்ந்தேன். இவற்றை விசாரித்த கரூர் கோர்ட்டு, என் மனைவியின் கோரிக்கையை அனுமதித்தும், என்னுடைய விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இது ஏற்புடையதல்ல. என் வழக்கை தள்ளுபடி செய்ததை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும். அவர்களின் முதல் திருமணம் சட்டப்படி ரத்தாகி உள்ளது. இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணத்துக்கு பின்பு 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து உள்ளனர். அதன்பின்பு மனுதாரர் தன் மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

    அதாவது, அவரது மனைவிக்கு பாலியல் நோய் இருந்ததாகவும், வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளது. தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையில்லை என்கிறார்.

    பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவருடன் குடும்பம் நடத்தியதால் தனக்கும் நோய் பரவியதாக மனுதாரர் கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் ஆபாச படத்தைப் பார்ப்பதில் மனுதாரரின் மனைவியின் செயல் மனுதாரருக்கு எதிரான கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது.

    திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும். இருப்பினும், சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது. கற்பனையில் கூட, அது கணவருக்கு கொடுமையை விளைவிப்பதாகக் கூற முடியாது.

    இந்த வழக்கில் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை அல்லது உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே மனுதாரர் வழக்கில் கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.
    • நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேளாண் விளை நிலங்கள் மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும். கேரள அரசு நெல் விளையும் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? முப்போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனை பட்டாவாக்க முடியும்.

    மேலும் சிப்காட் போன்ற வளர்ச்சித்திட்டங்களுக்கு அரசே விளை நிலங்களை கையகப்படுத்துகிறது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க அனுமதிக்க கூடாது என்று நான் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியுள்ளேன். இதனால் சாகுபடி பரப்பு 40 லட்சம் ஹெக்டர் பரப்பளவும், 15 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் உள்ளது.

    கேரளா போல தமிழகத்தில் இச்சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசில் அதிகநாள் நடைபெறும் கூட்டத்தொடர் இதுவாகும். கடந்த காலங்களில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றது என்பதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியதால் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடைபெறும் கொடூரக்கொலைகள் அதிகரித்துவருகிறது. நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் கொடூரக்கொலை நடைபெற்றுள்ளது. எத்தகைய குற்றம் செய்தாலும் இந்த ஆட்சியில் தப்பிவிடலாம் என்ற மனநிலையே இதற்கு காரணமாகும்.

    இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு கொலைகார நாடாக மாறிவிடும். எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவேண்டும். தற்காலிக ஊழியர்களின் பணி நிலைப்பை உறுதிப்படுத்தவேண்டும். இவர்களை பணி நிலைப்பு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிலைப்பு செய்யப்படும் என அறிவித்தும் அதை செயல்படுத்தவில்லை.

    நகைக்கடனுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. வட்டியை மட்டும் புதுபித்துகொள்ளும் நிலை இருந்தது. தற்போது விதிமுறைப்படி நகையை மீட்டு, அடுத்த நாள் மீண்டும் அடகு வைக்க முடியும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.

    புதுச்சேரியில் கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது. வரவேற்கத்தக்கது. சென்னையில் உள்ள கடைகளின் பெயர் பலகை ஒரு வாரத்தில் தமிழில் மாற்றாவிட்டால் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு வரவேற்கதக்கது.

    தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் மொழிப்பற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் அதிகமாக உள்ளது உண்மையிலும் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் தி.மு.க.வை போல பா.ம.க. கொடி கம்பங்களை அகற்ற ஆணையிடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, பொது இடத்தில் கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கவேண்டும். அதே நேரம் நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். சுவற்றில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை. வெளிநாடுகளில் இது போன்ற நடைமுறை இல்லை. மாநாடு விளம்பரம் எழுதினால் மாநாடு முடிந்த பின் அக்கட்சியே இதை அழிக்கவேண்டும் என்ற விதிகள் உள்ளது. இதை தடை செய்ய வேண்டும் என்றார்.

    ×