என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர்.
    • இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

    புதுடெல்லி:

    டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    சட்டசபை தேர்தலின் போது ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.

    இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி ரேகா குப்தா நேற்று அறிவித்தார்.

    மேலும் அவர், தகுதியான பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டருக்கான தொகை ரூ.853 அவர்களது வங்கி கணக்கில் ஒவ்வொரு முறையும் வரவு வைக்கப்படும் என்றும், குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர் என்றும் கூறினார்.

    இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன.
    • உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன.

    சென்னை:

    ஒரு நபர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்யும்போது, அவர் பொருளாதாரச் சிக்கலில் வீழ்வது இயற்கை. இதனை அவர் திவாலாகிவிட்டார் என்றும் சொல்வார்கள். அதுவே நீர்வளத்திற்கு நடந்தால்? சற்று யோசித்து பாருங்கள்.

    கடந்த சில 10 ஆண்டுகளாக இயற்கை வழங்கும் நீரைவிட, நாம் சுரண்டிய நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 'உலகளாவிய தண்ணீர் திவால்' அறிக்கை, நிலத்தடி நீர் வற்றி வருவது மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகளை விரிவாகப் பட்டியலிட்டு இருக்கிறது.

    இந்த அறிக்கை வெறும் தண்ணீர் தட்டுப்பாடு என்பதைத் தாண்டி, நாம் மீளமுடியாத ஒரு பேராபத்தில் சிக்கியுள்ளோம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. மேலும் இதனை வெறும் எச்சரிக்கையாக மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கான அபாய சங்காகவும் ஊதியுள்ளது.

    அப்படி என்னதான் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    • உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் நிலத்தடிநீர் மீண்டும் ஊற்று எடுக்க வாய்ப்பே இல்லாத ஆழத்துக்கு சென்றுவிட்டது.

    • மழை மற்றும் பனி உருகுவதன் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரின் அளவைவிட, நாம் பயன்படுத்தும் நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நாம் இயற்கையின் 'சேமிப்பான' நிலத்தடி நீரையும், பனிப்பாறைகளையும் வேகமாகச் செலவழித்து வருகிறோம்.

    • நன்னீர் பயன்பாட்டில் சுமார் 70 சதவீதத்தை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம்.

    • உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. இயற்கையாக நிலத்தடி நீர் மீண்டும் ஊற்றெடுக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட நாம் அதனை உறிஞ்சு எடுக்கக் கூடிய வேகம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலப்பரப்பு உள்வாங்கும் அபாயம் உள்ளது.

    3-ம் உலகப் போர்

    • காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு சீரற்றுப் போய் இருக்கிறது. நதிகளின் ஆதாரமான பனிப்பாறைகள் 1970-க்கு பிறகு 30 சதவீதம் உருகிவிட்டன.

    • நிலத்தடி நீரை சேமிக்கும் வங்கிகளாக செயல்பட்டு வந்த ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் அழிந்து நீர் சுழற்சி பாதிக்கப்பட்டிருக்கிறது.

    • நகரமயமாக்கல் மற்றும் மாசுபாடு காரணமாகவும் தண்ணீர் திவால் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதாவது நகரங்களில் நிலப்பரப்பு முழுவதும் கான்கிரீட் பூசப்பட்டு, மழைநீர் பூமிக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. மேலும் 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், நீர் நிலைகளில் கலந்து நன்னீரை மாசுப்படுத்துகின்றன.

    மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற பேச்சுகள் வெறும் யூகமாக சொல்லக்கூடிய வார்த்தையோ, கற்பனைக் கதையோ அல்ல. அது நிதர்சனமான உண்மை என்பதை ஐ.நா.வின் 'தண்ணீர் திவால்' அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது பல கோடி மக்களின் தாகத்தை மட்டுமல்ல, உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

    தமிழ்நாட்டின் நிலை

    ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையில், இந்தியா உலகளாவிய தண்ணீர் திவால் நிலையின் மையப்புள்ளியாக இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தெற்கு ஆசியாவிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பகுதிகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சென்னை நகரம் உலகளவில் தண்ணீர் திவால் நிலையை நோக்கி வேகமாக நகரக்கூடிய 25 நகரங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை 2019-ல் சந்தித்தது போன்ற தண்ணீர் இல்லாத நிலை (டே ஜீரோ) மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பேராபத்து நமக்குதான்.

    தீர்வுகள் என்ன?

    ஐக்கிய நாடுகள் சபை தண்ணீர் திவால் நிலை குறித்து எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும், அதற்கான அதிரடி தீர்வுகள் என்ன? என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தண்ணீர் நெருக்கடி மேலாண்மையை இனி செய்ய முடியாது. மாறாக திவால் நிலையை மேலாண்மை செய்ய தொடங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    • தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும்.

    •விவசாயத்தில் சொட்டு நீர் பாசனத்தை கட்டாயமாக்க வேண்டும்.

    •நகரங்களில் கழிவுநீர் மறுசுழற்சியை ஒரு போர்க்கால நடவடிக்கையாக முன்னெடுக்கவேண்டும்.

    •எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரை சேமிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.

    •பொருளாதார திட்டமிடல்களில் தண்ணீரை முதன்மை காரணியாக மாற்றவேண்டும். நதிநீர் பகிர்வு தொடர்பான சர்வதேச சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்வுகளையும் வழங்கியுள்ளது.

    • இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
    • 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தயாரிப்புகளை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.

    அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய  பொருட்களை  இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   

    லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) என்ற தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார்.

    அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    கடந்த ஆண்டு லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) என்ற தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.

    'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.

    இதற்கிடையே தனது அடுத்த சிம்பொனியை எழுதி வருவதாக கடந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துடன் இளையராஜா வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அடுத்த சிம்பொனியை எழுதி முடித்துவிட்டதாக இளையராஜா அறிவித்துள்ளார்.

    தனது எக்ஸ் பக்கத்தில், பிப்.3, 2026 உடன் புதிய ஸ்டூடியோவிற்கு வந்து, ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. என்னுடைய இரண்டாவது சிம்பொனியையும் கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

    ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி. சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா வகை ஆகும். 

    • ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மகாத்மா காந்தியின் வெண்கல சிலை திருடு போனது.
    • இந்தச் சிலையை 2021, நவம்பரில் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமுதாய கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 240 கிலோ எடையுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை 2021-ம் ஆண்டு நவம்பரில் அப்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.

    இந்நிலையில், இந்திய சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வெண்கல சிலையை மர்ம கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது.

    கால்களைத் தவிர்த்து பிற உடல் பாகங்களுடன் காந்தியின் சிலையை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் காந்தி சிலை திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 'மருதமலை மாமணியே முருகையா' பாடலை மாற்றி விஜயை புகழ்வதுபோல் பாடியதற்கு எதிர்ப்பு
    • நெல்லை மற்றும் சேலம் காவல் நிலையங்களில் புகார்

    தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா நேற்று பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன், முருகன் பாடல் ஒன்றில் விஜய்யை உருவகப்படுத்தி பாடியிருந்தார். இந்த பாடலின்போது விஜய்யும் நடனமாடி இருந்தார். 

    விஜய்யின் இந்த நடனத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் முருகன் பாடலை இழிவுபடுத்தும் விதமாக பாடியதாகவும், அதற்கு விஜய் சைகை செய்து முருக கடவுளை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் விஜய் மீதும், அக்கட்சி நிர்வாகி ராஜ்மோகன் மீதும், பாடகர் வேல்முருகன் மீதும் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

    மேலும் வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவரும் நெல்லை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், முருகன் பக்தர்களால் போற்றப்படும் புனித பாடல் அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பாடப்பட்டதாகவும், இதனால் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக திருநெல்வேலி மாநகர போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

    • பல வெற்றி தமிழ் திரைப்படங்களில் ரேவதி நடித்துள்ளார்.
    • மலையாளம் மற்றும் இந்தி திரையுலகிலும் பல திரைப்படங்களில் ரேவதி நடித்துள்ளார்.

    80-களில் திரையுலகில் நடிகை ரேவதி மிகவும் பிரபலமாக இருந்தார். புன்னகை மன்னன் , மௌன ராகம், அரங்கேற்ற வேலை, மண் வாசனை, வைதேகி காத்திருந்தாள், மகளிர் மட்டும், அஞ்சலி போன்ற பல வெற்றி தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

    இது தவிர்த்து ரேவதி மலையாளம் மற்றும் இந்தி திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    நடிப்பது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கவும் செய்துள்ளார் ரேவதி. முதன் முதலாம் 2002 ஆம் ஆண்டு மிடிர், மை ஃப்ரெண்ட் என ஆங்கில படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான விருதை பெற்றது.

    இந்நிலையில், ரேவதி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், "நான் 11வது படித்துக்கொண்டு இருக்கும் போது, பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான். நான் யாருக்கும் பயப்படவில்லை. அவனை அந்த இடத்திலேயே பளாரென அடித்தேன். அப்போது அங்கிருந்த அனைவரும் எனக்கு துணையாக இருந்தார்கள். அந்த தைரியத்தை எனக்கு கொடுத்தது என் அம்மா, யாராவது தவறாக நடந்து கொண்டால், பயப்படாமல் தைரியமாக அடி என்றார்கள். அதைத்தான் நான் அன்று செய்தேன். இதுபோல ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

    நடிகை ரேவதியின் இந்த பேச்சுக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. 

    • மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த விவகாரம் மக்களவயில் இன்று பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் இந்த விவகாரம் குறித்து பேச முற்பட்டது, அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    எதிர்க்கட்சியினருக்கு மக்களவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியை சேர்ந்த 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தொடர் முடியும் வரை பங்கேற்க முடியாது.

    இதையடுத்து, மக்களவையில் இருந்து 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிரா்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற பாாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகர வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோலே, எஸ். வெங்கடேசன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் அடங்குவர்.

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.
    • இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே இந்தியா- பாகிஸ்தான் ஆட்டங்கள் தான் பெரும் வருவாயை ஈட்டி தருகின்றன. இரு நாட்டு பகைமை உணர்வு ஆட்டத்திலும் எதிரொலிப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை காண தவம் கிடப்பார்கள்.

    அந்த வகையில் விரைவில் தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் தான் உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்த ஆட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,500 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை, இதர வர்த்தக நடவடிக்கைகள், அதிகாரபூர்வ பெட்டிங் ஆகியவையும் அடங்கும். வேறு எந்த தனிப்பட்ட ஆட்டத்துக்கும் இந்த அளவுக்கு வருவாய் மதிப்பு கிடையாது.

    ஒருவேளை இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான். இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டம் நடக்காவிட்டால் விளம்பர வருவாயில் மட்டும் ரூ.250 முதல் ரூ.300 கோடி வரை 'வெட்டு' விழும். அதை ஈடுகட்ட ஐ.சி.சி.யிடம் ஒளிபரப்பு நிறுவனம் நிச்சயம் இழப்பீடு கோரும்.

    ஐ.சி.சி,.க்கு வரும் வருவாயில் பெரும் பகுதி இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுக்கு பிரித்து வழங்கும் நிதியின் அளவும் கணிசமாக குறைந்து விடும். இதனால் ஐ.சி.சி. நிதிைய மட்டுமே நம்பி இருக்கும் சிறிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    மேலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும். இந்திய கிரிக்கெட் வாரியம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால் இந்த இழப்பை சமாளித்து விடும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடங்கும் அபாயம் உள்ளது.

    அத்துடன் ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 5.75 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூ.315 கோடியாகும். ஒப்பந்த விதியை மீறி உலகக் கோப்பை ஆட்டத்தை புறக்கணித்தால், ஐ.சி.சி. இந்த நிதியை நிறுத்தி வைப்பதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

    • சர்வதேச நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
    • மத்திய பட்ஜெட்டில் யூகபேர வணிகம் மீதான பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட், முதலீடுக்கு முன்னுரிமை அளிக்கிறது. நுகர்வை அதிகரிப்பதற்கான முன்னுரிமை கருவியாக முதலீட்டை பார்க்கிறது.

    சர்வதேச நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு எந்த நாட்டின் நாணயம் மீதும் நம்பிக்கை இல்லாததால், அவர்கள் தங்கம் மீது முதலீடு செய்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. பல்வேறு மத்திய வங்கிகளும் தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றன.

    மத்திய பட்ஜெட்டில் யூகபேர வணிகம் மீதான பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்தில் குழந்தைகள் ஏராளமான பணத்தை இழக்கின்றன.

    எனவே, மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பெற்றோர் என்னிடம் கேட்டுக்கொண்டனர். எனவே, அந்த வணிகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்துடன் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    நிதி பற்றாக்குறையை 4.3 சதவீதமாக குறைக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

    பங்கு விற்பனையும், சொத்துகளை பணமாக்குவதும் நீடிக்கும். பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விற்பனையை மத்திய அரசு ஊக்குவிக்கும். ஐ.டி.பி.ஐ. வங்கி பங்கு விற்பனைக்கு ஏற்பாடு நடந்து வருகிறது. ஜி.எஸ்.டி. குறைப்பாலும், வருமானவரி விலக்கு அதிகரிப்பாலும் தனிநபர் நுகர்வு அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும் நுகர்வு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிசுற்றை எட்ட முனைப்பு காட்டும்.
    • அதேநேரத்தில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க குஜராத் தீவிர முனைப்புடன் உள்ளது.

    வதோதரா:

    5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    2-வது இடம் பிடித்த குஜராத் ஜெயன்ட்சும் (5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி), 3-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்சும் (4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளி) இன்று வெளியேற்றுதல் சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    லீக்கில் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்ட குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஆஷ்லி கார்ட்னெர் (244 ரன்), பெத் மூனியும் (196), பந்து வீச்சில் ராஜேஸ்வரி கெய்க்வாட், காஷ்வீ கவுதமும் நல்ல நிலையில் உள்ளனர். சோபி டிவைன் (237 ரன், 17 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார். டெல்லிக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லாரா வோல்வார்ட் (241 ரன்), லிசெல் லீ (240), ஷபாலி வர்மாவும் (208), பந்து வீச்சில் நந்தினி ஷர்மா, ஸ்ரீசரனி (தலா 14 விக்கெட்), மரிஜானே காப்பும் வலுசேர்க்கின்றனர். 8 ஆட்டத்தில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

    மொத்தத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிசுற்றை எட்ட வரிந்து கட்டுகிறது. அதேநேரத்தில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க குஜராத் தீவிர முனைப்புடன் உள்ளது. எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை பயமுறுத்துகின்றன.
    • இந்த பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் தனியார் செய்தி சேனல்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் விஜய்யின் அரசியல் வருகையால் பயப்படுகிறீர்களா? என்றும் கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும். தி.மு.க. பயப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

    ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை பயமுறுத்துகின்றன. இந்த பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதை கலாசாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.

    ×