என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள்.
    • தேர்தல் நேரத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுகிறார்கள்.

    நெல்லை மாவட்ட பா.ஜா.க அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களுக்கு மேலாக முன்னிலை வகித்து வருகிறது. இது ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் வரவேற்கிறேன்.

    நெல்லை தொகுதியில் தி.மு.க. தோற்க கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதியை பொருத்தவரை நான் கேட்ட கல்லூரி உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி தந்துள்ளார். தனிப்பட்ட முறையில் எனக்கும், அவருக்கும் உள்ள நட்பு ஆழமானது. அதற்காக கட்சிகள் என்று வரும்போது விட்டுக் கொடுக்க முடியாது.

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் ஆணையமும் பங்கு வகித்ததால் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக இருந்ததா?

    பீகாரில் 65 லட்சம் வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். அதில் சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். 28 லட்சம் வாக்காளர்கள் வரை வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். பின்னர் நீக்க தானே செய்வார்கள்.

    தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை பொருத்தவரை தமிழகத்தில் தி.மு.க. வட்ட செயலாளர்களை வைத்துதான் இந்த வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அதிகாரிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கிறார்கள். அதிகாரிகள் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் மனு அனுப்பியுள்ளேன்.

    டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசு மீது குறை சொல்கிறார்கள். வெளிநாடுகளில் இது போன்ற சம்பவம் நடந்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டு ஆதரவாக பேசுவார்கள். ஆனால் இந்தியாவில் தான் இப்படி குறை கூறும் சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் இங்கு இருப்பவர்களின் தேசப்பற்று குறைந்துவிட்டது தான்.

    தேர்தல் நேரத்தில் தான் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுகிறார்கள். பீகாரில் தேர்தல் நடந்தது. டெல்லியில் கொண்டு வெடித்தது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனது வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டது குறித்து நான் அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரம் எனக்கு யாரும் வெடிகுண்டு மிரட்டல் விடவில்லை.

    அ.தி.மு.க.வில் ஒரு காலத்தில் ஜே அணி, ஜா அணி என்று இருந்தது. பின்னர் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தார்கள். மிகப்பெரிய வெற்றியை பெற்றார்கள். அதேபோன்று தற்போது அ.தி.மு.க.வினர் அணிகளாக உள்ளனர். இது அ.தி.மு.க. வில் வழக்கமாக நிகழக்கூடிய ஒன்றுதான்.

    அதே நேரத்தில் எங்கள் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கட்சி. தற்போது பீகாரில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனை கொண்டாடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ராம், ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த பும்ரா ஓவரை மட்டும் தடுத்து ஆடினார். சிராஜ் ஓவரை சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க விட்டனர். இதனால் அக்சர் படேலுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அவர் ஓவரையும் அதிரடியாக விளையாடினர்.

    இந்த ஜோடி முதல் 10 ஓவருக்கு 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரிக்கல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 22 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து 13-வது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த கேப்டன் பவுமா, 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதனையடுத்து வியான் முல்டர்- டோனி டி சோர்ஜி ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி வியான் முல்டர் 24, டோனி டி சோர்ஜி 24 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

    அதனை தொடர்ந்து கைல் வெர்ரேய்ன் 16, மார்கோ ஜான்சன் 0, கார்பின் போஷ் 3, சைமன் ஹார்மர் 5, கேசவ் மகராஜ் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும் சிராஜ், குல்தீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • 1995 ஆம் ஆண்டு 4 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
    • 2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.

    பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போது 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    பொதுவாக தேர்தலின்போது வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறும். இதனால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயமும் ஏற்படும். வாக்குச்சாவடிகளில் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்கு அளிக்க அனுமதிக்கவில்லை. கள்ள ஓட்டு செலுத்திவிட்டனர் என குற்றச்சாட்டு எழும். இதனால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படும்.

    ஆனால் பீகாரில் முதன்முறையாக வாக்குப்பதிவின்போது வன்முறையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு என்பது இல்லை.

    கடந்த 1985 சட்டசபை தேர்தலின்போது 63 பேர் உயிரிழந்துள்ளனர். 156 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடபப்ட்டது.

    1990 தேர்தலின்போது வாக்குப்பதிவு வன்முறை தொடர்பாக 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

    1995ஆம் ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை வெடித்ததாலும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு காரணமாகவும் டி.என். சேஷன் நான்கு முறை தேர்தலை ஒத்திவைத்தார்.

    2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.

    • டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
    • குருகிராம் மற்றும் நுகு உள்ளிட்ட பகுதிகளில் இது வாங்கப்பட்டு உள்ளது.

    டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோனது. எனவே அவர்தான் காரை ஓட்டி வந்தாரா? என சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதே சமயம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளில் அவரது உருவம் கண்டறியப்பட்டு, அந்த காரில் அவர் சென்று வந்த இடங்கள் எல்லாம் ஆராயப்பட்டன. இவர்தான் வெடிப்பைச் செய்திருப்பார் என போலீசார் உறுதியாக நம்பினர். இருந்தாலும் டி.என்.ஏ. பரிசோதனையில் அதனை உறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    உமர் முகமது ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்தவர். அங்கு அவருடைய தாயார் மற்றும் சகோதரரிடம் டி.என்.ஏ. மாதிரிகள் பெறப்பட்டன. அவை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    கார் வெடித்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட உமரின் உடல் பாகங்கள் என்று சந்தேகம் கொள்ளப்பட்ட பாகங்களுடன் மேற்கண்ட மாதிரிகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இந்த பரிசோதனையில் இரண்டும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்திப்போனது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டது உமருடைய உடல் பாகங்கள்தான் என கண்டறியப்பட்டது.

    இதனால் கார் வெடிப்பை நிகழ்த்தியது அவர்தான் என்பது உறுதியானது. பயங்கரவாதியாக அவர் மாறி இருக்கிறார். இதுபற்றி மேலும் விசாரணை தொடர்கிறது.

    இதற்கிடையே டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர். இதற்காக உமர் முகமது, முசமில் ஷகீல், ஷாகீத் ஷாகீன் மற்றும் அதீல் அகமது ராதர் ஆகியோர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி உள்ளனர். இது உமர் முகமதுவிடம் கொடுத்து வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பணத்தில் ரூ.3 லட்சம் மதிப்புக்கு 2 டன் அமோனியம் நைட்ரேட்டை உரக்கடைகளில் வாங்கி உள்ளனர். குருகிராம் மற்றும் நுகு உள்ளிட்ட பகுதிகளில் இது வாங்கப்பட்டு உள்ளது. பணத்தை வைத்திருப்பது தொடர்பாக உமர் அகமதுவுக்கும், முசமிலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் அமைந்துள்ள உமர் முகமதுவின் வீடு இடிக்கப்பட்டுள்ளது. 



    • மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

    வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

    எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.

    • நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.
    • உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி,

    பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய்,

    வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக்  காலை உணவுத் திட்டம்,

    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள்,

    உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்,

    ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் தினம் நல்வாழ்த்துகள்!

    உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்! என்று கூறியுள்ளார். 



    • இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படுவது புக்கர் பரிசு.
    • இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய்க்கு அறிவிக்கப்பட்டது.

    லண்டன்:

    இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் புக்கர் பரிசு இங்கிலாந்து அரசாங்கத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் நாடுகளுக்கு வழங்கப்பட்ட இந்த விருது தற்போது உலக நாடுகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தாண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய் எழுதிய பிளெஷ் என்னும் புனைவு நாவலுக்கு அறிவிக்கப்பட்டது.

    கனடாவில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து தற்போது ஹங்கேரி நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இது பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவு குறித்து பேசப்படுவதாக அமைந்துள்ளது.

    லண்டனில் அவருக்கு புக்கர் பரிசுக்கான நினைவு சின்ன கோப்பையும், ரூ.55 லட்சத்திற்கான (66 ஆயிரம் டாலர்கள்) காசோலையும் வழங்கப்பட்டது.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
    • 3வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    துரின்:

    உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

    அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.

    ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்நிலையில், இன்று நடந்த 3-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    • வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தவேண்டும்.
    • வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.

    SIR படிவத்தில் நிரப்ப 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முந்தைய தீவிர திருத்தம் 2002/2005 இன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை எளிதாக கண்டறிய வசதியாக https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளிடப்பட்டுள்ளது.

    இவ்வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் (www.voters.eci.gov.in) "Search your name in the last SIR" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதில் மாநிலத்தின் பெயரை (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் "தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில் "பெயர் மூலம் தேடுதல்" அல்லது "EPIC எண் மூலம் தேடுதல்" என்ற விருப்பங்களைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களை மீட்டெடுக்கலாம். " பெயர் மூலம் தேடுதல்" என்ற விருப்பத்தின் மூலம் தேடும்போது மாவட்டத்தின் பெயர், சட்டமன்ற தொகுதி பெயர், வாக்காளரின் பெயர், தந்தை / தாய் / கணவர் / சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து வாக்காளர் தங்களது விவரங்களைப் பெறலாம்.

    இணையதளம் மூலம் (online) கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள்

    வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணையதளம் மூலம் (online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை பயன்படுத்தி இணையதளம் மூலம் (online) உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் "Fill Enumeration Form" என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.

    இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

    வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.

    தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
    • நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.

    இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

    தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

    121 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும், 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.8 சதவீத வாக்குகளும் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கூறப்படுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த அவர், `தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.

    இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இல்லை என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.

    இதனிடையே, 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று எம்.எஸ்.தோனியும் தெரிவித்து இருந்தார்.

    இருப்பினும் எம்.எஸ்.தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என்று வதந்தி பரவி வருகிறது.

    இந்த நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதி செய்துள்ளது.

    இது தொடர்பாக சி.எஸ்.கே. அணி வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேட்கின்றனர். அதற்கு ONE LAST TIME என்று பதில் கொடுத்து தோனி ரசிகர்களை சி.எஸ்.கே. அணி உற்சாகப்படுத்தியுள்ளது.

    • தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
    • நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

    இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

    இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டது.

    இன்று நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி நாளை நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.  

    கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.

    முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.

    ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.

    நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

    நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.

    ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.

    கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்

    ×