என் மலர்
ஆசிரியர் தேர்வு
- அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசினார்.
- அப்போது பல்வேறு உலக நிகழ்வுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு உலக நிகழ்வுகள் மற்றும் நாட்டு நடப்புகள் குறித்து விவாதித்தனர்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ஒரு சிறந்த தொலைபேசி உரையாடலை இப்போதுதான் முடித்தேன். அதில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
அவற்றில் வர்த்தகம், ராணுவம், ஏப்ரல் மாதத்தில் நான் சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் (இதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்), தைவான், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர், ஈரானுடனான தற்போதைய நிலைமை, அமெரிக்காவிலிருந்து சீனா எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதல், தற்போதைய பருவத்திற்கு சோயாபீன் எண்ணிக்கையை 20 மில்லியன் டன்களாக உயர்த்துவது உள்பட கூடுதல் விவசாயப் பொருட்களை வாங்குவது குறித்து சீனாவின் பரிசீலனை, விமான எஞ்சின் விநியோகங்கள் மற்றும் பல பிற விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அனைத்தும் மிகவும் நேர்மறையானவை.
சீனா உடனான உறவும், ஜி ஜின்பிங் உடனான எனது தனிப்பட்ட உறவும் மிகவும் நல்ல ஒன்றாகும். அதை அப்படியே வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் இருவரும் உணர்கிறோம்.
எனது ஜனாதிபதி பதவியின் அடுத்த 3 ஆண்டுகளில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்கள் குடியரசுடன் தொடர்புடைய பல நேர்மறையான முடிவுகள் அடையப்படுமென நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- நைஜீரியாவில் கொள்ளையர்கள், பயங்கரவாத குழுக்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றன.
- இங்குள்ள பல பகுதிகள் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
குவாரா:
நைஜீரியாவில் கொள்ளையர்கள், பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. இங்குள்ள பல பகுதிகள் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நைஜீரியாவின் குவாராவில் உள்ள வோரோ உள்ளிட்ட இரு கிராமங்களுக்குள் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நுழைந்தனர். அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் அங்கிருந்த கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
இந்தத் தாக்குதலில் 162 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத குழுக்களே காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டியது.
துப்பாக்கிச் சூடு காயங்களுடன் பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம். பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறாரென தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.
குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஸாக் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மாநிலத்தில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட விரக்தியில் பயங்கரவாத குழுக்கள் இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளன என தெரிவித்தார்.
- ஆப்கானிஸ்தான் வீரர்கள் இருவர் சதம் அடித்தனர்.
- இந்த அணி சார்பில் இரு வீரர்கள் அரைசதமும், ஒரு வீரர் சதமும் விளாசினர்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேயின் ஹராரேவில் இன்று இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பைசல் ஷினோசடா 93 பந்தில் 110 ரன்கள் விளாசினார். மற்றொரு வீரர் உஜைருல்லா நியாஜாய் ஆட்டமிழக்காமல் 86 பந்தில் 101 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் தீபேஷ் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 311 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் களம் இறங்கியது. ஆரோன் ஜார்ஜ்- வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 33 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 90 ரன்கள் சேர்த்தது.
அடுத்து கேப்டன் ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார். இவர் 59 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் ஜார்ஜ் அபாரமாக விளையாடி 95 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 104 பந்தில் 115 ரன்கள் சேர்த்தார். விஹான் மல்ஹோத்ரா 47 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் வருகிற 6-ந்தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியும் ஹாராரேயில் நடக்கிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது. 'தாய் கிழவி' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. தளம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 'தாய் கிழவி' படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.
இந்நிலையில், தாய் கிழவி படத்தின் "தாய் கிழவி வாரா.." பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
- ஆளுநர் அஜய் பல்லா முதலமைச்சர் கேம்சந்த் சிங்கிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
- மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் பதவியேற்பு.
மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார்.
இம்பாலில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அஜய் பல்லா முதலமைச்சர் கேம்சந்த் சிங்கிற்கு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் முதல்வராக கேம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார்.
- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
- ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.
குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது.
- ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும்.
ஹராரே:
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1 மணி) மோதுகின்றன.
5 முறை சாம்பியனான இந்திய அணி லீக்கில் அமெரிக்கா, வங்காளதேசம், நியூசிலாந்தையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே, பாகிஸ்தானையும் துவம்சம் செய்து அரைஇறுதியை எட்டியது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் அபிக்யான் குண்டு (199 ரன்), 'அதிரடி புயல்' வைபவ் சூர்யவன்ஷி (196), விஹான் மல்கோத்ரா (172), வேதாந்த் திரிவேதி சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் தொடக்கம் தான் திருப்திகரமாக இல்லை. தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் ஒரு முறை கூட எடுக்கவில்லை. தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹெனில் பட்டேல், அம்ப்ரிஷ் (தலா 11 விக்கெட்), ஹிலான் பட்டேல் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளிக்கும் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கிலும் கணிசமாக ரன் எடுத்தால் பேட்டிங் மேலும் வலுவடையும்.
ஆப்கானிஸ்தான் அணி லீக்கில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், தான்சானியாவையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் அயர்லாந்தையும் வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பைசல் ஷினோஜதா (325 ரன்), உஸ்மான் சதத் (183), கேப்டன் மக்பூப் கானும் (178), பந்து வீச்சில் நூரிஸ்டானி ஓமர்ஜாய், அப்துல் அஜிசும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
வலுவான இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது. நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சவாலை சமாளிப்பது ஆப்கானிஸ்தானுக்கு எளிதான விஷயமாக இருக்காது. அதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 2-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
- குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர்.
- இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
புதுடெல்லி:
டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தலின் போது ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி ரேகா குப்தா நேற்று அறிவித்தார்.
மேலும் அவர், தகுதியான பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டருக்கான தொகை ரூ.853 அவர்களது வங்கி கணக்கில் ஒவ்வொரு முறையும் வரவு வைக்கப்படும் என்றும், குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர் என்றும் கூறினார்.
இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன.
- உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன.
சென்னை:
ஒரு நபர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்யும்போது, அவர் பொருளாதாரச் சிக்கலில் வீழ்வது இயற்கை. இதனை அவர் திவாலாகிவிட்டார் என்றும் சொல்வார்கள். அதுவே நீர்வளத்திற்கு நடந்தால்? சற்று யோசித்து பாருங்கள்.
கடந்த சில 10 ஆண்டுகளாக இயற்கை வழங்கும் நீரைவிட, நாம் சுரண்டிய நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 'உலகளாவிய தண்ணீர் திவால்' அறிக்கை, நிலத்தடி நீர் வற்றி வருவது மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகளை விரிவாகப் பட்டியலிட்டு இருக்கிறது.
இந்த அறிக்கை வெறும் தண்ணீர் தட்டுப்பாடு என்பதைத் தாண்டி, நாம் மீளமுடியாத ஒரு பேராபத்தில் சிக்கியுள்ளோம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. மேலும் இதனை வெறும் எச்சரிக்கையாக மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கான அபாய சங்காகவும் ஊதியுள்ளது.
அப்படி என்னதான் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
• உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் நிலத்தடிநீர் மீண்டும் ஊற்று எடுக்க வாய்ப்பே இல்லாத ஆழத்துக்கு சென்றுவிட்டது.
• மழை மற்றும் பனி உருகுவதன் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரின் அளவைவிட, நாம் பயன்படுத்தும் நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நாம் இயற்கையின் 'சேமிப்பான' நிலத்தடி நீரையும், பனிப்பாறைகளையும் வேகமாகச் செலவழித்து வருகிறோம்.
• நன்னீர் பயன்பாட்டில் சுமார் 70 சதவீதத்தை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம்.
• உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. இயற்கையாக நிலத்தடி நீர் மீண்டும் ஊற்றெடுக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட நாம் அதனை உறிஞ்சு எடுக்கக் கூடிய வேகம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலப்பரப்பு உள்வாங்கும் அபாயம் உள்ளது.
3-ம் உலகப் போர்
• காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு சீரற்றுப் போய் இருக்கிறது. நதிகளின் ஆதாரமான பனிப்பாறைகள் 1970-க்கு பிறகு 30 சதவீதம் உருகிவிட்டன.
• நிலத்தடி நீரை சேமிக்கும் வங்கிகளாக செயல்பட்டு வந்த ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் அழிந்து நீர் சுழற்சி பாதிக்கப்பட்டிருக்கிறது.
• நகரமயமாக்கல் மற்றும் மாசுபாடு காரணமாகவும் தண்ணீர் திவால் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதாவது நகரங்களில் நிலப்பரப்பு முழுவதும் கான்கிரீட் பூசப்பட்டு, மழைநீர் பூமிக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. மேலும் 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், நீர் நிலைகளில் கலந்து நன்னீரை மாசுப்படுத்துகின்றன.
மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற பேச்சுகள் வெறும் யூகமாக சொல்லக்கூடிய வார்த்தையோ, கற்பனைக் கதையோ அல்ல. அது நிதர்சனமான உண்மை என்பதை ஐ.நா.வின் 'தண்ணீர் திவால்' அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது பல கோடி மக்களின் தாகத்தை மட்டுமல்ல, உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் நிலை
ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையில், இந்தியா உலகளாவிய தண்ணீர் திவால் நிலையின் மையப்புள்ளியாக இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தெற்கு ஆசியாவிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பகுதிகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சென்னை நகரம் உலகளவில் தண்ணீர் திவால் நிலையை நோக்கி வேகமாக நகரக்கூடிய 25 நகரங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை 2019-ல் சந்தித்தது போன்ற தண்ணீர் இல்லாத நிலை (டே ஜீரோ) மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பேராபத்து நமக்குதான்.
தீர்வுகள் என்ன?
ஐக்கிய நாடுகள் சபை தண்ணீர் திவால் நிலை குறித்து எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும், அதற்கான அதிரடி தீர்வுகள் என்ன? என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தண்ணீர் நெருக்கடி மேலாண்மையை இனி செய்ய முடியாது. மாறாக திவால் நிலையை மேலாண்மை செய்ய தொடங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
• தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும்.
•விவசாயத்தில் சொட்டு நீர் பாசனத்தை கட்டாயமாக்க வேண்டும்.
•நகரங்களில் கழிவுநீர் மறுசுழற்சியை ஒரு போர்க்கால நடவடிக்கையாக முன்னெடுக்கவேண்டும்.
•எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரை சேமிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
•பொருளாதார திட்டமிடல்களில் தண்ணீரை முதன்மை காரணியாக மாற்றவேண்டும். நதிநீர் பகிர்வு தொடர்பான சர்வதேச சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்வுகளையும் வழங்கியுள்ளது.
- இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
- 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தயாரிப்புகளை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.
ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார்.
அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
கடந்த ஆண்டு லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) என்ற தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.

'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.
இதற்கிடையே தனது அடுத்த சிம்பொனியை எழுதி வருவதாக கடந்த ஆண்டு தீபாவளி வாழ்த்துடன் இளையராஜா வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த சிம்பொனியை எழுதி முடித்துவிட்டதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில், பிப்.3, 2026 உடன் புதிய ஸ்டூடியோவிற்கு வந்து, ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. என்னுடைய இரண்டாவது சிம்பொனியையும் கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி. சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா வகை ஆகும்.
- ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மகாத்மா காந்தியின் வெண்கல சிலை திருடு போனது.
- இந்தச் சிலையை 2021, நவம்பரில் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமுதாய கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 240 கிலோ எடையுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை 2021-ம் ஆண்டு நவம்பரில் அப்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்திய சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வெண்கல சிலையை மர்ம கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது.
கால்களைத் தவிர்த்து பிற உடல் பாகங்களுடன் காந்தியின் சிலையை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் காந்தி சிலை திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






