செய்திகள்

திமுக தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் முக ஸ்டாலின்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

Published On 2018-10-22 05:02 GMT   |   Update On 2018-10-22 05:02 GMT
தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு தகுதியே இல்லாதவர் மு.க.ஸ்டாலின் என்று திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #ADMK #Edappadipalaniswami #DMK #MKStalin
திருச்சி:

திருச்சி மற்றும் புதுக்கோட் டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றிரவு திருச்சி வந்தார். முன்னதாக அவருக்கு திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலையில் அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க.வினர் முயன்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அந்த சதிகளை முறியடித்து பொது மக்களின் ஆதரவுடன் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கி வருகிறோம்.

எம்.ஜி.ஆரின் திட்டங்களை ஜெயலலலிதா நிறைவேற்றியது போல், அவரது கனவுத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தை ஆளக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்ற வாய்ப்பினை மக்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர்.

தி.மு.க. மீதுள்ள ஊழல் வழக்குகளை மறைத்து திசை திருப்பவே ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி தி.மு.க.தான்.

தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு தகுதியே இல்லாதவர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு தலைவர் பொறுப்பு வழங்கவில்லை, செயல் தலைவராக ஆக்கினார். ஆட்சி பொறுப்பையும் தரவில்லை. அப்படியிருந்தும் அவருக்கு முதல்வர் பதவி மீது ஆசை வந்து விட்டது.

மக்கள் அந்த வாய்ப்பை அளித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அதை விடுத்து பொய் குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை. அ.தி.மு.க.வை யாராலும் உடைக்கவும் முடியாது. தி.மு.க. ஆட்சியை பிடிக்கவும் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Edappadipalaniswami #DMK #MKStalin
Tags:    

Similar News