செய்திகள்
முதல்வர்-அமைச்சர்கள், கவர்னர் ஆய்வை அனுமதிக்கிறார்கள்- கே.என்.நேரு எம்.எல்.ஏ.பேட்டி
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக கவர்னர் ஆய்வை அனுமதிக்கிறார்கள் என்று கே.என்.நேரு எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி:
திருச்சியில் இன்று கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புகொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு. க.செயலாளருமான கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவது போல் கவர்னர் செயல்படுகிறார். முதல்வர்-அமைச்சர்கள் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக கவர்னர் ஆய்வை அனுமதிக்கிறார்கள். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது அமைச்சர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் ஆய்வு நடத்த முடியுமா?.
இந்த ஆய்வால் திருச்சியில் உள்ள சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எல்லா தொகுதிகளுக்கும் கவர்னர் சென்றிருந்தால் அனைத்து சாலைகளையும் புதுப்பித்து இருப்பார்கள். கவர்னரின் செயல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., எம். பி.க்களை அவமதிப்பு செய்வது போல் உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கவர்னர் ஆய்வு மூலம் மத்திய அரசு நுழைய முயல்கிறது. அதனை முறியடிக்கத்தான் தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு முடங்கி கிடப்பதால்தான் கவர்னர் ஆய்வு செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews