செய்திகள்

ஆற்காட்டில் கத்தியால் மிரட்டிய திருடனை விரட்டியடித்த கர்ப்பிணி பெண்

Published On 2017-06-23 11:03 GMT   |   Update On 2017-06-23 11:03 GMT
ஆற்காட்டில் கத்தியால் மிரட்டிய திருடனை கர்ப்பிணி பெண் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு:

ஆற்காடு மாசாப்பேட்டை குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ஆனந்த்குமார், ஆற்காடு பஜாரில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சரளா (வயது 30), நிறைமாத கர்ப்பிணி. நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சரளாவிடம் முகவரி கேட்பது போல் பேசி உள்ளார். இதற்கு சரளா தனக்கு தெரியாது என கூறியதாக தெரிகிறது.

சிறிதுநேரம் கழித்து அந்த நபர் மீண்டும் சரளா வீட்டிற்கு வந்து, உங்கள் கணவர் ஆனந்தகுமாரை தனக்கு நன்றாக தெரியும். உங்கள் வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் நான் வந்திருந்தேன் என கூறியுள்ளார். குடும்ப உறவினருக்கு திருமணம் என கூறி தட்டில் வெத்தலை, பாக்கு, பழம், திருமண பத்திரிகை ஒன்று வைத்து கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சரளா வீட்டுக்கதவை திறந்து உள்ளே அழைத்துள்ளார். வீட்டினுள் சென்ற மர்ம நபர் திடீரென சரளாவின் கழுத்தில் கத்தியை வைத்து பணம், நகைகளை கேட்டுள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சரளா, மர்ம நபர் கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி கொண்டார்.

இதை சற்றும் எதிர்பாராத மர்மநபர் தான் வைத்திருந்த தட்டை அங்கேயே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News