செய்திகள்
ப.சிதம்பரம்

இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது ஆபத்தானது - ப.சிதம்பரம்

Published On 2019-09-18 10:58 GMT   |   Update On 2019-09-18 10:58 GMT
இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்துப் போராடும் காலம் வந்திருக்கிறது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்துப் போராடும் காலம் வந்திருக்கிறது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் உதவியுடன் டுவிட்டர் வலைதளத்தில் கூறியதாவது:

தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது.

தமிழ் இனம் வேறு, தமிழ் மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான், எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம்.

இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்.

இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. சார்பில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரசும் கலந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News