கொடைக்கானலுக்கு பைக்கில் வந்த சென்னை வாலிபர் விபத்தில் பலி
ஆத்தூர்:
சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது22). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் எட்வின் (30). அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் கொடைக்கானல் செல்ல முடிவு செய்தனர். ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்னையில் இருந்து கொடைக்கானல் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இன்று அதிகாலை சித்தையன்கோட்டை அருகே போடிகாமன்வாடி என்ற இடத்தில் சாலையோரம் இருந்த எல்லை கல் மீது பயங்கரமாக மோதினர்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது நண்பர் எட்வின் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே இடத்தில் சில நாட்களுக்கு முன்பு என்ஜினீயர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அபாய வளைவு இருப்பதை கவனிக்காமல் செல்வதால் விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே இப்பகுதியில் எச்சரிக்கை பலகை அல்லது வேகத்தடை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.