search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodaikanal"

    • மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
    • தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மலை ஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததால் பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக கொடைக்கானலுக்கு வந்தனர். மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொடைக்கானலில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் போதிய அளவு போலீசார் பணியில் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி உள்ளது. அப்பகுதியில் உள்ள டாக்சி டிரைவர்கள் தாங்களாகவே முன் வந்து போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் போதுமான போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏரியில படகு சவாரி செய்வது மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
    • மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கோடைகாலம் தொடங்கியது முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது ரம்ஜான் பண்டிகை முதல் தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் நகரின் அனைத்து இடங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. தரைப்பகுதியை போலவே கொடைக்கானலிலும் பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இருந்த போதும் ஏரியில படகு சவாரி செய்வது மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதியிலும், மலை கிராமங்களிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்த உள்ளூர் மக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் பல்வேறு வனப்பகுதியிலும், தனியார் பட்டா இடங்களிலும் கோடைகாலம் தொடங்கியது முதல் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மரங்கள், மூலிகை செடிகள் கருகி வந்தன.

    தற்போது பெய்துவரும் மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏரிச்சாலை, கலையரங்கம், மூஞ்சிக்கல், கல்லறைமேடு, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

    • தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.
    • விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செடி-கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து கருகி வருகிறது. மேலும் ஒரு சில தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் இன்று பூம்பாறை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பிரதான மலைச்சாலை ஓரங்களிலும் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மலைச்சாலையை ஒட்டி சாலையை கடக்கும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெரும்பாலும் விவசாய நிலங்களுக்கு அருகே காய்ந்த பயன்பாடற்ற நிலங்களும் உள்ளது. இப்பகுதியில் சருகுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் அங்கு வன விலங்குகள் தங்கி இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சருகுகள் எரிந்து பின்னர் மக்கிய பிறகு அந்த இடத்தில் உடனடியாக தாவரங்கள் முளைத்து வருவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதனால் காரணமாகவே விவசாயிகள் தாங்களாகவே தீ வைப்பதால் இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    • மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
    • பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதி, தனியார் வருவாய் நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து சருகுகளாக காணப்படுகிறது.

    வெப்பத்தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு அரிய வகை மரங்கள் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன. பழனி சாலையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து குறிஞ்சி நகர் பகுதியில் காட்டுத்தீ பற்றியது. மேலும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

    இந்த நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. வனப்பகுதி வழியாக சென்ற மின் வயரில் காட்டுத்தீ பற்றி சேதமடைந்தன. இதனால் கிளாவரை, பூண்டி, போளூர் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.

    காட்டுத்தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மின் வயர்களை சீரமைக்க முடியாமல் மின் ஊழியர்கள் தவித்தனர். ஓரளவு காட்டுத்தீயின் வேகம் குறைந்த பின்னர் போராடி மின் வயர்களை சீரமைத்தனர். இதனால் மலை கிராமங்களில் பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

    கொடைக்கானலில் இந்த ஆண்டு அதிக அளவு காட்டுத்தீ பற்றி வருகிறது. வனப்பகுதி மட்டுமல்லாது குடியிருப்பு பகுதியிலும் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுத்தீயை கட்டுபடுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைப்பது, நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என வன ஆர்வர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் கொடைக்கானல் வனப்பகுதி பசுமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காட்டுத்தீ ஏற்படும் இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மின் வயர்களை காட்டுத்தீயில் இருந்து பாதுகாக்க உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இளைஞர் பள்ளத்தில் விழுந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் டால்ஃபின் நோஸ் பகுதியில் நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

    இளைஞர் பள்ளத்தில் விழுந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சிறு காயங்களுடன் இளைஞரை பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    • பூ பார்ப்பதற்கு குருவி போன்ற தோற்றம்.
    • குருவி தனது தலையை ஆட்டுவது போல இருப்பது இந்த பூவின் விசேஷமாகும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற குருவி வடிவிலான மலர்கள் தற்போது அதிக அளவில் பூத்துள்ளது. மேலும் இந்த பூ பார்ப்பதற்கு குருவி போன்ற தோற்றம் கொண்டு இருப்பதால் குருவிப்பூ என (குரெட்டலேரியா) என அழைக்கபடுகின்றது.

    மேலும் இந்த பூவானது மரத்தில் மலரக்கூடியதும், மரத்தில் உள்ள கிளையில் குருவி அமர்ந்து 2 பக்கம் இறக்கையை விரித்து பறப்பது போலவும் இயற்கையாக அமைந்துள்ளது.

    மேலும் இந்த பூவின் அடி பகுதியில் மகரந்த தாள் பகுதி நூல் போன்று அமைந்துள்ளதை பிடித்து இழுக்கும் போது குருவி தனது தலையை ஆட்டுவது போல இருப்பது இந்த பூவின் விசேஷமாகும்.


    இந்த பூவின் நடுப்பகுதியில் தேன் இருந்தும், அதனை தேனீக்கள் எடுக்கமுடியாதவாறு இதழ்கள் மூடி காணப்படுவதால் தேனை எடுக்கமுடியாமல் தேனீக்கள் ஏமாற்றமடைகிறது.

    மேலும் இவ்வகையான அபூர்வ வகை குருவி மலர்கள் தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்குகின்றன. இதனையடுத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் இந்த பூக்களை கண்டு ரசிப்பதுடன் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

    • அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.
    • வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக புல்வெளிகள், செடி-கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. மேலும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

    பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் மற்றும் செடிகளை நாசம் செய்தது.

    இது குறித்து அறிந்ததும் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தற்போது வெப்ப தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத் தீ பற்றி வருகிறது.

    அன்றாட நிகழ்வு போல் தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மலைப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் மற்றும் நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், பறவை இனங்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர்.
    • பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், தேவதானப்பட்டி, பழனி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

    இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக மும்பை, டெல்லி, கேரளா, பாண்டிச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களுடன் கொடைக்கானலில் பயிலும் உள்ளூர் மாணவ-மாணவிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மற்றும் வனப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து 25 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கரடிச்சோலை, ரெட் ராக், பாம்பே சோலா, புலிச்சோலை, வட்டக்கானல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் கணகக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த கணக்கெடுப்பில் பாரடைஸ், பிளைகேட்சர், சாம்பல் நெற்றி, பச்சைபுறா, மாம்பழச்சிட்டு, நீல நிற கரும்பிடாரி, கருந்தலை மாங்குயில், கருந்தலை குயில் கீச்சான் உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டன. இன்றும் 2-வது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல அரியவகை பறவைகள் கொடைக்கானல் வனப்பகுதியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.
    • 1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, ‘தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் ‘தளபதி' வசூல் குவிக்க, ‘குணா' அப்போட்டியில் சறுக்கியது.

    அண்மையில் வெளியான மலையான திரைப்படமான `மஞ்சுமேல் பாய்ஸ்' தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் படத்தின் ஒட்டுமொத்த கதையுமே `குணா' குகையை மையப்படுத்தியதுதான். அதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் குணா திரைப்படம் பற்றியும் அப்படத்தில் வரும் குணா குகை பற்றியும் பதிவிட்டு வருகின்றனர்.

    1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, 'தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் 'தளபதி' வசூல் குவிக்க, 'குணா' அப்போட்டியில் சறுக்கியது. எனினும், 25 ஆண்டுகள் கழித்தும் குணா படத்திற்கு ரசிகர்கள் தரும் ஆதரவு அதனை 'கல்ட்' கிளாசிக் படமாக மாற்றியுள்ளது.

    'குணா' படத்தில் வரும் குகை குறித்து 1991ல் நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், "கொடைக்கானலில் இதுவரை படப்பிடிப்பே நடக்காத, மனித நடமாட்டமே அறியாத பிரதேசங்களிலெல்லாம் 'குணா' படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இதற்கான லொகேஷன் தேடி நானும் இயக்குநர் சந்தானபாரதியும் 7 கி.மீ அலைந்தும் திருப்தியான இடம் அமையவில்லை.

    'இன்னும் 1 கி.மீ போய் பார்ப்போமே' என்று போய்ப் பார்த்தால் அப்படி ஒரு அருமையான லொகேஷன் எங்களுக்குக் கிடைத்தது. அது ஒரு மலை உச்சி! அங்கே ஒரு சர்ச் செட்டை அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எங்கள் யூனிட் அங்கே போவதற்கு புதிதாக ஒரு பாதையே அமைத்தோம். படத்தின் பல காட்சிகளை எடுக்க யூனிட் முழுவதுமே 700 அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது" என்று கமல் பேசியிருப்பார்

    • பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
    • அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தைப்பூசம், குடியரசுதினம் மற்றும் வார இறுதிநாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதன்காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகளான மூஞ்சிக்கல், அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சுற்றுலா இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். இருந்தபோதும் மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், பில்லர்ராக், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.


    மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காவில் மலர்களையும் அவர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.

    2 மாறுபட்ட சீதோஷ்ண நிலையையும் சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் போதியஅளவு போலீசார் நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
    • விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த வாரம் உறை பனி காணப்பட்ட நிலையில் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது.

    மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அவர்கள் கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரியில் ஈடுபட்டும் பிரையண்ட் பூங்கா, குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். 

    • புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
    • இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நட்சத்திர விடுதிகள் மட்டுமின்றி பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சுற்றுலாவை அனுபவிக்கவும் மற்றும் புத்தாண்டை கொண்டாடவும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை மகிழ்விக்க விதவிதமான உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விதவிதமான சாக்லேட்டுகள், கேக்குகள் போன்றவையும் கொண்டாட்டத்தில் இடம்பெற உள்ளன. இது தவிர புத்தாண்டு தினத்தில் இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்களில் சாக்லேட்டுகள் தயார்செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை சாக்லேட்டுகள் தங்களது சொந்த தயாரிப்பில் தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் இந்த ஆண்டு புது புது வண்ணமயமான சாக்லேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் குறிப்பாக பாதாம் பிஸ்தா உள்ளிட்டவைகளை வைத்து சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் புது விதமாக பிரௌனி வித் சாக்லேட் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் . இதில் எந்தவித ரசாயனமும் கலக்காமல் சுத்தமாக செய்து வருவதால் சுற்றுலா பயணிகளும் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். சாக்லேட் என்றாலே குழந்தைகளை கவரும் என்பார்கள். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சாக்லேட்டுகள் வண்ணமயமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கும் இந்த வகையான சாக்லேட்களை சுற்றுலா பயணிகள் அன்பளிப்பாகவும் வழங்கி வருகின்றனர்.

    ×