தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ பரவல்
- பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
- பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் உள்ளனர்.
கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஹாசனில் தொகுதியில் ஏற்கனவே
எம்.பி.யாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா போட்டியிட்டார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம் இந்த முறை பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை- மார்பிங் செய்யப்பட்டவை. பிரஜ்வால் ரேவண்ணாவின் பெயரைக்கெடுக்கவே இத்தகைய போலி ஆபாச வீடியோக்களை பரப்பிவிட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வரும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணைய தலைவர் கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தேவகவுடா குடும்பம் இன்று நிருபர்களை சந்தித்து விளக்கம் தருவதாகவும் கூறியுள்ளது.
இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.