இஸ்ரேல் பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
- பிரதமர் மோடி இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.
- இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர், அவரது மனைவி வழியனுப்பி வைத்தனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இஸ்ரேல் சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேரில் வரவேற்றார். ஜெருசலேம் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடிக்கு நெசெட் சபாநாயகர் விருது வழங்கப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இந்த விருதை மோடிக்கு அணிவித்தார்.
ஜெருசலேமில் நடந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியில் மோடியும், நேதன்யாகுவும் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இரண்டாம் நாளான நேற்று பிரதமர் மோடி யாத் வாஷேம் பகுதியில் நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிற்பகலில் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்தித்தனர். இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 27 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மாலையில் பிரதமர் மோடி இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அதன்பின் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அவரது மனைவி சாரா ஆகியோர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மாலை 5.50 மணிக்கு இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.