இந்தியா

48 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் விமான டிக்கெட் முழுத்தொகையும் ரீபண்டு செய்ய வேண்டும்- மத்திய அரசு உத்தரவு

Published On 2026-02-27 07:29 IST   |   Update On 2026-02-27 07:29:00 IST
  • டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் இருந்து 14 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுத்தாக வேண்டும்.
  • வருகிற மார்ச் 26-ந்தேதி முதல் இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

விமான டிக்கெட் ரத்து விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு செய்த 48 மணிநேரத்துக்குள் ரத்து செய்தால் விமான டிக்கெட் முழுத்தொகையும் பயணிகளுக்கு வழங்கப்படவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பின்னர் அவற்றை ரத்து செய்யும்போது அவற்றுக்கான 'ரீபண்டு' பணம் மிகவும் குறைவான அளவிலேயே வழங்கப்பட்டு வந்தது.

பயணிகள் தலையில் இழப்பை சரிகட்ட விமான நிறுவனங்கள் மற்றும் முன்பதிவு ஏஜென்சிகளிடையே போட்டாபோட்டி நடந்தது. இதனால் பயணிகள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக கடந்த டிசம்பரில் இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து டிக்கெட் ரீபண்டுகளில் பெரிய மோசடி நடந்தது. இதனால் இந்த பிரச்சினை பூதாக்கரமாக வெடித்தது.

இந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த விதிமுறையில் இந்திய விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விமான பயண டிக்கெட் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டாலும், பயணிகளுக்கு முழுத்தொகையையும் திரும்ப அளிக்கும் பொறுப்பையும் விமான நிறுவனங்களே ஏற்க வேண்டும்.

டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் இருந்து 14 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுத்தாக வேண்டும். மேலும் 24 மணிநேரத்துக்குள் டிக்கெட்டில் திருத்தம் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வருகிற மார்ச் 26-ந்தேதி முதல் இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News