இந்தியா

மோடியின் வெறுப்பு பேச்சை விமர்சித்த பாஜக சிறுபான்மையினர் அணி முன்னாள் நிர்வாகி கைது

Published On 2024-04-28 09:08 GMT   |   Update On 2024-04-28 09:08 GMT
  • ஒரு முஸ்லீம் என்பதால், பிரதமர் கூறியதில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். நான் பேசுவதற்கு கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயப்பட மாட்டேன்
  • இந்த தேர்தலில், பிரதமரின் இந்தப் பேச்சால் மாநிலத்தில் 4 தொகுதிகளில் பெரும் பின்னடைவு ஏற்படும்

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, "இந்தியாவில் இந்துக்களின் சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு பிரித்துக் கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய நாட்டின் பிரதமர் இப்படி மத ரீதியாக பேசுவது தவறு என்று எதிர்க்கட்சிகள் இதற்கு கணடனம் தெரிவித்தனர்.

அப்போது, ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் உஸ்மான் கனி, பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு, பாஜகவுக்கு வாக்கு கேட்க முஸ்லீம்களிடம் செல்லும்போது, பிரதமர் கூறிய கருத்துகளைப் பற்றி மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஒரு முஸ்லீம் என்பதால், பிரதமர் கூறியதில் நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். நான் பேசுவதற்கு கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தாலும் பயப்பட மாட்டேன். மேலும், பாஜக மீது ஜாட் சமூகத்தினரும் கடுமையான கோபத்தில் இருக்கிறர்கள். அதனால், இந்த தேர்தலில், பிரதமரின் இந்தப் பேச்சால் மாநிலத்தில் 4 தொகுதிகளில் பெரும் பின்னடைவு ஏற்படும்" என தெரிவித்தார்.

இதனையடுத்து, ராஜஸ்தான் பாஜக தலைமை, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய சிறுபான்மையினர் அணி தலைவர் உஸ்மான் கனியை முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், முன்னாள் பாஜக சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் உஸ்மான் கனி கைது செய்யப்பட்டுள்ளார். காவல்நிலையத்தில் புகுந்து அமைதியை குலைத்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News