இந்தியா

சபரிமலை கோவில் தங்கம் திருட்டு விவகாரத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வரவேண்டும்- நடிகர் ஜெயராம்

Published On 2026-02-17 15:06 IST   |   Update On 2026-02-17 15:06:00 IST
  • எத்தனை கோவில்கள் இருந்தாலும், சபரிமலை ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான இடம்.
  • சில விஷயங்களைப் பற்றி விசாரிக்க என்னை அழைத்தார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்க முலாம்கள் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, தங்கம் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கோவிலின் முன்னாள் தேவசம்போர்டு அதிகாரிகள், பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் போற்றி, கர்நாடக நகை வியாபாரி கோவர்த்தன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் நடிகர் ஜெயராமிடமும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற துவார பாலகர் சிலைக்கு சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் ஜெயராம் கலந்து கொண்டதாகவும், அவரது வீட்டிற்கு துவார பாலகர் சிலைகளை கொண்டு சென்று வழிபாடு செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் ஐஸ்வர்யம் பொங்கும் என கூறப்பட்டதால் அந்த வழிபாட்டை செய்ததாகவும், தங்கம் திருட்டுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜெயராம் கூறினார். இதற்கிடையில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கருப்பு பணம் புழக்கம் இருந்ததா? என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. அவர்கள் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு, பிப்ரவரி 17-ந் தேதி (இன்று) கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

இதனை தொடர்ந்து இன்று நடிகர் ஜெயராம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

"எத்தனை கோவில்கள் இருந்தாலும், சபரிமலை ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான இடம். இங்கு ஏதேனும் கொள்ளை நடந்திருந்தால், அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது ஒவ்வொரு மலையாளியின் பொறுப்பாகும். கடந்த 38 ஆண்டுகளாக, கேரளாவில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நான் முதலில் அழைக்கப்பட்டிருக்கிறேன். நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்படித்தான் இங்கும் சென்றேன்."

நான் 50 வருடங்களாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன், உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும். சில விஷயங்களைப் பற்றி விசாரிக்க என்னை அழைத்தார்கள். அதன்படி நான் ஆஜராகி உள்ளேன். எல்லாம் அழகாக முடிவடையட்டும். சிக்கிக் கொள்ள வேண்டியவர்கள் சிக்கிக் கொள்ளட்டும். ஐயப்பன் அவர்களை சும்மா விடுவாரா. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.

Tags:    

Similar News