செய்திகள்

பா.ஜனதா தலைவர்களின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி- நாராயணசாமி

Published On 2018-12-11 12:04 GMT   |   Update On 2018-12-11 12:04 GMT
5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா தலைவர்களின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார். #ElectionResults #Narayanasamy
புதுச்சேரி:

5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெற்றியை புதுவை மாநில காங்கிரசார் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் ராஜா தியேட்டர் சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

இந்த வெற்றி கொண்டாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் இளையராஜா, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான் மற்றும் திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.

பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபரிடம் கூறிதாவது:-


5 மாநில தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, இளம் தலைவர் ராகுல்காந்திக்கு பெருமை சேர்ப்பதாகும்.

கடந்த 4½ ஆண்டு ஆட்சி கால மத்திய பா.ஜனதா ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலின்போது பா.ஜனதா கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனையெல்லாம் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி மக்களிடம் விளக்கி கூறினார்.

இந்த தேர்தல் வெற்றி 2019-ல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம். ராகுல்காந்தி தலைமையில் மதசார்பற்ற அணியின் ஆட்சி அமையும். பா.ஜனதாவின் அஸ்தமனகாலம். பா.ஜனதா தலைவர்களின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.  #ElectionResults #Narayanasamy
Tags:    

Similar News