செய்திகள்

மீண்டும் வெள்ளப்பெருக்கு: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2017-10-06 10:56 GMT   |   Update On 2017-10-06 10:56 GMT
கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கி.மீ தூரத்தில் உள்ளது கும்பக்கரை அருவி. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானல் பகுதியில் மழை பெய்தால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் பெய்த மழையினால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மானாவாரி பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சோளம், கம்பு, எள் உள்ளிட்டவை தற்போது பெய்த மழையினால் செழித்து வளர்ந்துள்ளதால் ஓரிரு வாரத்தில் அறுவடைக்கு தயாராகும் என அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News