என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள்"

    • ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் உறவினர் இல்லங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பொழுதை போக்குவது வழக்கம்.

    பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.

    மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு வகையான பூக்களையும் கண்டு ரசித்ததோடு அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    அங்குள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.

    இதேபோன்று ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

    ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, பைக்கார படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, ஊட்டி படகு இல்லம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணும் பொங்கலை தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை மாநகரில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள 23 வகையான தோட்டங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும் கண்டு ரசித்தனர். அத்துடன் அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    செம்மொழி பூங்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    பொள்ளாச்சி ஆழியார் அணை, ஆழியார் அணை பூங்காவிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, அதன் அருகே உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாக விளையாடி விடுமுறையை கழித்தனர்.

    இதேபோன்று கோவை குற்றாலம், குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, டாப்சிலிப் யானைகள் முகாம், கோவை மாநகரில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா, உக்கடம் பெரிய குளம், சிறுவர் பூங்கா, வாலாங்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.

    காணும் பொங்கலையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது

    • வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இது தவிர கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நீண்ட நெடிய கடற்கரை, தமிழகத்தின் உயரமான நாகை கலங்கரை விளக்கம் ஆகியவையும் நாகையில் உள்ளன.

    இதனால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நாகை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் சுற்றுலா தலங்களை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி உள்ளது. அதற்காகவே, அந்த மாநிலங்களுக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர்.

    இதைப்போல சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இதற்காக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வேளாங்கண்ணியை சுற்றி சுமார் 25 கிலோமீட்டர் வான் பரப்பளவில் ஹெலிகாப்டர் பறக்கும். இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 6 பயணிகள் பயணிக்கலாம்.

    ஒரு பயணிக்கு ரூ.6000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.

    வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, சென்னை விமான நிலையத்துக்கும் ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சுற்றுலா, பொழுதுபோக்கை தாண்டி இயற்கை பேரிடர் நிகழும் போதும், அவசர காலங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும் வசதியுடன் வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள், ராணுவத்தினர் பயன்படுத்தும் விதமாக இந்த ஹெலிபேடு அமைக்கப்படுகிறது.

    இந்த ஹெலிகாப்டர் சேவை குறித்து ஜெயம் ஏவியேசன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது நாகை மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இந்த ஹெலிகாப்டர் சேவை இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள்.

    புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டன.

    தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுப்பதால் நகர வீதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வலம் வருகிறார்கள். இதனால் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    நாளை மறுநாள் நள்ளிரவு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு, வருகிற 31-ந் தேதி இரவு கடற்கரை சாலை மற்றும் நகர மைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போக்குவரத்து ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 31-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் பகுதியின் உள்ளே வாகனங் கள் செல்ல அனுமதியில்லை.

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரி கடற்கரை நோக்கி வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை தற்காலிக வாகன நிறுத்து மிடங்களில் நிறுத்திவிட்டு, அங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கட்டணமில்லா பேருந்து சேவைகளை பயன்படுத்தலாம்.

    கடற்கரைக்கு செல்ல 30 தற்காலிக சிறப்பு கட்டணமில்லா பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சுற்றுலாப் பயணிகள் எளிதில் வழிகாணும் வகையில், சுமார் 400 போக்குவரத்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், முக்கிய சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இங்கு ஆண்டின் அனைத்து மாதத்திலும் தண்ணீர் விழும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.

    இதனிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வந்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் அங்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புறநகர் பகுதிகளில் மலை ஓய்ந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்ததால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து நீர்வரத்து குறையாமல் இருந்து வந்தது.

    இதன் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியிலும் மழை குறைந்து விட்டதன் காரணமாக இன்று அருவியில் நீர்வரத்து குறைந்து குளிப்பதற்கு ஏற்ற சூழல் உருவானது.

    இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே நேரம் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    • நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    • அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆனைமலை:

    கோவை மாவட்டம் ஆழியார் அருகே கவியருவி உள்ளது.

    இந்த அருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    விடுமுறை நாட்களில் கவியருவியில் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் குளித்து மகிழ்ந்து செல்வர்.

    இந்த நிலையில் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல், காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் தண்ணீர் செந்நிறமாக ஆர்ப்பரித்து கொட்டியது.

    தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

    நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். ஆங்காங்கே மலைகளில் இருந்து அருவி போல் நீர் வந்து கொண்டிருப்பதால் அவற்றுக்கு அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருமூர்த்திமலை மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

    • உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
    • வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுவது வழக்கம். குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி அதிகளவில் காணப்படும்.

    இந்த ஆண்டு 40 நாட்கள் கழித்து தாமதமாக கடந்த 12-ந்தேதி உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து சில நாட்களாகவே ஊட்டி, குன்னூரில் உறைபனி கொட்டி வருகிறது.

    இன்றும் குன்னூர், ஊட்டி, மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. குறிப்பாக தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் அதிகளவில் உறைபனி கொட்டியது.

    இன்று தலைக்குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 4.3 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது.

    கொட்டும் உறைபனியால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, படகு இல்லம், பைக்காரா, குதிரை பந்தய மைதானம், குன்னூர் ஜிம்கானா மைதானம் உள்ளிட்ட புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளித்தது. அங்குள்ள செடி, கொடிகள் மீது பனி படர்ந்து காணப்பட்டது.

    இதுதவிர சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், ஆட்டோ மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களிலும் உறைபனி காணப்பட்டது. வாகன ஓட்டிகள் காலையில் உறைபனியை அகற்றி வண்டியை எடுப்பதற்குள் சிரமப்பட்டனர்.

    குன்னூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் மீதும் வெள்ளை கம்பளம் விரித்தது போன்று உறைபனி காணப்பட்டது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக அதிகாலையில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு கூட பொதுமக்கள் அதிகாலையில் வெளியில் வர முடியவில்லை.

    இதனால் ஊட்டி, குன்னூரில் உள்ள முக்கிய பஜார் பகுதிகளில் காலை நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு செல்வதை காண முடிந்தது. வெளியில் நடமாடிய ஒரு சிலரும் போர்வை, கம்பளி ஆடை, சுவர்ட்டர், சால்வை உள்ளிட்டவற்றை அணிந்தபடி சென்றனர்.

    குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள பெரும்பாலானோர் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் குளிர் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் தேயிலை செடிகள், மற்றும் மேரக்காய் பந்தல்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் உறைபனி தாக்கம் காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்களும் உறைபனி காரணமாக வெளியில் வரமுடியாமல் விடுதிகளுக்குள்ளேயே முடங்கினர். உறைபனி குறைந்த பிறகே வெளியில் சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.

    • நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவை முக்கிய சுற்றுலாத்தலங்களாக உள்ளது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் அருவியில் குளிக்க வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவிக்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    இந்நிலையில் இன்று மழைப்பொழிவு குறைந்து பஞ்சலிங்க அருவியின் நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். 

    • மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மழை குறைந்து விட்டதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 134½ அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 137½ அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1308 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதிகளில் மழை பெய்யவில்லை. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 107½ அடியாக உள்ளது.

    கடந்த ஆண்டு இதேநாளில் மணிமுத்தாறு அணையில் 80 அடியும், பாபநாசத்தில் 88½ அடியும், சேர்வலாறு அணையில் 88 அடியும் நீர் இருப்பு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே கனமழை கொட்டித்தீர்த்ததால் அணைகள் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டிடும் நிலையில் இருக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை சுற்றுவட்டார எஸ்டேட்டுகளில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்துவிட்ட நிலையிலும் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே இருக்கிறது.

    இதனால் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவியினை பார்வையிடுவதற்கு மட்டும் விரும்புபவர்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

    இதேபோல் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கிறது. இதனால் கேரளாவில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மழை இல்லை. இன்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாத நிலையில், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், சாத்தான்குளம், சூரன்குடி சுற்றுவட்டாரங்களில் சாரல் மழை பெய்தது. இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.
    • ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தன.

    இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் கன மழையின் காரணமாக சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது வரை தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.

    ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    • நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும்

    இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஈரான் இந்த சலுகையை வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த சலுகையை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது.

    வரும் நவம்பர் 22 முதல், சாதாரண பாஸ்போர்ட் கொண்ட இந்திய பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல ஈரான் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் நிலையில் இந்த விசா ரத்து சிரமத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. 

    • குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
    • வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    ஊட்டி:

    நீலகிரி மலைப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் புல்வெளி பகுதிகளில் காட்டு டேலியா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துகுலுங்கி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.

    சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரும் இந்த டேலியா மலர்கள் ஊட்டி சாலையோரங்கள், கேத்தரின் நீர்வீழ்ச்சி சாலைகள், மலைச்சரிவுகள் மற்றும் தொட்டபெட்டா மலைச்சாலைகளில் பூத்து பரவி உள்ளது.

    மலையின் குளிர்காற்றில் சூரியஒளி படும்போது இந்த காட்டு மலர்கள் ஆடும் தோற்றம், பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற அழகிய இயற்கை காட்சியாக அமைந்து உள்ளது.

    ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், "இத்தனை வண்ண மலர்கள் இயற்கையாகவே இங்கு மலர்கின்றன என்பது ஆச்சரியம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மலையின் இயற்கை சமநிலையை பேணுவதில் இத்தகைய காட்டு மலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை பறிப்பது அல்லது சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    நீலகிரி மலைப்பகுதிகளில் பசுமையும் மலர்களும் இணையும் இந்த காலத்தில் ஊட்டியில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகின் சிறந்த அனுபவமாக திகழ்கின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், டைத்தோனியா டைவர்சிபோலியா எனப்படும் மெக்சிகன் காட்டு சூரியகாந்தி விதைகள், குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.

    வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசம் இல்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சிதரும் வண்ணம் கொண்டிருப்பதால், இந்த பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக சூரியகாந்தி செடிகள் செழுமையாக வளர்ந்து இருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கி இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    ×