என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள்"

    • கவியருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து பாறை மட்டுமே தெரிகிறது.
    • தண்ணீர் குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியார் அடுத்து கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

    இங்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கவியருவியில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். குறிப்பாக வால்பாறைக்கு சுற்றுலா செல்லக்கூடியவர்கள் கீழே உள்ள ஆழியார் அணை, கவியருவியில் குளித்து விட்டே மலைப்பகுதியான வால்பாறைக்கு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் வறட்சி நிலவுகிறது.

    கவியருவிக்கும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. தண்ணீர் குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்றனர்.

    இந்த நிலையில் தண்ணீர் வரத்து குறைவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று முதல் ஆழியார் கவியருவி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    தற்போது கவியருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து பாறை மட்டுமே தெரிகிறது. இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அருவியில் உடைந்து காணப்படும் தடுப்பு கம்பிகள், மரக்கட்டைகளை அகற்றி விட்டு, புதிதாக கம்பி அமைக்கப்படும். மீண்டும் மழை பெய்து நீர்வரத்து தொடங்கியவுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • பெருஞ்சானி அணை நீர்மட்டம் 12.50 அடியாக உள்ளது. அணைக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அணையின் நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, பொய்கை அணைகளை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கன்னப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    தற்பொழுது கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில பகுதிகளில் அறுவடைக்கு இன்னும் சில நாட்கள் ஆகும். எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மே மாதத்தில் கன்னிப்பூ சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்குவார்கள். அதற்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து காணப்படுகிறது.

    அணைகளின் நீர்மட்டம் சரிந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 20.32 அடியாக உள்ளது. அணைக்கு 342 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 402 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 12.50 அடியாக உள்ளது. அணைக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 4.66 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 4.75 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 17.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 16.98 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் கிடுகிடு என சரிந்தது.

    அணையின் நீர்மட்டம் இன்று காலை 4.20 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியலும் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவில் லேசான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். 

    • இந்த ரெயிலில் பயணம் செய்ய உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், கேத்தியிலிருந்து ஊட்டிக்கும் மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7.10 மணிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து குன்னூர் வரை பசுமையான காடுகள், அருவிகள், வனவிலங்குகள் நடமாட்டம், பாறையை குடைந்து உள்ளே செல்லும் குகைகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    இதனால் இந்த ரெயிலில் பயணம் செய்ய உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் இந்த ரெயிலில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் கூடுதலாக மலை ரெயில் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் கூடுதலாக மலை ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி வருகிற 27-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு செல்லும் வகையில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், கேத்தியிலிருந்து ஊட்டிக்கும் மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என எச்சரிக்கை.
    • வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் மாயார் பகுதிகளில் இலந்தை பழ சீசன் தொடங்கியுள்ளதால், கரடிகள் சாலையோர மரங்களில் ஏறி பழங்களை உண்ணும் காட்சிகள் அடிக்கடி காணப்பட்டு வருகின்றன.

    முதுமலை புலிகள் காப்பகம் அருகிலுள்ள வனப்பகுதிகளில் உள்ள இலந்தை மரங்களில் பழங்கள் பழுத்து வரும் நிலையில், அவற்றை உண்பதற்காக கரடிகள் அதிக அளவில் அப்பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.

    குறிப்பாக அதிகாலை மற்றும் பகல் நேரங்களில் கரடிகள் மரங்களில் ஏறி இலந்தை பழங்களை உண்டு செல்லும் காட்சிகள் சாலையோரங்களில் தென்படுகின்றன.

    இதனால் மசினகுடி – மாயார் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் கரடிகளை வேடிக்கை பார்க்கவும், புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கவும் வாகனங்களை நிறுத்தி பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்பதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரடிகள் எந்த நேரத்திலும் சாலையை கடந்து செல்லக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், சாலையோரங்களில் கரடிகள் காணப்பட்டால், வாகனங்களை நிறுத்தி அருகில் சென்று பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என்றும், இடையூறு ஏற்படுத்தாமல் உடனே அந்த இடத்தை கடந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் கரடிகளுக்கு அருகில் சென்று தொந்தரவு செய்தால் அல்லது வாகனங்களை நிறுத்தி கூட்டம் உருவாக்கினால், அது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் எச்சரிக்கையை மீறி விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
    • ஏப்ரல் முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளிவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டின் அனைத்து மாதங்களும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே காணப்படும். குறிப்பாக கோடை காலங்களிலும், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    கொடைக்கானலில் தற்போது பனி சீசன் நிறைவடைந்து கோடைசீசன் தொடங்க உள்ளது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளிகளில் தேர்வுகள் தொடங்கி இருப்பதால் கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    இதனால் குணாகுகை, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நட்சத்திர ஏரியிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் ஒருசில படகுகளே இயக்கப்படுகின்றன. அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில் அடுத்தடுத்து மற்ற பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் ஏப்ரல் முதல் வாரம் வரை சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளிவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கடை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். 

    • ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும்.
    • ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியின் அடையாளமாக திகழும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தற்போது வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் முகாமிட்டு வருகின்றன.

    இந்த காட்சிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்களின் காலை நேர ரம்மியத்துக்கும் ஒரு அபூர்வ காட்சியை வழங்குகிறது. ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் வெண்ணிற மலர்கள் போல பரவி நிற்கும் வெள்ளை நாரைகள், கண்களை ஈர்க்கும் சிவப்பு நிற கால்களுடன் உலா வருகின்றன. அந்த பகுதியில் இயற்கையாக உருவான சதுப்பு நிலங்களும், ஈர புல்வெளிகளும் அவைகளின் வாழ்வாதார முகாமாக மாறியுள்ளன.

    மேலும் கூட்டமாக இரை தேடும் நாரைகள் தங்களுக்கே உரிய ஒலிகளால் ஒன்றோடு ஒன்று உரையாடும் காட்சி, பார்வையாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து வரும் இந்த நாரைகள் அனைத்தும் வெள்ளை நிற இனத்தை சேர்ந்தவையே.

    இமயமலை, விந்திய மலைத்தொடர் மற்றும் சத்பூரா மலைத்தொடர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு பயணித்து, கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வந்தடைகின்றன.

    ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் இந்த நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும். இந்த காலகட்டத்தில் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. பின்னர் அவை மீண்டும் தங்கள் பழைய வாழிடங்களை நோக்கி பறந்து செல்கின்றன.

    ஊட்டி ரேஸ்கோர்ஸ் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 'கிக்கியூ' புல்வெளி பகுதிகளில் புழு-பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களை உணவாக்கி கொள்ளும் இந்த நாரைகள், சதுப்பு நிலங்களில் மெதுவாக சுழன்று, தரையை உற்று நோக்கி உணவுத் தேடும் காட்சி, இயற்கையின் ஒழுங்கை உணர்த்துவதாக அமைந்து உள்ளது.

    "சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமா இந்த ஊட்டி சொந்தம்? நாங்களும் சுற்றுலாவாகத்தான் இங்கு வந்து தேனிலவு கொண்டாடுகிறோம்" என்று சொல்லாமல் சொல்லும் வெள்ளை நாரைகள், அதிகாலை நேரங்களை சினேகமாக்கும் இயற்கை நண்பர்களாக உள்ளன.

    நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் களைகட்டி இருக்கும். இந்த நிலையில் ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.

    ஊட்டி சுற்றுலா பயணிகளின் கேமராவில் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் மனங்களிலும், இந்த பருவகால பறவைகளின் பரவச முகாமிடல் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன. 

    • நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வந்ததால் ஐந்தருவி, மெயின் அருவி வறண்டு காணப்பட்ட நிலையில் நேற்று ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. 2 அருவிகளிலும் பெரிய அளவில் தண்ணீர் விழவில்லை என்றாலும், பழைய குற்றால அருவியில் மட்டும் தண்ணீர் அதிகரித்து விழுந்தது.

    சில மாதங்களுக்கு முன்பு கனமழை காரணமாக பழைய குற்றால அருவி பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனால் அங்கு 3 மாதங்களுக்கு மேலாக சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.

    தற்போது கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் நீர் விழுந்து வருவதால் விரைந்து சீரமைப்பு பணிகளை முடித்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது . 

    • மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
    • பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

    பெரும்பாறை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளில் பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்து கவர்ந்திழுப்பது வழக்கம். அதன்படி, தற்போது கொடைக்கானல் நகர்ப்பகுதி, மலைப்பாதைகள் மற்றும் கிராமங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

    குறிப்பாக கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி. பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களுக்குள் யாரும் செல்லாமல் இருக்க வேலிக்காக சங்கு பூச்செடிகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். அதேபோல் மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது அந்த பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை சாலையோரங்களில் மின் விளக்குகளை தோரணங்களாக கட்டிவிடப்பட்டது போன்று சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன. இதனால் அவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், தங்களது கேமரா, செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். 

    • வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது.

    வால்பாறை:

    கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று வால்பாறை.

    இங்குள்ள தேயிலை தோட்டங்கள், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

    அரசு விடுமுறை தினங்கள், வாரவிடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். அவ்வாறு வருபவர்கள் தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்தும், வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு உள்ளிட்டவற்றையும் பார்த்து செல்கின்றனர்.

    வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, சின்னக்கல்லாறு, இறைச்சிப்பாறை அருவி, அணைகளிலும் நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்த அளவே இருந்ததை பார்க்க முடிந்தது.

    • கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.
    • குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சுனன் தபசு பின்புறம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாகத்தில் பல்வேறு குடவரை சிற்பத்தூண்கள், பாறை வடிவிலான குளியல் தொட்டிகள் என பல்லவர் காலத்து சிலைகள் கற்களுடன் கூடிய மலைப்பகுதி உள்ளது. இங்கு மயில், குரங்கு, கீரிப்பிள்ளை, உடும்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது.

    இவை சில நேரங்களில் உணவுக்காக வெளியே ஊருக்குள் வரும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை தின்னும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பது வழக்கம். தற்போது குரங்குகள் நகரப்பகுதியில் உள்ள கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் அவர்கள் வனத்துறையிடம் கூறுங்கள் என சொல்வதாகவும், வனத்துறையினர் திருக்கழுக்குன்றம் அலுவலகத்தில் இருந்து மாமல்லபுரம் வந்து இவைகளை கண்காணிப்பது இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதனால் வனத்துறை அதிகாரிகள் மாமல்லபுரம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாக மலைப்பகுதியை கண்காணித்து அங்கிருந்து குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் உறவினர் இல்லங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பொழுதை போக்குவது வழக்கம்.

    பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.

    மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு வகையான பூக்களையும் கண்டு ரசித்ததோடு அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    அங்குள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.

    இதேபோன்று ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

    ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, பைக்கார படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, ஊட்டி படகு இல்லம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணும் பொங்கலை தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை மாநகரில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள 23 வகையான தோட்டங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும் கண்டு ரசித்தனர். அத்துடன் அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    செம்மொழி பூங்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    பொள்ளாச்சி ஆழியார் அணை, ஆழியார் அணை பூங்காவிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, அதன் அருகே உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாக விளையாடி விடுமுறையை கழித்தனர்.

    இதேபோன்று கோவை குற்றாலம், குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, டாப்சிலிப் யானைகள் முகாம், கோவை மாநகரில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா, உக்கடம் பெரிய குளம், சிறுவர் பூங்கா, வாலாங்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.

    காணும் பொங்கலையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது

    இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது

    ×