என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள்
- கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.
- குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சுனன் தபசு பின்புறம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாகத்தில் பல்வேறு குடவரை சிற்பத்தூண்கள், பாறை வடிவிலான குளியல் தொட்டிகள் என பல்லவர் காலத்து சிலைகள் கற்களுடன் கூடிய மலைப்பகுதி உள்ளது. இங்கு மயில், குரங்கு, கீரிப்பிள்ளை, உடும்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது.
இவை சில நேரங்களில் உணவுக்காக வெளியே ஊருக்குள் வரும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை தின்னும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பது வழக்கம். தற்போது குரங்குகள் நகரப்பகுதியில் உள்ள கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் அவர்கள் வனத்துறையிடம் கூறுங்கள் என சொல்வதாகவும், வனத்துறையினர் திருக்கழுக்குன்றம் அலுவலகத்தில் இருந்து மாமல்லபுரம் வந்து இவைகளை கண்காணிப்பது இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் வனத்துறை அதிகாரிகள் மாமல்லபுரம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாக மலைப்பகுதியை கண்காணித்து அங்கிருந்து குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.






