சினிமா

ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு

Published On 2017-06-07 16:24 GMT   |   Update On 2017-06-07 16:24 GMT
ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாணயாகே தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கடந்த மாதம் இலவச வீடுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை வழங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு லைகா நிறுவனத்தின் தலைவரும், ரஜினியின் `2.0' படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்தவருமான சுபாஷ்கரன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து அவரது அழைப்பை ஏற்று ரஜினியும் இலங்கை செல்வதாக இருந்தது.

ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் ரஜினி இலங்கைக்கு செல்லக் கூடாது என்று வலியுறுத்தியதை அடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். மேலும் தான் ஒரு நடிகன். எனது முடிவுகளை, பயணங்களை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.



இந்நிலையில், இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாணயாகே ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ரஜினிகாந்த் பிரபலமானவரே என்று குறிப்பிட்ட ரவி, இலங்கையில் ரஜினிக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றார். இலங்கை தரப்பில் அவருக்கு எதிராக எந்த எதிர்ப்பும் கிடையாது. ரஜினி ஆசைப்பட்டால் இலங்கை வரலாம் என்று கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News