search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது- டிடிவி தினகரன்
    X

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது- டிடிவி தினகரன்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ADMK #BJP
    திருச்சி:

    திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். தே.மு.தி.க. , பா.ம.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் பேசி கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது கூற மாட்டேன்.

    பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூறமுடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

    தி.மு.க., மெகா கூட்டணி, எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது.

    திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க.ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி இப்போதும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.


    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நாடகம் ஆடுகிறார். தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால்அங்கே பா.ஜனதா மந்திரிகளுடன் ,எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். அவருக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர் செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக்கி எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார். அந்த விரக்தியில் தம்பிதுரை பலவாறு பேசி வருகிறார்.

    கொடநாடு விவகாரத்தில் உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த வி‌ஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #BJP
    Next Story
    ×