search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண மதிப்பிழப்பு"

    • வருமானவரி வசூலை அதிகரித்தது.
    • பொருளாதாரத்தை சுத்தப்படுத்தியது.

    புதுடெல்லி :

    பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பண மதிப்பிழப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. தேச நலனுக்காக எடுத்த அம்முடிவு செல்லும் என்று கூறியுள்ளது.

    ராகுல்காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்தார். வெளிநாடுகளில் கூட குறை கூறினார். அவர் இப்போதாவது வருத்தம் தெரிவிப்பாரா?

    ப.சிதம்பரம் போன்றவர்கள், பெரும்பான்மை தீர்ப்பை கண்டுகொள்ளாமல், ஒரே ஒரு நீதிபதி அதிருப்தி தெரிவித்ததை முன்னிலைப்படுத்துகிறார்கள். அந்த நீதிபதி கூட 'இது நல்ல நோக்கம் கொண்ட நடவடிக்கை' என்றுதான் கூறி இருக்கிறார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு நிதியுதவியை நிறுத்தியதன் மூலம் பயங்கரவாதத்துக்கு சம்மட்டி அடியாக அமைந்தது. வருமானவரி வசூலை அதிகரித்தது. பொருளாதாரத்தை சுத்தப்படுத்தியது. மின்னணு பண பரிமாற்றத்தில் இந்தியாவை முன்னணி நாடாக்கியது.

    முறையற்ற பொருளாதாரத்தின் பங்கை 52 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முறையற்ற பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து விட்டதாக சொல்வது தவறு. முடிவு எடுக்கும் பணியை மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தனது விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

    ஆனால், பண மதிப்பிழப்பின் விளைவுகள் குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை. பண மதிப்பிழப்பின் நோக்கங்கள் என்று கூறப்பட்ட எதுவுமே நிறைவேறவில்லை. உதாரணமாக, கருப்பு பண ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, கள்ளநோட்டு ஒழிப்பு என எதுவுமே நிறைவேறவில்லை.

    அதற்கு மாறாக, லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்களை அழித்தது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும், அமைப்புசாரா தொழில்களையும் அழித்தது. அதன் விளைவுகளை இன்றும் பாா்த்துக்கொண்டிருக்கிறோம்.

    இதற்கு யாராவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், இந்த 'துக்ளக்' முடிவை எடுத்த பிரதமர் மோடிதான்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-

    இந்த தீர்ப்பு, மத்திய அரசின் மணிக்கட்டில் விழுந்த அடி. பண மதிப்பிழப்பு முடிவை பெரும்பான்மை நீதிபதிகள் உறுதி செய்யவும் இல்லை. பண மதிப்பிழப்பின் நோக்கங்கள் நிறைவேறி விட்டதாகவும் கூறவில்லை.

    அந்த முடிவின் சட்டவிரோதத்தையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் பிரபலமான அதிருப்தி தீர்ப்புகளில் இது முக்கிய இடத்தை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, பவன் கேரா ஆகியோரும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ளனர்.

    • பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.
    • 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின.

    புதுடெல்லி :

    கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, கள்ள நோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், அதன் பிறகும் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் மொத்தம் ரூ.245 கோடியே 33 லட்சம் முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

    அதிகபட்சமாக, 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின. 2017-ம் ஆண்டு ரூ.55 கோடி மதிப்புள்ள நோட்டுகளும், 2021-ம் ஆண்டு ரூ.20 கோடியே 39 லட்சம் மதிப்பு நோட்டுகளும், 2016-ம் ஆண்டு ரூ.15 கோடியே 92 லட்சம் மதிப்பு நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதுபோல், ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கைப்படி, 2021-2022 நிதிஆண்டில், வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை இருமடங்காக, அதாவது 79 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.

    2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 604 ஆகும். இது, முந்தைய நிதிஆண்டை விட 54 சதவீதம் அதிகம். அனைத்து மதிப்புள்ள கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதிஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரமாக இருந்தது.

    2019-2020 நிதிஆண்டில், 2 லட்சத்து 96 ஆயிரத்து 695 கள்ள நோட்டுகள் பிடிபட்டன.

    ரூ.10, ரூ.20, ரூ.200, ரூ.500, ரூ.2,000 என பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை.
    • ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரே ஒரு அம்சத்தில் சற்று முரண்பாடான கருத்தை தெரிவித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு இருப்பதாக அவர் கூறினார். அதன்படி, அப்போது இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

    நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்றனர்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்தநிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 58 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

    அந்த 58 பேரின் மனுக்களை நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியின்(ஆர்.பி.ஐ.) பரிந்துரை அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என வாதிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

    வரி ஏய்ப்பைத் தடுப்பது உள்ளிட்ட பலகட்ட நன்மைகளைக் கருத்தில்கொண்டு, விரிவான ஆலோசனைக்குப் பிறகே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதை ரத்து செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அந்த நடவடிக்கையால் ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் நாளடைவில் அவை சரி செய்யப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கடந்த மாதம் 7-ந் தேதி உத்தரவிட்டனர். வழக்கு மீதான தீர்ப்பையும் ஒத்தி வைத்தனர்.

    இந்த நிலையில், நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நாளை மறுநாள் (4-ந் தேதி) பணிஓய்வு பெற இருப்பதால் பண மதிப்பிழப்பு வழக்கில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வெளியிட சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி இன்று பகல் 11 மணிக்கு அந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

    நீதிபதிகளின் ஒட்டுமொத்த கருத்துக்கள் அடங்கிய தீர்ப்பை நீதிபதி கவாய் வாசித்தார். தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-

    மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவாகும். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திரும்ப பெறுங்கள் என்று இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது.

    மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை. ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி உரிய முறையில்தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசை குறை கூற இயலாது.

    மத்திய அரசின் நடவடிக்கை உரிய முறையில் இருப்பதால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த 58 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும். மத்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது.

    இந்த நடவடிக்கையில் உரிய இலக்கு எட்டப்பட்டதா என்பதை விசாரிப்பது பொருத்தமானது அல்ல. அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி தருகிறது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை விசயத்தில் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படமாட்டாது.

    மத்திய அரசு பணமதிப் பிழப்பு நடவடிக்கையை ஏனோதானோவென்று உடனடியாக திடீரென்று எடுக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவுடன் சுமார் 6 மாதங்கள் மத்திய அரசு ஆய்வு செய்திருக்கிறது.

    போதுமான ஆய்வுகளை செய்த பிறகுதான் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து உள்ளது. காரணமே இல்லாமல் பணமதிப்பிழப்பு செய்து உள்ளனர் என்று சொல்வதை ஏற்க இயலாது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும்.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்கள் ஒருமித்த நிலையில் உள்ளன. ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரே ஒரு அம்சத்தில் சற்று முரண்பாடான கருத்தை தெரிவித்து உள்ளார்.

    அவர் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26(2) பிரிவின்படி மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரங்கள் தொடர்பாக அவர் மட்டும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு உள்ளார்.

    அவர் தனது தீர்ப்பில், "500, 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்க செய்யும் நடவடிக்கை சட்ட ரீதியில் மட்டுமே இருக்க வேண்டும். வெறும் அறிவிப்பாக இருந்ததை ஏற்க இயலாது.

    பணமதிப்பிழப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்ட ரீதியாக விவாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து அரசாணை மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்திருக்க கூடாது.

    எனவே எனது கருத்துபடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல. ஆனால் மத்திய அரசு நடவடிக்கையை 2016-ம் ஆண்டே எடுத்து விட்டதால் அதை திரும்ப பெற இயலாது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை அதிகாரத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது. எனவே அது சட்டப்பூர்வமானது இல்லை என்பதே எனது முதன்மையான கருத்து ஆகும் என்று கூறி உள்ளார்.

    என்றாலும் மற்ற 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதனால் அரசியல் சாசன அமர்வில் நான்குக்கு ஒன்று என்ற அளவில் பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்களுடன் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

    • புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
    • புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி :

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயன் சர்மா உள்ளிட்ட 57 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இந்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ந்தேதி ஒத்திவைத்தது.

    இந்த நிலையில் பரபரப்பான இந்த வழக்கில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் (திங்கட்கிழமை) இன்று தீர்ப்பு கூறுகிறார்கள்.

    • பண மதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை ஜனவரி 2-ந்தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை ஜனவரி 2-ந்தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2016 நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.
    • புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி :

    கருப்பு பணம், கள்ள நோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.

    இதன் மூலம் அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் புதிய 10, 20, 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன.

    இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 57 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த மனுக்கள் மீதான அடுத்த கட்ட விசாரணை வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    இந்தநிலையில், மேற்படி வழக்கில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது:-

    கள்ள நோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல், கருப்புப் பணம், வரி ஏய்ப்பு ஆகிவற்றுக்கு எதிராக நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

    இந்த நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கியிடம் 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே கலந்தாலோசிக்கப்பட்டது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டுகள் குறைந்ததுடன், டிஜிட்டல் பண பரிவர்த்தனையும் அதிகரித்து, கணக்கில் வராத வருவாயை கண்டறிய உதவியுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×