search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி உத்திர திருவிழா"

    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகிறது.
    • பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர விஷு, ஓணம் பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகியவற்றின் போதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.

    மறுநாள் (14-ந் தேதி) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய் அபிசேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, களபாபிசேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை9.45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனகுரு கொடியேற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற உள்ளது. 25-ந் தேதி 10-ம் திருநாளில் பம்பயைில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.

    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் நிர்வாகிகளால் 500 -க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    இதில் காலையில் சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அபிஷேகமான பால், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், குங்குமம், தேன், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், உள்ளிட்ட 25 -திரவியங்கள் கொண்ட சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

    இதில் மாரண்டஅள்ளி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகளால் 500 -க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    • 2 பேர் எலுமிச்சம்பழம் உடல் முழுவதும் குத்திக்கொண்டு வந்திருந்தனர்.
    • சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் பங்குனி உத்திர விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அரூர் அடுத்த கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டியில், உள்ள ஸ்ரீ முருகர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் அலகு குத்தி கொண்டு முதுகில் பொக்லின், வேன், டெம்போ, உரல் இழுத்தல் போன்ற வற்றை நேர்த்தி கடனாக நிறைவேற்றினார்கள்.

    பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுமார் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் விதவிதமாக அலகு குத்தி கொண்டும், காவடி எடுத்தும் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தனர்.

    பக்தர்கள் சிலரை சுவாமிக்கு முன்பு படுக்க வைத்த நெஞ்சின் மேல் உரல் வைத்து மஞ்சள் போட்டு உலக்கையால் இடித்து தூளாக்கி பக்தர்களுக்கு கொடுத்தனர். 2 பேர் எலுமிச்சம்பழம் உடல் முழுவதும் குத்திக்கொண்டு வந்திருந்தனர்.

    இது போன்ற பல விதமான நேர்த்தி கடன்களை செலுத்தியது பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது. விழாவில் கெளாப்பாறை, கீரைப்பட்டி, நாதியானூர், கம்மாளம்பட்டி, வேப்பம்பட்டி, பொன்னேரி உள்பட சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வெங்கட்ரா மன், சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். காலை முதல் மாலை அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 6-ந் தேதி வரை நடக்கிறது.
    • 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.

    மதுரை

    மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுத பாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி காலை யில் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூக்கூடாரம் நிகழ்ச்சியும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்ட னர்.

    விழாவில் நாளை (2-ந் தேதி) மூலவருக்கு நேர்த்திக்கடன் பால்குடம் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்து கின்றனர். வருகிற 5-ந் தேதி உத்திர தினத்தன்று காலை 4 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், ருத்ர ஜெப விசேஷ அபி ஷேக ஆராதனை, தங்க கவச சாத்துப்படி நடக்கிறது. அன்று இரவு பூ பல்லக்கில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 6-ந் தேதி பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.

    விழா நடக்கும் 7 நாட்களி லும் தினசரி காலை, மாலைகளில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் விதமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஈரோடு, கொடுமுடிக்கு சென்று அங்கிருந்து தீர்த்தம் எடுத்து பழனி முருகன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினர். வேல், மயில், சேவல் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாக வலம் வந்தது.

    கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு காலை 10.45 மணிக்கு மிதுன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபட்டனர். அதனை தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து மலைக்கோவிலில் உச்சிகால பூஜையில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் பங்குனிஉத்திர திருவிழாவில் தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி நாளை வெள்ளிகாமதேனு, நாளை மறுநாள் வெள்ளிஆட்டுகிடா, 3-ம் நாள் தங்கமயில், 4-ம் நாள் தங்ககுதிரை போன்ற வாகனங்களில் முருகப்பெருமான் வீதிஉலா வருகிறார். 6-ம் நாள் திருவிழாவாக ஏப்ரல் 3-ந்தேதி மாலை 5.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து 8.30 மணிக்குமேல் வெள்ளி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    ஏப்ரல் 4-ந்தேதி முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் மாலை 4.45 மணிக்கு நடைபெறும். ஏப்ரல் 7-ந்தேதி இரவு கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.

    ×