search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை முபாரக்"

    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

    அங்கு பேசிய முபாரக், "என்னுடைய அப்பா 2015-ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022-ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

    காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக் கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக் கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

    இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது" என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

    நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.

    • ஒரு மாநில அரசின் தலைவர் என்கிற நிலையில் உள்ள ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு கூட்டாட்சிக்கு விரோதமாக பேசுவது சட்டவிரோதமானது.
    • ஆளுநரை பதவியில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.

    நெல்லை:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மேலப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    நெல்லை ராதாபுரம் தாலுகாவில் உள்ள இருக்கன்துறையில் ஏற்கனவே 2 கல்குவாரிகள் உள்ள நிலையில் புதிதாக 3 புதிய கல்குவாரிகளை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. கூடன்குளம் அணுஉலை கட்டுமானப் பணிகளின் தேவைக்காக இந்த குவாரிகளை அமைக்க இருப்பதாகவும், எஞ்சியவற்றை அருகில் உள்ள நுகர்வோர்களுக்கு வழங்குவதாகவும் கூறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளை அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

    இந்த குவாரிகள் அமையவிருக்கும் இடம் அணு உலையில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளும், சுமார் 190 அடி ஆழத்திற்கும் அமைய உள்ளதால் அதனால் ஏற்படும் அதிர்வுகளால் அணு உலைகளுக்கு ஏதேனும் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது மிகப்பெரும் அழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் இதற்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது.

    ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றக்கூடிய உரை என்பது ஆளும் அரசின் கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய உரையாகும். அந்த உரையில் ஆளுநர் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளை காட்டக்கூடாது என்பது மரபு. ஆனால், அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவி, அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக, சிலவற்றை வேண்டுமென்றே விடுத்தும், சிலவற்றை தானாகவே சேர்த்தும் உரை நிகழ்த்தியுள்ளார்.

    ஒரு மாநில அரசின் தலைவர் என்கிற நிலையில் உள்ள ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு கூட்டாட்சிக்கு விரோதமாக பேசுவது சட்டவிரோதமானது.

    ஆகவே ஆளுநரை பதவியில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக 15 நாட்களை கடந்த பின்னரும் ஒருவரும் கைது செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கின்றது. காவல்துறை விரைவாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும், மாநில மனித உரிமை ஆணையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் போன்றவையும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. தற்போது பெய்த மழை காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளன. தேங்கி நிற்கும் நீரால் டெங்கு பரப்பும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன.

    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு, டைபாய்டு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×