search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் அறிக்கை குழு"

    • குழு தனது பயணத்தை கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில் மண்டல வாரியாக சென்று 10-ந்தேதி வரை கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
    • நேருஜி கலையரங்கில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில் அந்த குழுவினர் பங்கேற்கின்றனர்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க பொதுமக்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள், தொழில் முனைவோர் என பலதரப்பட்டவர்களிடமும் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் அவர்களின் தேவைகளை அறிந்து அதனை வருகிற பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதி களாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் வண்ணம் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்படுகிறது.

    அதன்படி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒன்றை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பிரிவு மாவட்டங்களில் நேரடியாக சென்று பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.

    இந்த குழு தனது பயணத்தை கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில் மண்டல வாரியாக சென்று 10-ந்தேதி வரை கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்பதற்காக நெல்லை மண்டலத்தில் அந்த குழுவினர் இன்று மாலை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

    இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் அந்த குழு அங்கிருந்து கார் மூலமாக நெல்லை வருகிறது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் பாளை நேருஜி கலையரங்கில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில் அந்த குழுவினர் பங்கேற்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

    • இன்று 2-வது நாளாக நாகர்கோவிலில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு வணிகர்களின் நிலைமை காப்பதற்கு 2 சதவீத வரி ஒதுக்கீடு செய்திட முன் மொழிய வேண்டும்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி இந்த குழுவினர் நேற்று தூத்துக்குடியில் இருந்து கருத்து கேட்பு கூட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இன்று 2-வது நாளாக நாகர்கோவிலில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ., எழிலரசன் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பொதுமக்கள், மீனவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை மீனவர்கள் வழங்கினார்கள். விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர்.

    வின்ஸ்ஆன்றோ, புலவர் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.வி.எம். சானலை தூர்வார வேண்டும், குளங்களை தூர்வார விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்.பி.யிடம் வழங்கினார்கள்.

    இதே போல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் மனு வழங்கப்பட்டது. வணிகர்களை அரசு ஊழியர்களுக்கு இணையாக நடத்துவதற்கான சட்ட முன் வடிவை முன்மொழிந்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதிய பணபலன்களும், குடும்ப பாதுகாப்பு நலநிதி காப்பீடு பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஆக உயர்த்தி அறிவிக்க முன்மொழிந்திட வேண்டும்.

    ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு வணிகர்களின் நிலைமை காப்பதற்கு 2 சதவீத வரி ஒதுக்கீடு செய்திட முன் மொழிய வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் நோயாளிகள் மாணவர்கள் நலன் கருதி ரூ.1000-த்துக்கு குறைவான விடுதி கட்டிடங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.

    மீன் வலை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் செயலாளர் நாகூர்கான் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், கொல்கத்தா, மும்பை துறைமுகங்கள் வழியாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் இறக்குமதியாகும் வலைகளை தடுப்பதுடன் மலிவுவிலை சீனப் பொருட்களுடன் மறைத்து இறக்குமதி செய்யப்படுகின்ற சீன வலைகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும். விவசாய பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு இருப்பது போன்று மீனவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் மீன் வகைகளுக்கும் பூஜ்ஜியம் சதவீத வரி மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்கம், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள், குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகிகள், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு நிர்வாகிகளும், கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அவைத் தலைவர் எப்.எம் ராஜரத்தினம் பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்ட பொதுமக்களிடமும் கனிமொழி எம்.பி. கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

    • தமிழ்நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.
    • நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் தமிழ் நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.

    5-ந்தேதி (திங்கள்) சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் வேலப்பன்சாவடியில் உள்ள கஜலட்சுமி திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் கருத்து கேட்பார்கள்.

    மாலை 5 மணிக்கு வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள கிருஷ்ணா மகாலில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    6-ந்தேதி (செவ்வாய்) காலை 10.30 மணி முதல் மாடூர் ஏ.என்.பி. மஹாலில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் சூரமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    7-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை ரோடு பி.எல்.ஏ. மஹாலில் தஞ்சாவூர், நாகப் பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு திருச்சி மண்டலகத்துக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர் களிடம் கருமண்டபத்தில் உள்ள எஸ்.பி.எஸ். மஹாலில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    8-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு திருநெல்வேலி மண்டலம், திருவனந்தபுரம் ரோட்டில் உள்ள நேருஜி கலையரங்கத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    9-ந்தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணிக்கு மதுரை மண்டலம், காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    10-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை மண்டலம், காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    தேர்தல் அறிக்கை குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக செயலாளர் களும்,. நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள், மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவ லர்கள், ஆசிரியர்கள், ரெயில்வே தொழிற் சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், மகளிர், சுயஉதவிக் குழுக்கள், மாணவர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அரசிடம் இருந்து அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    ×