search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    • புதுக்கோட்டை மணல்மேல்குடியில் பட்டாசு கடையில் இன்று திடீர் தீ விபத்து
    • ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்தன

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் மணமேல்குடி கடைவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏ.கே.எம்.ட்ரேடர்ஸ் என்ற வெடிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை பூட்டியிருந்த கடையில் இருந்து பெரும் சத்தம் கேட்டுள்ளதை கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தொடர்ந்து அங்கு வந்து பார்த்த போது பூட்டப்பட்ட பட்டாசு கடையில் இருந்து பெரும் சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன. மேலும் அந்த கடையில் இருந்து பெரும் புகைமூட்டம் எழுந்துள்ளது. ஏற்கனவே அத்திடிப்பள்ளி பட்டாசு விபத்து செய்தி அறிந்ததால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக யாரும் கடைக்கு அருகில் செல்லவில்லை.

    இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறை அங்கு வந்தனர். பாதுகாப்பு கவசங்கள் அணிந்த தீயணைப்பு வீரர் கடைக்கு அருகில் சென்று கடையின் பூட்டை உடைத்து திறந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சற்று தூரத்தில் நின்று தண்ணீர் அடித்து வெடித்து சிதறிக்கொண்டிருந்த பட்டாசு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அருகில் சென்று தண்ணீர் உதவியுடன் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனால் தீயானது அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்துஅங்கு வந்த மணல்மேல்குடி போலீசார், தீ விபத்து குறித்து உரிமையாளர் காளிமுத்து, மற்றும் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது. மேலும் இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காலை நேரம் என்பதாலும், கடை திறக்கப்படவில்லை என்பதாலும், தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணமேல்குடி சந்தைப்பேட்டையில் நடந்த தீ விபத்தி 6 கடைகள் எரிந்து நாசமாகின
    • விபத்து குறித்து மணமேல்குடி போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மணமேல்குடி சந்தைப்பேட்டையில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான சிறு கடைகள் உள்ளன. இந்த கடைகளை மீன் மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் வாடகைக்கு எடுத்து மீன் மற்றும் கருவாடு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கடையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே மளமளவென பக்கத்துக்கு கடைகளுக்கும் தீ பரவியது.இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.இந்த விபத்தால் 6 கடைகள் எரிந்து நாசமாயின. மேலும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவாடு மற்றும் மீன்கள் மற்றும் தளவாட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வேலாயுதம்பாளையம் காந்திநகர் பழைய இரும்பு கடை எதிரில் வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து பொருட்கள் நாசமானது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்திநகர் பழைய இரும்பு கடை எதிரில் வசித்து வருபவர் சந்திரசேகர்.இவரது மனைவி விஜயா. இவர்கள் வீட்டில் திடீரென வீட்டுக்குள் மின் கசிவால் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதை பார்த்த சந்திரசேகர் மனைவி விஜயா அக்கம் பக்கத்தினரை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து விஜயா வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வீட்டுக்குள் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் வீட்டுக்குள் இருந்த சமையல் பொருட்கள் துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் எரிந்து நாசமாயின.

    • தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திரா-ஒரிசா எல்லை பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன.

    அதிகாலை வணிக வளாகம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென ஷாப்பிங் மால் முழுவதும் பற்றி எரிந்தது.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதற்குள் வணிக வளாகத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. தீயில் எரியக்கூடிய பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது யாராவது கடைகளுக்கு தீ வைத்து எரித்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது.
    • தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தொழிற்சாலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தில் தெர்மாகோல் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

    இந்த நிலையில் நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அங்குள்ள அறைகள் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு அலறியடித்து வெளியேறினர்.

    தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தொழிற்சாலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் அருகில் இருந்த சுவற்றை உடைத்து அதன்வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தெர்மாகோல் மற்றும் அதன் மூலப்பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் ககுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை.

    கோவை காட்டூர் பகுதியில் உள்ள சோமசுந்தரா மில்லில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியானது. இதனால் அந்த பகுதியில் கரும் புகைமண்டலம் ஏற்பட்டது.

    அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டன.

    தகவலின் பேரில் தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சோமசுந்தரா மில் தற்போது மூடப்பட்டு உள்ளது. எனவே அங்கு காய்ந்த சருகுகள் குவிந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அந்த வழியாக சென்ற சிலர் பீடி அல்லது சிகரெட் குடித்துவிட்டு வீசியதால் மில்லுக்குள் தீவிபத்து ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகை மண்டலம் காரணமாக விடுதியின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு சில சுற்றுலா பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • தீயை மேலும் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கன்னியாகுமரி வந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சியை பார்த்து ரசிப்பது வழக்கம்.

    அவர்கள் கன்னியாகுமரியில் தங்கி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களையும் பார்வையிட்டு செல்வார்கள். இதனால் கன்னியாகுமரியில் உள்ள விடுதிகள் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்தே இருக்கும். இங்குள்ள புதிய பஸ் நிலையம் அருகில் 4 வழிச்சாலை முடியும் சீரோ பாயிண்ட் பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது.

    இந்த விடுதியின் 4-வது மாடியில் உள்ள மேல் தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விடுதி ஊழியர்கள் அந்த தளத்திற்கு சென்று பார்த்த போது, அங்குள்ள பூட்டிக்கிடந்த ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தீயை அணைப்பதற்கு ஊழியர்கள் முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. அதற்குள் காற்றின் வேகத்தில் தீ மற்ற அறைகளுக்கும் பரவியது. இதைப் பார்த்து அந்த அறைகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.

    இதற்கிடையில் புகை மண்டலம் காரணமாக விடுதியின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு சில சுற்றுலா பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தீ விபத்து குறித்து உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் முதலில் தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்து புகையை வெளியேற்றினார்கள்.

    தீ விபத்து ஏற்பட்ட அறைக்கு பக்கத்து அறைகளில் தங்கி இருந்த 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளையும் புகைமண்டலத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு தீப்பிடித்த அறையை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்க முயன்றனர்.

    தீயை மேலும் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் விடுதி அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி., கட்டில் மற்றும் அழகு சாதன பொருட்கள், திரைச் சீலை போன்றவை எரிந்து சாம்பலானது. சுமார் ரூ.10லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ பிடித்து இருப்பது தெரியவந்தது. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த அடுப்பில் காகிதத்தை எரித்த பெண்ணின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உயிரிழந்தார்
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முனியங்குறிச்சி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி(வயது 35). இவருக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் வேலைக்கு சென்று விட்டநிலையில், வீட்டில் தனியாக இருந்த வள்ளி விறகு அடுப்பில் காகிதங்களை போட்டு கொளுத்தியுள்ளார். அப்போது வள்ளியின் உடையில் தீப்பற்றி உடலில் பரவியது. இதனால் அவர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து வள்ளியை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூர் குப்பை கிடங்கு தீ 6 நாட்களுக்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
    • தொடர்ந்து தண்ணீர் தெளித்து அணைக்கப்பட்டது

    கரூர்,

    கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து கரூர், புகழூர், அரவக்குறிச்சி, முசிறி தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 5 நாட்களாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனாலும் முழுவதுமாக தீயை அணைக்க முடியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அதனை முழுவதுமாக அணைத்தனர். இதனால் கரூர் வாங்கல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • பெரம்பலூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 70 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான வளாகம், குடியிருப்பு மற்றும் மைதானம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீசார் குடியிருக்கும் வீடுகளின் பின்புறம் மற்றும் அருகே உள்ள பகுதியில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு முடிவடையாமல் நிலுவையில் உள்ளதால், அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வந்தன. மேலும் வாகனங்களை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் காணப்பட்டன. இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் யு, வி பிளாக்குகள் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் நேற்று மதியம் 12.45 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் தீ மள, மளவென பரவி இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் கரும்புகை வெளியேறியதால் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகம் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை கண்ட குடியிருப்பில் வசிப்பவர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி இருசக்கர வாகனங்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் 70 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகி எலும்புக்கூடாக காட்சியளித்தன.

    • மூலிமங்கலம் பகுதியில் தீப்பிடித்து எரிந்து தென்னை மரங்கள் நாசமானது
    • காய்ந்த செடி, கொடிகளில் தீப்பிடித்ததால் தென்னை மரங்கள் நாசம்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் மூலமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (50).விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்களை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் தென்னை மரங்கள் உள்ள பகுதியில் ஏராளமான செடி கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென காய்ந்திருந்த செடி கொடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. தென்ன மரங்களிலும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அதை பார்த்த ராமமூர்த்தி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர்.இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • கரும்புத்தோட்டம் அருகே திடீர் தீவிபத்து ஏற்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே உள்ள கரும்பு தோட்டம் அருகே இருந்த முள்வேலிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கரும்பு தோட்டங்களுக்கும், குடியிருப்பு வீடுகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    ×