search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குர்ஆன் பொன்மொழிகள்"

    • சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்ல இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது.
    • வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.

    உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டவும், அவர்களை சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்லவும் இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது. கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய 5 கடமைகளை உள்ளடக்கியது இஸ்லாம் மார்க்கம்.

    'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்' என்பதே முதல் கலிமா ஆகும். இந்தக் கலிமாவை யார் ஒருவர் உள்ளத்தால் ஏற்று நாவால் சொல்கிறாரோ அவர் நற்பாக்கியம் பெற்றவர்களில் இடம்பிடித்துவிடுவார்.

    அடுத்தது தொழுகை. கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆணுக்கும் 7 வயது முதல் மரணம் வரை தொழுகை கட்டாயம் ஆகும். தொழுகை மனிதர்களை நேர்வழியில் நடத்தி இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற உதவுகின்றது.

    தொழுகைக்கு அடுத்து வருவது நோன்பு. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைக்க வேண்டும். சூரிய உதயத்தில் இருந்து மறையும் வரை எதையும் உண்ணாமல், பருகாமல் இருந்து மன ஆசைகளை கட்டுப் படுத்தி நோன்பு நோற்க வேண்டும். இரவு நேரங்களில் தொழுகையில் ஈடுபடவேண்டும். பகல் முழுவதும் பசித்திருப்பதாலும், தாகத்துடன் இருப்பதாலும் உடலும் உள்ளமும் தூய்மை பெறுகிறது. இறையச்சத்துடன் நடத்தப்படும் தொழுகைகள் நமது பாவங்களுக்கு மன்னிப்பை வழங்குகிறது.

    மேலும் பிறரின் பசித்துன்பத்தை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    நோன்பைப் போன்று ஜகாத்தும் முக்கிய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது வருமானத்தில், செல்வத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதுவே `ஜகாத்' என்று சொல்லப்படுகிறது. ரமலான் நோன்பில் வரும் முக்கியமான இரவு லைலத்துல் கத்ர் இரவாகும்.

    `நபியே! லைலத்துல் கத்ர் என்றால் என்னவென்று நீர் அறிவீரா? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்' என்று திருக்குர்ஆன் (97:23) கூறுகின்றது.

    மகத்துவமும், புனிதமும் மிக்க அந்த இரவு ரமலானில் எப்பொழுது வருகிறது?. இது குறித்த நபி மொழி வருமாறு:

    லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு எப்பொழுது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இரண்டு பேர் தங்களுக்குள் கடன் சம்பந்தமான சர்ச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதை தீர்த்து வைப்பதில் நபி களார் ஈடுபட்டதால், அந்த இரவு எந்த நாள் என்று குறிப்பிட்டுச் சொல்வதை இறைவன் மறக்க செய்துவிட்டான்.

    என்றாலும், அந் நாளில் மட்டும் நற்கருமங்களை செய்து விட்டு மக்கள் மேம்போக்காக இருந்து விடக்கூடாது என்பதால் 'மறக்கடிக்கச் செய்ததும் நன்மைக்கே' என்று கூறிய நபிகளார், 'ரமலானில் கடைசி பத்தில் ஒற்றைப்படையான இரவில் (21, 23, 25, 27, 29) தேடிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்'. (நூல்: மிஷ்காத்)

    இமாம் ராஜி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'இந்த இரவில் வானவர் எல்லோரும் சாந்தி மயமாகட்டும் என்று கூறிக் கொண்டு இருப்பார்கள். அதிகாலையில் புறப்படும் போது மலக்குகள், 'இந்த இரவில் முகம்மதுடைய (ஸல்) சமுதாயத்திற்கு இறைவன் என்ன செய்தான்?' என்று கேட்பார்கள்.

    உடனே வானவர் தலைவர், `இறைவன் தனது அருள் பார்வையை செலுத்தினான். அவர்கள் அனைவரின் பாவத்தையும் மன்னித்தான். அதே நேரத்தில், மது அருந்துபவர், பெற்றோருக்கு எதிராக இருப்பவர், சொந்தங்களை துண்டித்து வாழ்பவர், சகோதரனிடம் சண்டைபோட்டு மூன்று நாளுக்கு மேல் பேசாமல் இருப்பவர் ஆகியோரை இறைவன் மன்னிப்பதில்லை, அவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை என்று கூறினார்.

    மனிதர்கள் பலரும் பாவம் செய்பவர்களாகவே உள்ளனர். மனிதன் பாவத்தில் இருந்து விடுபட்டு, பாவ மன்னிப்பு பெற்று இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் திருப்பொருத்தத்தை அடையவே இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகின்றது. மேலும் பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    `நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருகுர்ஆன் 2:222). இது போல நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிடும்போது, `எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறாரோ அவர்தான்' என்று கூறினார்கள்.

    `நபியே! இறை நம்பிக்கை கொண்டு நல்ல செயல் களைச் செய்வோருக்கு சொர்க்கம் உண்டு என்று கூறுங்கள்' என்பது இறை கட்டளையாகும். உலக மக்கள் அனைவரும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நோன்பு வைத்து லைலத்துல் கத்ர் என்ற உன்னதமான இரவை பெற்று உளமார இறைவனை தொழுது சொர்க்கத்தைப் பெற அல்லாஹ் வாய்ப்பை வழங்குவானாக, ஆமீன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.
    • ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

    இஸ்லாமியர் களிடத்தில் நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும். அதிலும் குறிப்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

    `நோன்பு' எனும் வார்த்தை அரபு மொழியில் `ஸவ்மு' என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய பொருள் `தடுத்துக்கொள்ளுதல்' ஆகும். அதாவது, சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து மறையும் நேரம் வரையில் எதையும் சாப்பிடாமல், தீய செயல்களில் ஈடுபடாமல் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் இறையச்சத்துடன் இருப்பதே ரமலான் நோன்பு ஆகும்.

    நோன்பின் மாண்புகள் குறித்தும், சிறப்புகள் பற்றியும் திருக்குர் ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமான நபி மொழிகளிலும் ரமலான் நோன்பின் சிறப்புகள் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

    திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது: "நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்". (2:183)

    இந்த ரமலான் மாதத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் உலக மக்களுக்கு நேர்வழிகாட்டியாக விளங்கும் திருக்குர்ஆன் அருளப்பட்டதும் ஒரு ரமலான் காலத்தில் தான்.

    இதையே திருக்குர்ஆன் (2:185) இவ்வாறு கூறுகின்றது: "ரமலான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது".

    ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்த நபி மொழிகள் வருமாறு:

    `எவர் இறை நம்பிக்கையுடனும்' மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும் ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

    `நிச்சயமாக சொர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது. அது `ரய்யான்' என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்'.

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'.

    `அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பு நோற்றவரின் முகத்தை நரக நெருப்பை விட்டு எழுபது ஆண்டு கால அளவுக்கு தூரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை''.

    `நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள்.

    அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:- ``நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என்னை சுவனத்தில் நுழைவிக்கக்கூடிய ஒரு செயலைக்கொண்டு எனக்கு தாங்கள் ஏவுங்களேன் என வேண்டினான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீர் நோன்பை பற்றிப் பிடித்துக் கொள்வீராக. ஏனெனில் நோன்புக்கு நிகர் வேறெதுவும் கிடையாது என பதில் கூறினார்கள். திரும்பவும் நான் நபியிடம் வந்து முறையிட, அண்ணலார் எனக்கு அதே பதிலைச் சொன்னார்கள்''. (நூல்: அஹ்மது)

    நோன்பு இருக்கும் ரமலான் காலத்தில் அதிகமாக தான தர்மங்கள் செய்ய வேண்டும். மேலும் `ஜகாத்' எனப்படும் தர்மத்தையும் ரமலானில் நிறைவேற்றுவது கடமையாகும். நமது வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தர்மம் செய்வது ஜகாத் ஆகும்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:- இறை வழியில் ஹலால் (ஆகுமான) செல்வத்தையே செலவு செய்யுங்கள். தூய்மையான பொருட்களையே இறைவன் ஏற்றுக்கொள்கிறான். 'இறை நம்பிக்கை கொண்டோர்களே, நீங்கள் சம்பாதித்த பொருட்களில் இருந்தும், பூமியில் நாம் உங்களுக்கு வெளிப்படுத்தி தந்தவற்றிலும் சிறந்தவற்றை (தூய்மையானவற்றை- இறைவழியில்) செலவு செய்யுங்கள். (திருக்குர்ஆன் 2:267)

    நோன்பு இருக்கும் போது மனது கட்டுப்பாடு நிலைக்கு வந்து தீய செயல்களில் இருந்து நம்மை விலக்கி நல்வழியில் செலுத்துகிறது. நம்மில் இருக்கும் கோபத்தினை முற்றிலும் இந்த நோன்பு குறைக்கிறது.

    உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, நோன்பு மேற்கொள்வதால் அது உடல் கழிவுகள், ரத்தக்குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.

    ஏனென்றால், உணவு சாப்பிடாத போது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே உடலானது சுத்தப்படுத்திக்கொள்கின்றன.

    ரமலான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் உள்ளது.

    `எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்தில் இருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்' என்பது நபி மொழியாகும். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் பார்ஸி (ரலி), நூல்: பைஹகி).

    நோன்பின் மகிமையை உணர்வோம், நன்மைகள் பெறுவோம்.

    • நன்மைகளே நடக்க வேண்டும் என்ற எண்ணமே மனிதர்களிடம் அதிகம் பரவி உள்ளது.
    • சோதனை வரும்போது நாம் பொறுமை காக்கவேண்டும்.

    எளிதான வெற்றிகளையும், இனிமையான வாழ்க்கையையும் விரும்பும் மனிதர்களே இந்த உலகில் அதிகம் உள்ளனர். எதுவும் எளிதாக கிடைக்க வேண்டும், எப்போதும் நன்மைகளே நடக்க வேண்டும் என்ற எண்ணமே மனிதர்களிடம் அதிகம் பரவி உள்ளது. ஆனால் மனித வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல, எப்போதும் நன்மைகள், இனிமைகள் நிறைந்தது அல்ல. மனித வாழ்க்கை இன்ப துன்பங்கள் நிறைந்ததாக, ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவே அமைந்துள்ளது.

    எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையை தன் நல்லடியார்களுக்கு ஒரு சோதனைக் களமாகவே அமைத்துள்ளான். சோதனைகள் பல்வேறு வடிவில் தாக்கும் வகையில் தான் மனித வாழ்க்கை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனைகளை யார் பொறுமையாக எதிர்கொண்டு, இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்து, உதவி தேடுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். சோதனைகளை மட்டும் அல்ல இறைவனின் அன்பையும் அவர்கள் வெற்றி கொள்கின்றனர்.

    திருக்குர்ஆனில் கூறியிருப்பதாவது:-

    'நம்பிக்கையாளர்களே, உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடம் இருந்தும், இணை வைத்து வணங்குவோரிடம் இருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்.

    ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாகாரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்'. (திருக்குர்ஆன் 3:186)

    இந்த திருக்குர்ஆன் வசனம் மூலம் நாம் அறிவது என்ன?.

    நாம் எவை எல்லாம் நமக்கு நன்மை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அவை எல்லாம் முழுமையான நன்மைகள் அல்ல. அந்த நன்மையிலும் நமக்கு சோதனை காத்திருக்கிறது. அத்துடன் அந்த சோதனையை எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் இந்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

    அதாவது, சோதனைகள் இறைவன் தரப்பில் இருந்து வரும், அப்போது நாம் அதற்காக கலங்கி நின்று வேதனையில் மூழ்கிவிடக்கூடாது. சோதனை வரும்போது நாம் பொறுமை காக்கவேண்டும். இறைவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ள வேண்டும்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் ஈடு இணையற்றவன். சோதனைகளில் இருந்து நம்மை காக்கும் சக்தியும் வல்லமையும் பெற்றவன் அவன் ஒருவனே. எனவே அந்த இறைவனிடம் மட்டுமே நாம் சரணடைந்து உதவி கேட்க வேண்டும். அது தான் நமக்கு சோதனைக்காலத்தில் நன்மை தேடித்தரும் செயலாகும்.

    எந்த மனிதரும் இறைவனின் சோதனையில் இருந்து தப்பிக்க முடியாது. இறைவன் தரும் சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே. மனிதர்கள் மட்டுமல்ல இறைவனின் அருள்பெற்ற இறைத் தூதர்களும், இறை நேசச்செல்வர்களும், இறைவனின் நல்லடியார்களும் சோதனைக்கு ஆளாக்கப் பட்டார்கள். இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் உபதேசங்களை மக்களிடம் எடுத்துச் சொன்னபோது அடைந்த இன்னல்களும், துன்பங்களும் அளவிட முடியாதவை.

    ஆனால் எத்தனை சோதனைகள் வந்த போதும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கை கொண்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளில் இருந்து மீண்டு வர அந்த இறைவனிடமே உதவி கேட்டனர். அந்த உதவி மூலம் அவர்கள் சோதனை களைக் கடந்து சாதனை புரிந்தனர். இதையே திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    '(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற கஷ்டமான நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? உங்களைப் போல நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க ''அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்? எப்பொழுது வரும்?'' என்று கேட்டதற்கு ''அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக இதோ சமீபத்திலிருக்கிறது'' என்று நாம் ஆறுதல் கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள்'. (திருக்குர்ஆன் 2:214)

    'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!'. (திருக்குர்ஆன் 2:155)

    "நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8:28).

    மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும். (திருக்குர்ஆன் 2:45)

    சோதனைகளை கொடுப்பவனே அதில் இருந்து மீண்டு வர வழியையும் காட்டுகின்றான். அந்த வழி, அல்லாஹ்விடம் முழுமையாக சரண் அடைந்து அவனை மட்டுமே வணங்கி உதவி தேடுவது. நமது பாவங்களையும், பிழைகளையும் மன்னித்து அருள்புரியுமாறு அவனிடம் கேட்பது. இதன் மூலம் அல்லாஹ் நமது சோதனைகளை நீக்கி நமக்கு இம்மையிலும், மறுமையிலும் நன்மை தருவான்.

    ×