search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரமலான் நோன்பு"

    • சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்ல இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது.
    • வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.

    உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டவும், அவர்களை சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச்செல்லவும் இஸ்லாம் மார்க்கம் உதவுகிறது. கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய 5 கடமைகளை உள்ளடக்கியது இஸ்லாம் மார்க்கம்.

    'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்' என்பதே முதல் கலிமா ஆகும். இந்தக் கலிமாவை யார் ஒருவர் உள்ளத்தால் ஏற்று நாவால் சொல்கிறாரோ அவர் நற்பாக்கியம் பெற்றவர்களில் இடம்பிடித்துவிடுவார்.

    அடுத்தது தொழுகை. கடமையான ஐந்து நேரத் தொழுகைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆணுக்கும் 7 வயது முதல் மரணம் வரை தொழுகை கட்டாயம் ஆகும். தொழுகை மனிதர்களை நேர்வழியில் நடத்தி இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற உதவுகின்றது.

    தொழுகைக்கு அடுத்து வருவது நோன்பு. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைக்க வேண்டும். சூரிய உதயத்தில் இருந்து மறையும் வரை எதையும் உண்ணாமல், பருகாமல் இருந்து மன ஆசைகளை கட்டுப் படுத்தி நோன்பு நோற்க வேண்டும். இரவு நேரங்களில் தொழுகையில் ஈடுபடவேண்டும். பகல் முழுவதும் பசித்திருப்பதாலும், தாகத்துடன் இருப்பதாலும் உடலும் உள்ளமும் தூய்மை பெறுகிறது. இறையச்சத்துடன் நடத்தப்படும் தொழுகைகள் நமது பாவங்களுக்கு மன்னிப்பை வழங்குகிறது.

    மேலும் பிறரின் பசித்துன்பத்தை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    நோன்பைப் போன்று ஜகாத்தும் முக்கிய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது வருமானத்தில், செல்வத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதுவே `ஜகாத்' என்று சொல்லப்படுகிறது. ரமலான் நோன்பில் வரும் முக்கியமான இரவு லைலத்துல் கத்ர் இரவாகும்.

    `நபியே! லைலத்துல் கத்ர் என்றால் என்னவென்று நீர் அறிவீரா? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்' என்று திருக்குர்ஆன் (97:23) கூறுகின்றது.

    மகத்துவமும், புனிதமும் மிக்க அந்த இரவு ரமலானில் எப்பொழுது வருகிறது?. இது குறித்த நபி மொழி வருமாறு:

    லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு எப்பொழுது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இரண்டு பேர் தங்களுக்குள் கடன் சம்பந்தமான சர்ச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதை தீர்த்து வைப்பதில் நபி களார் ஈடுபட்டதால், அந்த இரவு எந்த நாள் என்று குறிப்பிட்டுச் சொல்வதை இறைவன் மறக்க செய்துவிட்டான்.

    என்றாலும், அந் நாளில் மட்டும் நற்கருமங்களை செய்து விட்டு மக்கள் மேம்போக்காக இருந்து விடக்கூடாது என்பதால் 'மறக்கடிக்கச் செய்ததும் நன்மைக்கே' என்று கூறிய நபிகளார், 'ரமலானில் கடைசி பத்தில் ஒற்றைப்படையான இரவில் (21, 23, 25, 27, 29) தேடிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்'. (நூல்: மிஷ்காத்)

    இமாம் ராஜி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'இந்த இரவில் வானவர் எல்லோரும் சாந்தி மயமாகட்டும் என்று கூறிக் கொண்டு இருப்பார்கள். அதிகாலையில் புறப்படும் போது மலக்குகள், 'இந்த இரவில் முகம்மதுடைய (ஸல்) சமுதாயத்திற்கு இறைவன் என்ன செய்தான்?' என்று கேட்பார்கள்.

    உடனே வானவர் தலைவர், `இறைவன் தனது அருள் பார்வையை செலுத்தினான். அவர்கள் அனைவரின் பாவத்தையும் மன்னித்தான். அதே நேரத்தில், மது அருந்துபவர், பெற்றோருக்கு எதிராக இருப்பவர், சொந்தங்களை துண்டித்து வாழ்பவர், சகோதரனிடம் சண்டைபோட்டு மூன்று நாளுக்கு மேல் பேசாமல் இருப்பவர் ஆகியோரை இறைவன் மன்னிப்பதில்லை, அவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை என்று கூறினார்.

    மனிதர்கள் பலரும் பாவம் செய்பவர்களாகவே உள்ளனர். மனிதன் பாவத்தில் இருந்து விடுபட்டு, பாவ மன்னிப்பு பெற்று இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் திருப்பொருத்தத்தை அடையவே இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகின்றது. மேலும் பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    `நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருகுர்ஆன் 2:222). இது போல நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிடும்போது, `எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறாரோ அவர்தான்' என்று கூறினார்கள்.

    `நபியே! இறை நம்பிக்கை கொண்டு நல்ல செயல் களைச் செய்வோருக்கு சொர்க்கம் உண்டு என்று கூறுங்கள்' என்பது இறை கட்டளையாகும். உலக மக்கள் அனைவரும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நோன்பு வைத்து லைலத்துல் கத்ர் என்ற உன்னதமான இரவை பெற்று உளமார இறைவனை தொழுது சொர்க்கத்தைப் பெற அல்லாஹ் வாய்ப்பை வழங்குவானாக, ஆமீன்.

    • இந்துக்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும் 'சிந்திஸ்' எனும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
    • உணவுப்பொருட்களை 25 வயது முதல் 86 வயதான தன்னார்வலர்கள் கொண்ட குழு பரிமாறுகிறது.

    சென்னை:

    இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொள்வது வழக்கம். இதையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு திறக்கும் நேரமான மாலை நேரத்தில் நோன்பு கஞ்சி வழங்கப்படும்.

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    இங்கு நோன்பு கஞ்சியுடன், வெஜிடபிள் பிரிஞ்சி சாதம், வாழைப்பழம், திராட்டைப்பழம், குளிர்ந்த ரோஸ்மில்க், தண்ணீர் ஆகியவையும் சேர்த்து வழங்கப்படுகிறது. நோன்பு கஞ்சியை பொறுத்தமட்டில் பள்ளிவாசலில் இருந்து வழங்கப்படுகிறது.

    இதை தவிர்த்து நோன்பு திறப்புக்கான மற்ற அனைத்து உணவு பொருட்களையும் கடந்த 36 ஆண்டுகளாக இந்துக்கள் வழங்கி வருகிறார்கள்.

    இந்துக்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும் 'சிந்திஸ்' எனும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகிறார்கள். அகதிகளாக சென்னைக்கு வந்த இச்சமூகத்தின் மூதாதையர்கள் 'கடவுளுக்கு சேவை செய்வோம்... சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு சக மனிதர்களுக்கு சேவை செய்வோம்' என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு சென்னை மயிலாப்பூரில் சுபிதர் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி உள்ளனர்.

    இவர்கள் வகுத்துள்ள குறிக்கோளுக்கு எடுத்துக்காட்டாக தங்களது அறக்கட்டளை வளாகத்தில் இந்து சாமிகள் மட்டுமல்லாமல் ஏசு கிறிஸ்து, மாதா, அந்தோணியார் சொரூபங்களையும் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் வழிபாடு செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    சுபிதர் அறக்கட்டளை மூலம் தான் 36 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் இவர்கள் நோன்பு திறப்புக்கான உணவுகளை வழங்கி வருகிறார்கள்.

    இவர்களது மயிலாப்பூர் அறக்கட்டளையில் தயாராகும் நோன்பு திறப்புக்கான உணவு பொருட்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு மாலை 5.30 மணிக்கு பெரிய பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த உணவுப்பொருட்களை 25 வயது முதல் 86 வயதான தன்னார்வலர்கள் கொண்ட குழு பரிமாறுகிறது.

    நோன்பு திறப்பு நேரம் தொடங்கியதும் அல்லாவை வணங்கி நோன்பு திறப்புக்கான உணவு பொருட்களை அருந்துகிறார்கள். ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இந்த சேவை ஓசையில்லாமல் நடந்து வருகிறது.

    மதத்துக்கு அப்பாற்பட்டு இந்த சேவையில் ஈடுபட்டு வரும் சுபிதர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராம்தேவ் நானி கூறும்போது, 'இந்த சேவையில் 36 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உள்ளார்ந்த அன்போடு இந்த பணியை அனைவரும் செய்து வருகிறோம். இது, எங்களுக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது. முஸ்லிம்கள் அணியும் குல்லாவை அணிந்து கொண்டு இந்த சேவையில் ஈடுபடுகிறோம்' என்றார்.

    36 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் 86 வயதான நாராயண் என்பவர் கூறும்போது, இந்த சேவை தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தவறாமல் இந்த சேவையை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    • பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
    • மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், "உதவுதல் நம் முதல் கடமை" என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். 

    • ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.
    • நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாதத்தின் இறுதி நாளில் சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில் ரமலான் பண்டிகை கொண்டாட ப்படுகிறது.

    அதன்படி, பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.

    நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும், வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும்.
    • ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

    இஸ்லாமியர் களிடத்தில் நோன்பு இருப்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும். அதிலும் குறிப்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

    `நோன்பு' எனும் வார்த்தை அரபு மொழியில் `ஸவ்மு' என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய பொருள் `தடுத்துக்கொள்ளுதல்' ஆகும். அதாவது, சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து மறையும் நேரம் வரையில் எதையும் சாப்பிடாமல், தீய செயல்களில் ஈடுபடாமல் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் இறையச்சத்துடன் இருப்பதே ரமலான் நோன்பு ஆகும்.

    நோன்பின் மாண்புகள் குறித்தும், சிறப்புகள் பற்றியும் திருக்குர் ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமான நபி மொழிகளிலும் ரமலான் நோன்பின் சிறப்புகள் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

    திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது: "நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்". (2:183)

    இந்த ரமலான் மாதத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் உலக மக்களுக்கு நேர்வழிகாட்டியாக விளங்கும் திருக்குர்ஆன் அருளப்பட்டதும் ஒரு ரமலான் காலத்தில் தான்.

    இதையே திருக்குர்ஆன் (2:185) இவ்வாறு கூறுகின்றது: "ரமலான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது".

    ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்த நபி மொழிகள் வருமாறு:

    `எவர் இறை நம்பிக்கையுடனும்' மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும் ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

    `நிச்சயமாக சொர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது. அது `ரய்யான்' என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்'.

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'.

    `அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பு நோற்றவரின் முகத்தை நரக நெருப்பை விட்டு எழுபது ஆண்டு கால அளவுக்கு தூரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை''.

    `நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள்.

    அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:- ``நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என்னை சுவனத்தில் நுழைவிக்கக்கூடிய ஒரு செயலைக்கொண்டு எனக்கு தாங்கள் ஏவுங்களேன் என வேண்டினான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'நீர் நோன்பை பற்றிப் பிடித்துக் கொள்வீராக. ஏனெனில் நோன்புக்கு நிகர் வேறெதுவும் கிடையாது என பதில் கூறினார்கள். திரும்பவும் நான் நபியிடம் வந்து முறையிட, அண்ணலார் எனக்கு அதே பதிலைச் சொன்னார்கள்''. (நூல்: அஹ்மது)

    நோன்பு இருக்கும் ரமலான் காலத்தில் அதிகமாக தான தர்மங்கள் செய்ய வேண்டும். மேலும் `ஜகாத்' எனப்படும் தர்மத்தையும் ரமலானில் நிறைவேற்றுவது கடமையாகும். நமது வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தர்மம் செய்வது ஜகாத் ஆகும்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:- இறை வழியில் ஹலால் (ஆகுமான) செல்வத்தையே செலவு செய்யுங்கள். தூய்மையான பொருட்களையே இறைவன் ஏற்றுக்கொள்கிறான். 'இறை நம்பிக்கை கொண்டோர்களே, நீங்கள் சம்பாதித்த பொருட்களில் இருந்தும், பூமியில் நாம் உங்களுக்கு வெளிப்படுத்தி தந்தவற்றிலும் சிறந்தவற்றை (தூய்மையானவற்றை- இறைவழியில்) செலவு செய்யுங்கள். (திருக்குர்ஆன் 2:267)

    நோன்பு இருக்கும் போது மனது கட்டுப்பாடு நிலைக்கு வந்து தீய செயல்களில் இருந்து நம்மை விலக்கி நல்வழியில் செலுத்துகிறது. நம்மில் இருக்கும் கோபத்தினை முற்றிலும் இந்த நோன்பு குறைக்கிறது.

    உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, நோன்பு மேற்கொள்வதால் அது உடல் கழிவுகள், ரத்தக்குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.

    ஏனென்றால், உணவு சாப்பிடாத போது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே உடலானது சுத்தப்படுத்திக்கொள்கின்றன.

    ரமலான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் உள்ளது.

    `எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்தில் இருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்' என்பது நபி மொழியாகும். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் பார்ஸி (ரலி), நூல்: பைஹகி).

    நோன்பின் மகிமையை உணர்வோம், நன்மைகள் பெறுவோம்.

    • கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மத நல்லிணக்க புனித ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

    கீழக்கரை ரோட்டரி சங்கத்தலைவர் சுல்தான் சம்சூல் கபீர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட டவுன் தலைமை ஹாஜி அல்ஹாஜ் சலாகுதீன் ஆலிம், ஓய்வு பெற்ற ஆசிரியர் காசி கணேசன், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் ஆகியோர் நோன்பின் மகிமை பற்றி பேசினர்.

    இதில் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானஸ் ஆபிதா, சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கே.ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர்கள் மீரான்அலி, பயாஸ், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் ஷேக் தாவூது, பேராசிரியர்கள் மரியதாஸ், பாலகிருஷ்ணன், எபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ரோட்டரி சங்க செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பொருளாளர் சிவகார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • நேற்று இரவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அதிகாலை முதல் நோன்பு தொடங்கினர்.
    • நோன்பு காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும்.

    முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும். இந்த ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

    மேலும் இந்த நாட்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் கடமையாகும். இந்த உதவியை தான் சகத் என்கிறார்கள். மேலும் நோன்பு காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும். இந்த காலக்கட்டத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்ட அறிவிப்பில்,

    தமிழகம் முழுவதும் 22-ந் தேதி பிறை தென்படாததால் நேற்று மாலை ரமலான் மாத முதல் பிறையாக கணக்கிடப்பட்டு இரவு தொழுகை நடைபெறுகிறது. நோன்பு நோக்கவும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி (சனிக்கிழமை) இரவு பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள் என்றும், 12-ந்தேதி மரீப் முதல் தொடங்க உள்ளது. 18-ந்தேதி மாலை பெரிய இரவு என அழைக்கப்படுகின்ற லைலத்துல் கதர் இரவு என்றும், ரமலான் ஈத் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சந்தேக நாள் என நினைவு படுத்தப்படுகிறது. அனைவரும் ரமலான் மாதத்தில் பகலில் நோன்பு வைத்து இரவில் இபாதத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று இரவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அதிகாலை முதல் நோன்பு தொடங்கினர்.

    • ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
    • ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    சென்னை :

    ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், 24-ந்தேதி (நாளை) முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்ட அறிவிப்பில், "ரமலான் மாதப்பிறை நேற்று தமிழ்நாட்டில் எங்கும் தென்படவில்லை. இதனால் ரமலான் நோன்பு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும்" என்று கூறியுள்ளார்.

    ×