search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குர்ஆன் வசனம்"

    • நன்மைகளே நடக்க வேண்டும் என்ற எண்ணமே மனிதர்களிடம் அதிகம் பரவி உள்ளது.
    • சோதனை வரும்போது நாம் பொறுமை காக்கவேண்டும்.

    எளிதான வெற்றிகளையும், இனிமையான வாழ்க்கையையும் விரும்பும் மனிதர்களே இந்த உலகில் அதிகம் உள்ளனர். எதுவும் எளிதாக கிடைக்க வேண்டும், எப்போதும் நன்மைகளே நடக்க வேண்டும் என்ற எண்ணமே மனிதர்களிடம் அதிகம் பரவி உள்ளது. ஆனால் மனித வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல, எப்போதும் நன்மைகள், இனிமைகள் நிறைந்தது அல்ல. மனித வாழ்க்கை இன்ப துன்பங்கள் நிறைந்ததாக, ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவே அமைந்துள்ளது.

    எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையை தன் நல்லடியார்களுக்கு ஒரு சோதனைக் களமாகவே அமைத்துள்ளான். சோதனைகள் பல்வேறு வடிவில் தாக்கும் வகையில் தான் மனித வாழ்க்கை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனைகளை யார் பொறுமையாக எதிர்கொண்டு, இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்து, உதவி தேடுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். சோதனைகளை மட்டும் அல்ல இறைவனின் அன்பையும் அவர்கள் வெற்றி கொள்கின்றனர்.

    திருக்குர்ஆனில் கூறியிருப்பதாவது:-

    'நம்பிக்கையாளர்களே, உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடம் இருந்தும், இணை வைத்து வணங்குவோரிடம் இருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்.

    ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாகாரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்'. (திருக்குர்ஆன் 3:186)

    இந்த திருக்குர்ஆன் வசனம் மூலம் நாம் அறிவது என்ன?.

    நாம் எவை எல்லாம் நமக்கு நன்மை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அவை எல்லாம் முழுமையான நன்மைகள் அல்ல. அந்த நன்மையிலும் நமக்கு சோதனை காத்திருக்கிறது. அத்துடன் அந்த சோதனையை எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் இந்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

    அதாவது, சோதனைகள் இறைவன் தரப்பில் இருந்து வரும், அப்போது நாம் அதற்காக கலங்கி நின்று வேதனையில் மூழ்கிவிடக்கூடாது. சோதனை வரும்போது நாம் பொறுமை காக்கவேண்டும். இறைவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ள வேண்டும்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் ஈடு இணையற்றவன். சோதனைகளில் இருந்து நம்மை காக்கும் சக்தியும் வல்லமையும் பெற்றவன் அவன் ஒருவனே. எனவே அந்த இறைவனிடம் மட்டுமே நாம் சரணடைந்து உதவி கேட்க வேண்டும். அது தான் நமக்கு சோதனைக்காலத்தில் நன்மை தேடித்தரும் செயலாகும்.

    எந்த மனிதரும் இறைவனின் சோதனையில் இருந்து தப்பிக்க முடியாது. இறைவன் தரும் சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே. மனிதர்கள் மட்டுமல்ல இறைவனின் அருள்பெற்ற இறைத் தூதர்களும், இறை நேசச்செல்வர்களும், இறைவனின் நல்லடியார்களும் சோதனைக்கு ஆளாக்கப் பட்டார்கள். இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் உபதேசங்களை மக்களிடம் எடுத்துச் சொன்னபோது அடைந்த இன்னல்களும், துன்பங்களும் அளவிட முடியாதவை.

    ஆனால் எத்தனை சோதனைகள் வந்த போதும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கை கொண்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளில் இருந்து மீண்டு வர அந்த இறைவனிடமே உதவி கேட்டனர். அந்த உதவி மூலம் அவர்கள் சோதனை களைக் கடந்து சாதனை புரிந்தனர். இதையே திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    '(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற கஷ்டமான நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? உங்களைப் போல நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க ''அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்? எப்பொழுது வரும்?'' என்று கேட்டதற்கு ''அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக இதோ சமீபத்திலிருக்கிறது'' என்று நாம் ஆறுதல் கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள்'. (திருக்குர்ஆன் 2:214)

    'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!'. (திருக்குர்ஆன் 2:155)

    "நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8:28).

    மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும். (திருக்குர்ஆன் 2:45)

    சோதனைகளை கொடுப்பவனே அதில் இருந்து மீண்டு வர வழியையும் காட்டுகின்றான். அந்த வழி, அல்லாஹ்விடம் முழுமையாக சரண் அடைந்து அவனை மட்டுமே வணங்கி உதவி தேடுவது. நமது பாவங்களையும், பிழைகளையும் மன்னித்து அருள்புரியுமாறு அவனிடம் கேட்பது. இதன் மூலம் அல்லாஹ் நமது சோதனைகளை நீக்கி நமக்கு இம்மையிலும், மறுமையிலும் நன்மை தருவான்.

    • எண்ணற்ற உயிரினங்களை படைத்து பரிபாலித்து வருகின்றான் இறைவன்.
    • இறைவன் காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவசியம்.

    எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தனது சக்தியால், அருள் வளத்தால் எண்ணற்ற உயிரினங்களை படைத்து பரிபாலித்து வருகின்றான். அவனது அருட்பார்வையின் மூலம் மட்டுமே அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழ முடியும். இந்த உலக வாழ்க்கை மட்டு மின்றி மரணத்திற்கு பிறகு வரும் மறுமை வாழ்விலும் அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே பாவமன்னிப்பு கிடைக்கும்.

    எனவே இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் பாதுகாப்போடு நமது வாழ்வை அமைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் வழிகாட்டுகின்றன. அது குறித்து காண்போம்.

    இறைவனின் நெருக்கத்தையும், அருளையும் பெற வேண்டும் என்றால் முதலில் நமது சிந்தனையில், செயல்களில் இறையச்சம், இறை உணர்வு வெளிப்பட வேண்டும். இறைவன் காட்டிய வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவசியம். இதற்காக நாம் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்து அவனை புகழ்வது அவசியம்.

    அல்லாஹ் கூறியதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ, அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன்.

    அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன்.

    அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்". (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி) அல்லாஹ்வின் நல்லடியார்களே, ஏக இறைவன் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை மேற்கண்ட இந்த நபி மொழி மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். இதையே திருக்குர்ஆன் (2:152) வசனமும் இவ்வாறு உறுதிப்படுத்துகிறது:

    "அல்லாஹ் கூறுகின்றான், நீங்கள் என்னை நினைவு கூருங்கள்; நானும் உங்களை நினைவு கூருவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்".

    இறைவனை நினைவு கூர்வது கடினமான செயல் அல்ல. மிக மிக எளிய செயல். ஆனால் நம்மில் பலர் மற்ற பல சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும், பயனில்லாத காரியங்களுக்கும் அதிக நேரம் செலவிடுகின்றோம். குறிப்பாக மொபைல் போன்கள் பார்ப்பதிலும், அதில் உள்ள தீய நிகழ்வுகளை காண்பதிலும் ஆர்வமாக உள்ளோம். இன்னும் சிலர் இரவுகளில் நீண்ட நேரம் விழித்திருந்து சமூக வலைத்தளங்களில் தங்கள் பொன்னா நேரத்தை வீணடிக்கின்றார்கள்.

    இந்த செயல்களால் வீணாகப்போவது அவர்களது நேரம் மட்டுமல்ல. அவர்களின் மன நலமும், உடல் நலமும் கெட்டுப்போகின்றது.

    இன்னும் சிலர் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில், குடும்பத்தை குலைக்கும் காட்சிகள் கொண்ட தொடர்களில் தங்களை தொலைத்து நிம்மதி இழக்கின்றனர்.

    இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற தொலைபேசி, தொலைக்கட்சிகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் சில மணித்துளிகளை ஒதுக்கி இறைவனை நினைவுகூர்ந்து பாருங்கள். உங்கள் உள்ளம் இறையச்சத்தால் ஒளி பெறும். இறைவனின் அருட்கொடையும், பாதுகாப்பும் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தின் மீதும் அருவியாய் கொட்டும்.

    இதற்கு ஆதாரமாக விளங்கும் இந்த நபி மொழியைக்காண்போம்...

    "அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான். அவை:

    1) நீதி மிக்க ஆட்சியாளர்.

    2) இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

    3) தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்.

    4) பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்ளும் உள்ளம் உடையவர்.

    5) இறை வழியில் நட்பு கொண்ட இருவர்.

    6) அந்தஸ்தும் அழகும் நிறைந்த ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்" என்று கூறியவர்.

    7) தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் ரகசியமாகத் தர்மம் செய்தவர்"என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி). "நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் என்று திருக்குர்ஆன் (2:153) குறிப்பிடுகின்றது.

    எனவே, இறைவனின் நல்லடியார்களே நாம் தினமும் அல்லாஹ்வை நினைவு கூர்வோம், அவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அந்த இறைவனின் பாதுகாப்பையும், அருள் வளத்தையும் பெறுவோம், ஆமின்.

    ×