search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Protecting God"

    • எண்ணற்ற உயிரினங்களை படைத்து பரிபாலித்து வருகின்றான் இறைவன்.
    • இறைவன் காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவசியம்.

    எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் தனது சக்தியால், அருள் வளத்தால் எண்ணற்ற உயிரினங்களை படைத்து பரிபாலித்து வருகின்றான். அவனது அருட்பார்வையின் மூலம் மட்டுமே அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழ முடியும். இந்த உலக வாழ்க்கை மட்டு மின்றி மரணத்திற்கு பிறகு வரும் மறுமை வாழ்விலும் அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே பாவமன்னிப்பு கிடைக்கும்.

    எனவே இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் பாதுகாப்போடு நமது வாழ்வை அமைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் வழிகாட்டுகின்றன. அது குறித்து காண்போம்.

    இறைவனின் நெருக்கத்தையும், அருளையும் பெற வேண்டும் என்றால் முதலில் நமது சிந்தனையில், செயல்களில் இறையச்சம், இறை உணர்வு வெளிப்பட வேண்டும். இறைவன் காட்டிய வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவசியம். இதற்காக நாம் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்து அவனை புகழ்வது அவசியம்.

    அல்லாஹ் கூறியதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ, அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன்.

    அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன்.

    அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்". (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி) அல்லாஹ்வின் நல்லடியார்களே, ஏக இறைவன் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை மேற்கண்ட இந்த நபி மொழி மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். இதையே திருக்குர்ஆன் (2:152) வசனமும் இவ்வாறு உறுதிப்படுத்துகிறது:

    "அல்லாஹ் கூறுகின்றான், நீங்கள் என்னை நினைவு கூருங்கள்; நானும் உங்களை நினைவு கூருவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்".

    இறைவனை நினைவு கூர்வது கடினமான செயல் அல்ல. மிக மிக எளிய செயல். ஆனால் நம்மில் பலர் மற்ற பல சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும், பயனில்லாத காரியங்களுக்கும் அதிக நேரம் செலவிடுகின்றோம். குறிப்பாக மொபைல் போன்கள் பார்ப்பதிலும், அதில் உள்ள தீய நிகழ்வுகளை காண்பதிலும் ஆர்வமாக உள்ளோம். இன்னும் சிலர் இரவுகளில் நீண்ட நேரம் விழித்திருந்து சமூக வலைத்தளங்களில் தங்கள் பொன்னா நேரத்தை வீணடிக்கின்றார்கள்.

    இந்த செயல்களால் வீணாகப்போவது அவர்களது நேரம் மட்டுமல்ல. அவர்களின் மன நலமும், உடல் நலமும் கெட்டுப்போகின்றது.

    இன்னும் சிலர் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில், குடும்பத்தை குலைக்கும் காட்சிகள் கொண்ட தொடர்களில் தங்களை தொலைத்து நிம்மதி இழக்கின்றனர்.

    இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற தொலைபேசி, தொலைக்கட்சிகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் சில மணித்துளிகளை ஒதுக்கி இறைவனை நினைவுகூர்ந்து பாருங்கள். உங்கள் உள்ளம் இறையச்சத்தால் ஒளி பெறும். இறைவனின் அருட்கொடையும், பாதுகாப்பும் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தின் மீதும் அருவியாய் கொட்டும்.

    இதற்கு ஆதாரமாக விளங்கும் இந்த நபி மொழியைக்காண்போம்...

    "அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான். அவை:

    1) நீதி மிக்க ஆட்சியாளர்.

    2) இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

    3) தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்.

    4) பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்ளும் உள்ளம் உடையவர்.

    5) இறை வழியில் நட்பு கொண்ட இருவர்.

    6) அந்தஸ்தும் அழகும் நிறைந்த ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்" என்று கூறியவர்.

    7) தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் ரகசியமாகத் தர்மம் செய்தவர்"என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி). "நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் என்று திருக்குர்ஆன் (2:153) குறிப்பிடுகின்றது.

    எனவே, இறைவனின் நல்லடியார்களே நாம் தினமும் அல்லாஹ்வை நினைவு கூர்வோம், அவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அந்த இறைவனின் பாதுகாப்பையும், அருள் வளத்தையும் பெறுவோம், ஆமின்.

    ×