search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்த மருத்துவம்"

    • கோடை வெயில் தற்பொழுதே வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது.
    • படுக்கை விரிப்புகள் காட்டன் வகை துணியாக இருப்பது நல்லது.

    பருவநிலை மாற்றங்களால் இயற்கை மாறுவது வழக்கமே. இதுபோன்ற பருவகால மாற்றங்கள் பல்வேறு வகையான நோய்களையும், குறிப்பாக தொற்று நோய்களையும் ஏற்படுத்துகிறது. கோடை வெயில் தற்பொழுதே வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக கொடிய கொரோனா தொற்று நோயை எண்ணி பயப்படாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு நோயின் தொற்றும், பாதிப்பும் அதிகமாக இருந்தது. அது இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் இன்னொரு தொற்று நோய் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது ஒருபக்கம், கோடை கால தொற்று நோய்கள் மறுபக்கம் என நோய்களின் ஆதிக்கம் எல்லா காலத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

    வெயில் காலம் என்று சொல்லக் கூடிய கோடை காலத்தில் அம்மைநோய், குடற்புண்கள், மூலம், பவுத்திரம், சிறுநீரக தொற்று, வியர்க்குரு, மஞ்சள் காமாலை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்றவை அதிகமாக காணப்படும். தொற்று நோய்கள் என்பவை உணவு, குடிநீர், காற்று மற்றும் தொடுதல் மூலமாக வைரஸ் கிருமிகள் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவி குறி குணங்களை ஏற்படுத்தும்.

    சித்த மருத்துவத்தில் பலவித தொற்று நோய்கள் பற்றிய குறிப்புகளும், அந்நோய்களுக்கு மருத்துவ தீர்வுகளும், நோய்கள் ஏற்படாமல் இருக்க தற்காப்பு முறைகளையும் விரிவாக கூறப்பட்டுள்ளன. கோடை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையாக விளங்குவது அம்மை நோயாகும்.

    அம்மை நோய் நோய் வரும் வழி

    நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும், சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். நோயாளி இருமும் போதும், தும்மும்போதும் காற்றில் பரவுவதாலும், அவர்களின் உடைமைளை கையாள்வதன் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவும். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறை பல ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

    அம்மை நோயில் பெரியம்மை, சிறியம்மை, பூட்டுத்தாளம்மை, தட்டம்மை என பல வகைகள் உண்டு. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோயும், பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரசால் பூட்டுத்தாளம்மையும், ரூபியோலா வைரசால் தட்டம்மையும் ஏற்படுகிறது.

    பொதுவாக அனைத்து வகை அம்மை நோய்களிலும் ஜூரம், உடல்வலி, தலைவலி, உடல் சோர்வு, உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல், பின் உடலில் ஆங்காங்கு சிறு கொப்புளங்கள் ஏற்படும். ஏழாம் நாளில் ஜூரம் முழுவதும் நீங்கி கொப்புளங்கள் சுருங்கி, பின் பொருக்குகள் உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும். இருப்பினும் அம்மைநோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், இதயத்தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை வருமானால், கருவில் வளரும் சிசுவை பாதித்து பிறவி ஊனத்தையும் இது உண்டாக்கலாம்

    அம்மை நோயை பொறுத்த வரையில் அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்ற சித்தர்கள் வாக்கிற்கிணங்க சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு நமது உடல் தட்பவெட்ப மாறுதலடையும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் மனித உடலில் வெப்பம் அதிகரித்து, பித்தம் அதிகரிக்கும். இந்நிலையில் மழை பெய்யும் போது கபகுற்றம் சேர்ந்து, உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால், வைரஸ் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு இந்நோய் உண்டாகிறது. அதனால் இந்நோயில் அதிகரித்த பித்தத்தையும், கபத்தையும் சரி செய்ய வேண்டும். இப்படி முக்குற்றத்தை சமப்படுத்தி தகுந்த உணவு, தகுந்த சித்த மருந்துகளை நம் முன்னோர்கள் கொடுத்து கட்டுப்படுத்தி தீவிர நிலை பாதிப்பை குறைத்து குணம் கண்டு நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

    அவைகளில் முத்துப்பற்பம், பவள பற்பம், சிருங்கி பற்பம் மற்றும் ஜூரத்தை குறைக்க சாந்த சந்திரோதய மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், சந்தநாதி மாத்திரை, கோரைக்கிழங்கு சூரணம் போன்றவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கிருமிகளை அழிக்க சொடக்கு தக்காளி அல்லது மிளகு தக்காளி என்ற மூலிகையின் கற்கம் நெல்லிக்காய் அளவு (5 கிராம்) உள்ளுக்குள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வழங்க நோய் கிருமியின் தாக்கம் குறையும். நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாமலிருக்க வேப்பிலை, துளசி, மஞ்சள், பூங்கற்பூரம் நான்கையும் சேர்த்து கரைத்த நீரினால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

    நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர் அறைக்கு யாரேனும் ஒருவர் உடல் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அதாவது உடல் ஆரோக்கியமாக இருப்பவர் மட்டுமே செல்வது, உணவு வழங்குவது, குளிப்பாட்டுவது என இருக்கவேண்டும். மற்றவர்கள் இடைவெளி கடைபிடிப்பது தொற்று பரவாமல் தடுக்க உதவும். முகக்கவசம், கையுறை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    படுக்கை விரிப்புகள் காட்டன் வகை துணியாக இருப்பது நல்லது. மேலும் வைரஸ் தடுப்பு மூலிகைகள், வேப்பிலை, துளசி இலைகளை படுக்கை தலைமாட்டில் மற்றும் வீட்டின் வாசலில் சொறுகி வைக்கலாம். மேலும் படுக்கை விரிப்புகள் மஞ்சள் கலந்த நீரில் முக்கி நிழலில் உலர்த்தி தினசரி தலையனை உள்பட மாற்றவேண்டும்.

    நீர்ச்சத்து குறையாமல் இருக்க பழச்சாறு, இளநீர், நீர், மோர் கொடுக்கலாம். மலக்கட்டு இல்லாமல் இருக்க திரிபலா சூரணம், மாத்திரை அல்லது கடுக்காய் சூரணம் மருத்துவர் ஆலோசனை பெற்று கொடுக்கலாம். மேலும் வேப்பிலை, துளசி, மஞ்சள், சந்தனம் நான்கையும் வேண்டிய அளவு எடுத்து சேர்த்து அரைத்து மேற்பூச்சாக பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் தீவிரம் குறைந்து விரைவில் குணமடையும், தழும்பு ஏற்படாது.

    வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் அம்மை நோய்கள் பரவாமல் தடுக்கவும் சித்த மருத்துவம் கூறும் அறிவுரைகள்:

    உணவில் அதிக அளவு தயிர், மோர், கீரை, காய்கறிகள், மலை வாழைப்பழம் தர்பூசணி, இளநீர், கரும்புச்சாறு, பழைய நீராகாரம், வெள்ளரிப்பழம், முலாம்பழம், கருப்பு திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்கள் உட்கொள்ள வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மிகவும் நல்லது. நீராகாரம், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்றவற்றை தயிர், மோர் சேர்த்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், நுங்கு, வெட்டிவேர் மற்றும் நன்னாரி ஊறவைத்த குடிநீர், நெல்லிக்காய் ஊறல் குடிநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும். அதிக காரம், புளிப்பு, மசாலா அடங்கிய உணவுகள், கேக், பிஸ்கட், பரோட்டா போன்ற மைதா மாவினால் செய்த உணவு தின்பண்டங்கள், துரித உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும், சூடாக எதையும் கொடுக்க கூடாது. காட்டன் வகை ஆடைகள் அணியவேண்டும். இருக்கமாக ஆடை அணியக்கூடாது, உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. இதனால் அம்மை புண்கள் அழுத்தி வேதனையை உண்டாக்கும்.

    குளிர்ந்த நீரில் சிறிது வேப்பிலை, துளசி மற்றும் மஞ்சளை கலந்து ஊற வைத்து குளிப்பதால் அம்மை நோயின் தாக்கம் குறையும். பருத்தியினால் செய்யப்பட்ட உடைகளை அணிய வேண்டும். வேப்பிலை விரிப்புகள் வைரஸ் வீரியத்தை நிச்சயமாக குறைக்கும்.

    மற்றபடி நோய் வராமலிருக்க மலக்கட்டு கூடாது, இரவில் கண் விழித்தலை தவிர்க்க வேண்டும், சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இயற்கை உபாதைகளை அடக்க கூடாது. நல்லெண்ணெய் குளியல் வாரம் இருமுறை மேற்கொள்ளவேண்டும்.

    வீட்டில் வெட்டிவேர், தர்ப்பைப்புல், கோரைப்புல் பாய்களை விரிப்புகளாக பயன்படுத்தலாம், எப்பொழுதும் நல்லது. ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். காட்டன் துணியை உடுத்த வேண்டும். இரவில் தளர்ந்த ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இருக்கும் அறை, தூங்கும் அறைகள் காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும். அதிக காரம், அதிக புளிப்பு சுவையை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டாம். மண்பானையில் தண்ணீர் வைத்து குடிக்கவும். துரித உணவு, பதப்படுத்தி பாக்கெட் மற்றும் டின்களில் அடைத்து வைத்து விற்கப்படும் அனைத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    அடிக்கடி டீ குடிப்பதை தவிர்த்து பழச்சாறு பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மது, புகையை குறைக்கலாம் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். போதிய அளவில் உறக்கம், ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக மனது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    மேற்கண்ட வாறு சித்த மருத்துவத்தில் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வந்தால் கோடை காலத்தில் வரும் அம்மை நோய் மற்ற தொற்றுகளிலிருந்து (அதாவது மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, மூலம், பவுத்திரம், மலக்கட்டு, பலவித வைரஸ் தொற்று காய்ச்சல் போன்றவை) நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம், பிறருக்கும் பரவாமல் தடுக்கலாம்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • ஒருசில பெண்கள் தொடர்ச்சியாக இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
    • இது ஒரு சில பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் தொற்றினால் ஏற்படலாம்.

    பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக பருவம் அடைந்த பெண்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை வெள்ளைப்படுதல் ஆகும். மாதவிடாய்க்கு முன்னரும், கருவுறும் காலத்திலும் வெள்ளைப்படுதல் என்பது இயல்பான ஒரு நிகழ்வு. ஆனால் ஒருசில பெண்கள் தொடர்ச்சியாக இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு சில பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் தொற்றினால் ஏற்படலாம். ஏனெனில் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும்போது பிறப்புறுப்பு தொற்று நாய் ஏற்பட வழிவகுக்கும்.

    இதனால் இடுப்பு வலி, சோர்வு, சிறுநீர் பாதை தொற்று, அடிவயிற்றில் வலி, அதிகரித்த உடல் சூடு போன்றவை ஏற்படும். குமரி என்று அழைக்கப்படும் கற்றாழை வெள்ளைப்படுதலுக்கு மிகச்சிறந்த மருந்து ஆகும். கற்றாழையின் தோல்சீவி அதன் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாக கழுவி பழச்சாறு போல அரைத்து குடித்து வரலாம். மதிய உணவில் மோர் சேர்த்து வரலாம்.

    மேலும் வெந்தயக் கீரையையோ அல்லது வெந்தயத்தினையோ உணவில் சேர்த்து வரலாம்.வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை பருகலாம். சித்த மருத்துவமனைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தினை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரினைக் கொண்டு பிறப்புறுப்பினை கழுவி வரலாம். இளநீர் உடலை குளிர்ச்சியாக்கும் செய்கை உடையது. எனவே வெள்ளைப்படுதல் தொல்லை இருப்போர் இளநீர் பருகலாம்.

    வாரத்தில் 2 நாட்கள் தவறாது எண்ணெய் முழுக்கு செய்தல், பச்சை மிளகாய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்த்தல், அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் சூட்டினை தவிர்க்க காட்டனிலான விரிப்பினை பயன்படுத்துதல் போன்றவை உடல் சூட்டினை கட்டுப்படுத்தி வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.

    இருப்பினும் கசிவுகள் நிறம்மாறி ஏற்பட்டாலோ, அதிகப்படியான துர்நாற்ற கசிவுகள் ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். சித்த மருத்துவத்தில் இதற்கான முறையான மருந்துகள் உள்ளன. மேலும் மாதவிடாய் காலத்தில் மாதுளை, ஆப்பிள் போன்ற பழவகைகள், உளுந்து களி, எள் உருண்டை, வெந்தயக் களி போன்ற சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • சிலருக்கு இடுப்பு எலும்பில் ஜவ்வு விலகியிருந்தால் கழுத்து எலும்பு, நரம்பு வலி ஏற்படும்.
    • காயங்கள், விபத்துக்கள் இவைகளைத் தொடர்ந்தும் தண்டுவடப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையேயும் ஒரு சதையாலான 'டிஸ்க்' இருக்கும். இந்தப் பகுதியில் எண்ணெய் போன்ற `சைனோவியல்' என்ற திரவம் இருக்கும். இரண்டு எலும்புகள் உராய்வில்லாமல் செயல்படவும், உடல் அசைவிற்கும் இது உதவுகிறது.

    நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், காயங்கள், விபத்துக்கள் இவைகளைத் தொடர்ந்தும் தண்டுவடப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1. அமுக்கரா சூரணம் 1 கிராம், சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி பவள பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும். (அல்லது)

    அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கிமுத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2. அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மிகி, முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3.தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித் தைலம், சிவப்பு குக்கில் தைலம், விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு, இடுப்பு, கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது நல்லது.

    4.வாதமடக்கி, வாதநாராயணன், முடக்கற்றான், தழுதாழை, நொச்சி, பழுத்த எருக்கம் இலை இவைகளை எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

    5. உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு, முருங்கை கீரை, முடக்கத்தான் கீரை, முட்டை வெண் கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை, வெந்தயம், உளுந்து இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • வாயுத்தொல்லை இருப்பதாக பலர் கூற கேட்டு இருப்போம்.
    • அதற்கு பல காரணங்கள் உள்ளன.

    வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைத்துக்கொள்வதே சிறந்தது.

    வாயுத்தொல்லை இருப்பதாக பலர் கூற கேட்டு இருப்போம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

    சர்க்கரை, கொழுப்பு, ரத்த அளவு, உப்புச்சத்து, எலக்ட்ரோலைட்ஸ் ஆகியவற்றை டாக்டர் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப்பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், மன உளைச்சல் இருந்தாலும், பொரித்த உணவு, எண்ணெய், நெய், இனிப்பு, கார வகை பலகாரங்களை அடிக்கடி உண்பது, மது, புகைப்பழக்கம் இருந்தாலும் வாயுத் தொல்லை வரக்கூடும். இது, உடலின் பல பகுதிகளில் தசைப்பிடிப்பாக வெளிப்பட வாய்ப்புள்ளது.

    மலக்கட்டு இருந்தால் திரிபலா சூரண மாத்திரை காலை, மாலை இரண்டும், அல்லது நிலாவரை சூரண மாத்திரை இரவில் இரண்டும் எடுத்துக்கொள்ளலாம். வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்ற பிரச்சினை இருந்தாலும், அஜீரணம் இருந்தாலும் பஞ்ச தீபாக்கினி சூரண மாத்திரை (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் கலந்தது) வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரை ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி லேகியம், அஸ்வகந்தி லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் ஆகாரத்துக்குப் பிறகு சாப்பிடலாம். ஓமநீர் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 10 மி.லி. சாப்பிடலாம்.

    உடலின் தசைத்துடிப்பு தீர, தலை நடுக்கம் தீர, மேற்கண்ட மருந்துகளுடன் அமுக்கரா சூரண மாத்திரை இரண்டைக் காலை, இரவு சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள்.

    • கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும்.
    • நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும்.

    'சேற்றுப்புண்' தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளின் மூலம் வரக்கூடியது. சேற்றுப் புண்ணை சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விட்டால் அது மேலும் அதிகமாகி வலியை உண்டாக்கி விடும். கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும். இதனால் நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சேற்றுப்புண் வந்தால் விரைவில் ஆறவே செய்யாது என்பதால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை கொண்டு ஒரே நாளில் சேற்றுப்புண் பிரச்சனையிலிருந்து நிவாரணம் காண முடியும்.

    ஈரப்பதமான இடங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதும், அழுக்கு படிந்த நீரில் காலை வைத்து நடந்து செல்வதும் சேற்றுப்புண் வர காரணமாக அமைகிறது. விரல் இடுக்குகளில் இருக்கும் பகுதியில் அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும். இதனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் மற்ற கால் விரல்களுக்கும் பரவி அதிகமாகிவிடும். இதனால் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்வது நல்லது.

    இது சேற்றுப்புண் அல்லது 'அத்தலட்ஸ்' புண் என்று அழைக்கப்படும் 'டீனியா பெடிஸ்' என்னும் பூஞ்சை வகை நோய். இது வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும் மழைக்காலங்களில் செருப்பு இல்லாமல் நடப்பவர்களுக்கு அதிகமாக வரும். கால் விரல் இடுக்குகளில் வெளுத்த நிறமுடைய புண் ஏற்பட்டு அரிப்பு, தினவு அதிகமாக இருக்கும். சொரிந்த பிறகு எரிச்சல் காணப்படும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) பறங்கிப்பட்டை சூரணம் ஒரு கிராம், கந்தக பற்பம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    2) சேற்றுப் புண் உள்ள பகுதிகளில் அமிர்த மெழுகு, கிளிஞ்சல் மெழுகு, வங்க வெண்ணெய் இவைகளில் ஒன்றைப்பூசி வர வேண்டும்.

    3) கடுக்காய், மாசிக்காய், தான்றிக்காய் போன்ற துவர்ப்புள்ள பொடிகளால் புண்ணைக்கழுவி வர வேண்டும். 4) புண்ணைக் கழுவுவதற்கு புளியந்தளிர் அவித்த நீர், படிகார நீர், வேப்பந்தளிர் அவித்த நீரையும் பயன்படுத்தலாம்.

    5) கால்களை காலை, இரவு வெந்நீரில் கழுவி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • அமுக்கரா லேகியம், சதாவாரி இலகம், முருங்கை பூ லேகியம் உள்ளிட்ட பல மருந்துகள் உள்ளன.
    • சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

    கண்ட கண்ட கடைகளில் வாங்கி சாப்பிடும் செக்ஸ் மாத்திரைகள் மற்றும் மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்து அதிகமாகவே உள்ளது.

    ஆனால் சித்த மருத்துவத்தில் எந்தவித சிக்கலையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்துகள் தாராளமாய் கிடைக்கின்றன. இது தொடர்பாக சித்தா டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

    இன்றைய இளைஞர்கள் பலர் கடுமையான மன அழுத்தத்தில் தவிக்கிறார்கள். இளம் வயதிலேயே சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் அவர்களை ஒட்டிக் கொள்கிறது. இதன் காரணமாகவே திருமணமானதும் அவர்களால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது.

    இதற்கு சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன. அமுக்கரா லேகியம், சதாவாரி இலகம், முருங்கை பூ லேகியம் உள்ளிட்ட பல மருந்துகள் உள்ளன. அல்வா வடிவில் இருக்கும் இந்த லேகியங்களை தொடர்ந்து சாப்பிட்டால் போதும் இல்லற இன்பம் நிச்சயம் கிடைக்கும்.

    அதே நேரத்தில் பவுடர் வடிவிலான ஜாதிக்காய் சூரணமும் கை கொடுக்கிறது. குறிப்பிட்ட சில உணவு வகைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதும் பலன் அளிக்கும். வாழைப்பூவை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். செக்ஸ் உணர்வை தூண்டக் கூடிய ஹார்மோன் இதனால் எளிதில் சுரக்கும், முருங்கை பூவை பாலில் சுண்ட காய்ச்சி பருகுவதும் நல்ல பலன் அளிக்கும். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஆபத்தில் முடிந்து விடும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம்.
    • சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும்.

    மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாதது. பொதுவாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கால் மற்றவர்கள் மீது எரிச்சல் , முகப்பரு, சோர்வான நிலை போன்றவையும் ஏற்படக்கூடியது சகஜம். அதேசமயம் தலைவலி, வாந்தி, கால்வலி, குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும்.

    இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி தோன்றும்.அடிவயிற்று பகுதியில் அதீத வலியிருக்கும். இந்த வலி இடுப்பு மற்றும் கால்களுக்கு பரவும். ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும். சில பெண்கள் பூப்படைந்த காலத்துக்கு பிறகு வரும் மாதவிடாய் முதல் திருமணம் வரையிலும் கூட இந்த வயிறுவலியை தீவிரமாக உணர்வார்கள். இந்நாளில் சுருண்டு படுத்துவிடுவார்கள். இந்த வலியைதாண்டி சிலருக்கு அதிக உதிரபோக்கு, உடல் பலவீனம், உடல் சோர்வு போன்றவையும் கூட உண்டாகும்.

    மாதவிடாய் காலங்களில் காணப்படும் வயிற்றுவலி, வாந்தி, முதுகுவலி இவற்றை 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhoea) என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும் பெண்களுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறது.இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.

    இதற்கான சித்த மருத்துவத் தீர்வுகள்: 1) புதினா இலையின் சாறு, எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வர மாதவிடாய் வயிற்று வலி நீங்கும். 2)திரிகடுகு, ஓமம், இந்துப்பு, கழற்சி பருப்பு, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து 500 மி.கி. எடுத்து அதை ஒரு கிராம் நல்லெண்ணெய்யில் கலந்து கொடுக்க வலி தீரும். 3) குன்ம குடோரி மெழுகு 500 மி.கி. வீதம் காலை இரவு கொடுக்க வேண்டும். 4) குமரி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

    கருப்பையை வலுப்படுத்த, உணவில் உளுந்தங்களி, வெந்தயக்களி, அத்திப்பழம், மாதுளம்பழம், வெண்பூசணி சாறு, சிவப்பு கொண்டைக்கடலை, நாட்டுக் கோழி முட்டை, நல்லெண்ணெய் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும்.
    • கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது கண்கள். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் மாறும். கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    1) பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். உணவில் கேரட், பப்பாளிப் பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    2) பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    3) இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்து தூங்க வேண்டும்.

    4) சந்திர தரிசனம்: இரவு உணவுக்குப்பின் ஒவ்வொரு கண்ணிலும் தலா மூன்று துளி சுத்தமான நீர் விட்டு, இமைகளை தேய்த்து, சந்திரனை (நிலவைப்) பார்ப்பது நல்லது. வானம் சுத்தமாக உள்ள காலத்தில் இரு கை விரல்களை சேர்த்து சதுரம் போல செய்து அதன் மூலம் சந்திரனை சுமார் 20 நிமிட நேரம் பார்த்தல் 'சந்திர தரிசனம்' ஆகும். இது நமது சித்தர்கள் அரு ளிய வழிமுறையாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கண் ஒளி கூடும், கண் குளிர்ச்சி பெறும்.

    5) இரவு படுக்கும் முன் தினமும் திரிபலா சூரணம் ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

    6) தான்றிக்காய் தோல் பொடி 500 மி.கி. கிராம் வீதம் தேனில் சாப்பிட்டு வர கண் ஒளி கூடும்.

    7) தூதுவளைக் காய் மற்றும் கீரையை சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணில் உண்டாகும் பித்த நீர் முதலான நோய்கள் நீங்கும்.

    8) சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணித் தைலம் இவைகளில் ஒன்றை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

    9) பஞ்ச கற்ப விதி: கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடித்து பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வந்தால் கண் ஒளி பெறும். உடல் சூடு குறையும்.

    10) இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும். அதிகாலை 4-5 மணிக்குள் எழ வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்படும்.
    • இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

    உலக மக்களுக்கு மரண பயத்தை உண்டாக்கி உலுக்கிய கொரோனா மூன்றாம் அலையிலிருந்து இந்தியா சிறிது காலம் ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இன்புளூயென்சா வைரஸ் தொற்று மக்களிடையே பரவலாக காணப்பட்டு வருகிறது.

    சாதாரணமான சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளாக தென்பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் பெரியவர்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்நோய்க்கு நவீன மருத்துவத்தில் ஆன்டிபயாட்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டிருக்கும் தருணத்தில் வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வேறு உடல் பாதிப்புகள் ஏற்படாதவாறு சித்த மருத்துவம் பல வழிமுறைகளை அறிவுறுத்துகிறது.

    இன்புளூயென்சா எனப்படுவது புளூ என பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். இதில் பல்வேறு வகை உண்டு. இதில் ஏ, பி, சி, டி என நான்கு வகையான வைரஸ் காணப்பட்டாலும், முதல் மூன்று வகை மட்டுமே மனிதர்களை தாக்குகின்றன.

    இன்புளூயென்சா வைரஸ் தொற்று இருக்கும் நபர்களில் ஏறக்குறைய 33 சதவீதம் நபர்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் காணப்படுவதில்லை, வெளியில் தெரிவதும் இல்லை.

    இன்புளூயன்சா நோய் தாக்கினால் அதிக காய்ச்சல் (100 முதல் 103 பாரன்ஹீட்), மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, தசை வலி, தலைவலி, தொடர் இருமல், உடல் சோர்வு, அசதி, கைகால் தளர்ச்சி, வலி போன்றவை பொதுவான அறிகுறிகளாக இருக்கும்.

    வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர்தான் இந்த அறிகுறிகள் தென்படும். குறைந்தது ஒரு வாரத்திற்கு இந்த அறிகுறிகளுடன் நோயின் தாக்கம் இருக்கும். இருமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும்.

    இந்த நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும் போதும் தும்மும் போதும் அதன் வழியாக வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. எனவே நோய் தொற்று ஏற்பட்டவர்கள் பிறருக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது பரவுவதை தடுக்க உதவும்.

    தொண்டை சளி அல்லது மூக்கு பரிசோதனையின் மூலம் தொற்று நோய் பாதிப்பை உறுதிப்படுத்தப் படலாம். சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை மூலம் என்ன நோய் என்று எளிதாக கணிக்க முடியும். விரைவு பரிசோதனை விரைவில் குணமடைய உதவும்.சித்த மருத்துவத்தில் இன்புளூயன்சா காய்ச்சல், இருமல் சளி தீர்க்கும் எளிய மருந்து மாத்திரைகள் உள்ளன. நம் உடலில் இரண்டு வகை நோய் எதிர்ப்பு திறன் உள்ளன. அதில் இன்னேட் இம்யூனிட்டி என்பது இயல்பாகவே நம் உடலில் உள்ளது. அக்கொயர்டு இம்யூனிட்டி என்பது நோய் தொற்றினால் உண்டாவது.

    இந்த இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகைப்படும். செல்வழி நோய் தற்காப்பு, எதிர்ப்பு பொருள் வழி நோய் தற்காப்பு. உடலில் நோய் தொற்றினாலோ, தடுப்பூசிகளினாலோ இரண்டாம் வகை நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை இந்த வைரஸ் கிருமிகள் திசை திருப்புவதால் செல்வழி நோய் தற்காப்பை நாம் அதிகரிக்க வேண்டும்.

    இதற்கு சித்த மருத்துவத்தில் அநேக மருந்துகள் உள்ளன. அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 1.அமுக்கரா சூரணம்-மாத்திரை, 2.நெல்லிக்காய் லேகியம், 3.திரிபலா சூரணம்-மாத்திரை.

    காய்ச்சல், சளி, இருமலுக்கு 1.பிரம்மானந்த பைரவ மாத்திரை, 2.பாலசஞ்சீவி மாத்திரை, 3.வசந்த குசுமாகர மாத்திரை, 4.சாந்த சந்திரோதய மாத்திரை, 5.தாளிசாதி சூரணம், 6.திரிகடுகு சூரணம், 7.சீந்தில் சூரணம், 8.நிலவேம்பு குடிநீர், 9.கபசுர குடிநீர், 10.திப்பிலி ரசாயனம், 11.பூரண சந்திரோதயம், 12.முத்து பற்பம், 13.பவள பற்பம், 14.முத்து சிப்பி பற்பம், 15.ஆடாதோடை மணப்பாகு முதலிய மருந்துகள் முக்கியமாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் மற்றும் பிற வகை காய்ச்சல்களுக்கும் கைகொடுக்கும், குணப்படுத்தும் பக்க விளைவு இல்லாத, விலை குறைந்த மருந்துகளாகும்.

    எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீர் மிகச்சிறந்த மருந்து. இது அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். நோயாளர் வயது, குறிகுணங்கள், நோயின் வகை, நோயின் தீவிரம் ஆகியவற்றை ஆராய்ந்து தெரிந்து சித்த மருத்துவர் மருந்துகளை தேர்ந்தெடுத்து வழங்கி இவ்வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைத்து நோயாளர் விரைந்து குணமடைய வழிவகை செய்வர். மேலும் நோய் வராமல் தடுக்க தொற்றியிருந்தது பாதுகாத்துக்கொள்ள பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமச்சீர் உணவுகளை அதாவது சத்தான அறுசுவை உணவுகளை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல், வேண்டிய அளவு நீர் அருந்துதல், மலத்தை சரியான நேரத்தில் காலை மாலை அடக்காமல் வெளியேற்றுதல், தூக்கத்தை அடக்காமல் இருப்பது, நேரத்தில் தூங்குதல், எல்லா காலங்களிலும் தண்ணீரை கொதிக்கவைத்து ஆறிய பின் குடிப்பது, துரித உணவுகளை தவிர்ப்பது போன்றவற்றுடன் மாறுபட்ட குறிகுணங்கள் உடலில் தோன்றியதுமே உடனே மருத்துவரிடம் சென்று சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இச்சமயங்களில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் குறிகுணங்களைக்கூறி தயவுசெய்து யாரும் மருந்து வாங்கி சாப்பிடவேண்டாம். மேலும் மருந்துக்கடை உரிமையாளர்களும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பணத்திற்காக மருந்தை விற்பதுடன் விலை மதிப்பில்லா உயிரோடு விளையாட வேண்டாம்.

    உடல், உயிர் பாதிப்பிற்கு நாம் காரணமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு கடிக்காத வண்ணம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளுக்கு இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன.

    உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வைட்டமின்கள், தாதுக்கள் குறைவாக இருப்பது, ரத்த சோகை, ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் ஈஸ்னோபில் செல்கள், ஒவ்வாமை, சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகள் இவைகளால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வருகிறது.

    இரண்டு நாட்களுக்கும் மேலாக தீவிர காய்ச்சல், அதீத இருமலுடன் வரும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று இருப்பதோடு, சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதோடு, சில நேரங்களில் அதீத அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.காய்ச்சல் இல்லாமல் சாதாரண இருமல் மட்டும் இருந்தால், இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.

    சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. குறிப்பாக சளி, இருமல், குணமடைய தாளிசாதி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து தேனில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும். ஆடாதோடை மணப்பாகு-5 மி.லி. வீதம் காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். மேலும், தூதுவளை நெய் 5 மி.லி. வீதம் இரவு வேளை சாப்பிடலாம்.

    வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை கொண்டே சளி, இருமலை குணப்படுத்தலாம். துளசி-5 இலைகள், கற்பூரவல்லி 2 இலைகள், ஆடாதோடை 2 இலைகள் எடுத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சூடுபடுத்தி காலை 5 மி.லி, இரவு 5 மி.லி வீதம் கொடுக்க வேண்டும். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். முட்டையை ஆப் பாயில் செய்து அதனுடன் மிளகு கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.

    பாலில், மிளகு, மஞ்சள், சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.

    குழந்தைகள் குடிக்கும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். மஞ்சள் சளியை நீக்கும்.

    2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

    சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.
    • கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்.

    இயல்பாக எல்லா மகளிருக்கும் பிறப்பு உறுப்பு வறட்சி ஆகாமல் இருக்க, சிறிதளவு வெண்மை நிறக்கசிவு வெளிப்படும். இதில் லேக்டிக் அமிலம் இருப்பதால் அது தொற்றுகளிலிருந்து பிறப்பு உறுப்பை பாதுகாக்கிறது. உடலுறவுக்கு முன்பும், உடலுறவின் போதும், சினை முட்டை வெளிப்படும் காலங்களிலும் வெண்கசிவு சற்று அதிகமாக காணப்படுவது இயற்கையான ஒன்றாகும்.

    சினைப்பையில் இருந்து சினை முட்டை வெளியாகி, கருப்பைக்கு வரும் காலத்திலும், மாத விலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும், பின்பும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்திய உறவின் போது, பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.

    ஆனால், கசிவின் அளவு அதிகரித்தும், நிறம் மாறியும், நாற்றத்துடனும் காணப்படுதல், பிறப்புறுப்பில் ஊறல், முதுகுவலி போன்றவை சேர்ந்து காணப்பட்டால், அது பெண்களின் பிறப்புறுப்பு நோய்களை காட்டுவதாகும்.நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது முதல் அறிகுறி. பிறப்புறுப்பில் அரிப்பும், உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கு இருந்தால் அது உடனடியாக கவனிக்கத் தகுந்த அறிகுறியாகும்.

    சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால், தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன.

    வெண்கசிவு அதிகரித்தலுக்கான பிற காரணங்கள்: கருப்பை மற்றும் உள் உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் (Pelvic Inflammatory Diseases), சுகாதாரமற்ற கழிவறைகளை உபயோகித்தல், உடலுறவின் மூலம் பரவும் நோய்கள் (Sexually Transmitted Diseases - syphilis and gonorrhoea), பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா (Bacterial vaginosis), மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் (Candidiasis, Trichomonas vaginalis), கருப்பை கழுத்து உஷ்ணம் (Cervicitis), நெடுநாட்களாக கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களை எடுக்காமல் இருப்பது, கருப்பை கழுத்து புற்றுநோய் (Cervicalcancer). இதுபோன்று பல காரணங்களால் வெண்கசிவு அதிகரித்து, நிறம் மாறி, நாற்றத்துடன் காணப்படும்.

    வெள்ளைப்படுதலுக்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1) கீழாநெல்லி சூரணம் 1 முதல் 2 கிராம் எடுத்து வெந்நீர் அல்லது மோரில் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்,

    2) வெண் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு அதன் சதையை சிறிதளவு நீர்விட்டு அரைத்து குடிக்கவும். அல்லது சோற்றுக்கற்றாழை ஜெல்லை 7 முறை தண்ணீரில் கழுவி மோரில் இஞ்சி சேர்த்து, நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்,

    3) ஓரிதழ் தாமரை சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, இரவு பாலில் குடித்து வரவேண்டும்,

    4) திரிபலா சூரணம் ஒரு கிராம், படிகார பற்பம் 100 மி.கி., சிலாசத்து பற்பம் 100 மி.கி. காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின்சாப்பிட வேண்டும்,

    5) வெண் பூசணி லேகியம் 1 முதல் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும், 6) படிகார நீர் வைத்து பிறப்புறுப்பை கழுவ வேண்டும்,

    7) நீங்கள் உட்காரும் அளவுள்ள பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் வெதுவெதுப்பான வெந்நீர் எடுத்துக்கொண்டு அதில் திரிபலா சூரணம் சிறிதளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதை ஆங்கிலத்தில் சிட்ஸ் பாத் (Sitz Bath) என்பார்கள்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது.
    • ஆஸ்துமா என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும்.

    இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். நுரையீரலுக்குள் நூற்றுக்கணக்கான காற்றுக் குழாய்கள் உள்ளது. பெரிதாக உள்ள காற்று குழாய்களுக்கு பிராங்கை (Bronchi) என்றும், சிறிய காற்றுக் குழாய்களுக்கு பிராங்கியோல்ஸ் (Bronchioles) என்றும் பெயர். இந்த காற்றுக் குழாய்களை இயக்கும் தசைகள் தான், இவை சுருங்கவும் விரியவும் செய்கிறது.

    நாம் சுவாசிக்கும் காற்றானது இந்த காற்றுக் குழாய்களின் வழியே சென்று நுரையீரல்களில் உள்ள கோடிக்கணக்கான மிகச்சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகளுக்குள் நிரம்புகிறது. இந்தச்சிறிய காற்றுப் பைகளுக்கு 'ஆல்வியோலை' (Alveoli) என்று பெயர். இரைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுக்காற்றை சுவாசித்து, வெளிவிடுவதற்கு முயற்சிக்கும் போது காற்றுக் குழாய்கள் விரிவடைவதற்கு பதிலாக, தசைகளின் இறுக்கத்தால் சுருங்கி விடுகின்றன. இதற்கு 'பிராங்கோஸ்பாசம்' (Bronchospasm) என்று பெயர். இதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதையே இரைப்பு (ஆஸ்துமா) என்கிறோம்.

    நோய் காரணங்கள்: 1) பாரம்பரியம், 2) காற்றிலுள்ள தூசிகளின் ஒவ்வாமை (மகரந்தத் தூள், கழிவுப்பொருட்கள், சில ரசாயனப் பொருட்கள்), 3) புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, வாசனைப் பொருட்கள், குறிப்பிட்ட உணவுகள், 4) ஹிஸ்டமின் (Histamine), அசைட்டைல் கோலைன் (Acetyl choline) போன்றவை ரத்தத்தில் அதிகரிக்கும் போது, 5) உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள மாறுபாடுகளால் ரத்தத்தில் 'இம்யூனோகுளோபுலின் ஈ' அதிகரித்து இருப்பது, 6) தீவிர உடற்பயிற்சி, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, தீவிர இதய மற்றும் சிறுநீரக நோய், நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது. இரைப்பு நோயைக் குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளது.

    சித்த மருந்துகள்: 1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி., இவைகளை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவைகளில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    ×