search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனக்கூடு ஊர்வலம்"

    • ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வருவதால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கியது.

    தொடர்ந்து, சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்ன ரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் சென்று இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைந்தது.

    கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுள் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.

    நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சந்தனக்கூடு ஊர்வலத்தை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
    • சந்தனக்கூடு விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டியில் 873-ம் ஆண்டு ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லாஹ் மத நல்லிணக்க சந்தனகூடு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 21-ந்தேதி மதியம் மதநல்லிணக்க கந்தூரி விழா மற்றும் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி 10-ம் நாள் கே.புதுப்பட்டி, வலசைப்பட்டி, கரியாம்பட்டி இந்துக்களும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை,சிவகங்கை கரிசல்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் ஒன்று சேர்ந்து மச்சி வீட்டு அம்மா தர்ஹாவில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட உருஸ் எனும் சந்தனகூடு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே சென்றது. விழாவை முன்னிட்டு கண்ணை கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கரிசல்பட்டி சந்தனக்கூடு விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
    • அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    கரூர்:

    அரவக்குறிச்சியில் மகான் காயலா பாவா 133-வது ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் கொடியேற்றம், கொடி ஊர்வலம், வாசக மாலை போர்வை ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதில், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு காயலா பாவாவை வழிபட்டனர்."

    ×