search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகப்பட்டினம்"

    • வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை.
    • வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி பட்டாசுகள், மேளதாளங்கள் முழங்க கட்சியினர், தங்களது ஆதரவு வேட்பாளரை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.

    நாகை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜி.எம். ரமேஷ் நேற்று காலை நாகூர் சிவன் தேரடி தெருவில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து நாகூர் பட்டினச்சேரி, நாகூர் பஸ் நிறுத்தம், நாகை காடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து நாகை மேட்டுபங்களாவில் அவர் பிரசாரத்தை முடித்து விட்டு புதிய நம்பியார் நகருக்கு செல்ல தொடங்கினார். அப்போது நாகை நகராட்சி அலுவலகம் அருகே மெயின் ரோட்டில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து வேட்பாளர் ரமேசுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பட்டாசு வெடித்ததில் அதிலிருந்து தீப்பொறிகள் பறந்து அருகில் உள்ள ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பக்கிரிசாமி(வயது 61) என்பவரது கூரை வீட்டில் விழுந்ததில், அவரது கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. பின்னர் தீயானது காற்றின் வேகம் காரணமாக மளமளவென எரிய தொடங்கியது.

    அப்போது வீட்டில் இருந்த பக்கிரிசாமி, அவரது மனைவி பானுமதி, மகள் ஸ்ரீபிரியா, அவரது மகள் ஸ்ரீலேகா, மருமகள் ரேவதி ஆகியோர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    வீட்டின் மேற்பகுதியில் தீ பிடித்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    ஆனாலும் வீட்டில் இருந்த 2 டி.விக்கள், 2 பிரிட்ஜ்கள், 2 கட்டில்கள், வாஷிங் மெஷின், 6 பீரோக்கள், 6 மின்விசிறிகள், பாத்திரங்கள் மற்றும் புத்தகங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டுகொள்ளாமல் சென்றதாகக்கூறி, பா.ஜனதாவினரை கண்டித்து பக்கிரிசாமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராஜா சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பக்கிரிசாமி வீட்டுக்கு வந்து சேதங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு தருவதாக பக்கிரிசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் பிரசாரத்தின்போது வெடி வெடித்து குடிசை வீடுகள் எரிந்த விவகாரத்தில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வீட்டின் உரிமையாளர்கள், விஏஓ கொடுத்த புகாரின்பேரில் 3 வழக்குகள் பதிவு செய்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்
    • பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார்

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    • ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வருவதால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கியது.

    தொடர்ந்து, சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்ன ரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் சென்று இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைந்தது.

    கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுள் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.

    நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சந்தனக்கூடு ஊர்வலத்தை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
    • ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவையொட்டி முன்னதாக கடந்த 10-ந் தேதி தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    கந்தூரி விழாவையொட்டி நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமானது யாகூசன் பள்ளி தெரு, நூல்கடை சந்து, சாலப்பள்ளி தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால்பண்ணைச்சேரி வழியாக நாகூர் சென்றது.

    ஊர்வலத்தில் மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் என ஏராளமான அலங்கார வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கொடி ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    நாகையில் இருந்து நாகூர் வரை சாலைகளின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பின்னர் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது கண்கவர் வான வேடிக்கையுடன் நாகூர் தர்கா, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் வருகிற 23-ந்தேதி இரவு நடக்கிறது. மறுநாள் 24-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • அங்கு சென்று சரஸ்வதி தேவியை வழிபட்டு சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெறலாம்.
    • பனையம்பள்ளியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராயிபாளையத்தில் உள்ளது.

    நாகூர்

    நாகப்பட்டினத்திற்கருகில் உள்ள நாகூர் என்னும் ஊரில் நாகராசா கோவிலில் சரஸ்வதியின் செப்புத் திருமேனி உள்ளது.

    அங்கும் சென்று சரஸ்வதி தேவியை வழிபட்டு சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெறலாம்.

    மு.ஈ.ச. மலை

    பவானிசாகர் அருகில் மாதம்பாளையம் ஊராட்சியில் மாராயிபாளையம் என்னும் கிராமத்தில் ஒரு சிறு மலையில்

    முருகன், ஈஸ்வரன், சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித் தனி மூலஸ்தான கோவில்கள் உள்ளது.

    புதியதாக கட்டப்பட்ட இக்கோவில் மலை புஞ்சை புளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் செல்லும் வழியில்

    பனையம்பள்ளியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராயிபாளையத்தில் உள்ளது.

    இக்கோவிலுக்குச் செல்ல 800 படிகள் கொண்ட பாதையும், கனரக வாகனங்கள் செல்ல தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    வடநாட்டில் புஷ்கரத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் மலைமீது சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட கோவில் இது ஒன்றே.

    • உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைக்கின்றனர்.
    • நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, தோசை முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.

    இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நடத்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும் என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.

    இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பெச்சாயி அம்மன். மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள். அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்து குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள். தனது தவறை உணர்ந்த மகாராஜா, பெச்சாயி அம்மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார். கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா.

    அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் வல்லங்குளம் எனப்பட்டது. காலம் உருண்டோடியது. ஏறத்தாழ 500-700 ஆண்டு களுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.

    • சமுதாயக்கூடம் கட்டிடத்தை ஷாநவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி முனிசிபல் பேட்டையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 நிதியின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம் கட்டிடத்தை, நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷாநவாஸ் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 17-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பா.திலகர், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் நா.அருட்செல்வன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தங்க மீனை கடலில் விட்டு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி.
    • அதிபத்த நாயனார் அதை கடலில் விட்டு இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனார் தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாகை நம்பியார் நகரில் இருந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது தீவிர அன்பு கொண்டிருந்த அதிபத்த நாயனார், தினந்தோறும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் மீன்களில் பெரிய மீனையும் மற்றும் முதல் மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விட்டு விடுவார்.

    ஒரு நாள் அதிபத்த நாயனார் வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அவர் மனம் தளராமல், பிடிபட்ட ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அவரது வலையில் ஒரே ஒரு மீன்மட்டுமே சிக்கியது. அப்போதும் அதிபத்தர் கிடைத்த ஒரே ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார்.

    இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அதிபத்த நாயனாரின் வலையில் தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை சிக்க செய்தார். வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை அதிபத்த நாயனார் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார்.

    அவரது அன்பில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி சகிதமாக ரிஷப வாகனத்தில் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு கடற்கரைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் நடப்பதால் ஊர்வலம்நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை நம்பியார் நகர் புதியஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்த நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்தும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்களும் சீர்வரிசைகளை ஊர்வலமாக புதிய கடற்கரை நோக்கி எடுத்து வந்தனர்.

    பின்னர் புதிய கடற்கரையில் சீர்வரிசை தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், செயல் அலுவலர்கள் தனலட்சுமி, பூமிநாதன், முருகன், சண்முகராஜன், ஆய்வாளர்கள் ராமதாஸ், சதீஸ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நாகை புதிய கடற்கரை நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
    • அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள்.

    இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.

    விரிதிரைசூழ் கடற்நாகை அதிபதற்கடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து சொல்லப்படுகிற அதிபத்த நாயனார் பற்றி இந்த நாயனார் வரலாற்றில் தெரிந்து கொள்ளலாம்.

    சோழநாட்டில் நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் திருநுழைப்பாடி என்ற இடத்தில் மீன்பிடித்து வியாபாரம் செய்யக்கூடிய மீனவ சமுதாயமான பரதவ இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபத்த நாயனார் இருந்தார்.

    அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள். தன்னுடைய சிறு வயதில் இருந்தே சிறந்த சிவ பக்தராக இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன்பிடிக்கப்போகும் போதும் தன்னுடைய வலையில் சிக்கக்கூடிய முதல் மீனை எடுத்து இந்த மீன் இறைவனாகிய சிவபெருமானுக்கு உரியது என்று சொல்லி கடலில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அதிபத்த நாயனாரில் உயர்ந்த பக்தியை உலகிற்கு உணர்த்த சிவபெருமான், தன்னுடைய திருவிளையாடலை அதிபத்த நாயனாரிடம் நடத்த ஆரம்பித்தார்.

    அதிபத்த நாயனார் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது மீன்கள் சிக்குவது குறைந்துகொண்டே வந்தது. இதனால் அதிபத்த நாயனாரின் குடும்பத்தில் வறுமை ஏற்படத்தொடங்கியது. ஆனாலும் அதிபத்த நாயனார் தன்னுடைய வலைகளில் சிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அளிப்பதை நிறுத்தவே இல்லை.

    இப்படியே நாட்கள் நகர்ந்தது. அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிபத்த நாயனாரின் வலையில் ஒரேஒரு மீன் மட்டும் சிக்குமாறு விளையாடினார் சிவபெருமான். அதிபத்த நாயனாரும் வழக்கம்போல இந்த மீன் என்னை படைத்த சிவபெருமானுக்கு உரியது. சிவார்ப்பணம் என்று கூறி கடலில் விட்டார்.

    காலப்போக்கில் அதிபத்த நாயனாரின் குடும்பமே கடுமையான வறுமையில் வாடியது. அதிபத்த நாயனாரின் உடலும் நாளுக்கு நாள் தளர்ந்துகொண்டே வந்தது. இதைபார்த்து மிகுந்த கவலையுடன் அதிபத்த நாயனாரின் மனைவி கணவனிடம் நம் பசியை தீர்க்க வீட்டில் எந்த பொருளுமே இல்லை. நம் குழந்தைகள் எல்லோரும் பசியுடன் பலவீனமாக இருக்கிறார்கள். நீங்கள் பொருள் ஏதாவது சம்பாதித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

    அதிபத்த நாயனாரும் தனது மனைவி சொல்வதை கேட்டு தனது குழந்தைகளுக்காக கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அதிபத்த நாயனார் வீசிய வலையில் நவரத்தினங்களும், நவமணிகளும் பதித்த ஒரு தங்க மீன் ஒன்று வலையில் மாட்டியது.

    இதைக்கண்டதும் அருகில் இருந்தவர்கள் அதிபத்த நாயனாரே இன்று உமக்கு ராசியான நாள். அதனால் தான் நீங்க வீசிய வலையில் தங்க மீன் கிடைத்துள்ளது. இந்த மீனை கொண்டுபோய் உங்க மனைவியிடம் கொடுங்க. உங்களது வம்சமே செல்வச்செழிப்பாக வாழலாம் என்று சொன்னார்கள்.

    தங்க மீனை கண்டதும் அதிபத்த நாயனாரின் மனதில் எந்த சலனமும் இல்லாமல் வழக்கம் போல் வலையில் சிக்கிய முதல் மீனை இறைவனுக்கு கொடுப்பது போலவே இந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கு உரியது என்று கூறி கடலில் விட்டு விட்டார்.

    அதிபத்த நாயனாரின் இந்த செயலைக்கண்டு அருகில் இருந்தவர்கள் எல்லாரும் திகைத்து நின்றனர். அப்போதுதான் சிவபெருமானும், பார்வதிதேவியும் அதிபத்த நாயனாருக்கு காட்சி அளித்தனார். அதுமட்டுமில்லாமல் கையில் தன்னுடன் இருக்கக்கூடிய பேரின்ப வரத்தையும் அதிபத்த நாயனாருக்கு அளித்தனர்.

    இன்றைக்கும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தங்க மீனை சிவபெருமானுக்கு கொடுக்கும் திருவிழா நாகப்பட்டினத்தில் உள்ள காயரோகன சுவாமி கோவில் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை ஒரு கட்டுமரத்தில் வைத்து மீன்பிடிக்க கடலுக்கு போவார்கள். அப்போது கடலில் வலைவீசுவது போலவும், அந்த வலையில் தங்க மீன் சிக்குவது போலவும் அதை அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது போலவும் பாவணை செய்வார்கள்.

    அந்தநேரத்தில் கோவிலில் இருக்கக்கூடிய சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு முக்தி அளிக்க கடற்கரைக்கு வருகிறார். கடற்கரைக்கு வரும் சிவபெருமானுக்கு அந்த தங்க மீனை படைத்து பூஜையும் செய்வார்கள். அப்போது அந்த கடற்கரைக்கு வரக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் சிவபெருமான் அருளாசி புரிவார்.

    அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அருள் கிடைக்க பணமோ, பொருளோ கல்வியோ தேவையில்லை. தூய்மையான மனமும்ம் இறை அர்ப்பணிப்பு மட்டும் இருந்தால் போதுமானது. சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்பதை தான் இந்த அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கிறது.

    • 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் காட ம்பாடி மறைமலைநகரில் உள்ள பழமை வாய்ந்த கருமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. ஏழைப் பிள்ளையார் கோவிலில் இருந்து நூற்றுக்கும்மேற்ப ட்ட பெண்கள் அம்ம னுக்கு பூதட்டுகளை கையில் ஏந்தியவாறு கருமாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.பின்னர் கோவி லை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்தி க்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம்செய்து மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெ க்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் ஆகியவை சேர்த்து சிறப்பு முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், விடுப்பட்டு போன முன்களப் பணியா ளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

    செப்டம்பர் 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டு உள்ள அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
    • தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×