என் மலர்
நீங்கள் தேடியது "முருகர்"
- மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
- வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
முருகப்பெருமானின் அருளைப் பெற அனைவரும் கடைபிடிக்கும் விரதம் தான் சஷ்டி விரதம். பெரும்பாலான முருக பக்தர்கள் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதம்தோறும் வரும் சஷ்டியிலும் மனதார விரதமிருந்து முருகனுடைய அருளைப் பெறுவார்கள்.
சஷ்டி விரதம் என்றாலே குழந்தை வரம் வேண்டுபவர்கள் தான் இருப்பார்கள் என சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. உடல்நல பாதிப்பு, தொழில் பாதிப்பு, திருமணத் தடை என எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் சரி, சஷ்டி விரதமிருந்து மனமுருகி அந்த வேலவனை நினைத்தாலே எல்லாவற்றையும் அவன் தீர்த்து வைப்பான் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.
மாதம்தோறும் வரும் சஷ்டி விரதம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என பார்க்கலாம்.
* மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
* நாளை தேய்பிறை சஷ்டி விரதம். அதிகாலையில் எழுந்து நீராடி, ஐயன் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
* வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
* கந்த சஸ்டி கவசம், முருகப் பெருமானுக்குரிய மந்திரங்கள், கந்தபுராணத்தை கேட்பது அல்லது முருகனைப் போற்றும் பாடல்களைப்பாடி, விளக்கேற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
* விரதம் இருக்க முடிந்தவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.
* சஷ்டி விரதம் இருக்கும் போது அன்றைய நாள் முழுவதும் முருகப்பெருமானின் பக்திப் பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் மனநிறைவைத் தரும்.
* சஷ்டி நாட்களில் முடிந்தவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று முருகனை வழிபட்டு, அன்னதானம் அல்லது தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்யலாம்.

குறிப்பாக முருகப்பெருமானின் அருள் வேண்டி நிற்கும் அனைத்து பக்தர்களும் சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.
இப்படி மாதம்தோறும் வரும் சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நிச்சயமாக வாழ்வில் அமைதியும், வளமும் நிலைத்து நிற்கும்.
- பழமையான முருகர் கற்சிலை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
- பொதுமக்கள் அங்கு திரண்டு முருகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் மலை மீது சாமி சிலை இருப்பதாக அப்பகுதியில் வசித்து வரும் ராஜமாணிக்கம் என்பவர் கனவு வந்ததாக கூறினார்.
இந்நிலையில், கடந்த 17-ந்தேதி ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திடீரென ராஜமாணிக்கம் அருள் வந்து ஆடினார். அப்போது, வேப்பிலை வாயில் மென்றபடி சாமி ஆடி கொண்டே அருகே உள்ள மலை மீது ஏறியுள்ளார்.
அப்பகுதி மக்களும் அவரது பின்னே சென்றுள்ளனர். அப்போது, மலை மீது உள்ள அடர்ந்த முட்புதர்கள் மற்றும் பாறைகளுக்கு நடுவே ஓர் இடத்தை குறிப்பிட்டு அங்கு தோண்டும்படி கூறியுள்ளார். அந்த இடத்தில் தோண்டியுள்ளனர்.
அப்போது, பழமையான முருகர் கற்சிலை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
தொடர்ந்து தோண்டும் போது மார்பளவு மட்டுமே தோண்ட முடிந்துள்ளது. அதற்குமேல் அவர்களால் சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. ஆடி முதல் நாளில் மலை மீது முருகர் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் காட்டு தீ போல் பரவியது.
இதனால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு முருகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினர்.
இதற்கிடையே, தகவலறிந்த தாசில்தார் வேண்டா, தொல்லியியல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்து சிலையை ஆய்வு செய்தனர்.
மேலும், இது தொடர்பாக நில உரிமையாளர் கலெக்டர் சுப்பு லெட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தார். அதனை தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை ஆய்வு செய்தபோது அது புதியதாக செய்து கொண்டு வந்து வைக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிலையை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, இன்று அதிகாலை 4 மணியளவில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 4 டிஎஸ்பிகள், 7 இன்ஸ்பெக்டர்கள், 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, தாசில்தார் வேண்டா மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் 4.30 மணியளவில் சுயம்பாகத் தோன்றியதாக கூறப்பட்ட முருகர் சிலையை அகற்றி பறிமுதல் செய்தனர். பின்னர், முருகர் சிலையை அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே வேலூரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், இன்று 3-ம் வெள்ளிக்கிழமை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய மலை மீது ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் அந்த வழியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியில் இருந்து வரும் நபர்களை கூட போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் மாநாடு நடத்தவில்லை?
- அரசியலுக்காக முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள என்றார் சீமான்.
புதுக்கோட்டை:
மதுரை மாவட்டத்தில் வரும் 22-ம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தேசிய தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அவர்கள் ஒப்புக்கு பேசுகிறார்கள். நான் உளமாற முருகனை பற்றி பேசுகிறேன். நான் முருகனின் பேரன்.
நான் செய்வதற்கும், அவர்கள் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பா.ஜ.க. நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி இல்லை. இவ்வளவு நாள் முருகனுக்கு ஏன் அவர்கள் மாநாடு நடத்தவில்லை?
தமிழ்நாட்டில் முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. முருகனை தொட்டால் ஓட்டு வருமா என பா.ஜ.க. பார்க்கிறது.
அரசியலுக்காக முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். அவர்களின் அரசியலுக்காக உத்தர பிரதேசத்தில் ராமரை தொடுவார்கள், கேரளாவில் ஐயப்பனை தொடுவார்கள், ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொடுவார்கள், தமிழ்நாட்டில் முருகனை தொட்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் ஏமாறும் கூட்டம் என்று நம்மை நினைத்துவிட்டார்களா? பா.ஜ.க. மத அரசியல் செய்கிறார்கள், மக்கள் நல அரசியல் செய்யவில்லை என தெரிவித்தார்.
- 14-ந் தேதி வரை அபிஷேக ஆராதனை நடத்தி வருகின்றனர்.
- முருகர், வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆரோதனைகள் நடந்தது.
காங்கயம் :
காங்கயம் அருேக உள்ள சிவன்மலை முருகன் கோவிலின் வருடாந்திர தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் தேரோட்டம் நடந்தது. பின்னர் தேர் நிலை சேர்ந்ததும் கோவிலின் கட்டளைதாரர்கள் தேரோட்டத்திற்கு முன்பும் அதைத்தொடர்ந்தும் வருகிற 14-ந்தேதி வரை அபிஷேக ஆராதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றிரவு சிவன்மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சன்னதியில் சிவன்மலை சோமவார சன் மார்க்க சங்கத்தின் சார்பாக முருகர், வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு பல்வகை சிறப்பு அலங்காரங்களை செய்து அபிஷேக ஆரோதனைகள் நடந்தது. பின்னர் தெய்வங்களை சப்பரத்தில் வைத்து சிவன்மலை ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து சென்று நஞ்சுண்டேஸ்வரர் சன்னதியில் வைத்து பய பக்தியுடன் வணங்கினர். நிகழ்ச்சியில் சோமவார சன் மார்க்க சங்கத்தினர், பக்தர்கள் உள்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
- தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு,
- ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்!
இறைவனை பூக்கள் கொண்டு பூஜை செய்தவற்கும் இந்த ஜென்மாவில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
வாசனையற்ற மலர்களை கொண்டு இறைவனை பூஜை செய்யவே கூடாது. (சில மலர்கள் விதிவிலக்கு). தரமற்ற, வாசனையற்ற மலர்களை கொண்டு கடவுளை பூஜித்தவர்களுக்கு புத்திரர்கள் இருந்தும் அவர்களால் எந்த வித சந்தோஷமும் இல்லாதவாறு அமைந்துவிடும்.
தொன்மையான ஆலயங்களில் நடைபெறும் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளுக்கு பூஜைக்கு ஏற்ற வாசனைமிக்க மலர்களை உபயமாக தரவேண்டும். தொடர்ந்து இது போன்று செய்துவந்தால் புத்திரர்கள் நல்ல புத்தி பெறுவார்கள்.
சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி, பொங்கல் மற்றும் தீபாவளி திருநாள் ஆகிய விஷேட நாட்களில் திருக்கோவில்களுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தரும் கைங்கரியத்தை அனைவரும் இயன்றவரை செய்துவர வேண்டும்.
நாம் தனிப்பட்ட முறையிலும் நம் தளம் சார்பாகவும், சிவராத்திரி உள்ளிட்ட விஷேட நாட்களில் இந்த கைங்கரியத்தை செய்ய தவறுவதேயில்லை.
சென்ற நவராத்திரி சமயத்தின் போது கூட நம் தளம் சார்பாக குமணன்சாவடி அருகே உள்ள கண்ணபிரான் திருக்கோவிலுக்கு பூஜைக்கு மலர்கள் வாங்கித் தந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மலருக்கும் ஒரு குணமும் சக்தியும் உண்டு.
உதாரணத்துக்கு ஒரு வில்வ தளம் லட்சம் பொன்மலர்களுக்கு சமம். ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்ப்பட்ட பாவங்களும் விலகும்.
ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வ இலை போதும்! (மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வம் பறிக்கக்கூடாது).
வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது உபயோகப்படுத்தி விட்டு தண்ணீர் விட்டு அலம்பி மீண்டும் உபயோகப்படுத்தலாம். (இந்த சிறப்பு தங்கத்திற்கு மட்டுமே உண்டு).
ஆனால் ஒரு தெய்வத்திற்கு அர்ச்சித்த பூக்களையோ அல்லது இதர பொருட்களையோ மற்ற தெய்வத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
சீரும் சிறப்புமாக தற்போது வாழ்ந்து வருபவர்களை காண நேர்ந்தால் "சென்ற ஜென்மத்தில் இறைவனுக்கு நல்ல மலர்களை கொண்டு பூஜை செய்திருப்பார்கள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் வீட்டின் முன்பகுதியில் நிச்சயம் தோட்டம் அமைப்பர். அதில் பூஜைக்குரிய மலர்களின் செடிகள் வளர்க்கப்படும்.
அதில் பூக்கும் மலர்களை கொண்டு தான் இறைவனுக்கு பூஜை செய்வார்கள். மிகுதியாக உள்ளவற்றை அருகே உள்ள ஏதாவது ஆலயத்திற்கு தருவார்கள்.
ஆனால் இப்போது வீட்டின் முன்னே இடமிருந்தால் கடையை கட்டி வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். இந்த ஜென்மாவில் கூட நாம் முழுமையாக அனுபவிக்க முடியாத செல்வத்தை சேர்ப்பதில் குறியாய் இருப்பவர்கள், பல ஜென்மங்களில் நமக்கு நற்பேறுகளை அளிக்கவல்ல இந்த மலர்க் கைங்கரியத்தை செய்ய தலைப்படுவது கிடையாது.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள், வீட்டில் தோட்டம் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டும். சௌபாக்கியங்களில் இதுவும் ஒன்று. அத்தனை சுலபத்தில் எல்லோருக்கும் கிட்டாது.
- புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திமுறை வாக்கு
- இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திமுறை வாக்கு
இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது.
இந்த உலகத்தில் நம்மை பிறக்க வைத்து, உண்பதற்கு உணவும், சுவாசிக்க காற்றும், குடிப்பதற்கு தண்ணீரும், குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் உதவும் நெருப்பையும் கொடுத்த வள்ளல், இறைவன்.
ஒவ்வொரு நொடியும் நாம் அவன் தந்த இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்கிறோம். அதற்கு கடனாக அவனிடம் அன்பு கொண்டு, வழிபாடு செய்வது நம் கடமை.
இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது. அது பரார்த்த வழிபாடு எனப்படும். மற்றொன்று நாமே வீட்டில் இறைவனின் திருவுருவச் சிலைகளை வைத்து வழிபடுவது. இது ஆத்மார்த்த வழிபாடு எனப்படும்.
இந்த இரண்டு வகையான வழிபாட்டிலும் இறைவனின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை உண்டு.
அபிஷேகத்திற்கு தூய்மையான கிணற்று நீர் ஆகியவை சிறந்தவை.
இறைவனுக்கு உகந்த மலர்களை வைத்து அவனை உள்ளன்போடு பூசிக்க வேண்டும். இறைவனின் திருமுடியில் மலர் இல்லாமல் ஒருபோதும் இருப்பது கூடாது.
நாம் அன்றாடம் வழிபடும் விநாயகப் பெருமான், சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான், காமாட்சி அம்மன், மகாலட்சுமி போன்ற தெய்வங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள மலர்களை உபயோகிக்கலாம்.
இவை பொதுவானவை. காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகம் ஆகிய பத்துவிதமான மலர்களைக் கொண்டு இறவனை வழிபட வேண்டும்.
தாழைமலரை மட்டும் சிவபெருமானுக்கு உபயோகிப்பது கூடாது. நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்கு புஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் தாமரை ஆகியன கொண்டு பூஜை செய்தால் நன்மை அடையலாம்.
மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன. அறுகு, தும்பை, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, செண்பகம் ஆகியவை அஷ்ட புஷ்பங்கள் எனப்படும்.
- வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள்.
- தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம்.
பூக்களுள் சிறந்த பூ
பூங்களுள் சிறந்தது தாமரைப்பூவே.
வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு.
மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான்.
தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை.
திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ. இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ.
பவுர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் அகலும்.
முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
பூக்களின் குணங்கள்
வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும்.
சிவப்பு வர்ணப்பூக்கள் இராஜச குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களைத் தரும்.
பொன்மயமான மஞ்சள் வண்ணப் பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தால் போகத்தையும் மோட்சத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தி அடைய அவை உதவும். நம் பரம்பரை விருத்தி அடைய வைக்கும்.
கறுப்பு நிறம் கொண்ட பூக்கள் தாமச குணம் கொண்டவை. ஆகவே பொதுவாக இவற்றை உபயோகித்து பூஜை செய்வது கூடாது.
எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம்?
தற்போது எல்லார் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. ஆகவே மலர்களை வாங்கி குளிர்ச்சியான சூழலில் வைத்திருந்து பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகவிட்டது.
இருந்தாலும் அவ்வப்போது பறித்த மலர்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்வது சிறப்பானது. காலையில் பூத்த மலர்களை காலையிலேயே பூஜைக்கு பயன்படுத்துவதால் நறுமணம், இனிமை, புதுமை, இளமை ஆகியவை கூடுதலாக இருக்கும்.
தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம். அரளிப்பூக்களை மூன்று நாள்களுக்குள்ளும், வில்வ இலையை பறித்து ஆறுமாதங்கள் வரையிலும், உபயோகிக்கலாம்.
இவ்வாறே துளசி இலைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், சிவனைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு உபயோகப்படும் தாழம்பூக்களை ஐந்து நாள்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணு கிரந்தியை மூன்று நாள்களுக்குள்ளும் பயன்படுத்தலாம்.
பூஜைக்கு ஆகாத பூக்கள்
அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது. கொண்டுவரப்பட்டது. தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது. அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது.
பறித்த பிறகு மலர்ந்து பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டி வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள் ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள்.
தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது.
பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.
தெய்வங்களுக்கு ஆகாத மலர்கள்
அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை, செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசர, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை.
அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்கு கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.
துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது.
வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
சமபகமாட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.
கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூஜை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும்.
குருக்கத்தி, ஆனந்ததிதா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.
விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.
- கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும்.
- பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.
சஷ்டி விரதம் கடைபிடிப்பது எவ்வாறு?
* கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.
* பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து 'துதிப்போருக்கு வல்வினை போம்'என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
* ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்ச் சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.
* மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
*ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.
சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது உணவு கட்டுப்பாடுதான். உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.
மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.
பெண்களின் பாதுகாப்புக்கு கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!
ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.
கந்த சஷ்டி கவம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.
இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.
கவசத்தின் முதல் பாடலில், "துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும்" என்கிறார். அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.
காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்டாகும்.
மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.
குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.
- முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.
- முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன்.
ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமான்!
தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர்.
முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.
சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார். முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.
இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள். ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.
மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.
முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.
தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.
முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.
முருகப்பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.
சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.
எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.
முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்
ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.
அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.
சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.
உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.
வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.
வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.
முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடு பேற்றை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.
ஆறுமுகனுக்குரிய ஆறெழுத்தான "சரவணபவ" என்பதை கூறியபடி ஆறு படை வீடுகளுக்கும் சென்று நல்ல எண்ணங்களுடன் நம்மிடம் உள்ள ஆறு பகைவர்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டி வணங்க வேண்டும்.
இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப்படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் அவன் ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள்.
சூரபத்மன் கதையை அடுத்த பதிவில் காணலாம்.
- அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் சிவபெருமானை சரணடைந்தனர்.
- அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியவில்லை.
சூரபத்மன் கதை
காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக் குலப்பெண்ணிற்கும் பிறந்தவர் சூரபத்மன்.
தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அப்படியும் சிவபெருமான் காட்சி அளிக்காததால் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.
சூரபத்மனின் தவ வலிமையையும், தியாகத்தையும் மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.
இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான்.
இப்படி மிகவலுவான வரங்களைப் பெற்ற சூரபத்மனால் அமைதியாக இருக்க முடியவில்லை.
தேவர்களுக்குப் பல வழிகளிலும் துன்பத்தைக் கொடுத்தான். அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் வரம் கொடுத்த சிவபெருமானை சரணடைந்தனர்.
இந்த அசுரனை ஒழிக்க ஒரு சேனாதிபதி வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.
அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது. அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.
கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.
பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார். அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.
சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார். அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.
சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் அசுரரர்களை அழிக்க புறப்பட்டுச் சென்றார். முதலில் சூரபத்மனின் சகோதரர்களான கஜமுகாசுரன், சிம்மமுகாசுரன், அவன் மகன் பத்மகேசரி ஆகியோரை அழித்தார்.
பின்னர் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவகுருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.
இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார். ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.
அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.
முருகப்பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.
கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெற செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனை சரணாகதி அடைந்தான். அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.
தானே அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.
இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும்போது பகவானுடைய மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.
- சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
- ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
கந்த சஷ்டிவிரதம்
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.
இந்த ஆறு நாளையும் பக்தர்கள் விரத நாட்களாக கடைபிடிக்கின்றனர்.
செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.
தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருப்பது வழக்கம்.
இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது.
ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து 'காப்புக்கட்டல்' அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.
பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர்.
இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.






