search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forgiveness"

    • யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    • இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி

    பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.




    இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-

    'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.

    • தேவாலயங்கள் மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது.
    • இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார்.

    தேவாலயம் அல்லது வழிபாட்டுக்கூடம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது. மனதில் உள்ள கவலைகளை, கண்ணீரை கொட்டித் தீர்க்கிற இடமாகவும், விடை தெரியா கேள்விகளுக்கு விடை தருகிற இடமாகவும், வழி தெரியா வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற இடமாகவும் இருக்கிறது.

    ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்புகிற போது ஒரு இனம் புரியாத அமைதி மனதில் தங்கி விடுகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நடந்திட ஆற்றல் கிடைக்கிறது. அத்தகைய சிறப்புமிகு ஆலயத்தை யூதர்கள் எப்படி பார்த்தார்கள்? இயேசு எப்படி பார்த்தார்? நாம் எப்படி பார்க்க வேண்டும்? என்கிற மூன்று நிலைகளில் யோவான் நற்செய்தி 2-வது அதிகாரம் 13 முதல் 22 வரை உள்ள இறைவார்த்தை பகுதியை தியானித்து பார்ப்போம்...! அந்த பகுதி பின்வருமாறு:

    யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும், அங்கே உட்கார்ந்து இருந்து நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலில் இருந்து துரத்தினார். ஆடு, மாடுகளையும் விரட்டினார். நாணயம் மாற்றுவோரின் சில்லரைக் காசுகளையும் அவை இருந்த மேசைகளையும் கவிழ்த்து போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், இவற்றை இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார்.

    யூதர்கள் அவரைப் பார்த்து, இவற்றை எல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு மறுமொழியாக, `இக்கோவிலை இடித்து விடுங்கள் நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்றார்.

    அப்போது யூதர்கள், `இந்த கோவிலை கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே நீர் இதை மூன்றே நாளில் எழுப்பிவிடுவீரோ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலை பற்றியே பேசினார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. (யோவான் 2:13-22)

    மேலே பார்த்த நற்செய்தி பகுதியில், இயேசு கோபப்படுவதை பார்க்கிறோம். அமைதியையும், கனிவையும், தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய இயேசு கோபப்படுகிறாறே அது நியாயமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால் இயேசு எதற்காக கோபப்பட்டார் என்பதை சிந்தித்து பார்க்கும் போது நமக்கு புரியும்.

    இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார். எனவே தான் அதனை வியாபாரக்கூடமாக பார்த்த யூதர்கள் மீது கோபம் கொண்டார். அதனால் தான் அவரது கோபம் சாதாரணமாய் இல்லை. கடுமையாக இருந்தது. சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார். அவர்களின் பொருட்களை கவிழ்த்துப் போடுகிறார்.

    இதன் மூலம் இயேசு தன் தந்தையின் இல்லமாகிய தேவாலயத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இதுமட்டுமன்று நம் கண் எதிரே நடக்கும் அநீதியை கண்டு அமைதியாக இருக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்கிற செய்தியையும் இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் சாட்டையடி யூதர்களுக்கு மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, ஆலயங்களை வியாபாரக்கூடமாய் மாற்றும் ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.

    இரண்டாவதாக இந்த பகுதியில் நாம் கவனிக்க வேண்டியது யோவான்: 2:22. இதில் இயேசு, 'இந்தக் கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்று கூறுகிறார். இதில் அவர் கோவிலாகிய கட்டிடத்தை குறிப்பிடவில்லை. மாறாக தம் உடலாகிய கோவில் பற்றியே குறிப்பிடுகிறார். இதன் வழியாக அவர் இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுவதையே, `மூன்று நாளில் கட்டி விடுவேன்' என்று குறிப்பிடுகிறார்.

    ஆக, தனது உடலை இயேசு கோவிலாகவே பார்த்தார். தன்னில் இருக்கும் இறைவனை நற்செயல்களால் வெளிப்படுத்தி நடமாடும் ஆலயமாகவே வாழ்ந்தார். அவ்வாறு வாழ நமக்கும் அழைப்பு விடுக்கிறார். இதனையே திருத்தூதர் பவுல் கொரிந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில், என்று கூறுகிறார் (1 கொரிந்தியர் 3:16).

    இதன் மூலம் நமது உடல் இறைவனின் ஆலயம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த உடலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதும் புரிகிறது. ஆகவே நாம் நமது உடலில் இறைவன் தங்கியிருக்கிறார் என்பதை நம்புகிறோமா? அப்படி நம்பினால், நம்மில் இருக்கும் இறைவனை நமது நல்ல செயல்களால் நமக்கு அடுத்து இருப்பவருக்கு வெளிப்படுத்தி இருக்கிறோமா? சிந்திப்போம்.

    அன்பு, அமைதி, இரக்கம், மன்னிப்பு, சமத்துவம் ஆகிய இறைத்தன்மைகளை அனைவருக்கும் வெளிப்படுத்துவோம். நடமாடும் ஆலயங்களாக வாழ்வோம்.

    • மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு வழங்குவதும் முக்கியமானது.
    • நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

    கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளை உள்ளடங்கிய குடும்பம் என்கிற கட்டமைப்பு இருப்பதாலேயே இன்பத்துடன் துன்பங்களை எதிர்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் மனித வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது. அத்தகைய குடும்ப வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும். கொண்டாட்டம் என்றால் புன்னகைத்துக்கொண்டு இருப்பது மட்டுமல்ல.

    எல்லா சூழல்களையும் ஏற்றுக்கொள்வதும், எதிர்கொள்வதும், கடந்துசெல்வதும் தான். இதனை நமது அன்றாட வாழ்வில் பொருத்திப்பார்க்கும்போது வாழ்க்கை அழகாக தெரியும். இன்றைய இயந்திர வாழ்க்கை சூழலில் அதனை செயல்முறை பயிற்சி வழியாக கற்றுக்கொள்வதும், பின்பற்றுவதும் அவசியமானது.

    அது என்னவெனில் 1.நன்றி சொல்தல் 2.பாராட்டுதல் 3.மன்னித்தல். இந்த மூன்று வார்த்தைகளை அன்றாடம் குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயன்படுத்த வேண்டும். அதாவது கணவன் - மனைவி, பெற்றோர், பிள்ளைகள், சகோதர - சகோதரிகள் என எல்லோர் மட்டத்திலும் பயன்படுத்தினால் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் கொண்டாட்டமாகவே அமையும்.

    முதலாவது, நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். நாம் மற்றவரை மதிக்கிறோம் என்ற உணர்வை அது வெளிப்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு செய்த உதவி சிறியதாக இருந்தாலும் நன்றி சொல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். நாம் அவர்களையும், அவர்களது செயல்களையும் ஏற்றுக்கொள்கிறோம் என்ற நம்பிக்கையை இது உருவாக்கும்.

    இரண்டாவது, பாராட்டுதல். குடும்ப உறுப்பினர்கள் முன்னின்று செய்யும் செயல்களுக்கு மனதார பாராட்ட வேண்டும். அதற்கு தயங்கக்கூடாது. பாராட்டுவது அந்த நபரின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம். குறிப்பாக மனைவியின் ஒவ்வொரு செயல்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். `சாப்பாடு நல்லா இருந்துச்சு' என்று சொல்லும்போது அது அவருக்கு மாபெரும் மகிழ்ச்சியையும், அங்கீகாரத்தையும் அளிக்கும்.

    அதுபோல் மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு வழங்குவதும் முக்கியமானது. எதிர்பாராதவிதமாக சிறு தவறுகள் நடக்கலாம். அதனை உணர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்பு கேட்கும் போது மன்னித்துவிட வேண்டும். தவறுகளை மன்னிக்கும் போதுதான் அவர் மீது நல்ல புரிதல் ஏற்படும். சில சமயங்களில் மன்னிக்க முடியாத தவறை செய்திருந்தாலும் கூட கோபத்தை வெளிப்படுத்தாமல் அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த மன நிலையே மன்னிக்கும் பக்குவத்தை நமக்கு கொடுக்கும். மன்னிப்பு என்பது அன்பின் உச்சகட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த மூன்று வழிமுறைகளையும் செயல்முறை பயிற்சியாக அன்றாடம் பின்பற்றும்போது என்ன நடந்தாலும் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக நகரும். இந்த செயல்முறை பயிற்சி நம்மிலும், குடும்பத்திலும் ஆரோக்கியமான உளவியல் மாற்றத்தை தரும் என்பது உளவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. இதனை அன்றாடம் பயிற்சி செய்வோம்... மகிழ்ச்சியாக வாழ்வோம்!

    • செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது.
    • நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசன் கடந்த 6-ந் தேதி நண்பர் ஒருவருக்கு தான் கணக்கு வைத்துள்ள தஞ்சை தனியார் வங்கி மூலம் ரூ.1000 செலுத்தினார். பின்னர் செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் அந்த தனியார் வங்கிக்கு சென்று இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து வங்கியில் உள்ளவர்கள் கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் எந்த தகவலும் தெரியாததால் கணேசன் வங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்துள்ளார். ஆனால், அதில் ரூ.756 கோடி இருப்பு தொகை காட்டாமல் அவரது சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியது.

    இந்நிலையில் கணேசன் செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சமீபத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான இருப்பு தொகை தவறாக காட்டப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்கண்ட இணைப்புக்குள் சென்று தங்களது இருப்பை சரி பார்த்துக் கொள்ளவும்.

    நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்ததால் கணேசன் நிம்மதி அடைந்துள்ளார். 

    • தவறு செய்தவர்களை மன்னிப்பது ஒரு கலை.
    • யாராவது உங்களை காயப்படுத்தினால், நீங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் அனுபவிக்கலாம்.

    நம் வாழ்க்கையில் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் என யாராவது ஒருவர், நம்மை உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ காயப்படுத்தி இருக்கலாம். நாம் அதை நினைத்து வெறுப்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு உள்ளாவது, தவறு செய்தவர்களுக்கு கேடு விளைவிப்பதை விட, நமக்குத் தீங்கு விளைவிக்கும். தவறு செய்தவர்களை மன்னிப்பது ஒரு கலை. பிறரை மன்னிப்பதால், நம் உடல் நலமும், மன நலமும் மேம்படும்.

    பிறர் செய்த தவறுகளை எளிதில் மன்னிக்கும் திறன் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வரக்கூடிய அபாயம் குறைகிறது. தூக்கம், வலி, ரத்த அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் பாதிப்பு குறையும். பிறரை மன்னிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள கீழ்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

    ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர், சிறப்பு வாய்ந்தவர் மற்றும் ஈடுசெய்ய முடியாதவர் என்பதை அங்கீகரிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். இதனால் உங்களுக்குத் தீங்கு செய்தவரை வெறுக்கும் மனப்பான்மை குறைந்துவிடும்.

    ஒருவர் நமக்கு தீங்கு செய்திருந்தால், அந்த அனுபவம் மோசமானதாக இருக்கும். ஆனால், இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்களை காயப்படுத்தியதற்காக அந்த நபரிடம் நீங்கள் கோபப்படுவது குறையும். அன்றாட சந்திப்புகளில் மற்றவர்களிடம் சிறிய வழிகளில் அன்பை காட்ட முயலுங்கள். மளிகைக் கடைக்குச் செல்லும் போது, தெரிந்தவர்களை பார்த்து புன்னகைப்பது அல்லது குழந்தையின் பேச்சைக் கேட்க நேரம் ஒதுக்குவது போன்ற, சின்னச் சின்ன அன்பை பகிரும் செயல்களில் ஈடுபடுங்கள்.

    இதனால் மன்னிக்கும் பக்குவம் உண்டாகும். உங்களால் பிறரை எளிதில் மன்னிக்க முடியவில்லை என்றால், நீங்கள் மன்னிப்பதில் தோல்வியுற்றவர் என்று அர்த்தமல்ல. மன்னிப்பு என்பது நேரம், பொறுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் செயல்முறையாகும். உங்கள் மீது நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களிடம் நீங்கள் மென்மையாக இருங்கள் மற்றும் உள்ளுக்குள் அமைதியான உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆழமாக நேசிக்கும் ஒருவருக்கு பதிலளிப்பது போல், உங்களுக்கு நீங்களே பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

    யாராவது உங்களை காயப்படுத்தினால், நீங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் அனுபவிக்கலாம். இந்த உணர்ச்சிகள் தவறானவை அல்ல. ஒருவர் செய்த செயல் உங்களை எப்படி உணரவைத்தது என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடந்து கொள்வது முக்கியம். ஒருவர் செய்த தவறை அல்லது தீங்கை முதலில் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதுங்கள். பிறகு, அதில் உங்களை காயப்படுத்திய நேரத்தில் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை எழுதுங்கள். இதன் மூலம் உங்களுடைய உணர்வை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதை எழுதும் போது மனம் அமைதியடையும். இதனால் மன்னிக்கும் தன்மை அதிகரிக்கும்.

    சிரிப்பது போன்ற தோற்றமே சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.
    எல்லாரும் மகிழ்ச்சியாக வாழத் தான் விரும்புகிறார்கள்... ஆனால் மகிழ்ச்சியாகத்தான் இருக்க முடியவில்லை.!

    மகிழ்ச்சியாக இருக்க ஏதோ ஒரு  பெரிய விஷயம் நடக்க வேண்டும் என்பதில்லை. அதை யாரோ கொண்டு வந்து தரவேண்டியதில்லை. அதை தேடி நீங்களும் போக வேண்டியதில்லை. ஏன் என்றால் அது உங்களிடமேதான் எப்போதும் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் அதை எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம்.
    மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

    மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் படியே சிரிப்பதுதான். முகத்தில் புன்னகை மலர்ந்தால் அகத்தில் மகிழ்ச்சி மலரும். அதற்காக குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. மெல்லியதாக ஒரு புன்னகை பூத்தாலே போதும். உங்கள் மனதில் மகிழ்ச்சி மலரும். உங்கள் மனத்திற்குள் மகிழ்ச்சியை சுரக்க செய்வது ஒரு ஹார்மோன்தான். அந்த மாமருந்துக்கு பெயர் என்ன தெரியுமா? எண்டோர்ஃபின்ஸ். இது வெளியே எங்கேயும் இல்லை. உங்களுக்குள்தான் இருக்கிறது.

    “நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் மனதார நினைத்தாலே போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோனை சுரக்கும்படி பிட்யூட்டரி சுரப்பிற்கு மூளை கட்டளையிடும். அடுத்த சில நெடிகளில் எண்டோர்ஃபின்ஸ் சுரக்க, மனசுக்குள் மகிழ்ச்சியும் உடலில் புத்துணர்ச்சியும் தோன்றும். இந்த ஹார்மோன் எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா? நீங்கள் நகைச்சுவை உணர்வோடு இருக்கும் போது, சுறுசுறுப்பாக இயங்கும் போது, விறுவிறுவென உடற்பயிற்சி செய்யும் போது, உடலை நேராக நிமிர்த்தி யோகா செய்யும் போது, எந்தவொரு செயலையும் விரும்பி செய்யும் போது ஆகிய தருணங்களில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும்.

    அப்படியானால் இதற்கு எப்போதும்  இதுபோன்ற ஒரு செயலை செய்து கொண்டுதான் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும். அவ்வாறு செய்வது நல்லதுதான். ஆனால் முடியாத பட்சத்தில் இந்த எளிதான விசயத்தை செய்யலாம். அது என்னவென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற பாசாங்கு அதாவது பாவனை செய்வதுதான்.

    பாசாங்கு செய்வதால் பலன் கிடைக்குமா?

    மகிழ்ச்சி குறித்து பாசாங்கு செய்யும் போது உங்கள் மனம் அதை நிஜம் என்பது நம்பி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தயார் என உங்கள் மூளைக்கு தகவல் வரும். உடனே எண்டோர்ஃபின்ஸ் சுரந்து உங்களுக்குள் புத்துணர்ச்சி பெருகும்.

    சோகத்தின் போது நம்மில் பலர் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விடுவார்கள். பிரச்சினைகளால் மனம் சங்கடப்படும் போது அல்லது கடந்த கால சோக சம்பவங்கள் எதையாவது நினைக்கும் போது நீங்கள் உங்களையும் அறியாமல் ஒரு கையால் கன்னத்தில் தாங்கி கொள்வீர்கள். இது எதனால் என்றால் துன்பத்தில் இருக்கும் தன்னை, தன் பிரச்சினைகளை யாராவது தாங்கிக் கொள்ள மாட்டார்களா? என்ற ஏக்கத்தின் வெளிபாடுதான் அது.

    அத்தகைய சமயங்களில் “கன்னத்தில் கை வைக்காதே... கப்பலா மூழ்கி விட்டது?” என்று பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது ஏன் தெரியுமா?நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை நாமேதான் தீர்க்க வேண்டும். அதற்கு மற்றவர்களை எதிர்பார்க்கக்கூடாது. பிறர் தீர்த்து வைப்பார் என்று எண்ணினால் துன்பத்தில் நாம் மூழ்கி போவோம்.

    நம்முடைய உடல் அசைவுகள் மற்றும்  மனநிலைகளை  மூளை உற்று கவனித்து அதற்குரிய சுரபிகளை சுரக்க செய்கிறது. கன்னத்தில் கை வைத்தபடியே கொஞ்சம் சிரிக்க முயன்று பாருங்கள். கண்களில் டன் டனாக சோகம் வழியுமே தவிர உள்ளத்தில் உற்சாகம் பிறக்காது. கன்னத்தை தாங்கி கொண்டிருக்கும் கையை சட்டென எடுத்து விட்டு உங்கள் உதட்டை புன்னகைப்பது போல் செய்யுங்கள். அவ்வளவுதான். உங்கள் சோகம் காணாமல் போய் விடும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மூளைக்கு செய்தி போகும். மூளை அதை அதிகப்படுத்துவதற்காக எண்டோர்ஃபின்ஸ் ஹார்மோனை சுரக்க செய்யும். உடனே உண்மையான உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களுக்குள் தொற்றிக்கொள்ளும்.

    சிரிப்பது போன்ற தோற்றமே இப்படி சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.

    Email:fajila@hotmil.com
    வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.
    இன்றைய தனிமனித உறவு நிலைகள், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை போன்றவற்றில் ஏற்படும் பல சிக்கல்கள், வன்முறைகள், கலவரங்கள், உயிர்ப்பலிகள் போன்றவற்றிற்கான மூல காரணம் பழிவாங்கும் உணர்ச்சியாகும். தனக்கு தீமை செய்த ஒருவனை, தனக்கு அவமரியாதை ஏற்பட காரணமான ஒரு மனிதனை, பாதிக்கப்பட்டவன் எவ்வாறேனும் பழிவாங்க துடிக்கிறான். இதன் விளைவு தான் சமூகத் தீமைகள் மற்றும் வன்முறைகளின் பெருக்கம். இவற்றை தவிர்க்கவும் வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.

    அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியதில், நரம்புக் கோளாறு, கோபம் முதலிய குறைபாடுடையவர்கள் தாம் பழிவாங்கும் பண்புடையவர்களாக இருக்கின்றனர். மன்னிக்கும் பண்புடையவர்கள் மகிழ்ச்சியும், உடல் நலமும் உடையவர்களாக வாழ்கின்றனர் என்ற முடிவு வெளிப்பட்டுள்ளது. மன்னிக்கும் மாண்புடைய மனிதர்களின் இதயம், மூளை, நரம்பு மண்டலம் முதலியன சிறந்த முறையில் இயங்குகின்றன என்ற உண்மையும் வெளிப்பட்டது.

    ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரட் லஸ்கின் பல்லாண்டுகள் செய்த ஆய்வின் முடிவில், மன்னிக்கும் பண்பு ஒருவரின் உடல் நலத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது என்று கண்டறிந்தார். அரசியல், சமய ரீதியான முரண்பாடுகளினால் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளிடையே பேராசிரியர் பிரட் லஸ்கின் நடத்திய ஆய்வில் வியத்தகு முடிவுகளைக் கண்டறிந்தார்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிக்கும் பண்பின் தேவையை நன்கு உணர்த்திய பின்னர், காலப்போக்கில் அவர்கள் மனநிலைகளில் கோபம், பதற்றம் ஆகியவை குறைந்து, அவர்களிடம் நம்பிக்கை பண்பு துளிர்த்ததையும் மன அழுத்தம், அதன் விளைவான நோய்களின்றி அவர்கள் வாழ்ந்ததையும் பிரட் லஸ்கின் சான்றுகளுடன் வெளியுலகிற்கு உணர்த்தினார். எனவே மன்னிக்கும் மாண்பு எவரிடம் இருக்கிறதோ அவர் நோயின்றி, மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ முடியும் என்பதை இந்நூற்றாண்டின் ஆய்வுகள் விளக்குகின்றன.

    வாழ்வியல் அறங்களைச் சிறப்பாக எடுத்துரைத்த வள்ளுவர் மன்னிப்பின் மாண்பினைப் பல குறட்பாக்களில் விளக்குகிறார். தீமை செய்த ஒருவனை தண்டிப்பதால் மனத்தில் ஒரு வகை நிறைவு, மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மைதான்; ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரே நாளில் முடிந்து விடும். தண்டிக்கப்பட்டவன் மீண்டும் ஏதாவது தீமை செய்து விடுவானோ என்ற அச்சம் அதன் பின்னர் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும்; அதற்கு மாறாக, தீமை செய்தவனை மன்னித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியும் புகழும், நிலைத்திருக்கும் என்ற கருத்து தோன்றும்படி,

    “ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
    பொன்றும் துணையும் புகழ்”

    என்ற குறட்பாவினைத் தந்திருக்கிறார் வள்ளுவர். ஒருவரை மன்னிப்பது இயலாமையின் குறியீடு அல்ல; அது வீரம், தகுதியின் குறியீடாகும். உலகம் சீராக தடையின்றி இயங்குவதற்கு தேவையான அறக்கருத்துகளைக் கூறும் ஒரு கலித்தொகைப் பாடலில், “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்று கூறப்படுகிறது. பொறுமை, மன்னித்தல் போன்ற பண்புகள் வலிமையுடையவரிடம் காணப்பட்டால், அது பண்புகளிலெல்லாம் மேம்பட்ட சிறந்த பண்பாகிறது என்று நாலடியார் கூறுகிறது.

    “ஒறுக்கும் மதுகை உரணுடை யாளன்
    பொறுக்கும் பொறையே பொறை”

    என்பது நாலடியார் கூறும் கருத்து.

    மன்னிப்பின் மாண்பினைச் சிலப்பதிகாரம் நன்கு உணர்த்துகிறது. தன்னைப் பிரிந்து மாதவியின் இல்லம் சென்று தங்கியிருந்து திரும்பிய கணவன் கோவலன் தன் செயல் பற்றிய குற்றவுணர்வினால் வருந்தும் போது, கண்ணகி எந்த விதமான கோபத்தையும் முகத்தில் காட்டாமல், தன் காற்சிலம்புகளை எடுத்துச் “சிலம்புள கொண்ம்” என்று கூறுகிறாள். இந்த மன்னிப்பினால் கோவலன் மனம் மேலும் துன்புற்று, பண்பட்டு இழந்த பொருள்களை மீட்க வேண்டும் என்ற உந்துதல் பெறுகிறான். மன்னிப்பினால் கண்ணகியின் மாண்பும் உணர்கிறது; கோவலனும் தன் மனத்தை நல்வழியை நோக்கித் திருப்புகிறான்.

    கம்பராமாயணத்தின் இறுதிப்பகுதியில் மன்னிப்பின் சிறப்பு கூறப்படுகிறது. போர்கள் முடிந்த பின் சீதை அக்கினிப்பிரவேசம் செய்து மீண்ட பின் தசரதன் விண்ணுலகினின்று தோன்றி, சீதையிடம், ராமன் மீது சீற்றம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான். சீதையின் தூய்மையையும், சிறப்பினையும் உலகிற்கு காட்டவே ராமன், சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யத் தூண்டினான் என்று கூறி, “கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல்” என்று தசரதன் சீதையிடம் வேண்டுகிறான். தான் நாடும் மணிமுடியும் துறக்க காரணமாக இருந்த கைகேயியை மன்னித்து அருளும்படி தசரதனிடம் ராமன் கேட்கிறான். இது ராமனின் மன்னிக்கும் பண்பு; இதைக் கேட்டு உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் “வாய்திறந்து அழுது ஆர்த்தன” என்று கம்பர் குறிப்பிடுகிறார். மன்னிக்கும் பண்பின் உயர்வினை குறிக்கும் குறியீடாக ராமன் திகழ்கின்றான்.

    சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியில், கண்ணகி தெய்வ வடிவில் தோன்றி, ‘தன் கணவன் பாண்டிய மன்னனால் கொலையுண்டது விதி வசம்; மன்னன் மீது ஏதும் குற்றமில்லை’ என்று மன்னித்து விடுகிறாள். “தென்னவன் தீதிலன் தேவர் கோன் தன் கோயில் நல்விருந்தாயினான்; நான் அவன்றன் மகள்” என்று கூறுகிறாள். மன்னிக்கும் பண்பின் மாண்பு இது. தவறுகள் நடப்பது உலகத்தின் இயல்பு; எனினும் தவறுகளையும், அவற்றின் விளைவுகளையும் மனத்தில் பூட்டிப் பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடாது. அது சமூக இயக்கத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தினைத் தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறது.

    டாக்டர் ம.திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
    ×