search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழி முட்டை"

    • கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    சென்னை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்ட நாட்டில் உள்ள வாத்து பண்ணையில் ஏராளமான வாத்துக்கள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, அப்பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும், அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

    கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே தமிழக கால்நடை துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் கோவை, நீலகிரி, தேனி கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.

    பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்கும் வகையில், எல்லையில் உள்ள 12 சோதனை சாவடிகளில் அதிகாரிகள் முகாமிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை, கோழித் தீவனங்களுடன் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி (கிளோரின்-டை-ஆக்சைடு) மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு சோதனை சாவடியிலும் ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் 2 ஷிப்டுகளாக பணியமர்த்தப்பட்டு தீவிர சோதனை செய்கின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இறைச்சி கோழி, முட்டை கொண்டு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க களியக்காவிளையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. படந்தாலுமூடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றிவரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா சென்று விட்டு வரும் கோழிப் பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு உள்ள கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை, பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டு கோழி கூட்டிற்குள் குருவி முட்டை அளவில் சிறியதாக ஒரு முட்டை கிடந்துள்ளது.
    • 4 முட்டைகளையும் அவர் தனது கடை முன்பு பார்வைக்கு வைத்துள்ளார்

    இரணியல் :

    இரணியல் அருகே வில்லுக்குறி மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் பேட்ரிக் (வயது 51). இவர் வீட்டருகில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டு கோழி கூட்டிற்குள் குருவி முட்டை அளவில் சிறியதாக ஒரு முட்டை கிடந்துள்ளது. அடுத்த நாள் அதைவிட கொஞ்சம் பெரிதாகவும், அடுத்த நாள் அதைவிட பெரிதாகவும் இருந்துள்ளது.

    4-வது நாள் கிடந்த முட்டை, கோழி முட்டை அளவில் இருந்துள்ளது. 4 முட்டைகளையும் அவர் தனது கடை முன்பு பார்வைக்கு வைத்துள்ளார். இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது.
    • முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.

    சாதாரணமாக ஒரு கோழி முட்டையின் எடை 50 கிராம் முதல் 70 கிராம் வரை இருக்கும். ஆனால் கனடா நாட்டில் ஒரு கோழி 202 கிராம் எடையில் முட்டையிட்டுள்ளது. அங்குள்ள மணிடோபா பகுதியை சேர்ந்த ஆஷாபார்டெல் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 2 வயது நிரம்பிய கோழி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிடும் பருவத்தை எட்டிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் ஒரு சத்தம் கேட்டுள்ளது. உடனே ஆஷா அங்கு சென்ற போது தரையில் ராட்சத முட்டை ஒன்று கிடந்தது. அதை பார்த்ததும் ஆஷா ஆச்சரியம் அடைந்தார்.

    ஏனென்றால் அந்த முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது. இந்த முட்டை சிறிய மாம்பழம் அளவில் இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என ஆஷா கூறினார். இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். அதே நேரம் உலகிலேயே அதிக எடை கொண்ட கோழி முட்டை என கின்னஸ் சாதனை படைத்த முட்டை என்றால் அது 1956-ம் ஆண்டு நியூஜெர்சியில் ஒரு கோழியால் இடப்பட்ட 454 கிராம் எடை கொண்ட கோழி முட்டை ஆகும்.

    • விடை காண முயன்று வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
    • 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது.

    உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா...

    சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது.

    சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய கேள்விகளில் ஒன்றுதான் இது.

    பல ஆண்டுகளாக மக்களிடையே ஏற்பட்டு வரும் குழப்பனா கேள்வி. நம்மில் பலருக்கு மணிக்கணக்கில் விவாதம் செய்தும் பதில் கிடைக்கவில்லை. எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா என்ற இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் எனக்கு தெரியாது என்னும் வகையில் ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள்.

    நமக்கே இந்த குழப்பம் நீடித்து வந்த நிலையில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகளுக்கு இந்த குழப்பம் இருக்காதா என்ன?

    தற்போது அதற்கு விடை காண முயன்று வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

    ஏற்கனவே லண்டனின் ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை ஆழமாக ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் படி உலகில் முதலில் வந்தது முட்டை அல்ல கோழிதான் என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கேள்விக்கான காரணத்தை அவர்கள் கூறியுள்ளனர்.

    விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், ஓவோக்லிடின் என்ற புரதம் கோழி முட்டையின் ஓட்டில் காணப்படுகிறது. இந்த புரதம் இல்லாமல் முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாது. இது மட்டுமின்றி, கோழியின் கருப்பையில் மட்டுமே இந்த புரதம் உற்பத்தியாகிறது.

    இந்த வகையில் கோழிதான் உலகிலேயே முதலில் வந்திருக்கும். ஓவோக்லிடின் கோழியின் கருப்பையில் தயாரிக்கப்படும் ஒரு புரதம். பின்னர் இந்த புரதம் முட்டையின் ஓட்டை அடைகிறது என கூறியுள்ளனர்.

    விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் உலகில் முட்டைக்கு முன் கோழி வந்தது என்று தெரிய வந்தது.

    செல்லின் மூலக்கூறு அமைப்பைப் பார்க்க, ஹெக்டோஆர் எனப்படும் ஹைடெக் கணினியை விஞ்ஞானிகள் குழு பயன்படுத்தியது. கோழியின் உடலில் உள்ள கால்சியம் கார்பனேட்டை கால்சைட் படிகங்களாக மாற்றுவதைத் தொடங்கி, ஓ.சி.-17 ஒரு வினையூக்கியாக செயல்படுவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இவைதான் குஞ்சு வளரும் போது மஞ்சள் கரு மற்றும் அதன் பாதுகாப்பு திரவங்களை வைத்திருக்கும் கடினமான செல் ஆகும்.

    இந்த சூழ்நிலையில் தற்போது லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகளாக நம்மைத் குழப்பிய இந்தக் கேள்விக்கான விடை கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த முடிவு 51 புதைபடிவ இனங்கள் மற்றும் 29 உயிரினங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது, அவை முட்டையிடும் உயிரினங்கள் அல்லது விவிபாரஸ் (குட்டி போடும் உயிரினங்கள்) என வகைப்படுத்தலாம். முட்டையிடும் உயிரினங்கள் கடினமான அல்லது மென்மையான ஓடுகள் கொண்ட முட்டைகளை இடுவதற்குப் பெயர் பெற்றவை என்றாலும், விவிபாரஸ் இனங்கள் குட்டிகளாகவே பிறக்கின்றன.

    இது இரண்டும் சேர்ந்த கலவைப்போல, அம்னியோட்கள் எனும் முட்டை இடகூடிய முதுகெலும்பு கொண்ட உயிரிங்கள் உயிர்வாழ்வதற்கு கடினமான ஓடுகள் கொண்ட முட்டைகள் முக்கியமானவை என்று தற்போதுள்ள கண்டுபிடிப்பை கேள்விக் குள்ளாக்குகிறது. பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி, இப்போது இருக்கும் ஊர்வன, பரப்பன மற்றும் பாலூட்டிகளின் ஆரம்பகால மூதாதையர்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக குட்டிகளைப் பெற்றெடுத்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எர்த் சயின்சஸ் பேராசிரியர் மைக்கில் பெண்டன் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியானது, 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது. ஆய்வின்படி, பாலூட்டிகள், லெபிடோசவுரியா (பல்லிகள் மற்றும் பிற ஊர்வன) மற்றும் ஆர்க்கோசௌரியா (டைனோசர்கள், முதலைகள், பறவைகள்) உட்பட அம்னியோட்டாவின் அனைத்து வகுப்புகளும் விவிபாரஸ் மற்றும் அவற்றின் உடலில் கருவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. கடின ஓடு கொண்ட முட்டையானது பெரும்பாலும் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான படியாகும் மற்றும் இறுதியில் கருவைப் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

    குட்டிகளை ஈன்று கொண்டிருந்த சில விலங்குகள் பரிணாம வளர்ச்சியில், முட்டைகளை போடும் உயிரினங்களாக பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. எனவே, முதலில் கோழி வரவில்லை, முட்டை தான் வந்துள்ளது.

    முதலில் குட்டிகளை போட்டுக்கொண்டிருந்த கோழியின் மூதாதைய உயிரினம் பரிணாம வளர்ச்சியில் முட்டை போடும் கோழைகளாக மாறின. அவை இப்போது முட்டை போட்டு குஞ்சு பொரிக்கின்றன. முதலில் மென்மையாக இருந்த முட்டை ஓடுகள் பரிணாம வளர்ச்சியில் கடினமான ஓடுகளாக மாறியுள்ளன என்கின்றனர் விஞ்ஞானிகள்...அது சரி...முட்டைதான் முதலில் வந்தது என நிரூபணமாகிவிட்டது...கோழி உலகில் உருவானது எப்படி? ....சினிமாப்பட 2-ம் பாகம் போல அடுத்த விவாதத்துக்கு தயாராவோமா....

    • லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எடை உள்ள கோழி முட்டையை பொறுத்தவரை 162 கிராம் எடை உள்ளது.
    • பஞ்சாப்பில் உள்ள ஒரு கோழியால் இடப்பட்டது. தற்போது 210 கிராம் எடை உள்ள இந்த முட்டையில் 3 முதல் 4 மஞ்சள் கருக்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கோலாப்பூர்:

    பொதுவாக கோழி முட்டைகள் 54 முதல் 100 கிராம் வரை இருக்கும். சில அரிதான சந்தர்ப்பங்களில் முட்டைகள் 140 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கோழி 210 கிராம் எடையில் முட்டை இட்டுள்ளது. அம்மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள தால்சாண்டே கிராமத்தில் ஒரு கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் உள்ள ஹைலைன் டபிள்யூ-80 இனத்தை சேர்ந்த ஒரு கோழி 210 கிராம் எடையுள்ள முட்டையிட்டுள்ளது.

    இது கோழி இடும் முட்டைகளில் நாட்டிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது. இதுவரை லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எடை உள்ள கோழி முட்டையை பொறுத்தவரை 162 கிராம் எடை உள்ளது. இது பஞ்சாப்பில் உள்ள ஒரு கோழியால் இடப்பட்டது. தற்போது 210 கிராம் எடை உள்ள இந்த முட்டையில் 3 முதல் 4 மஞ்சள் கருக்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து கோழிப்பண்ணையின் உரிமையாளர் திலீப்சவான் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இரவு எனது பண்ணையில் ராட்சத முட்டையை பார்த்தேன். இந்த முட்டை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நான் கடந்த 40 வருடங்களாக கோழி வியாபாரம் செய்து வருகிறேன். ஆனால் இவளவு பெரிய முட்டையை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை என்றார்.

    ×