search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு வழக்கு"

    • வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


    இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    அப்போது, மாஸ்டர் நீதி மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவுப் படுத்துவதாக கூறினர்.

    மேலும், சென்னை ஐகோர்ட்டில் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்த அவர் தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சாட்சி விசாரணையை பதிவு செய்ய மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது.
    • எடப்பாடி பழனிசாமியை நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், அவருக்கு பேட்டிக் கொடுத்த கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், இவர்களிடம் இருந்து 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடும் கேட்டு இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சாட்சி விசாரணையை பதிவு செய்ய மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து, மாஸ்டர் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், அவர் இதில் இருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தான் சாட்சியம் அளிக்க ஐகோர்ட்டு வளாகத்துக்குள் வந்தால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால், சாட்சியத்தை வீட்டில் வந்து பதிவு செய்ய வக்கீல் ஆணையராக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வக்கீல் ஆணையராக வக்கீல் கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தான் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியும். பாதுகாப்பு காரணமாக இதுபோல நேரில் ஆஜராக விலக்கு அளிக்க முடியாது. அதுவும் சென்னை ஐகோர்ட் வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். அதனால், எடப்பாடி பழனிசாமியை நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    உதகை:

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலிசார் கடந்த ஓராண்டுக்கு மேலாக விசாரித்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதியிடம் சிபிசிஐடி தரப்பு மனுதாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அந்த ஆய்வத்தில் கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்ய நிலையில் Recover செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் தகவல் பரிமாற்ற விபரங்களை அறிக்கையாகவும், ஆய்வு செய்யப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பென் டிரைவ்கள் மூடி முத்திரையிட்ட கவரில் இன்று காலை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமியிடம் நீதிபதி முன்னிலையில் நேரடியாக விசாரணை செய்யும்போது தான், தீர்வு கிடைக்கும்.
    • வருகிற 14-ந் தேதி ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.

    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் மான நஷ்டஈடு கோரி கடந்த 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் தனது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்யும் வகையில் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனக் கோரி எடப்பாடி பழனிசாமி, ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அதில், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, ஐகோர்ட் வளாகத்துக்குள் வரும்போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே இந்த நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் வகையில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. இந்த வழக்கில் அனைத்து சட்ட நடைமுறைகளையும் முறையாக பின்பற்ற தயாராக உள்ளேன், என தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், இதுதொடர்பாக மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது மேத்யூ சாமுவேல் தரப்பில், மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, "இந்த வழக்கை தொடர்ந்தது எடப்பாடி பழனிசாமி தான். கொடநாடு கொலை வழக்கில் ஏராளமான மர்மங்கள் உள்ளன. ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியாகி உள்ளார்.

    அவர் சென்ற மோட்டார் சைக்கிளும், அதன் மீது மோதிய காரும் வெவ்வேறு திசையில் நின்றுள்ளது. இதில் பல குழப்பங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம், நீதிபதி முன்னிலையில் நேரடியாக விசாரணை செய்யும்போது தான், தீர்வு கிடைக்கும்.

    எனவே, அவரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும். வக்கீல் கமிஷனர் மூலம் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதிக்க கூடாது" என்று வாதிட்டார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் அனில் குமார் ஆஜராகி வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கிறேன். அவரிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்யவும் குறுக்கு விசாரணை செய்யவும் வக்கீல் கார்த்திகை பாலன் என்பவரை வக்கீல் கமிஷனராக நியமிக்கிறேன். அவர் வருகிற 14-ந் தேதி ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.

    பின்னர் எதிர்தரப்பினரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன்" என்று கூறினார்.

    • கொடநாடு வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஐயப்பன் ஆஜரானார்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

    இந்த வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள போலீசார் அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவரான ஐயப்பனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஐயப்பன் ஆஜரானார்.

    அவரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் கொடநாடு பங்களா குறித்தும், பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அவரும் தனக்கு தெரிந்த பதில்களை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    முன்னதாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, என்னிடம் ஏற்கனவே தனிப்படை போலீசார் விசாரித்தனர். தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதால், விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன் என்றார். 

    • கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
    • குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

    இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

    தற்போது இந்த வழக்கை கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 8-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி போலீசார் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் இன்று கோர்ட்டில் ஆஜரானார்.

    சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் வாதாடினர். அப்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் தொலைபேசி, செல்போன் டவர் போன்றவற்றை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும் என கேட்டு வாதாடினர்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்காதர் வழக்கை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.
    • கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

    கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கொடநாடு வழக்கு சிபிசிஐடியின் கீழ் இருப்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டோம். கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

    விசாரணையின் முன்னேற்றம் குறித்தும் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    எனவே இந்த வழக்கில் யார் யார் தவறு செய்து இருக்கிறார்கள் என்பது குறித்து விரைவில் தெரியவரும். இந்த வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடநாடு வழக்கில் முக்கிய தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர்.
    • விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரரான தனபாலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 14-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

    தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை சி.பி.சி.ஐ.டி கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையில் விசாரணை நடக்கிறது.

    கொடநாடு வழக்கில் முக்கிய தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த நிலையில் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரரான தனபாலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 14-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது முறையாக சேலம் தனபால் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அவரிடம் பல்வேறு கேள்விகளையும் கேட்டனர்.

    அவர் அளித்த பதில்கள் அனைத்தையும் போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். அவர் கூறிய தகவல்களில் உண்மை தன்மை உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்கட்ட விசாரணையில் என்னிடம் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று 2-ம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கின்றனர் . கனகராஜ் எடுத்து வந்த பைகளை யாரிடம் கொடுத்தார் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன் என்றார்.

    • தி.மு.க. முக்கிய நிர்வாகி 2018-ம் ஆண்டு அளித்த ஊழல் புகாரில் ஆதாரங்கள் இல்லை என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் அளிக்கப்பட்டு, அதை அரசும் ஏற்றுள்ளது.
    • மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 7-ந்தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கான அர்த்தத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களில் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிஞ்சிருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும் போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

    இந்த அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மான நஷ்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வரும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒரு முறை கூட விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பவில்லை. அரசு எந்திரம் தி.மு.க., வசம் தான் உள்ளதால் விசாரித்து இருக்க வேண்டும்.

    எந்த ஊழல் வழக்கும் இல்லை. தி.மு.க. முக்கிய நிர்வாகி 2018-ம் ஆண்டு அளித்த ஊழல் புகாரில் ஆதாரங்கள் இல்லை என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் அளிக்கப்பட்டு, அதை அரசும் ஏற்றுள்ளது.

    இதுசம்பந்தமான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்கள், சமூக வலைதளத்தில் தெரிவித்ததாகவும், அதை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவதூறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

    இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம் என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், மேற்கொண்டு இதுபோல அறிக்கைகள் வெளியிட கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனக் கூறி, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    மேலும், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • எனது தம்பியை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது. 3-வது முறையாக நடந்த முயற்சியில் அவர் இறந்துள்ளார்.
    • நான் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜராக கூடாது என்று என்னிடம் ரூ.2 ஆயிரம் கோடி பண பேரம் பேசினர்.

    கோவை:

    கொடநாடு கொலை வழக்கில் விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று கோவையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். முன்னதாக தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு சம்மன் அனுப்பினார்கள். அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன்.

    கொடநாடு வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது, என்ன நடந்தது? என எனது தம்பி கனகராஜ் என்னிடம் சொல்லியுள்ளார். அதனை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் சொல்கிறேன். கொடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நபர்கள் வருகிறார்கள்.

    கொடநாடு சம்பவத்துக்கு பிறகு எனது தம்பியிடம் பேரம் பேசியபடி அவர்கள் பணம் கொடுக்கவில்லை. அதை கேட்டபோது எனது தம்பியை தாக்கியுள்ளனர். போலீஸ்காரர் ஒருவரும் சேர்ந்து தாக்கியுள்ளார்.

    எனது தம்பியை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது. 3-வது முறையாக நடந்த முயற்சியில் அவர் இறந்துள்ளார். இதனை நான் அப்போதிலிருந்தே சொல்லி வருகிறேன். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. மூலம் இன்று நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.

    எனது தம்பி சூட்கேசில் எடுத்து வந்த ஆவணங்களை நான் திறந்து பார்க்கவில்லை. அவன் எடுத்து வந்த 5 பைகளில் 3 பைகளை சங்க கிரியிலும், 2 பைகளை ஆத்தூரிலும் ஒப்படைத்துள்ளான்.

    என் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்கின்றனர். எனக்கு மனநிலை பாதிப்பு என கூறி இருக்கிறார்கள். அப்படி இருந்தால் என்னை மருத்துவ பரிசோதனைக்கு அல்லவா உட்படுத்தி இருக்க வேண்டும்.

    ஏற்கனவே சம்பவம் நடந்தபோது என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேலத்தில் விசாரணை நடந்தது. அப்போது என்னை கடுமையான முறையில் தாக்கினர்.

    அப்போது ஒன்றரை நாட்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. என்னென்ன வாங்கி எழுதினார்கள் என தெரியவில்லை. இதுதொடர்பாக அப்போது என்னிடம் விசாரித்த உயர் போலீஸ் அதிகாரிகளையும் தற்போது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நான் தடயங்களை அழித்ததாக என்னை கைது செய்தனர். ஆனால் நான் எந்த தடயத்தையும் அழிக்கவில்லை.

    நான் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜராக கூடாது என்று என்னிடம் ரூ.2 ஆயிரம் கோடி பண பேரம் பேசினர். ஆனால் நான் உடன்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைப்பு கொடுப்பேன். என்னை கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன். மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். எதற்கும் தயாராக உள்ளேன். உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனபாலிடம் கேட்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தனர்.
    • எனது தம்பி என்னிடம் தெரிவித்த சில தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவிக்கிறேன்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. கடந்த 24.4.2017 அன்று இந்த பங்களாவில் இருந்த சில பொருட்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார்.

    கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கொடநாடு வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையில் இந்த விசாரணை நடக்கிறது. கொடநாடு வழக்கின் முக்கிய தடயங்களை அழித்ததாக கூறி டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இந்தநிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் சாவில் மர்மம் உள்ளது என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தக வல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கோரினர். தனபாலிடம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி தேவையில்லை எனவும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரே சம்மன் அனுப்பி விசாரித்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் இன்று காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கூறி தனபாலுக்கு சம்மன் வழங்கினர். சம்மனை பெற்றுக்கொண்ட தனபால் இன்று காலை சேலத்தில் இருந்து கோவை வந்தார். கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் முன்பு ஆஜர் ஆனார்.

    தனபாலிடம் கேட்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தனர். அந்த கேள்விகளை கேட்டு தனபாலிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அந்த கேள்விகளுக்கு தனபால் அளித்த பதில்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    தனபால் கூறிய தகவல்கள் நம்பகத்தன்மை உள்ளதா, அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் போது தனபால் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தனபால் அளித்துள்ள வாக்குமூலத்தின் பேரில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    முன்னதாக தனபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எனது தம்பி என்னிடம் தெரிவித்த சில தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவிக்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • 2 நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார்.
    • கொடநாடு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், கனகராஜின் சகோதரர் தனபால் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு சம்பவம் குறித்து தவறான தகவல்களை தனபால் கூறி வருகிறார். அவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் வைத்து ஒரு பையை கொடுத்ததாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறி வருகிறார்.

    கனகராஜ் இறந்த விபத்து நடந்த இடத்தில் பேட்டி அளித்த தனபால் கொடநாடு கொள்ளைக்கும் எனது தம்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். ஆனால் தற்போது தி.மு.க மற்றும் தி.மு.க.வின் பி.டீமான ஓ.பி.எஸ். அணியினர் தூண்டுதலின் பேரில் அவர் தவறான தகவலை கூறி வருகிறார்.

    அவர் ஊட்டி கோர்ட்டில் தனக்கு 2 ஆண்டுகளாக மனநிலை பாதித்துள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என கூறி ஜாமின் கேட்டார். அதற்காக மருத்துவர்களின் சான்றிதழ்களையும் இணைத்து வழங்கியிருந்தார். அதன்படி ஊட்டி நீதிபதியும் அவருக்கு ஜாமின் வழங்கினார்.

    2 நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். அப்போது அவரும் எனது கணவர் கடந்த 4ஆண்டுகளாக மனநிலை பாதித்துள்ளார். தற்போது எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அவரால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

    மேச்சேரியில் பதிவான நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்தபோது டாக்டர்களும் அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளதாக கூறினர்.

    மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து கொண்டு சிலரது தூண்டுதலின் பேரில் என் மீது தொடர்ந்து தவறான குற்றசாட்டு கூறி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகவே நான் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்.

    சூப்பிரண்டு இல்லாததால் அதிகாரிகள் மனுவை வாங்கி உள்ளனர். சூப்பிரண்டிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். கொடநாடு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, மணி, ஜெயசங்கரன், நல்லதம்பி உள்பட பலர் இருந்தனர்.

    ×