search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபால் 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் முன்பு ஆஜர்
    X

    கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வந்த தனபால்.

    கொடநாடு வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபால் 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் முன்பு ஆஜர்

    • கொடநாடு வழக்கில் முக்கிய தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர்.
    • விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரரான தனபாலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 14-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

    தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை சி.பி.சி.ஐ.டி கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையில் விசாரணை நடக்கிறது.

    கொடநாடு வழக்கில் முக்கிய தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த நிலையில் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரரான தனபாலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 14-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது முறையாக சேலம் தனபால் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அவரிடம் பல்வேறு கேள்விகளையும் கேட்டனர்.

    அவர் அளித்த பதில்கள் அனைத்தையும் போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். அவர் கூறிய தகவல்களில் உண்மை தன்மை உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்கட்ட விசாரணையில் என்னிடம் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று 2-ம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கின்றனர் . கனகராஜ் எடுத்து வந்த பைகளை யாரிடம் கொடுத்தார் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன் என்றார்.

    Next Story
    ×